மழை
மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது
இரவின் மிச்சம் போல்
வானம் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது
பூச்சிகள் பறப்பதுபோல்
தரை உச்சுகளைக் கொட்டிச் சிலிர்க்கிறது...
காற்றிற்குக் கற்பூர வாசனை...
தேநீர்க் கடைகளில் உஷ்ண மூச்சு...
குளிரென்பது அனுபவிக்கச் சுகமானது...
சூடான சோற்றில்
காரம் சேர்த்த கறியாணம் போல் மனம்...
வீட்டிற்கே வரும் சொர்கத்தை விட
குற்றாலம் அத்துணைக் குளுமையில்லை...
கொஞ்சம் அனுபவித்துப் பார்
பாரதிதாசன்
நம் வீட்டில் பாட்டெழுதிக் கொண்டிருப்பான்.
- மு.முகமது பாட்சா*
16/10/2019
---------------------------
அவன்
அவனுக்குள்ளிருந்தே
மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தான்
அவனது காலத்தை
கி.மு வில் புதைத்தவர்கள்
அவனை விஷ
விருட்சமென்று வெட்டிக் கொண்டிருந்தார்கள்..
அவன் சொற்கள் இலைகளாக உதிர...
உடலைச்
சிராய்களாக இறைத்துக் கொண்டிருந்தான்..
அவனுக்கான பூமி
அதிர்ந்து கொண்டேயிருந்தது...
அவனை நிலமில்லாதவன் என்று
சூளையில் போட்டு எரித்த போது
அவன் அச்சிக் கற்களில் இடம் மாறி
உஷ்ணத்தைக் கோபமாய்க் கொட்டிக் கொண்டிருக்க...
அவர்கள் அவன் மீது நீரூற்றி
செங்கல்லாக்கி
மாளிகைகள் கட்ட ஆயத்தமானார்கள்.
-மு. முகமது பாட்சா*
16/10/2019
அவர்கள் கூடினார்கள்
ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொண்டார்கள்
சிலரின் தோள்களை விடமாட்டேனென்ற
ஜோல்னாப் பைகள்
புத்தகங்களை முகர்ந்து கொண்டேயிருந்தன...
அவர் இவர்தான் என்றும்
இவர் அவர்தான் என்றும்
சிலர் ஜாடை காட்டி பேசிக் கொண்டார்கள்...
ஒலிவாங்கியைப் பார்த்தவுடன்
சிலருக்கு வாய் நமநமத்துக் கொண்டிருந்தது...
ஒருவன் புருவத்தையுயர்த்தி
இவனுங்களெல்லாம் அறிவு ஜீவிகளாம் என்று
நக்கலை நழுவவிட...
முக்கியஸ்தர்
தேடியெடுத்த குறிப்புகளை வாந்தியெடுக்கத் தொடங்கினார்
வந்தவர்கள் கைகளைத் தட்டி ரசிக்க...
மேடை இருட்டாகி
திடீரென்று ஒளிர்ந்த போது உள்ளே நுழைந்தது
சினிமாவின் பிரபல வெளிச்சம்...
இப்போது அவர்களின் நிறம் மங்கிக் கொண்டிருக்க
கை குலுக்கி
செல்பி எடுத்துக் கொண்டவர்களின் கைகளில்
புத்தகங்கள்
வியர்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தன.
- மு.முகமது பாட்சா*
15/10/2019
யாராவது இருக்கிறீர்களா?
கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான்
இடியில் மழை பளிச்சிட்டது
அவள் என்பவள் கதவைத் திறந்தாள்
புன்னகை உள்ளே வரச்சொல்லி அழைத்தது
இரவாடைத் தளர்வில்
வழிந்தது யெவனப் பிரதேசங்கள்...
இப்போதுதான் பசியாறினேன் என்றவள்
கைகளைக் கழுவச் சென்றால்
விரல்களில் பச்சை இரத்தம் பசப்பியிருந்தது
அமானுஷ்யம் கண்களை உருட்டிப் பார்க்க..
அவளின் நிழல் இறந்து கிடந்தது
சன்னலின் வழி நிலவு அழுவதாகத் தெரிய
எதிரிலமர்ந்தவள்
ஆடைகளைத் தளர்த்தி ' தெரிகிறதா' என்றாள்
அவளின் இதழ்க்கடை வழியே
புழுவொன்று நெளிந்து போக
அதனைப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டாள்...
அவனுக்குக் குமட்டியது...
அருகில் நெருங்கி மூச்சுக் காற்றைச் சூடாக்கினாள்
திரைச்சீலை எரிந்து கொண்டிருந்தது..
அலறியடித்து ஓடும் போது
தவறி விழுந்த மதுக்குடுவையில் அவள் சிரிக்க...
தண்ணீரைத் தெளித்தவள்
ஹேங்க் ஓவரில் அலறுவதே வேலையென்று
உள்ளே சென்றாள்...
- மு.முகமது பாட்சா*
15/10/2019
06/10/2019 ல் தஞ்சையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு
விழாவில் கங்கை அமரன் வெளியிட கவிஞர் கண்மணிசுப்பு
பெற்றுக் கொள்கிறார்
விழாவில் கவிஞர் கண்மணி சுப்புவுடன் இனிய உதயம் ஆசிரியர்
ஆரூர் தமிழ் நாடன் ஐயா அவர்கள்
