இப்போதுள்ள குறி வந்த கதை
தள்ளி, உனது கங்குகள் எரிகின்ற
கிடங்குகளுள் அவனை முங்கியபோது
அப்போதுதான்
துணைப் பாலியல்புகள் அவனில்
தோன்றத் தொடங்கியிருந்தன.
இனிப்புகளைப் பராக்குக் காட்டி
திக்குகள் தெரியாக் காடுகளில்
விரல்பிடித்து
வழிநடாத்தி
பிஞ்சு என்புகளை ஒடித்து உனது பீடங்களில்
பேயின் சிதைகளுக்கு எரியூட்டினாய்.
இரத்தத்தின் சாற்றிலிருந்து உருக்கொண்டு
மனிதர்களை இரைகொள்ளும் விலங்கின் முன்
தம்மைப் படையலிடும் வகையைப் பரீட்சிக்க
அவனை நெறிப்படுத்தினாய்.
துர் நடத்தைகளின் கடவுளுக்கு அவனை நீ
பலியிட்டபோது
கிளர்வுகளைத் தாங்கும் வலுவை
அவனது தசைநார்கள் பெற்றிருக்கவில்லை.
பிறகு வந்த நாட்கள் காய்ச்சல் கண்டவன்போல்
உள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தான்.
அறியாமையின் கண்கள் துலக்கி
வயதுக்கு மீறிய ஆற்றலால் அவனை நீ
முதிர்ந்த சிறுவனாக்கிப்
பருவத்தின் இயல்புகளைச் சிதைத்தழித்த மறுபுறம்
கேள்விகளாலும் ஆச்சரியங்களாலும் வழிந்தான்.
ஊன் உருகும் வாசனையும்
கொந்தழிக்கும் குருதியின் ஓசையும்
சில்லெனச் சுரந்து ஊற்றெடுத்த ஹோமோன் ஒரு கடலுமாய்த்
தீயில் கிடந்தவன் ஊறினான்.
இருண்ட அடவிகளின் ஆழத்தில் வேட்டையாடும் கலையையும்-
முடித்து திசை தவறாத் திரும்புதல்
மலைகளில் குதித்து நீர்நிலைகளில் சுழித்துக்
கரையேறும் சாகசங்களையும் நீ பயிற்றுவித்த பிறகு
வதைகளிலிருந்த தேனின் கள்ளைத் தெரிந்தான்.
உன்னை, போகங்களின் முடிவில்
நீண்ட நாழிகளுக்குக் கண்கள் சொருக
மயங்கிக் கிடக்கச் செய்தான்.
பிறகெப்போதும் அவனைத் தன் ப்ராயத்திற்குத் திரும்ப
அனுமதித்திராத உன்னிடம்-
வெறிகொண்ட நாய்கள் தன்னுள் குரைப்பதாக
அவன் முறையிட்ட அன்று
உனது மார்பினைத் திறந்து பற்களின்
தடங்களைக் காட்டினாய்.
பிறகொருநாள்
தன்மீது நிகழ்த்தப்பட்டிருந்த
துஸ்பிரயோகத்தை அவன் அறிந்த நாளில்
காலம் தூர நழுவிப்போய்
ஆயுளுக்கும் வேறெவளும் துடைத்தெறிய முடியாதபடி
உனது எச்சிலும்
வாசனையுமாய் அவனை நிரப்பியிருந்தன.
தனது வாநாள் முழுவதுமாய் உனது
பாரித்துத் தகிக்கும் மார்புகளையும்
விம்மிக் கௌவும் வழியையும்
தனது சொந்தக் குறியையும் சுமந்து திரியும்படி நீ
அவனைச்
செய்துவிட்டிருந்ததை உணர்ந்தபோது
இளைஞன் பருவத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்தான்.
மரணத் தறுவாயில்
சைகைகளினால் அவன் அவற்றை
மீளவும் வேண்டிக்கொண்டிருந்தான்
றஷ்மி