Monday, 30 October 2017

சங்கமமென்பது ஒரு வேகம்



முகத்துவாரத்தின் வாயிலில் 
முகாமிட்டிருக்கிறது ஓட்டைப் படகு 
கழிமுகத்தின் ஆறு 
கண்டு கொள்ளவேயில்லை.... 
கடலணைத்து முத்தம் கொள்ள 
அலைகள் 
வெண் நுரைத்துப் பொங்குகின்றன, 
சங்கமமென்பது ஒரு வேகம் 
நள்ளிகளை அலவன்கள் விரட்டி விளையாட 
கை கோர்த்தவன் இதழ் கோர்த்திட 
நெசவு நெய்கிறான் 
நூல்கள் பின்னி பிணைகின்றன 
சங்கமமென்பது ஒரு வேகம் , 
காகத்தின் தனிமையொன்று 
ஓட்டைப் படகில் உட்கார்ந்திருக்கிறது, 
அலைகளன் காற்று வேகமெடுக்க 
பறப்பது சற்றுக் கடினம்தான்,
கண்களால் படகோட்டி.... 
செம்படத்தி காத்திருக்கிறாள்  
இரவின் மீன் விருந்திற்காக, 
கூடை இன்னமும் காலியாகத்தானிருக்கிறது, 
சங்கமமென்பது ஒரு வேகம். 
எத்தனை பாதச் சுவடுகளை 
இந்தக் கடல் தாங்கி நகர்ந்திருக்கும்? 
கடலொரு மாயக் கிடங்கு , 
கரையொதுங்கா காதலர் பிணங்களை 
காவலர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள், 
கழுகுகள் இன்னமும் இனம் காட்டவில்லை.. 
காட்சியின் பிழையாய் ஓட்டைப் படகு 
சங்கமமென்பது ஒரு வேகம்

- மு.முகமது பாட்சா

Sunday, 29 October 2017

காணா வார்த்தை

தானியங்கு மாற்று உரை இல்லை.

கந்தழி காணா வார்த்தை 'நான்' 

காட்டின் மூலிகைவாசம் 
நகரத்திற்குள் எட்டிப் பார்க்காது 

உண்மையில் ஞானத்தின் நிரவல் 
நிறைந்திருப்பதில்லை 

வாய்களால் வாய்க்கால் நிறைந்து வழியாது 

சொற்கள் விளைத்த பயிர்களை 
அறுவடை செய்யும் மனசு அழுகின்றது 

கடந்தவற்றில் ஒட்டியிருக்கின்றன 
அறிவீனத்தின் படிம தட்டுகள் 

ஆடுகள் அறியுமா 
தழைகளுக்கும் உயிரிருப்பதை? 

நானேன் இறகுகளை உதிர்க்க வேண்டும் 
பறப்பதும் ஞானம்தான் 

மூளைகளைக் கழற்றி வைத்துவிட்டு 
மூலிகை காட்டில் தேடினால் கிடைக்காது 

இல்லையென்பவனிடமும் 
ஏதோவொன்று இருக்கத்தான் செய்யும் 
வெறும் கையோடு யாரும் வரவில்லை 

மூளையென்ற மந்திரம் 
முழுசாய் நம்மிடம்தான் இருக்கிறது. 

ஞானம் என்பதும் வெறும் வார்த்தைதான் 
அறிவாய் அறிந்தவன் 
கோட்டிக்காரனாகத் திரிகிறான்

- மு. முகமது பாட்சா* 

நீங்கள் பார்த்தீர்களா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

நீங்கள் பார்த்தீர்களா? 
எனது தேடலின் மிச்சம் எங்கோ ஒளிந்திருக்கிறது 
அஃது 
இந்தக் கவிதைதான் என்று சொல்லிவிட்டு 
கடந்து விடாதீர்கள் 
உங்களின் தேடலில் கூட அஃது ஒளிந்திருக்கலாம் 
வசதியென்பது 
பார்க்காதவொன்றுதான் 
பார்க்காதவொன்றை நான் எப்போதும் பார்ப்பதில்லை 
இன்பம் என்று சொல்லுகிறீர்கள் 
கவிதையெழுதும் போது அது கிடைத்துவிடுகிறது 
ஞானம் என்று யாரோ சொல்லுகிறீர்கள் 
அது நான் தேடியும் கிடைக்காது 
தானாக ஒட்டும் நேரத்தில் ஒட்டிக் கொள்ளும் 
இப்போது நான் சாதாரணமான போகிதான் 
அன்பா? 
அதுதான் உங்களிடமிருந்து கிடைத்து விடுகிறதே 
என்னது மரணமா? 
நானாகத் தேடினால் அது தற்கொலை 
தானாக வரும் போது வரட்டுமே... 
இளமை என்றுதானே சொல்லுகிறீர்கள் 
அதைத்தான் 
கவிதைகளில் கடத்தி வைத்திருக்கிறேனே 
பிறகு என்னதான் 
என்று ஏன் சளித்துக் கொள்கிறீர்கள் 
தேடிப் பார்ப்போம் கிடைக்காமலா போய்விடும். 

- மு. முகமது பாட்சா

Saturday, 28 October 2017

அனுமதிக்காத கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கடலாய் விரியும் சொற்கள் 
கவிதையாய் தெளிகிறது. 
உணர்வுகள் வயலினிசைக்கின்றன 
மனதிற்குள் உட்கார்ந்த சுமை 
வயிற்றுக்குள் மகிழ்வாய் நெளிகிறது
பேரன்பின் பிரவாகங்கள்
பொய்யின் புனலாக ஓடுகின்றன
விளக்கின் வெளிச்சத்தில்
விட்டில் பூச்சிகளின் இறுதியாத்திரை
வெளிச்சம் தேடாத இருட்டாய் மனசு 
கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறேன்... 
எனக்கு மட்டும் தெரிந்த கவிதை
யாரும் வாசிக்க அனுமதிக்கவில்லை.

- மு. முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 89

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

கூடல்

நீல் ஆம்பல் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல் 
அருகிலிருக்கிறாய்
இமைகளை உனது இதய ஓசையின் மீது
அசைத்து அசைத்து
ஆசைகளைத் திறக்க முயற்சிக்கிறேன்
எனது நடுமுதுகில் உன் நடுவிரலின் ஒரு புள்ளி 
முற்றுப்புள்ளி இல்லாத முத்தங்களைத் துவக்கும் 
தூங்கா ஆசையின் தூதென விழுகிறது
திடுக்கிட்ட முகம் 
குலமுதல் தெய்வத்தை 
கும்பிடக் கனிவதென உன் மார்பில் சாய்கிறது
வெண்சங்கை வெள்ளைக் கிளியெனத் தீண்டுகிறாய்
சிவப்பணுக்கள் செங்கொடுவேலிப் பூக்களெனப் பூக்கின்றன
சிபாருக வனத்திற்கு 
ஈருடல்கள் ஒருமனதாய்ப் பறக்கின்றன
உனது விரல்களின் முத்தங்களில் 
பனித்துளிகளின் பிம்பங்களே இல்லை
மூச்சுக் காற்றில் ஊறிப் பெருகும் அவை 
இருளுக்குள் ஒளியையும் 
ஒளிக்குள் இருளையும் உட்புகச் செய்கின்றன
இடையின் சரிவில் இராஜ முத்திரைகளை
வரைகிறாய்
எனது விருப்பத்தின் ஆரணம் உன் முகம் என்றும்
விழுதென உள்ளே நிலைத்தது உன் அகம் என்றும்
சொன்னால் நம்புவாயா
உனது பார்வைகள்
பசியை விளைவிக்கும் சாயவேர்கள் கொண்ட நிலம்
இந்நேரப் புன்னகை 
புலன் வெளிப் பித்த மண்டலத்தின் புனித ஊற்றைத் திறக்கவல்லது
உனது உடலின் காந்தியில் கைவளையல்களை 
உருள விடுகிறேன்
காதுமடல் ஏன் கூடலைக் கணிதமாக்குகிறது 
கழுத்தில் ஓடும் நரம்புகள் ஏன் 
அத்தனை நடன முத்திரைகளையும் கேட்கிறது
உனக்கென் ஆராவமுதூட்டும் வேளை 
உலகின் சர்வமழை படைக்கும் கீர்த்தனை ஒன்றில்
நனைகிறோம்
உதடுகளிலிருந்து கரையேற மனமின்றி 
கடலின் உடலில் வானமெனப் படர்கிறாய்
மெய்நீர்மை உணர்கிறோம்

- கவிஞர் தேன்மொழி தாஸ்

கவிதையின் பெயரென்ன


poetry love girl painting க்கான பட முடிவு

அந்தக் கவிதை 
உன்னைப் போல்தான் புரியாமலிருந்தது 
வார்த்தைகளை 
கலைத்துப் போட்டு வாசித்தேன் 
பொருள் விளங்குமறிவு எனக்கில்லை 
ஆனாலும் 
அற்புதமாகத்தான் இருந்தது 
சிறந்ததொரு பாடலின் கட்டமைப்பில் 
மிளிர்ந்தது 
உன் விரல்களின் குளுமை 
அதற்குள்ளொட்டி வியாபித்தது 
மூச்சுக் காற்றின் வெப்பம் 
மெல்லென எட்டிப் பார்த்து இரசித்தது 
உன் குரல் போல் அதற்கு நடுக்கமில்லை 
உன் ஓரத் துணிச்சலின் வீரம் மட்டும் 
சொற்களுக்குள் உட்கார்ந்திருந்தன 
அர்த்தம் விளங்கா தாவும் வார்த்தைகள் 
உன் கண்களையே நினைவில் வைத்தது 
உன் கவிதையைத்தான் 
மேய்ந்து கொண்டிருக்கிறேன் 
என்னிதயத்தில் 
பூச்செடிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன 
ஆமாம் 
இந்தக் கவிதையின் பெயரென்ன?

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 88

கவிக்கோ க்கான பட முடிவு

பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில் 
சந்தித்தேன்.

“என்ன குற்றம் செய்தீர்கள்” 
என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச் 
சொன்னார்கள்..

எங்கள் வீட்டில் 
திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வருமானத்தைக் கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.

“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன் 
பிரிவினைவாதி என்று 
பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்”

“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத் 
​தண்டித்து விட்டார்கள்.”

“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச் 
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை 
அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டு 
வந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன். 
அரசாங்க சொத்தை 
அழிக்கத் தூண்டியதாக அடைத்துப்போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்” 
என்று எழுதினேன்,“கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில் 
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டு 
வந்து விட்டார்கள்”

“சுதந்திர தின விழாவில் 
‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள். 
நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன். 
எழுந்து நிற்க முடியவில்லை. 
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் 
சிறையில் அடைத்து விட்டார்கள்”

“அக்கிரமத்தை எதிர்த்து 
ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்” என்று 
யாரோ கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். 
“பயங்கரவாதி” என்று 
என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை 
எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது..

கவிக்கோ அப்துல்ரகுமான்

Friday, 27 October 2017

மிளகின் வாசம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு மற்றும் வெளிப்புறம்

போகியின் சாம்பலில் 
உயிர்த்தெழுந்த பறவைகள் 
சண்டையிட்டுக் கொள்கின்றன 
வேலம் பிசினியில் 
உயிர் துளிர்த்த யுகமொன்று 
மெல்லென வழிய 
குருமிளகின் கொடிகள் 
வேர்களை ஊன்றி 
பூமியில் எதையோ தேடுகின்றன, 
நகர இரைச்சல்களின் பேருந்துகளில் 
நாட்காட்டித் தாள்கள் 
கிழிக்கப் படுகின்றன, 
மூச்சிறைக்கும் ஆலைகளில் 
உட்கார்ந்திருக்கிறது 
ஒரு யுக சமுத்திரத்தின் பேரலறல், 
வல்லூறுகளின் சிறகுகளிளெல்லாம் 
தேசத்தின் பெயர்கள் 
பொறிக்கப் பட்டுள்ளன, 
அவை எச்சமிட்ட வட்டங்களில் 
இரத்த புஷ்பங்கள் 
முகைத்து மலர, 
தொடர்பறுந்த ஊடகக் கம்பிகளில் 
வழலை மந்திரம் மட்டுமே 
வாசிக்கப் படுகின்றது, 
அபய வாசிகள் எல்லோரும் 
கடவுளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்  

சிறு மிளகின் பூவாசமும் 
வேம்பின் காற்றும் மெல்லென வீசும் போது 
தோண்டிப் பார்க்கலாம் 
தொலைந்து போன பெரும் யுகத்தை 

- மு.முகமது பாட்சா


நான் இரசித்த கவிதைகள் - 87

மாலுமியாகிய_நான்..

சிறுவயதில்,
அண்ணன் குளிக்கக் கொடுத்த வாளி நீரில்
அம்மா சமையலுக்கு வைத்திருந்த
உப்பைக் கலந்து கடலாக்கினேன்
அப்பாவிடம் கையொப்பம் வாங்க வேண்டிய
எனது பள்ளி பரீட்சைத் தாளில்
கப்பலொன்றை வடித்துக் கடலுக்குள் செலுத்தி
ஓட்டியதைக் கண்டு
நிச்சயம் நீயொரு மாலுமியாவாய்
என்று சிரித்தபடி கூறிய தாத்தா
படுத்தபடுக்கையாகக் கிடந்து
கடைசி ஆசையாய்
எனைக் காண வேண்டுமெனக்
கூறிய நாளில் தான்
விபத்து நேரிட்டு மரணமடைந்தாலும்
அதற்கு கம்பெனி பொறுப்பாகாது
என்ற சொற்கள் நிரம்பிய
ஒரு வருட வேலைக்கான 
விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு
பன்னாட்டுக் கப்பல் கம்பெனியொன்றில்
நான் பணிக்கு சேர்ந்திருந்தேன்
அப்பொழுது என்னை பேரிரைச்சலோடு
தழுவிச் சென்ற கடலலைக்குள்
ஒழிந்திருந்தது
தாத்தாவின் நெடும் மௌனம்
என் முதல் கடற்பயணத்தில்
இரவெங்கும் காற்றில்
காதல் கவிதைகளை வரையும்
நைஜீரியனின் உணர்வுகளை
உள்ளிழுத்துக் கொண்ட கடல்
இரண்டாவது கடற்பயணத்தில்
பகல்பொழுதுகளில் கவிதை வரையும்
பிலிப்பைனியின் வாயிலாய்
மொழிபெயர்த்துக் கூறியது
காத்திருக்கும் காதலியின் நினைவுகளை
எப்பொழுதும் கடுகடுவென
முகம் காட்டித் திரியும்
ஈரானியக் கேப்டன்
தன் மகனின் பிறந்தநாளை
எங்களோடு மகிழ்வாய் கொண்டாடி
யாரும் பார்க்காத பொழுதில்
மறைந்த மகனுக்காகக்
கடலில் வடித்தக் கண்ணீரை
இனிப்பாய் மாற்றிய மூன்றாவது கடற்பயணம்
இரண்டாண்டுகளாய் விடுப்பின்றி உழைத்தும்
ஊதியம் மறுக்கப்பட்ட சிரியாக்காரனோடு
தேனீர் பருகிய நான்காம் பயணத்தில்
உவர்த்திருத்தது
ஐந்தாவது பயணத்துக்கான ஆயத்தத்தோடு
காத்திருக்கும் என் முன்னே நிற்கிறார்
ஐம்பதுக்கும் மேற்பட்ட கடற்பயணங்களை
கடந்திருந்த பிரெஞ்சு முதியவர்
தனது கடைசி பயணத்தையும்
சிறப்பாய் முடித்த திருப்தியோடு
பல நாடுகள்
பல துறைமுகங்கள்
பல மனித முகங்கள்
பல மொழிகள்
இன்பம்
துன்பம்
ஓய்வுக்குப்பின் குடும்பத்தாரோடு
களிக்கும் பொழுதுகளென பலவற்றை
என்னோடு அசைபோட்டபடி நடந்து வருபவர்
கடலை பார்த்ததும் கண்களை மூடி
தியானிக்கின்றார்
அவரது மனவெளியில் இருக்கும்
ஆழ் கடலின் அமைதியில்
நான் வடித்த முதல் காகிதக்கப்பல்
மிதந்து கொண்டிருக்கலாம்
அதன் மிதத்தல் அழகை இரசிப்பதைக் காட்டிலும்
எனக்காக புறப்படக் காத்திருக்கும்
கப்பலுக்குச் சென்று உழைப்பதையே விரும்புகிறேன்
மாலுமியாகிய நான்..

- இருத்ரன் ரிஷி.

ஹாவியாவின் விருந்து

தானியங்கு மாற்று உரை இல்லை.

எதை இங்கு
எடுத்து வந்தாய்?
எதை நீ 
கொண்டு போகப் போகிறாய்?
-நியாயத்தின் சம்பளமே
நிலையானது...
பாவத்தின் சம்பளத்தில்
ஏன், புரளுகிறாய்?
-ஹுதாமை 
உனக்குத் தெரியுமா?
......அது அல்லாஹ் வின் நெருப்பு.....
-நரகத்தின் தீயில்
நாசமாய் போகவா,
பாவத்தின் போர்வையில்
பதுங்கிக் கொள்கிறாய்?
-தேடலில் தான்
தொலைகிறாய் என்பது
புரிய வில்லையா?
-ஹாவியா தன் வாயை
அகலமாய்
திறந்து வைத்திருப்பது
இன்னமுமா தெரிய வில்லை?
-ஒரு திடுக்கத்திலும்
நடுக்கத்திலும்
காணாமல் போவாயே !
அப்போது
உன்னோடு, எது வரும்?
-பாவத்தின் போர்வை
மகஷரின் வெப்பத்தை
தணிக்கவா போகிறது?
-தீர்ப்பின் நகலை
முதுகு புறத்தில் வாங்க
ஆசைப் படுகிறாயா?
-பாவத்தில் உழன்றுக் கொண்டு
புண்ணியம் பேசுகிறாயே,
சாக்கடையில் நீந்திக் கொண்டு
சுத்தத்தை தேட முடியுமா?
-இனியாவது திருந்து!
இல்லையென்றால்
இருக்கிறது
ஹாவியாவின் விருந்து!

- மு.முகமது பாட்சா

Thursday, 26 October 2017

சிம்பொனி இரவு

தானியங்கு மாற்று உரை இல்லை.

அடுத்தவீட்டுப் பூனையின் 
மிய்யாவ்...மிய்யாவ் சப்தம் 
மெல்லியதாய் தொடங்கி நீள்கிறது 
சிம்பொனியின் ஒற்றை வயலினொன்று 
நீண்டிழுத்து குறைய 
தெரு நாய்களின் லொள் லொள் 
ஒருமித்துச் சிவமணி ட்ரம்ஸ் இசைக்கிறார் 
யாருக்காகவோ இசைக்கிறது குயில் 
வைத்தியாவின் வீணை போல் 
பானைக்குள் பண்டத்தை 
எலிகள் உருட்டி விளையாடுகின்றன 
விநாயக் ராம் இங்கெங்கு வந்தார்? 
உறுமியின் இழுப்பாய் 
அப்பாவின் 
ஆழ்ந்த கொர்ர்ர் கொர்ர்ர் குறட்டை 
இரவு ஒன்றும் மோசமில்லை 
பீத்தோவனின் 
இசையோடுதான் நகர்கிறது உறக்கமின்றி.

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 86

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள், குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

உனது அன்புக் கிண்ணத்தில்
என்ன கொண்டு வந்திருக்கிறாய்
நண்பா...விஷமா.? கொடு!
அருந்தும் போது என் உதட்டைப் பார்.
முணங்கும் ஒலி கேள்...
உன் பேர் உச்சரித்து விட்டு உதடு மூடினால் 
அப்போதும் நீ நண்பன்தான்
சீசருக்கு புரூட்டஸும் நண்பன்தான்..
ANTONy வந்து காட்டிக் கொடுக்காத வரை...
ஆயினும் முதல் கோப்பை உன்னது
என்பதில் பெருமை கொள்ளாதே.
கடைசி கோப்பை தருபவனுக்குதான்
வரலாற்றில் இடம்.
எப்போதும் கடைசி அம்புக்கும்
கடைசி ஆயுததிற்கும்தான்
கடவுளுக்கு இணையான வணக்கம் 
உண்டு.
புருட்டஸின் குறுவாளுக்குதான்
கீழ்ப் படிந்தது சீஸரின் ரத்தம்.
ரோமின் ஜனநாயகம் அவனால்தான்
காக்கப் பட்டதாக பெங்குவின்கள் சொல்லிக் கொண்டு போகின்றன
டைபர் நதிக் கரையில்.

கவிஞர் ஜெயதேவன்

Wednesday, 25 October 2017

காணாமல் போ கள்வா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நிறமொக்கிக் கனவில் 
நீல் திரையாய் விரிகிறாய் 
சுவாசத்தின் தழல் காற்று 
சுழற்றியடித்து உயர்கிறது 
தேகப் பெருமலையில் 
தேன் நதிகள் ஊற்றெடுக்க 
மேகதீபம் 
வெளிச்ச நதி பாய்ச்சுகிறது 
ஒற்றெடுத்துப் போகிறவன் 
கண்களைக் கழற்றி வைக்கிறான் 
அமரமின்றிப் படகு 
அழகாய் நகர்கிறது 
வீங்கும் பெருஞ்சுனையில் 
தேறலமுது சுரக்க 
மயங்கின வழிப் போக்கன் 
வழி தெரியாமல் அலைகிறான் 
கதவில்லா வாசலில் 
வாதுமை மரம் 
பூரித்து வளர்கிறது 
அம்பரமிழந்த பூமி 
தெளிந்து மஞ்சள் பூச 
புது யுகத்தின் பிரசவம் 
வெண்படலம் தழுவித்தான் நழுவுகிறது 
கனவைக் கழற்றி விட்டு 
கண்ணயர்கிறேன் 
காணாமல் போய்விடு கள்வனே

 மு.முகமது பாட்சா

இல்லை இருக்கிறது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

இல்லையென்ற சொல்லுக்குள்தான் 
எல்லாமிருப்பதாகச் சொல்கிறார் 
அந்த சூஃபி ! 

இருப்பதென்பதெல்லாம் 
இல்லையென்றே ஆகிவிடுமாம் ! 

பிறப்பில் இருப்பது 
இறப்பில் இல்லாமல் போகிறது ! 

விதைத்த ஆசைகள் 
குவிக்கின்றன பொருள்களை, 
இறப்பிற்குப் பின்
திருப்பி எடுப்பதேயில்லை , 

தடித்த வார்த்தைகள் இருக்கின்றன,  
வெறுத்த உறவுகள் இல்லாமல் போகும் , 

இல்லையென்ற சொல்லுக்குள்தான் 
இறைவன் இருக்கிறானாம், 

இருப்பதென்பதெல்லாம் 
இல்லையென்றே 
சொல்லிவிட்டுப் போகிறார் 
அந்த சூஃபி ! 

- மு.முகமதுபாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 85


இரத்தக் கிடங்கு

 பெருங்கிடங்கினுள்ளே காத்திருந்தது
ரத்த நிறத்திலொரு நிழல்
ஆயிரமாயிரம்
தலைகளை கொண்டுபோகும்
இந்த நாட்களில்

கறுத்திருக்கும் வெயிலுக்குள்
கொப்பளிக்கிறது
இரத்தப் பெருக்கு.

 சாவின் புன்னகையைக் கண்டேன்

அழிவின் காலம்
தீர்க்கதரிசிகளைக் கசையலாடித்தபின்
வெளியே துரத்துகிறது

முள்முடிகளின் அலங்காரம்
இதோ
இதோ

 நெருங்கிவரும் அபாயத்தின்
கரு நிழலுள்
விருந்துக்காகச் செல்லும்
வீரர்களை விலகினேன்

 பனை மரங்களுக்குக் கீழே
செத்துக்கிடந்தன
நாறிய பிணங்கள் நூறுக்கு மேல்
யாருடையவை
யாரறிவார்
தெரிந்த முகங்களை எப்படிவிலக்குவது

 ‘பொன்னாய் மின்னிய மண்ணில்
பூவாய் உதிர்ந்து போகிறது
துளிராயிருந்த உயிரெல்லாம்’
என்றொருத்தி பாடுகிறாள்

 புரக்கேறிவரும் அவளுடைய பாட்டில்
தீராத சாபத்தையும்
வசையையும்
ஆற்ற முடியாக் கோவத்தையும்
இறக்கினாள்

இரத்தப் பெருக்காக.

கருணாகரன்

Tuesday, 24 October 2017

சூனிய ஞானம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ஞானவெளியென்பது 
சூனியமாகிறது 
ஒற்றையிலை உதிர்வதில் 
ஒராயிரம் தத்துவங்கள் 
உள்ளீடாகின்றன 
போதிமரத்தூறும் எறும்புகள் 
நாளையைச் சேமிக்கின்றன 
இல்லாதவொன்றிற்கு 
மௌனமென்று பெயரிடுகிறார்கள் 
வார்த்தைகளில் சேராமல் 
எழுத்துகள் 
இரைந்து கிடக்கின்றன 
சேர்ந்தவையெல்லாம் 
வாயாடிக் கொண்டு திரிகின்றது 
ஆலயங்களின் வாசல்களில் 
ஆசைகள் 
இரைந்து கிடக்கின்றன 
அட்டைப் படக் கடவுளுக்கு 
கரையான் அரிப்பது 
அறவே தெரியவில்லை 
நிழலை விரித்து 
நிஜங்கள் படுத்திருக்கின்றன 
இரவும் பகலும் 
வயதை உண்ணுகின்றன 
நான் எனது 
எங்குப் பார்த்தாலும் அலைகிறது 
காலொடிந்த பிறகு 
நடப்பது அதிசயமாகிறது 
முதுமையில்தான் 
சூனியம் ஞானமாகிறதாம் 
பட்ட மரங்களின் வேர்களிலும் 
பச்சையம் பூசியிருக்கலாம் 
படுக்கையின் கடை சி மூச்சு 
வலிகளோடுதான் பிரிகிறது 
அடக்கம் முடிந்த பிறகும் 
சூனியம் சுற்றிச் சுற்றி வருகின்றன 
இதுதான் ஞானமென்றால் 
அஃது இன்னமும் 
உயிரோடுவேத்தான் இருக்கிறது 

நட்புடன்.....மு.முகமது பாட்சா* 

நான் இரசித்த கவிதைகள் - 84


இப்போதுள்ள குறி வந்த கதை 

தள்ளி, உனது கங்குகள் எரிகின்ற
கிடங்குகளுள் அவனை முங்கியபோது
அப்போதுதான்
துணைப் பாலியல்புகள் அவனில்
தோன்றத் தொடங்கியிருந்தன.

இனிப்புகளைப் பராக்குக் காட்டி
திக்குகள் தெரியாக் காடுகளில்
விரல்பிடித்து
வழிநடாத்தி
பிஞ்சு என்புகளை ஒடித்து உனது பீடங்களில்
பேயின் சிதைகளுக்கு எரியூட்டினாய்.

இரத்தத்தின் சாற்றிலிருந்து உருக்கொண்டு
மனிதர்களை இரைகொள்ளும் விலங்கின் முன்
தம்மைப் படையலிடும் வகையைப் பரீட்சிக்க
அவனை நெறிப்படுத்தினாய்.

துர் நடத்தைகளின் கடவுளுக்கு அவனை நீ
பலியிட்டபோது
கிளர்வுகளைத் தாங்கும் வலுவை
அவனது தசைநார்கள் பெற்றிருக்கவில்லை.
பிறகு வந்த நாட்கள் காய்ச்சல் கண்டவன்போல்
உள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தான்.

அறியாமையின் கண்கள் துலக்கி
வயதுக்கு மீறிய ஆற்றலால் அவனை நீ
முதிர்ந்த சிறுவனாக்கிப்
பருவத்தின் இயல்புகளைச் சிதைத்தழித்த மறுபுறம்
கேள்விகளாலும் ஆச்சரியங்களாலும் வழிந்தான்.

ஊன் உருகும் வாசனையும்
கொந்தழிக்கும் குருதியின் ஓசையும்
சில்லெனச் சுரந்து ஊற்றெடுத்த ஹோமோன் ஒரு கடலுமாய்த்
தீயில் கிடந்தவன் ஊறினான்.

இருண்ட அடவிகளின் ஆழத்தில் வேட்டையாடும் கலையையும்-
முடித்து திசை தவறாத் திரும்புதல்
மலைகளில் குதித்து நீர்நிலைகளில் சுழித்துக்
கரையேறும் சாகசங்களையும் நீ பயிற்றுவித்த பிறகு
வதைகளிலிருந்த தேனின் கள்ளைத் தெரிந்தான்.
உன்னை, போகங்களின் முடிவில்
நீண்ட நாழிகளுக்குக் கண்கள் சொருக
மயங்கிக் கிடக்கச் செய்தான்.

பிறகெப்போதும் அவனைத் தன் ப்ராயத்திற்குத் திரும்ப
அனுமதித்திராத உன்னிடம்-
வெறிகொண்ட நாய்கள் தன்னுள் குரைப்பதாக
அவன் முறையிட்ட அன்று
உனது மார்பினைத் திறந்து பற்களின் 
தடங்களைக் காட்டினாய்.

பிறகொருநாள்
தன்மீது நிகழ்த்தப்பட்டிருந்த
துஸ்பிரயோகத்தை அவன் அறிந்த நாளில்
காலம் தூர நழுவிப்போய்
ஆயுளுக்கும் வேறெவளும் துடைத்தெறிய முடியாதபடி
உனது எச்சிலும்
வாசனையுமாய் அவனை நிரப்பியிருந்தன.

தனது வாநாள் முழுவதுமாய் உனது
பாரித்துத் தகிக்கும் மார்புகளையும்
விம்மிக் கௌவும் வழியையும்
தனது சொந்தக் குறியையும் சுமந்து திரியும்படி நீ 
அவனைச்
செய்துவிட்டிருந்ததை உணர்ந்தபோது
இளைஞன் பருவத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்தான்.

மரணத் தறுவாயில்
சைகைகளினால் அவன் அவற்றை
மீளவும் வேண்டிக்கொண்டிருந்தான்

றஷ்மி

அரசியல்



POLITICS PAINTING க்கான பட முடிவு

வெள்ளைச் சட்டைகளும், வெள்ளை வேட்டிகளும் 
அடையாளங்களாகிப் போயின , 
துண்டுகள் மட்டும் நிறம் மாறிக் கொள்கின்றது  
வஞ்சனை நிறத்தில் எழுது கோல், 
குறிப்பிட்ட வண்டிகள்தான் பாராக்கள், 
அடியாட்களின் அசால்ட்டான மிரட்டல்கள் , 
கைப் புழங்கும் தொழிலதிபர்களின் பணங்கள் , 
மாநாட்டுச் செலவுகள் , மகிழ்விக்கும் பானங்கள், 
சாதிகளைத் தூண்டிவிட்டு ,நரித் தந்திரங்கள், 
மதங்களைத் தூண்டிவிட்டு, குருதியில் பொட்டுகள், 
காவல்துறை விலைபோக இரகசிய உளவுகள் , 
நெளிவான பேச்சுகள், நெகிழ்வான நடிப்புகள், 
தொழிலொன்றுமில்லை, கோடியில் சொத்துகள், 
நிதிக் கேட்டு உண்டியல் நாடகம், 
அரசியலொன்றும், அத்தனை சுலபமில்லை , 
சொல்லுங்கள் அரசியல் என்ன சாக்கடையா ? 

- மு.முகமது பாட்சா

Monday, 23 October 2017

சாந்த ஊர்கோலம் போவோம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கொம்பேறி மூர்க்கன் நகர்ந்து செல்கிறான் 
கோடாங்கிக்காரன் குறி சொல்கிறான் 
அமரியுப்பு தேசமெங்கும் பூத்துக் கிடக்கிறது 
வம்பலறியா ஆட்டுக் கூட்டங்கள் அலைகின்றன 
மேய்ப்பன் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான் 
மந்தனின் பாசக்கயிற்று எரி நாக்குகளின் 
நிந்திதம் மெய்ம்மையை அறுத்தெறிகிறது 
அய்யோ அய்யோ என்று பதறும் உள்ளங்களில் 
புளிகம் ஊர்ந்து வழிய 
கண்ணார்கள் பல்லக்கில் போகிறார்கள் 
கழுத்தில் உட்கார்ந்து காட்சியளிக்கின்றனர் 
கட்செவியர்கள் 
பூசை நடத்துகின்றன இராசரிகம்.... 
இறந்தவர்களை 
வேள்வித் தீ எரித்துக் கொண்டிருக்கிறது 
வாருங்கள் 
சாந்த ஊர்கோலம் சத்தமில்லாமல் போவோம் 
கொம்பேறி மூர்க்கன் நகர்ந்து செல்கிறான்.

- மு.முகமது பாட்சா

பெண்- ஆடை

பெண் நவீன ஓவியம் க்கான பட முடிவு

-உடுத்தும் விவாகரத்தில்
அவிழ்த்து பார்க்கிறாய்
-உள்ளத்தின் 
எண்ணங்களையும்
நீ தான் 
தீர்மாணிக்கிறாய்?
-சுற்றியிருப்பது
துணிதான் என்றாலும்
உற்றுப் பார்க்கிறது
உன் காமம்!
-உரசல்களின் வெளியில்
பற்றியெரிவது
கோபமென்ற தீ தான்!
-பெண்மை என்ற
ஒற்றை வார்த்தையால்
அணைக்கப் பார்க்கிறாய்?
_பெண்மை என்ற
ஒற்றைச் சொல்லையும்
போதையென்றே
பொதுவில் வைக்கிறாய்?

- மு.முகமது பாட்சா

பட்டா நிலம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், மேகம் மற்றும் வெளிப்புறம்

பட்டா போட்ட நிலத்தில்தான் 
கொட்டை போட்டு 
விவசாயம் செய்கிறான் 
கால் வயிற்றுக் கஞ்சிக்காரன் ! 

பன்னாட்டுப் பன்னாடையின் 
பத்து லட்ச ரூபாய் ஆசைக்கும் 
பணியவில்லை , 

அப்ரூவல் சரியில்லையென்று 
தாசில்தார் முத்திரை குத்துகிறார் ! 

கரம்பு நிலங்களில் 
விவசாயம் செய்யக் கூடாதாம், 
கிராமத்து அதிகாரி 
சட்டம் இயற்றுகிறார் ! 

ஆட்சியர் அலுவலகம் 
அவனை அலைக் கழிக்கிறது, 

கால்வயிறும் 
காணாமல் போனதால் 
முழம் கயிறு போதுமென்று 
முடிவெடுத்தான் ! 

அரசாங்கம் 
கொடுப்பதாகச் சொன்ன 
இரண்டு லட்சத்திற்கு 
அலைகிறாள் அவன் மனைவி ! 

அந்த நிலத்திற்கான 
இப்போதைய மதிப்பு , 
இரண்டு லட்சம்தானாம் ! 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 83


ஏதேன் சீதனம் 

'வாழ்க்கை'ப்பட்டு வந்த.. 
எல்லோருக்கும் போலத்தான் 
எனக்கும் வழங்கப்பட்டது 
ஏதேன் சீதனம். 

கதறியழுதவர் தம்மின் 
கண்ணீரினூடே தெரிந்தன 
இருப்பின் நியாயமும்.. 
இறப்பின் அநியாயமும். 

என்றாலும்... 
இம்'மை' அநியாயம் 
மறு'மை' க்கு நியாயமோ..? 

இமைக்க மறந்த ஒரு கணத்தில் 
இன்னொரு(வர்) தோளுக்கு 
இறங்கிப்போயிருந்தன 
சுமைகளும்; சொந்தங்களும் 
சொல்லிக்கொள்ளாமலேயே.. 

ஆள் மாற்றி, தோள் மாற்றி 
அனுப்பி வைத்தனர் 
'நிலையத்'துக்கு. 

எண்ணங்கள்; 
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி 
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல் 
சமாதி வழிப்பயணம். 

வழியனுப்ப வந்தவர்களில் 
கனவுக்குமரிகளைத்தான் காணோம் 
அடைந்து விட்டவை 
சாதனைத்திருமதிகளாய்.. 
அடையாதவைகளோ 
ஏக்கக் கன்னிகளாய்.. 

குடும்பங்கள்-பொறுப்புக்கள் 
கூட்டாளிகள்-தொழில்கள் 
கடமைகள் உடமைகள் எல்லாமே 
கழற்றி விடப்பட்டிருந்த 
கால் செருப்புக்களோடு! 

தன் தேகக்கூடு தவிர 
தெரிந்துவைத்திராத ஆன்மா 
நன்மை தீமைகளின் 
நீதிநிலை அறிக்கையை 
வழியெங்கிலும் 
யோசித்தப்படி.. 

ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க.. 
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது 
நாளை நிரப்பப்படுமோ?....! 

இப்னு ஹம்துன்

முதுமை கிடையாது

தானியங்கு மாற்று உரை இல்லை.

முதுமையென்பது 
வலி கிடையாது, 

தொலைத்த உறவுகளை 
தேடுகின்ற பயணம் ! 

சுருக்கங்களை 
அனுபவங்களென்று 
நீங்கள் சொல்லிக் கொள்ளலாம், 
கவலைகளின் ரேகைகள் ! 

பார்வைக் குறைவும் 
குற்றமில்லை, 
தேவையில்லாத காட்சிகளை 
தவிர்த்துக் கொள்ளலாம் ! 

முதுமைக்கென்று 
கனவுகள் கிடையாது, 
ஏக்கங்களை மட்டுமே 
ஏந்திக் கொண்டு நிற்கும் ! 

மரணத்தைக் கண்டும் 
பயம் கிடையாது, 
மடியில் 
வைத்துக் கொண்டே திரியும் ! 

முதியோர் இல்லங்களின் 
கட்டில்களில் படுத்திருப்பது 
இயலாமை மட்டும் தான், 
முதுமை கிடையாது ! 

-மு.முகமது பாட்சா

எல்லாம் சரிதான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

அவர்கள் உழைக்கவே இல்லையென்று 
யார் சொன்னது 
கார்ப்ரேட்டுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் 
அமிலமழை பொழிவதற்கு 

அவர்கள் விரித்து வைத்த பாலைவனத்தில் 
பயிர் செய்யாதது உங்கள் குற்றம்... 
வாக்குறுதிகள் பொய்யென்று சொல்லாதீர்கள் 
தெரிந்துதானே வாக்களித்தீர்கள் 

மாசு சூழ் பூமியென்று எக்களிக்காதீர்கள் 
மாசுகளுக்குத்தான் மரியாதை செய்தீர்கள் 

அடையாளத்தைத் தொலைத்த பிறகு 
அடையாளம் முக்கியம் என்பதே அவசியமில்லாதது 
ஆதார் எடுத்துவிட்டீர்களா? 
அடிமைகளின் கழுத்துகளில் ஆதார் அவசியம் 

பொய்களுக்குக் கை தட்ட தெரிந்த உங்களுக்கு
பொறுமை இல்லாமல் போனது ஏன்? 
வறுமையென்றாலும் வெளியில் சொல்லாதீர்கள் 
தேசத்தின் நலன் முக்கியம் 

இல்லையென்றால் இதுவும்கூட விலை போகாது 
தூய்மை இந்தியா என்பது 
சுத்தமாக உங்களைத் துடைப்பதற்குத்தான் 

வாழ்க பாரதமென்று நெஞ்சுரத்து சொல்லுங்கள் 
அதோ நம் தேசிய கொடி வானில் பறக்கிறது 

- மு. முகமது பாட்சா

Sunday, 22 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 82



காதல் 

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து 
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா 
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது. 
பொய்யெது மெய்யெது 
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா 
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம் 

உன்மார்பிலணைகிறது. 
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி 
முத்தமிட்டுன் சிறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து 
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும் 
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன். 
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து 
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன். 
மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது. 

தேவஅபிரா (ஆடி - 1997 )

மாய இருட்டு

தானியங்கு மாற்று உரை இல்லை.

மலைச் சிகரத்தின் ஏகலில் நின்று 
தேவதைகளின் இறகுகளைச் சேகரிக்கிறேன் 
பெருங்காலொன்று என்னைக் கடத்திப் போகிறது 
சாய்தவிடத்தில் இன்னிசையொன்று தட்டியெழுப்ப 
மாகிரன் விழாவிற்குள் மன்மதம் அரங்கேற 
இறகுகளை வீசியெறிந்து 
வண்ணமழைத் தூவலில் நனைகிறேன் 
யாக்கையின் சன்னல்கள் திறந்து கொள்கின்றன 
மகிழம் கொடிகள் 
தன்னிலைகளால் வருடும் நெகிழ்வில் 
பூங்குயிலின் தாபம் தொண்டையில் சிக்கிக் கொள்கிறது 
இலக்கணம் மேயும் புலவன் 
சீர் பிரித்துக் கொண்டிருக்கிறான் 
கை நழுவாக் கவிதையொன்று 
கடலை உருவாக்கி கரையைத் தேடுகிறது 
அழுத்தவிதிகள் நீச்சலைக் கற்பிக்க 
நீந்துகிறவன் சற்றை இறந்து மிதக்கிறான்... 
மீண்டும் பிறந்த போது 
ஆடைகளை எடுத்துக் கொண்டு 
அங்கிருந்து நகர்ந்திருந்தது அந்த மாய இருட்டு

- மு.முகமது பாட்சா

Friday, 20 October 2017

'இவன் வார்த்தைகளால் இறந்தவன்'

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

எத்தையாவதொன்றை எப்போதும் 
பேசிக் கொண்டேயிருக்கிறேன் 
தேவையில்லாத வார்த்தைகளும் 
தேவையான ஒன்றாய் 
காற்றில் கலந்து விடுகின்றன 
போதி மரத்து வார்த்தைகளெல்லாம் 
நிர்வாணம் தேடியலைகின்றன 
ஆசையின் வார்த்தைகளால் 
விழிகளின் தவம் கலைந்து 
வீதியில் செல்கின்றேன் 
செங்கோலோச்சும் வார்த்தைகளால் 
அரசனாகிப் போகிறேன் 
மமதை வார்த்தைகளென்ன 
களவாடிச் சென்று காரி துப்புகின்றன 
பரிதாப வார்த்தைகளெல்லாம் 
பார்த்து விட்டுப் போகின்றது 
பாவத்தின் வார்த்தைகள் 
சிலுவைகளைச் செய்து கொண்டிருக்க 
வஞ்சகத்தின் வார்த்தைகள் 
பள்ளம் தோண்டிக் கொண்டிருக்கின்றன 
புதைத்த இடத்தில் மிச்சமாய் இருந்தது 
இந்த ஒரு வார்த்தை மட்டும்தான் 
'இவன் வார்த்தைகளால் இறந்தவன்' 

- மு.முகமது பாட்சா

Popular Posts