Sunday, 30 June 2019

மாட்டுக்கறி தின்றவன் 2


மாட்டுக்கறி தின்றவன்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு
அந்தப் பிரதேதத்தை 
அங்கேயே 
போட்டுவிட்டுச் சென்றார்கள் 
அஃதொரு மாட்டின் தோலால் 
மூடப்பட்டிருந்தது... 
வாய் ஏதோ ஒரு கோஷத்தை 
முழங்கிக்கொண்டிருக்க 
அதன் ஆணுறுப்பை குதறிய
எச்சில்கள் ஒழுகிக் கிடந்தன... 
அதனைப் பிணக்கூறாய்விற்கு 
எடுத்துச் செல்லும் முன்பாக 
விரிவாகக் 
குற்றப்பத்திரிக்கை எழுதியவர்கள் 
இப்படி முடித்திருந்தார்கள் 
இவன் ஒரு தேசத் துரோகி. 

-முகமது பாட்சா*

01/07/2019

Saturday, 29 June 2019

ஆண்களின் மீசையெனப் படிமம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஊர்மிளையின்
அழுகையைச் சுமந்து திரியும்
அந்த வனத்திற்கு என்ன பெயர் வைப்பது?
பாண்டுவின் வர்ணனைகள்
அழுது கொண்டிருக்கும்
அந்த இடத்திற்குப் பெயர்தான் மாத்ரியா?
அம்பாலிகா
இன்றும் அலைந்து கொண்டிருக்கிறாள்....
யசோதரையின் மௌனம்
செத்துக் கிடக்கிறது மாட்டிறைச்சியாக...
உரித்தத் துயிலில்
ஒட்டிக் கொண்டிருந்தது
அத்துணைக் கண்களும்...
அகலிகை
கல்லாகவே இருக்க விரும்புகிறாள்
கௌதமனை யாராவது அடிக்கக்கூடும்
தன்னையெடுத்து...
- இரத்தங்களை அள்ளியெடுத்து
நிர்பயா என்று பெயர் சூட்டுகிறார்கள்...
அரிவாள்கள்
ஆண்களின் மீசையெனப் படிமம் மாறுகிறது.

- மு. முகமது பாட்சா*
29/06/2019

மாட்டுக்கறி தின்றவன் 1

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இந்தக் கவிதையை 
எந்த நூற்றாண்டில் கொண்டுபோய் 
புதைக்கப் போகிறீர்கள்? 
இன்னமும் 
கஜினி படையெடுத்துக் கொண்டேயிருக்க... 
ஔரங்கசீப்பை 
விரட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்... 
ஆதார் கார்டுகளுக்கு 
கண்களைப் பொருத்திவிட்டு.... 
ஆதிகாமத்திற்குள் நுழைந்திருக்கிறது 
வேதாகமம்... 
எனது கழுத்தை வெட்டி 
உங்களுக்கு விருந்தளிக்கிறேன்... 
நீங்கள் ஈரலின் ருசியோடு 
நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கிறீர்கள்... 
என் எலும்புகளின் மஜ்ஜையில் 
நீங்கள் தேடிக் கொண்டிருப்பது... 
ஒரு மதத்தின் வரலாறு. 

- மு. முகமது பாட்சா*
29/06/2019

Thursday, 27 June 2019

ஏதோ உண்மையைச் சொல்கிறார்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

'பனைமரக் காட்டை நீ பார்த்துக் கொள்' 
மெதுவாகச் சொல்லும்போதே மூச்சிரைத்தது... 

'அங்குதான் உன் பாட்டியும் 
பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருக்கிறாள்' 
சிரித்தவர் 
வேறு எங்கோ நடந்து செல்கிறார்.. 
நானும் கூடவே போகிறேன்... 

கயிறு கட்டில் வாசத்தை நுகர்ந்திருக்கிறாயா? 
அவர் கையை மெதுவாக அழுத்துகிறேன் 
என்னையே சற்று நேரம் பார்த்தவர் 

'தாயம் விளையாடக் கற்றுக்கொள் 
தந்திரமறிந்தால் மட்டுமே பிழைக்க முடியும்!' 
என்றவர் கையைப் பிடுங்கிக் கொண்டு 

உன் அம்மாவின் வாசனை 
உனக்குத் தெரியுமா? தெரியாதா? 
என்று முறைத்தார்... 
நான் தலையை மட்டும் ஆட்டினேன்... 

'என் அம்மாவின் வாசனை 
உன் பாட்டியின் கைகளில் இருக்கிறது தெரியுமா?' 
என்றவரின் இளம் முறுவல் 
இதயத்தை 
உதடுகளில் வரைந்தது போல் நெளிந்தது... 

'அவர் உளறுகிறார்' என்று சுற்றத்தார் சொல்கிறார்கள் 
ஏதோ உண்மையைச் சொல்கிறார் 
என்பது மட்டும் எனக்குப் பிடிபடுகிறது... 

- மு.முகமது பாட்சா*
28/06/2019

சாத்தானின் கையில் வெள்ளிக் காசுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

முள் கிரீடத்தை அணிந்து 
பிதாவிடம் மனம் உருகுகிறாள்... 
வெள்ளை ஆடைக்குள் விரவும் 
அழுக்கின் படிமங்களை 
அவளால் துவைக்க முடியவில்லை.... 
கடவுளுக்குத் தூது போகும் 
வேதஆகமம் 
விரல்களுக்கிடையில் கெஞ்சிக் கொண்டிருக்கிறது... 
மண்டியிட்ட பிரார்த்தனையில் 
மெழுகுகள் உருகிக் கொண்டிருக்கின்றன... 
சாத்தானை விலக்கிவிடும் 
தேம்பும் விசும்பலைப் 
பறவையாகப் பறக்கவிடுகிறாள்.... 
சிலுவையை இறக்கி வைத்தவளின் தேகத்தில் 
ஆணிகளையடிக்கத் தச்சர்கள் 
ஆலயத்தின் வெளியில் காத்திருக்கிறார்கள்.... 
காகமொன்று பறந்து செல்கிறது 
சாத்தானின் கையில் வெள்ளிக் காசுகள்.

- முகமது பாட்சா*
27/06/2019

இரகசியக் குறிப்புகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஏடுகளில் எடுத்துவைத்திருந்த 
இரகசியக் குறிப்புகள் 
ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. 
ஒக்க நில்லாதவொழுக்கம் 
நக்கனாய் நடந்து போகிறது... 
மிக்கன் மிலேச்சனகாவே வாழ்கிறான்... 
தக்கன் தகையோர் சான்றளிக்க 
சாத்துவிகம் பேசுகிறான்... 
பட்டன் பஞ்சத்தில் வார்த்தைகளை 
பட்டினியில் தோய்த்தெடுக்க... 
ஏடுகளில் எடுத்து வைத்திருந்த 
இரகசியக் குறிப்புகள் 
ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. 

- மு. முகமது பாட்சா*
27/06/2019

Wednesday, 26 June 2019

எதுவாகவோ அதுவாகவே

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி

பூச்செடியைப் பறித்து வந்து 
கொத்துகளில் இணைத்து விட்டீர்கள்... 
பூக்கள் அழகானதென்பது மாயப் பிம்பம் 
பூங்கொத்து 
சாடி தொட்டிக்கு இடம் பெயர்ந்துவிட்டது 
வாசம் சாடிக்குள் பரவி நிற்க 
நீங்களே அதை உடைக்கிறீர்கள் 
நீங்களே அதனை ஒன்றும் சேர்க்கிறீர்கள்... 
உங்களின் ரசனை வித்தியாசமானது... 
வெளிச்சம் என்றீர்கள் 
நான் விளக்கிற்கு மாறிக் கொண்டேன்... 
இப்போதும் நீங்கள் 
அடிக்கடி தேய்க்கும் போது 
ஆலம்பனா என்று மண்டியிட்டு நிற்கிறேன்.. 
அடிமை ஆடைகளைக் களைந்து 
அர்ப்பணமாகிறது... 
உங்களின் ரசனை 
விந்துகளின் வழியே ஒழுகி நாற்றமெடுக்க... 
கள்ளப்பருந்தின் நகங்களுக்கு 
சாயம் பூசிக் கொண்டிருக்கிறேன்.

- மு. முகமது பாட்சா* 
26/06/2019

உலகம் சிறியது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இந்த உலகம் 
மிகவும் சிறியதாக இருக்கிறது... 
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் 
உயிர் பறவையின் 
பறத்தலின் தூரம் அத்துணை அதிகமில்லை... 
தேக்கி வைத்த ஆசைகளின் கழிவு 
பூமி முழுவதும் 
எச்சங்களாக நிறைந்திருக்கின்றன... 
துவேசங்களைப் போர்த்திக்கொண்டு 
ஒட்டு மருவோடு நடக்கிறோம்... 
ஆளுக்கொரு மதம் 
நம்மை இழுத்துக் கொண்டு உருள்கிறது... 
மன்னனென்பவன் 
மக்கிப்போன எலும்புக்கூடு... 
செத்துப்போன எலிகளை 
சவப்பெட்டிகள் கூட தங்கவைப்பதில்லை 
தங்கப் பஸ்பம் என்ன செய்யும்? 
நான் இருக்கிறேன் என்ற சொல் மட்டும் 
உயிர் வாழ்கிறது... 
கூடடைவு என்பதும் 
விடியும் வரை நிகழும் மரணம்தான்... 
இந்த உலகம் 
மிகவும் சிறியதாகவே  இருக்கிறது... 

- மு. முகமது பாட்சா*
26/06/2019

Tuesday, 25 June 2019

ஒட்டிக் கொண்ட அழுக்குகள்


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
தொடங்கக் கூடாத இடத்திலிருந்து 
வார்த்தைகள் வெளிவந்து விழுந்தன... 
காதுகள் 
கைகளால் தன்னை அறைந்து கொள்ள... 
சுற்றிலும் முகம் சுளித்தவர்கள் 
எச்சில் துப்பிவிட்டுப் போனார்கள்... 
ஒரு வார்த்தையிலிருந்து 
இத்தனை பன்றிகளா குட்டிப் போடும்? 
அவன் உதடுகள் 
மெல்லக் குழைந்து ஊளையிட... 
ஆடைகளை அவிழ்த்து வீசியெறிந்தான்... 
அவன் நிர்வாணம் 
வார்த்தைகள் இல்லாமல் 
மொட்டைக்கட்டையாக நடந்து சென்றது... 
பிரபஞ்சம் பிரிந்து நழுவ... 
நாகரீகத்தின் ஆடைகளில் 
ஆங்காங்கே 
அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தன...

- மு. முகமது பாட்சா*
24/06/2019

நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது - நுண்புனை கதைகள்

பாட்சாவின் நுண்புனை கதைகள்

நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது

நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது. கடவுளின் தேசத்தைக் குளிர்விக்க 
வறண்ட குளத்தில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் பாட்டில் விற்பவன்
 தாகத்தோடுவே அலைகிறான்... மழை வர யாகம் , தொழுகையெல்லாம் 
நடந்து கொண்டிருக்க, தவளைக்குத் திருமணமும் செய்து கொண்டிருந்தார்கள்... 
மூத்திரம் குடிப்பதைப் பற்றிய ஒரு யோகியின் பதிவு, பற்றி எரிந்து கொண்டிருந்தது...
 அமைச்சரின் வீட்டிற்கு லாரியில் தண்ணீர் சென்று கொண்டிருக்க... 
தண்ணீர் குடம் படத்திற்கு, தண்ணீராய் செலவு செய்யத் தண்ணீர் ஊற்றி ஊற்றி 
கதையைத் தேடிக்கொண்டிருந்தார்கள்... இறைந்து கிடந்த பாட்டில்களின் 
மத்தியில் சில யோனிகள் கிழிந்து இறைந்து கிடந்தன... 
அவள் தாகத்தோடுவே அலைந்து கொண்டிருந்தாள்... அவள் வயிற்றில் பசி, 
சிசுவாய் அமர்ந்து உருட்டிக் கொண்டிருக்க...
நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது.

- முகமது பாட்சா*
24/06/2019

Friday, 21 June 2019

சிக்கலானவன்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நான் 
என் மொழியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் 
உங்களுக்கு ஏன் வலிக்கிறது? 
என் விசும்பல்கள் 
இலக்கணச் சுத்தமாய் இசைக்க 
அஃதென்ன சங்கீத மேடை கச்சேரியா? 
என் காதலின் மொழி 
மிகவும் சிக்கலானது... 
காதலையே பொய்யென்று இகழ்வீரோ? 
மாடத்தியை 
அம்மனாக்கி வழிபடும் முன் 
அவளின் அழுகையின் விசும்பல்களை 
எந்தச் சரகத்தில் 
சுமைகல்லாய் நிறுத்தி வைப்பீர்கள்? 
தேனைச் சுவைக்கும் முன்பாகவே 
கூட்டின் சிக்கல்களைப் பற்றி ஆராய்கிறீர்கள்... 
கல்லறைகளின் வாசகங்கள் 
எப்போதும் கல்வெட்டில்தான் இருக்கும்... 
நான் 
படிமத்திற்குள் நுழைந்து வெளி வருகிறேன் 
நீங்கள் என்னைப் 
பாட்டிற்குள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்... 
என் விரல்களின் இசைக் குறிப்புகளையெல்லாம் 
நீங்கள் எப்படி எழுத முடியும்? 
- இப்படிக்கு 
என்றும் உங்கள் சிக்கலானவன். 

- மு. முகமது பாட்சா*
21/06/2019

Thursday, 20 June 2019

ஒத்திசை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒரு மாபெரும் இசைக் கூட்டலுக்கான மேடை 
நிசப்தம் பூசியிருக்கிறது... 
இமைகளினசைவில் 
ஒரு மெல்லிய ரீங்காரம் இழையோட... 
இதயத்தினருகில் 
தொம்!....தொம்!....தொம்!.... 
டிரம்ஸின் இடைவிடும் சப்தம் மெல்ல எழும்ப... 
அவளென்னை அருகில் சுவாசிக்கிறாள்.... 
திரைச்சீலை மேலே எழும்புகிறது.... 
என் சுவாசம் கீழிறங்கி வாசிக்க... 
பீத்தோவன் 
பியானாவிற்குள் நுழைந்து கடத்துகிறான்... 
அவளென் விரல்களை இறுகப் பற்றுகிறாள்... 
நான் மோஸார்ட்டை துணைக்கழைக்கிறேன்... 
ஒத்திசையில் வயலின்கள் ஒன்றிழைய... 
மாத்தேயோ கார்காசி 
கிடாருடன் நரம்புகளைச் சுண்டியிழுக்கிறான்... 
வானம் கீழிறங்கி வருகிறது.... 
நான் எங்கிருக்கிறேன்.. 
எங்கிருக்கிறேன்... 
எங்கிருக்கிறேன் என மெல்ல இழையும் வயலின்கள் 
வருகிறாயா போவோம் 
என்ற உச்ச ஸ்தாயிக்கு நகரும் போது 
எங்களை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்... 
மழை விடும் முன்பாகவே சொனாட்டிவிற்கு 
கவிதைகளை எழுத எத்தனிக்கிறோம்.... 
பீத்தோவனின் காதுகள் 
எங்களையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
21/06/2019
(இன்று உலக இசைதினம்)

கடலை உருவாக்கும் முன்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஒரு கடலை உருவாக்கும் முன்பு 
எனக்கான தோணியைத் தயார் செய்து கொள்கிறேன்... 
தூண்டிலுக்காக வளையும் குச்சி தேவைப்படுகிறது 
மீன்கள் இல்லையென்றால் 
அதனைக் கடலென்று யாரும் சொல்லுவதில்லை... 
கடல் இருந்தால் காற்று வேண்டாமா? 
காற்றுக்காக மரங்களை வளர்க்க வேண்டும்.... 
மரங்கள் மட்டும் இல்லையென்றால் 
கடல் நகரங்களை விழுங்கிவிடுவது சுலபமாகிவிடும்.. 
நகரங்கள் வாழ்வதற்கே 
கிராமங்கள் மிக அவசியமாகிறது.... 
கிராமங்கள் உருவாக்கும் முன்பாக 
குளம் குட்டைகளை வெட்டியாக வேண்டும்... 
குளம் குட்டைகள் நிரம்புவதற்கு மழை வர வேண்டாமா? 
மழை வருவதற்கு 
நான் மேகங்களை வரையும் முன்பாக 
கடலை உருவாக்கினால்தான் அது சாத்தியமாகும்... 
அதனால்தான் 
ஒரு கடலை உருவாக்கும் முன்பு 
எனக்கான தோணியைத் தயார் செய்து கொள்கிறேன்... 

- மு. முகமது பாட்சா*
20/06/2019

Wednesday, 19 June 2019

போராட்டம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஓர் அசாத்திய சப்தக் குகையில்தான் 
அந்த எலிகள் வாழ்கின்றன... 
வளைந்த பாதைகளில் 
பதுங்கு குழிகளும் அவசியமாகிறது... 
எந்த நேரத்திலும் வேட்டை தொடங்கலாம்... 
ஒரு பாதை 
கண்ணாடிச் சில்லுகளால் அடைபட்டிருக்கிறது.. 
வாய் கிழிந்த எலிக்கு 
ஈமக்கிரிகை நடத்த இது நேரமில்லை... 
அடுத்த வழியில் ஓர் எலி 
தன் குஞ்சுகளுடன் இறந்து கிடக்கிறது... 
விஷம் வைத்திருக்கிறார்கள்.... 
பூனைகளின் சப்தம் 
மண்டைக்குள் ஊடுருவி ஓடுகிறது... 
பூனையின் பாதங்களாய்ப் புகை 
உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றன... 
மூச்சுத் திணறிச் சாகும் போதும் 
பயமிருந்தால் அச்சம் தின்றுவிடும்.... 
வேறு வழியில்லை 
வேட்டைக்காரர்கள் நிற்கும் வாசல் வழி 
பாய வேண்டியதுதான்... 
மரணம் நிச்சயமென்றாலும் 
காயம் செய்துவிட்டுச் சாவதிலும் ஒரு சுகம்தான்... 
எலிகள் 
வேட்டைக்காரர்கள் மீது பாயத் தொடங்கின. 

- மு.முகமது பாட்சா*
20/06/2019

காணாமல் போனது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உட்புறம்

காணாமல் போன ஒன்றைத்தான் 
தேடிக் கொண்டிருப்பதாக 
அவர்கள் சொல்கிறார்கள்... 
அந்த ஒன்று என்பது அவர்களுக்கு அஃறிணை 
காணாமல் போனதைக் 
கண்டு பிடித்துவிட்டதாகச் சொன்னவர்கள் 
கண்டுபிடித்தது இப்போது 
காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள் 
காணாமல் போனது 
கிடைக்காமல் போய் விடுமா என்ன? 
கிடைத்துவிட்டால் 
அது கிடைத்த ஒன்றாகவே மாறிவிடும்... 
எனவே 
காணாமல் போனது கிடைக்கும் வரை 
காணாமல் போனது காணாமல் இருப்பதுதான் 
நல்லதென்று சொல்கிறார்கள்... 
நீங்களும் இந்தக் கவிதையைப் படித்ததும் 
மறந்துவிட்டால் பிரச்சனையில்லை... 
தொலைந்தது என்று 
கோப்பினை மூடி வைத்துவிடுவார்கள்..

- மு. முகமது பாட்சா*
19/06/2019

Tuesday, 18 June 2019

கனவின் மொழி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

கனவின் மொழி என்னவாக இருக்கும்? 
கருப்பு வெள்ளை என்கிறது விஞ்ஞானம்... 
கனவின் மொழி 
சோதிடம்தான் என்கிறது ஆன்மீகம் 
சிறுப்பிள்ளைகளின் 
இளமுறுவலாகவும் அஃது இருக்கலாம்... 
தேவதைகள் விளையாடுகிறார்கள் 
எனச் சொல்கிறாள் பாட்டி... 
எருமை மாடுகள் விரட்டிய கனவில் 
நான் இன்னமும் 
ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன்... 
காதலுக்கான மொழியாகவும் 
கனவுகள் இருக்கலாம் 
அங்குதான் அவர்கள் நிம்மதியாகப் 
பேசிக் கொண்டிருக்கிறார்கள்... 
கனவென்பதே கல்லறைகளின் மொழியென்று 
தேசாந்திரி 
சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்... 
கனவுதான் குப்பைகளைக் கொட்டி வைக்கும் 
புதைகுழியென்று யாருக்குத் தெரியும்... 
கனவொன்று 
என்னை முத்தமிட்டு எழுப்புகிறது... 
கனவுகளுக்காக 
நானென்னை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

- மு.முகமது பாட்சா*
19/06/2019

நெருக்கம்



படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் பறவை
நான் சற்றுமுன் தான் 
காகமாக மாறியிருந்தேன் 
கடற்காற்றில் 
அழகான கருமுடி அலைபாய 
அவளின் 
விளையாட்டுப் பொம்மையாக 
மாறி விட்டேன்... 
நேசம் இதயத்தின் 
நெருக்கத்தில் இருந்தாலும் 
அச்சம் தூரத்தை 
அளந்து வைத்திருந்தது... 
இப்போது அவள் என்னைப் 
பட்டமாகப் பார்க்கத் தொடங்கினாள் 
அறுந்துவிழும் முன் 
நானாகவே 
என் நடையைக் கட்டுகிறேன். 

- மு. முகமது பாட்சா*
18/06/2019

Monday, 17 June 2019

கவிச்சி சாப்பிடுபவர்களைச் சுட்டுவிடனும்

 à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
இடுப்பில் ஓர் ஆட்டை வளைத்துக் கட்டிக் கொண்டவன் 
பாம்பின் வாயில் கிரெடிட் டெபிட் கார்டுகளைத் திணித்து 
பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான் 
அவன் கால்களுக்காகவே ஒரு பசுமாடு காத்திருந்தது... 
அவளும் தன்னைப் பட்டாம்பூச்சிகளால் உடுத்திக் கொண்டவள் 
பன்றிக் கொழுப்பை உதட்டில் பூசிக்கொண்டாள்... 
கருங்குரங்கைத் தோளில் தொங்கவிட்டவள் 
ஒப்பனைப் பொருட்களை அதன் வயிற்றில் போட்டு வைத்தாள்... 
வாக்கிங் என்பது கொழுப்பைக் குறைத்தாலும் 
திமிரைத் தேகம் முழுவதும் 
திட்டு திட்டாய் ஆங்காங்கே வைத்திருக்கிறது... 
நடை பாதைகளில் நாற்றம் குடலைப் பிடுங்கியதால் 
ராயல் மிர்ராஜை நாசியில் திணித்துக் கொண்டார்கள்... 
செத்த மாட்டைச் சாப்பிடும் அவர்களுக்கு 
இன்று ஏதாவது பண்டிகையாக இருக்கலாம்... 
கையேந்திய தேசியக்கொடியை கார் கண்ணாடி இறக்கி 
விரட்டி விட்டவர்கள்... 
தேசம் கெட்டு போச்சு என்று சொன்னார்கள்... 
கடற்காற்றை அழுக்குகள்  நக்கி நகர்ந்து கொண்டிருந்தன... 
மீன்கள் எண்ணெய்ச் சட்டியில் சப்தமிட்டுக் கொண்டிருக்க 
கடல் நாறுகிறது என்றால் சீமாட்டி 
கழுத்தில் தொங்கிய சிப்பிகளின் எச்சங்களும் 
அட்டிகையின் பவழ அழுக்கும் கோபமாக அவளைப் பார்க்க 
கவிச்சி சாப்பிடுபவர்களைச் சுட்டுவிடனும் என்றான் 
அவளின் காதில் மட்டும் கேட்கும் படியாக... 

- மு. முகமது பாட்சா*
18/06/2019

Sunday, 16 June 2019

சாலை நெருக்கடி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

யாரும் சாலையைச் 
சரியாகக் கடப்பதில்லை 
மோதிவிடும் வண்டிகளின் மீதுதான் 
குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் 
மிதிவண்டிகள் 
நிதானமாகவே சென்று கொண்டிருந்தன 
உதைவண்டிதான் இப்போது 
வாழ்க்கையை உந்தித் தள்ளுகிறது... 
அதற்குதான்
முதலில் பசியாற்றவேண்டும்... 
வேகமென்பது 
வீதிகள் நம்மை விழுங்கி விடுவது... 
சாலையோரங்கள் 
சந்தடியான சப்த கூட்டின் இருமல் 
தொட்டு நகரும் பேருந்தில் எமன் 
எட்டி பார்த்துவிட்டுச் சிரிக்கிறான்.. 
எல்லோருக்குமே இங்கு எள்ளல்தான்...

- மு.முகமது பாட்சா*
17/06/2019

ஓவியமா? வார்த்தைகளா?

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

என்னைச் சுற்றிலும் 
சில ஓவியங்களும் எழுத்துகளும் 
சிதறிக் கிடக்கின்றன... 
அவை தங்களையே வார்த்தைகளால் 
சுயம் புனைந்து கொண்டவை 
அதில் அழுக்கான ஓவியங்களும் 
ஆடம்பரமில்லாத எழுத்துகளும் கூட அடக்கம்... 
அங்கத மொழிகளில் 
நையாண்டிச் செய்யும் சித்திரங்களை 
சில வார்த்தைகள் இரசிக்கின்றன... 
கடை வீதிகளும் 
என்னை வார்த்தைகளால் 
மொய்த்துக் கொள்கின்றன.... 
பைகள் நிறைய 
வார்த்தைகளை அள்ளி வருகிறேன் 
வீட்டிற்குள்ளிருந்த ஓவியம் 
என்னை விசித்திரமாகப் பார்க்கிறது 
கடவுச் சொல் இல்லாத கணினிக்குள் 
சில வார்த்தைகள் நுழைந்திருக்கின்றன 
நானென்பது ஓவியமா? வார்த்தையா? 
ஞாயிற்றுக் கிழமையின் வெறுமையாய் 
சூடாறியத் தேநீரில் 
ஓவியமான பாலாடையை  இரசித்துக் கொண்டிருக்க... 
முதன் முறையாகச் 
சன்னலைத் திறந்து ஒரு பாட்டு உள்ளே நுழைகிறது.

- மு.முகமது பாட்சா*
16/06/2019

Saturday, 15 June 2019

தப்படி , தரையடி

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
உக்கிரத்தாண்டவ 
ஜதிகளைத் தப்பாமல் ஆடுகிறாய் 
உதிரத்துளிகளின் வீசலில் 
உரசிச் செல்கின்றன எழுத்துகள்... 
சுக்கிலமுறைந்து சூள் கொள்ளுமோ சுடரே... 
பத்திரு விழிகளும் பற்றிக் கொள்ளப் 
பகல் கனவு என் செய்வேன்? 
கட்டறுவோடம் கடலலம்பச் சுற்றலில் 
மூழ்குமோ? மீளுமோ? 
கரையின் விளும்பிலடி அலையின் நுரை 
எழுதும் வார்த்தைகள் யார் அறிவார்? 
ஒற்றையடியுதவா வார்த்தைகளெல்லாம் 
கற்றை மொழியெனக் கர்வம் சூட... 
இற்றையில் நிற்கும் 
இகலோனை நானென் செய்வேன்? 
தப்படி, தரையடி, சுற்றிச் சுழன்று காற்றாய் 
சூழ்ந்தடி... 
மொட்டவிழ்ந்து மலரா மனமெல்லாம் 
கெட்டழிந்து போகட்டும் அரு ரூபனே! 

-மு. முகமது பாட்சா*
15/06/2019

Friday, 14 June 2019

காதல் பக்கிர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் இசைக்கருவிகளை இசைக்கின்றனர் மற்றும் இரவு

என் உதடுகளின் வரிகள் 
உன் கவிதைகளால் நனைகின்றன... 
எனக்குள்ளிருந்த ஒருவனை 
நீ மீட்டெடுத்துச் செல்கிறாய் 
என் சுதந்திர வெளி 
உனது அன்புச் சங்கிலியால் 
பிணைக்கப்பட்டிருக்கிறது.. 
தேடல்களின் பேகம்ஜான் நீ 
நான் அடிமையாகவே வாழ்கிறேன்... 
என் பொய்களுக்கு 
நீதான் முலாம் பூசுகிறாய்... 
உன் சந்தன வார்த்தைகளைப் பூசிக்கொண்டு 
ஊர்வலம் போகிறேன்... 
எனக்கான வெள்ளைக்கொடியை 
ஏந்தி நிற்கிறது 
நமக்கான காதல் கம்பம் 
தப்ஸினோசையில் அதிரும் நரம்புகளில் 
நீ ஆவர்த்தனம் கூட்டுகிறாய்... 
மயக்க வார்த்தைகளில் 
நான் மதுரம் தேடிக் கொண்டிருக்கிறேன்... 
உங்களில் யாருக்கும் தெரியும் 
நானொரு காதல் பக்கிரியென்று... 

- மு.முகமது பாட்சா* 
15/05/2019 

Thursday, 13 June 2019

தண்ணீர்தான் விலாசம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

பேரண்டத்தின் பெருமுனையில் 
சிறு கயிற்றைப் பிடித்து 
நகர்ந்து கொண்டிருக்கிறோம்... 
நதிகளை நக்கிய நாய்கள் இப்போது 
நாவரண்டு தவிக்கின்றன... 
நிலம் நீர்ச் சத்தை இழந்துவிட்டது... 
கடலேன் உப்புக் கரிக்கிறது என்பது 
இப்போதுதான் விளங்குகிறது... 
மேகங்களையும் திருடுகிறார்கள்... 
குடங்களின் பெருமூச்சு 
குடிசைகளுக்குள்ளிருந்தான் வருகிறது... 
இனி உலகத்தில் விலையுயர்ந்தது 
தங்கமல்ல தண்ணீர்தான்... 
அதற்காகத்தான் நாங்கள் 
அடித்துக் கொள்ளப் போகிறோம்.... 
அதற்காகத்தான் 
நாங்கள் ஆயுதம் ஏந்தப் போகிறோம்... 
முலைகளை அறுத்துவிட்டு 
முழுவதுமாகப் பால் குடிக்க ஆசைப் பட்டவர்கள் 
முகவரி தேடுகிறோம் 
தண்ணீர்தான் இனி எங்கள் விலாசம்.

- மு.முகமது பாட்சா*
14/06/2019

விசித்திரவாசிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்

அவர்களின் பிரபஞ்சம்
எப்போதும் விசித்திரமாகவே இருக்கிறது
நுனி நாக்கில்தான் பேசுகிறார்கள்
கையுறைகள் கூட புதிதாகவே இருக்கின்றன
புன்னகையில் விஷமம் இருக்கும்
கால்கள் தரையில் பாவாது...
கைத் தட்டினால்
கடவுளும் அருகில் வந்து விடுகிறார்...
பணத்தின் வாசனை
அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
அவர்களின் துப்பாக்கிகளும் 
பணத்தாள்களால் செய்யப்பட்டிருக்கின்றன...
மன்னன் குனிந்து வரவேற்கிறான்
ஆனாலும் அவர்களைச் சுற்றி 
சில டாட் கள் கூடவே ஒட்டி வருகின்றன...
அவை ஜிம் பாய்களாக இருக்கலாம்...
துப்பாக்கி ரவைகளாக இருக்கலாம்
பாதிக்கப்பட்டவர்கள்
துப்பிய எச்சில்களாகவும் இருக்கலாம்... அல்லது
பிணவறையில் மேயும் 
புழுக்களாவும் கூட இருக்கலாம்.

- மு.முகமது பாட்சா*
13/06/2019

காய்ப் பிடித்திருக்கு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

வண்டின் கால்கள் 
என்னைத் தட்டிவிட்டுப் போகின்றன... 
மஞ்சள் பிசிறுகளோடு நீண்ட குழல் வீதியில் 
சறுக்கி வீழ்கிறேன்... 
ஆக்டோபஸ் திரவங்கள் சூழ்ந்துகொள்ள 
ஆதிப் புணர்ச்சியொன்று 
வியர்க்காமல் வினையாகிறது... 
சூல் பையின் வீக்கம் 
ஓர் இருட்டு அண்டத்தைச் சுமக்க... 
பூவின் மடல்கள் உதிர்ந்து விழுகின்றன... 
விவசாயி மகிழ்கிறான் 
ஆஹா! காய்ப் பிடித்திருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
13/06/2019

சிப்பி என்பது வீடா? கூடா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

எடுத்து வந்த கடலை 
விரித்துப் பார்க்கிறேன்... 
சிப்பிகள்தான் அதிகம் இருந்தது... 
சிப்பி என்பது வீடா? அல்லது கூடா? 
வீடென்றால் 
நாங்கள் தொலைத்த வீடும் 
கூடென்றால் கட்ட மறந்த 
குருவிகளின் கூடும் நினைவிற்கு வரும்... 
குருவிகளின் கூட்டில் 
தங்கிவிட ஆசைதான்... 
கானகத்தை அடைகாக்கும் 
கருவறை அதுதான்... 
கருவறை என்பது இப்போதெல்லாம் 
அடிக்கடி கழுவி விடும் 
கழிவு நீர்த் தொட்டியாகிவிட்டது... 
ஆசைகளின் விளைச்சல்தான் 
குழந்தைகளா? 
பெற்ற குழந்தையைக் கொன்றுவிட்டால் தாய்... 
கள்ளக்காதலன் தலைமறைவாகிவிட்டான்... 
காதல் என்பதுதான் என்ன? 
தேகம் வியர்த்ததும் 
மோகத்தில் யாகம் வார்ப்பதா? 
யாகம் வார்த்தும் 
மழை வரவில்லையென்றால் 
நதி எங்கே போகும்? 
கடலின் கண்கள் காத்திருக்கின்றன... 
ஒரு நீண்ட 
காதல் கவிதையை எதிர் நோக்கி.

- மு. முகமது பாட்சா*
12/06/2019

Tuesday, 11 June 2019

நான் + கவிதைகள் = வெற்றிடம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

நான் எழுதி வைத்த கவிதைகளை 
1232 வதுதடவையாக வாசித்துக் கொண்டிருக்கிறேன் 
சில கவிதைகளை 
அந்துப்பூச்சிகளின் வாழ்வாதாரத்திற்காகச் செலவிட்டேன் 
என் மீதான வஞ்சத்தை 
சில கவிதைகளின் மீது காட்டின எலிகள்... 
நானே வாங்கி வந்த உளுந்தம் பருப்பை 
என் கவிதையின் தாளொன்று வாசித்துக் கொண்டிருந்தது... 
ஆனாலும் என் கவிதைகள் 
கவிதைகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்... 
நான்+ கவிதைகள் = பரிதாபங்கள்! 
கவிதைகள் + நான் = கண்டுகொள்ளாதவர்கள் 
மற்றொருவரின் 
கவிதையொன்றுதான் என்னை ஒப்பனை செய்தது... 
இரட்சிப்பை - றட்சிப்பு என்றும் 
பெயரை வடமொழியில் பின்னிக்கொண்டும் எழுதினேன்... 
கட்டுரையெழுதி கவிதையென்றேன்... இப்போது

கைத் தட்டல்கள் = கவிதைகள் + நான்

பிழைகள் 
பாராட்டு விழாக்களை நடத்துகின்றன.... 
ஆனாலும் கவிதைகளை மட்டும்தான் 
நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் 
1233 வது தடவையாக ...

- மு.முகமது பாட்சா*
12/06/2019

உள் காயங்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

உன் பார்வை வெளி 
மிகவும் விசாலமாகவே இருக்கிறது 
அதிலிருந்து நான் 
எப்படித் தப்பித்துக் கொள்வது? 
என் கழுத்துக்கீழே விழுந்த அம்புகளை 
வெட்கத்தைக் கொண்டு பொறுக்குகிறேன் 
என்னாடைகள் கிழிந்திருக்கின்றன... 
மானசீகனாய் 
அதரங்களைக் கடித்துக் கொய்தபோது 
தெரித்தெழுந்த புண்களை எப்படியாற்றுவேன்? 
உனக்குள் நுழைந்து நான் 
போராடிக் கொண்டிருக்கிறேன்... 
என் வெட்க ஸ்தலத்தை நீ வேர்த்துப் புணர்கிறாய்... 
கட்டவிழ்ந்திருக்கும் மதயாணை முன்பு 
மகிழம் தோட்டம் மரணமெய்வது போல் 
என் தேகம் சிதறிக்கிடக்கிறது... 
நீ பசியோடுவே புன்னகைத்து விடைபெறுகிறாய்.. 
நானும் சற்றேறக்குறைய 
அப்படித்தான் உள் காயங்களுடன்.

- மு.முகமது பாட்சா*
11/06/2019

Monday, 10 June 2019

பசிக்கிறது என்றான்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
முதலில் அவன் 
சாதாரணனாகத்தான் உள்ளே வந்தான் 
பசிக்கிறது என்றான்.. 
பாவம் என்றவர்கள் பசியைத் துடைத்தார்கள் 
ஆடையைக் கேட்டு 
வாங்கி உடுத்திக் கொண்டான்... 
ஆதரவாய் தங்க இடமும் தந்தார்கள்... 
மறு நாள் அவன் துணையாகப் 
பூனையொன்றும் வந்து படுத்துக் கொண்டது 
எலிகள் இனி வராதென்றான்... 
பாதுகாப்பதாய் சொல்லி 
சாவியை வாங்கிக் கொண்டான்.... 
அவர்கள் திரும்பி வரும் போது 
தெருவில் படுக்கைகளை விரித்தவன் 
பத்திரமாகப் படுத்துத் தூங்குங்கள் 
உள்ளே பத்தினி இருக்கிறாள் என்றான்.  

- மு.முகமது பாட்சா*
10/06/2019

கடவுள் வந்தார்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஓர் அந்திமகாலத்தின் 
அருகில்தான் அவரைப் பார்த்தேன் 
அவர் தன்னைக் 
கடவுள் என்று சொல்லிக் கொண்டார் 
எனக்குத்தான் பார்வைக் குறைவு 
அவர் முகம் தெரியவில்லை 
விளக்கிலொட்டாத தீபம் போல் 
ஆடிக் கொண்டேயிருந்தார்... 
குரல் மட்டும்தான் கேட்டது
உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் 
என்ன கேட்பது 
அதே கேள்வியைத் தான் 
நானும் அவரிடம் கேட்டேன்... 
அவர் சிரித்திருக்கவேண்டும் 
மின்னல் வெட்டியது 
மழை வரும் போல் இருந்ததால் 
ஒரு குடை கேட்கும் அறிவு கூட இல்லாமல்.. 
ஒதுங்கிக் கொள்ள 
இடம் தேடிக்கொண்டிருந்தேன் 
அவராவது கொடுத்திருக்கலாம் 
என்னிடம் என்ன தேடினார் என்பது 
எனக்கென்ன தெரியும்?

- மு.முகமது பாட்சா*
10/06/2019

ஆபத்தானது



அந்த ஓவியம் என்னை வரைகிறது 
வண்ணத்துகள்கள் என்மீது ஒட்டிக்கொள்ள 
நான் பட்டாம்பூச்சியாக மாறுகிறேன்... 
காற்றிலுதிர்ந்த வண்ணங்களைக் 
களவாடிச் செல்கிறது பச்சோந்தியொன்று... 
பச்சோந்தியின் பார்வையில் 
சிக்கிக் கிடக்கும் பட்டாம்பூச்சி நானென்றால்... 
கற்பனைகளும் ஆபத்தானது... 
அந்த ஓவியம் என்னை வரைகிறது 
நான் நானாக நடந்து செல்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
09/06/2019

ஆறிப்போயிருக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் தொப்பி

சன்னலை அகலத் திறந்துவிட்டுக்
கவனிக்கிறேன் 
வானம் கடலாக மாறியிருந்தது... 
நிழல்களைப் பொறுக்கிக் கொண்டே 
மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்... 
வேர்கள் குளியல் போட எத்தனிக்கும் 
குதுகலத்தில் மரங்களும் செடிகளும் 
தலையாட்டி மகிழ்கின்றன... 
சின்னக் காற்றிலுதிர்ந்தப் பூவொன்று 
என் பார்வைப் பட்டு மோட்சம் போகிறது 
பறவைகளின் மனதைப் 
படித்த வார்த்தைகள் எந்தப் புத்தகத்தில் 
ஒளிந்திருக்கும்? 
சூடான தேநீரொன்றும் 
எனக்குத் தேவைப்படவில்லை 
நானே ஆறிப்போயிருக்கிறேன்... 
என்னைச் சுற்றிலும் 
எழுத்துகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன..

- மு.முகமது பாட்சா*
07/06/2019

வெற்றியின் கணக்கு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
தோற்றலென்பதோர் குறுகிய சந்து 
நுழைந்து நெளிந்தோடும் 
சாக்காட்டைக் கடந்து 
மீள்வதே மறு ஜென்மம்... 
தோல்வி பிழையெனக் கொண்டால் 
பிறப்பின் தகுதியும் கேள்விக்காளாகும்... 
வாழ்தலே வாழ்வின் தகுதி... 
இடறுதலென்ப இடை நிறுத்தலல்ல 
இடையின் வலி பொறுத்தல்.... 
தோற்றலென்பதின் தொடுகுறி 
வஞ்சம் கோர்த்த வகையிலும் சாரும்... 
வஞ்சமறுக்க வஞ்சம் கோர் 
வாழ்வதில் மிச்சம் எஞ்சி நிற்கிறது 
வெற்றியின் கணக்கு.

-மு. முகமது பாட்சா*
06/06/2019

Monday, 3 June 2019

அழகிய முன்மாதிரி - ரமலான் 27

அழகிய முன்மாதிரி - ரமலான் 27
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள் 
அழுக்கு என்பது உடைகளில் இருக்கலாம் 
உள்ளத்தில் இருக்கக் கூடாது... 
அஸ்ஸலாமு அலைக்கும் 
வ ரஹ்மத்துலில்லாஹி வ பரக்காத்தஹூ 
அழகிய முன்மாதிரி 
புன்னகைதான் உறவுகளின் முதல் வாசல் 
கதவுகளை மூடி வைக்காதீர்கள் 
காற்றில்லாமல் ஈமான் இறந்துவிடும்... 
சோதரனின் கரங்களை முத்தமிடுங்கள் 
ஈரம் இதயத்தில் பாயட்டும்... 
உறவுகளின் வாசல்களைத் தட்டுவது 
கையேந்துவதற்கல்ல... 
கைகளோடு கைகளைப் பிணைப்பதற்காக.... 
கண்கள் சிரிக்கட்டும் 
வார்த்தைகளில் நறு மணம் வீசும்... 
ஏழையென்பது இங்கு யாரும் கிடையாது... 
வசதியென்பதுதான் 
இம்மையில் நழுவி விடும் இளம் காற்று... 
ரோஜாக்களின் தோட்டத்திலா 
முட்களை ரசித்துக் கொண்டிருப்பீர்கள் ? 
வாழ்த்துகள் சொல்லுங்கள் 
வாசம் 
வாசற்கதவை அகலத் திறந்து வைக்கட்டும்...

- மு.முகமது பாட்சா*
04/06/2019

மௌனமாக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், உணவு மற்றும் தண்ணீர்

மௌனம் அமர்ந்திருந்த இடத்தில் 
புற்கள் முளைத்திருக்க.... 
காற்று வருவதற்காகப் 
போதி மரமொன்று நடப்பட்டது... 
பறவைகள் கூடு கட்டியதால் 
புல்லாங்குழலிசைக்க 
மூங்கில்கள் வளர்ந்தன... 
அமைதியைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் 
வரத் தொடங்கினார்கள்... 
கடைகளும் அதிகமாயின... 
சிறப்புச் சொற்பொழிவுகளால் 
ஆலயம் எழுப்பினார்கள்... 
அமைதியை வாங்கக் 
கூட்டம் அலை மோதியது... 
ஆனாலும் அவர்களுக்குத் தெரியாதவொன்று 
அமைதி அங்கிருந்து வெளியேறியது.

- மு.முகமது பாட்சா*
03/06/2019

அமானிதம் - ரமலான் 26

அமானிதம் - ரமலான் 26
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
மரங்களின் நிழலில் 
படுத்துக் கொள்ளுங்கள் 
மலைகளில் நடந்து 
மேய்ச்சல் செய்யுங்கள் 
ஓடைகளில் ஓளுவு செய்வது 
அவ்வளவு அழகு 
ஓலைகளை விரித்தும் 
தொழுது கொள்ளலாம் 
சுவனத்தை அருகில் வைத்து 
நரகத்தைச் 
சுவனமெனச் சுழல்கிறாய்... 
அன்றையத்தேடல்கள் அற்புதமானது... 
இரசிக்கத்தெரியாதவன் 
இயற்கைக்கு எரியூட்டுகிறான்... 
தேனீக்கள் 
பூக்களை முத்தமிடுவதால் 
அன்றைய பசி ஆறுதலடைகிறது... 
இறந்து போன பறவையைப் 
பாடம் செய்தாலும் 
பறக்கவா போகிறது? 
கல்லறையில் பூக்கள் பூப்பதும் வரம்... 
கல்லாகக் கிடப்பவன் 
பூமிக்குப் பாரம்.... 
மேகங்களென்றாலும் மழையாக 
பூமிக்குத்தான் திரும்பும்... 
மரங்களை வெட்டிவிட்டு 
காற்றைக் காசு கொடுத்து வாங்குகிறாய் 
மஹஷரின் வெப்பத்திற்கு 
ஏசி போட 
எதைச் சேர்த்து வைத்திருக்கிறாய்? 
இருக்கும் சுவனத்தை அழித்துவிட்டு 
மறுமைக்கு 
எதைக் கொண்டு வழித் தேடுவது? 
இயற்கை 
இறைவன் கொடுத்த அமானிதம்.

- மு.முகமது பாட்சா*
03/06/2019

Popular Posts