Wednesday, 28 February 2018

தோல் நோய்

நாட்டிமை கொண்டதோ நகரத்தின் வேசங்கள்
காட்டினைக் கொன்றது கால்பரப்பும் தொழிலாலே
இயற் வீட்டிலும் விடியலைக் கொன்றது
பசும்சீலையை விலக்கி மூர்க்கமே கொண்டது
எண்ணெய்யின் தீராப்பசியாலே
மீட்சிமை வாராதோ தேசத்தின் தோல்நோயில்
காட்சிமையெல்லாம் கண்ணோடு கழல்வதே!

- மு.முகமது பாட்சா*
01/03/2018

நானும் மனசும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை

வார்த்தைகள் உடைந்து
தொங்கிக் கொண்டிருக்க
பலகீனமான காற்று
சன்னல்களை
ஓங்கியறைந்து சாத்துகிறது
கடிகாரத்தின் முட்கள் 
பயத்தில் நடு நடுங்குகின்றன
கறுப்பு பூனையின் கண்களாய்
வாழ்க்கை பயமுறுத்துகிறது
தனிமையில் 
உட்கார்ந்திருக்கும் வெறுமை
மெல்லத் தீப்பற்றியெரிய
தேகத்தில் மர்மம்
கைகளைப் பரப்பி படர்கிறது...
ஒற்றைப் பூவாய் உதிரும் சலனம்
விளக்கிற்குள் அலையாட
வெளிச்சம் தேடி
நானும் என் மனசும் புறப்படுகிறோம்
காகமொன்று எங்களையே 
தலை சாய்த்து 
பார்த்துக் கொண்டிருக்கிறது....

- மு.முகமது பாட்சா*
28/02/2018



வேரோடும் கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

யாரும் எழுதாத கவிதையொன்றை 
எழுதிக் கொண்டிருந்த கவிதையிடம் 
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள், 

வார்த்தைகளுக்குள் சிக்காத அக் கவிதை 
உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்டது, 

பறக்கவோ, நடக்கவோ தெரியாத கவிதைக்கு 
விதையென்று பெயரிட்டு 
பூமிக்குள் புதைத்து விட்டார்கள், 

புழுக்கங்களுக்குள் புதைந்து கிடந்த (க)விதை 
வேர்களை ஊன்றிக் கொண்டு 
தலை நிமிர்ந்து வெளியே எட்டிப் பார்த்தது, 

ஆடுகளுக்கும் பிடிக்காத அந்தச் செடி 
விருட்சமாகி, விதைகளை ஈன்று 
காடுகளை உற்பத்தி செய்தது, 

காடுகளுக்குள் உயிர்த்த உயிரிகள் 
கவிதைகளை நேசிக்கத் தொடங்கின, 

விலங்குகளுக்கும் அடைக்கலம் கொடுத்த 
கவிதைக் காட்டில் 
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் 
மூல விருட்சத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள், 

விதைகளான கவிதைகளுக்கு 
காடுகளைப் பிரசிவிப்ப்து 
அத்துணையொன்றும் கஷ்டமாக இருக்கவில்லை ! 

- மு.முகமதுபாட்சா*
28/02/2017

கரகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள்

அம்மன் தேராட்டம் 
அழகா இருக்கேண்ணு 
அத்தமார் சொன்னாங்க, 

அப்பவும்தான் எனக்குத் தெரியல... 

வள்ளிக் கெழங்காட்டம் 
வளமா இருக்கேண்ணு.... 
மாமன்மார் சொன்னாங்க 

அதுவுங்கூட எனக்குப் புரியல... 

கரகத்தைத் தலையில்வச்சி 
ஆடச் சொன்னபோது... 
எங்கெரகமும் ஆடும்முண்ணு 

நானும்தான் வெளங்கல...., 

தப்பான இடத்தில் கைவச்சி 
காசுசொருகும் காமுகரை 
தடுக்கவும்தான் முடியல, 

பொல்லா அழுகையை 
புதைச்சி வச்சிகிட்டு 
கள்ளச் சிரிப்போடுதான் ஆடுறேன் 

என் வவுத்து நெருப்பு மட்டும்
ஏன் இன்னமும் அணையல...? 

சக்திக்கரகம் ஆடிவச்ச போதும் 
தப்பான பார்வைய 
எவனும்தான் விலக்கல... 

சொம்புக்கரகம் ஆடிவச்ச போதும் 
என் சொம்புகள தட்டுவத 
எவனும்தான் நிறுத்தல... 

தோண்டிக்கரகம் 
அம்மனுக்கு ஆடிவந்தும் 
தோலுரிக்கும் பார்வையெல்லாம் 
என் பக்கத்தில்.... 

உடுக்கைச் சத்தமும் ஒண்டி முழங்க 
பறையடிக்கு, நானுமிப்ப 
பாழாய்தான் ஆடுறேன்....

என் சவத்து முன்னால சவமா நின்னு 
நானேதான் என்னை தேடுறேன்

- மு.முகமதுபாட்சா*
28/02/2017

Tuesday, 27 February 2018

தேடிக்கொண்டே

தானியங்கு மாற்று உரை இல்லை.

நான் தேடிக் கொண்டேயிருக்கிறேன்
இதுவரை அது கிடைக்கவில்லை
எதைத் தேடுகிறேன் என்பதைத்தான்
இன்னமும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்,
என்னையும் சிலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
எதற்காகத் தேடுகிறோம் என்பதை
அப்போதுதான் அவர்கள் சொல்வார்களாம்
நீங்கள் எதையாவது தேடிக் கொண்டிருந்தால்
அதுவும் நான் தேடுவதாகத்தான் இருக்கும்
சற்று ஒதுங்கி நில்லுங்கள்
எதையோ தேடிக் கொண்டிருந்தவர்
பூப்பல்லக்கில் சிந்தித்து கொண்டே போகிறார்
அவர் போன பிறகு
மீண்டும் நாம் தேட ஆரம்பிப்போம்.

- மு.முகமது பாட்சா*
28 /02 /2018

Monday, 26 February 2018

உறக்கமில்லா இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர்

என்னிரவுகள் 
புரண்டு புரண்டு படுக்கின்றன
எங்கோ வெடிக்கும் 
வெடியோசையின் வீச்சில்
குழந்தைகளின் பற்கள் 
சோழிகளாக உருள
உறக்கம் கலைந்த ஆகாயத்தின் கண்கள்
பஞ்சடைந்து குருடாகிறது
பெயர் எழுதப்படாத அரிசிக்காக
கையேந்தி நிற்கிறவன்
அவன் ஈரலை சமைக்கச் சொல்லி
தந்துவிட்டுப் போகிறான்
இறந்துவிட்ட பிரபலம்
செய்திகளில் உயிர் வாழ்கிறாள்
சிலையொன்று இறந்துவிட்டதாக
எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்
வன்புணர்வின் தூமையில்
சாதிய புழுக்கள் நெளிந்து கொண்டிருக்க
சாத்தான் தன்னை
தேவதூதனென்று அறிவித்துக் கொள்கிறான்
கடவுளைச் சுடுவதற்கு
துப்பாக்கிகள் தயாராகின்றன
விவசாயிகள் 
நீரின் பாதைகளை தேடியலைய
நட்சத்திரங்கள் விளைந்திருப்பதாக
அரசியல்வாதி பேசுகிறான்
ஏழைகளெல்லாம் 
குழிவெட்டி மண்மூடி பதுங்கிக் கொள்கிறார்கள்
பசியிடமிருந்து தப்பித்துக்கொள்ள
சீரணிக்காத அதீத உணவை  
வாந்தியெடுத்தவர்களின்  இரவுகள்
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க
தூக்கம் வராமல் என்னிரவுகள் மட்டும்
புரண்டு புரண்டு படுக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
26 /02 /2018



Sunday, 25 February 2018

சிரியாவின் சோகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

ஹயாவின் கைகளைக் காணவில்லை
அவளின் குரல் பதிந்த குரானின் சங்கீதம்
தூள் தூளாக நொறுங்கிக் கிடக்கிறது
இனி இரவுகளையும் பகல்களையும்
அந்த அழகியக் கண்கள் காணமுடியாது....
அழகியப் புன்னகையை
ஏன் இன்னமும் மிச்சம் வைத்திருக்கிறாய்?
இரக்கமற்றவர்களைக் காணும் முன்பே
இதயத்தைத் துளைத்திருக்குமோ அந்தக் குண்டு!
மர்லா உன்னைப் பார்க்க வருவாளா மகளே...
உன் ஜுனைத்தும் அபித்தும்
எந்த குழியிலிறங்க தயாராக இருக்கிறார்கள்?
முகம்மத்தின் விளையாட்டு துப்பாக்கியை 
புதைத்தவிடத்தில்தான் 
நிஜத் துப்பாக்கியும் வெடித்திருக்கிறது தாயே!
இந்த இரத்தக் களரி பூமியில்
ரோஜா பூக்களல்லவா இறந்து கிடக்கின்றன
மலடி பெற்ற மகன்களுக்கு என்னத் தெரியும்
மக்களைப் பெற்ற தாய்களின் கண்ணீர்...
மிச்சம் மீந்து நிற்கும் துவாக்களையாவது
தோட்டாக்களாக மாற்ற முடியுமா?
பாரம் சுமந்த இதயத்தில் 
துப்பாக்கி ஏந்திதான் உன்னைப் புதைக்கிறேன்...
யா அல்லாஹ் என்கின்ற எங்களின் பெருமூச்சு
அசுரவேகம் எடுக்காதா?
உலகத்தாரே
உங்களின் ஒட்டு மொத்த துவாக்களையாவது
எங்களின் பக்கம் திருப்புங்களேன்
ஆமின் என்ற ஒரு வார்த்தையாவது
அல்லாஹ்வின் செவிகளில் உடனே எட்டட்டும்.

- மு.முகமது பாட்சா*
25 /02 /2018



Saturday, 24 February 2018

நிர்வாணன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

உன் நிழலை எடுத்து 
உடுத்திக்கொள்கிறேன்
நீ என்னை 
திரும்பிப் பார்க்காமல் 
சென்று கொண்டிருக்கிறாய்,
நானென்பது
எங்கோ கழன்று
வீழ்ந்து கிடக்கிறது....
அதைக் காண்பவர்கள்
கடலில் 
வீசியெறிந்து விடுங்கள்
அஃதென்னை 
தொற்றிக்கொள்வதில்
விருப்பமில்லை,
உன் பாதம் பட்ட புற்களில்
பாரிஜாதம் பூப்பதாக
கற்பனை செய்கிறேன்...
கண்களை உன்னோடுவே
எடுத்துச் செல்கிறாய்
காட்சிகளை 
நான் என்ன செய்ய?
நிர்வாணத்துடன்
நடப்பதாகச் சொல்கிறார்கள்
உன் நிழல் அவர்களின்
கண்களுக்குத் தெரியவில்லை...
என் ஆடைகளை
அவர்கள் 
தேடிக் கொண்டிருக்கிறார்கள்,
திரும்பிப் பார்த்துவிடாதே
நீயும் 
என் ஆடைகளைத் தேடினால்
நான் நிச்சயம்
நிர்வாணமாகிவிடுவேன்.

- மு.முகமது பாட்சா*
25/02/2018

ஶ்ரீதேவி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குளோஸ் அப்

திரையுலகின் அசாத்தியத் திறமை மறைந்துவிட்டது.

குழந்தை நட்சத்திரமாகப் பயணத்தை தொடங்கியிருந்தாலும் , கதாநாயகியாக 
அறியப்பட்டது கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு" திரைப்படம்தான். தன்னைப் 
பின் தொடரும் வில்லனுக்கே (ரஜினி காந்த்) அம்மாவாக மாறும்  கனமான பாத்திரம். 
அசால்டாக செய்திருப்பார்.

16  வயதினிலே சப்பாணியின் நடிப்பைப் பின்னுக்கு தள்ளிவிட்டு 
முன்னால் வந்து நின்றவர் மயிலு ஶ்ரீதேவி!

மீண்டும் கோகிலாவாகட்டும் சிகப்பு ரோஜாவாகட்டும் கமல் அவரோடு 
போட்டி போட்டே நடிக்க வேண்டியிருந்தது.

மூன்றாம் பிறையில் கமலின் நடிப்பை இரண்டாம் இடத்திற்கு நகர்த்திவிட்டு 
முதலிடத்தில் உட்கார்ந்து கொண்டவர்.

ஜானியில் அவரது நடிப்பு  தனி முத்திரை !

அவர் இந்தியில் கொடி கட்டிப் பறக்க தொடங்கிய பிறகு அவரது ரசிகர் பட்டாளம் 
விரிந்து நின்றது. போனி கபூரை அவர் திருமணம் செய்து கொண்ட பிறகு 
அவரது ரசிகர்கள் போனிகபூரை வில்லனாகப் பார்த்தார்கள் என்பதுதான் உண்மை.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' 
ஆகட்டும் 'மா' ஆகட்டும் அவர் இன்னமும் தன் திறமையை இழக்கவில்லை 
என்பதைப் பறை சாற்றியது.

அவரது தமிழின் கடைசி படம் 'புலி ' விஜய் உடன் அமைந்தது. 
இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் அவர் அதே போட்டி போடும் நடிகையாகவே 
இருந்தார் என்பதைத் தெளிவாக்கியது!

இந்திய சினிமாவில் இதுவரை இன்னொரு ஶ்ரீதேவி பிறக்கவில்லை என்பதுதான் 
நிதர்சனமான உண்மை!

- முகமது பாட்சா*
25/02/2018

குறுகிய மனிதன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

குறுகிப் போன மனிதனின் மூளையில் 
காற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள், 
போதை அவனை 
தன் மந்திரக் கோலில் கட்டி வைத்திருக்கிறது, 
யோசனை தூரங்களில் நடந்து கொண்டேயிருக்கிறான், 
மாயவலைகளில் அவனே சிக்கிக் கொண்டு 
மகிழம்பூ வனத்தில் படுத்திருப்பதாகச் சொல்கிறான், 
கதைகளுக்குள் அவனைக் கடத்திப் போவதும், 
கவிதைகளுக்குள் அவனை உறங்க வைப்பதும், 
அவர்களுக்குச் சுலபமாக இருக்கிறது... 
அவர்களின் கைகளில் தொலை இயக்கியொன்று 
எப்போதும் இயக்கத்தில் இருக்கிறதாம், 
அவர்கள் இயக்கும் போதெல்லாம் 
அவன் உறங்கி விடுகிறான், 
அவனையே அவர்கள் திருடிச் சென்றுவிடுகிறார்கள், 
ஆனால், அவனுக்கு இன்னமும் தெரியவில்லை, 
தான் காணவில்லையென்று... 
அவனிடம் சொன்னபோது 
அவனால் சிரிக்க மட்டுமே முடிகிறது,
அவன் இயக்கத்திற்கு 
அவ்வளவு மட்டும்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் !

- மு.முகமது பாட்சா*

24/02/2017

Friday, 23 February 2018

தன்னிருப்பைக் காட்ட


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


தன்னிருப்பை காட்டுதற்காவது
மன நலம் உள்ளவர்கள்
ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும்
கைகளில் மிளகாய் தூளெடுத்து
போவோர் கண்களில் தூவி விடலாம்,
செல்போன் டவரில் நின்று கொண்டு
சாவதாகப் பாவனை செய்யலாம்,
மூத்திரம் குடித்தால் முகத்திற்கழகென்று
வைத்திய குறிப்பு சொல்லலாம்,
ஆசீட் வீசிய நல்லவனுக்கு
பாராட்டுக் கடிதம் எழுதித் தரலாம்,
இயற்கை சீற்றம் இடறும் நேரத்தில்
பிணங்களின் நகைகளைத் திருடலாம்,
காயம் பட்டவனைக் காப்பாற்றாமல்
செல்பி எடுத்துப் பகிரலாம்...
மனநலம் இல்லாதவன் ஏதுமெடுத்தால்
அடித்தே கொல்லலாம்....
இப்படி
தன்னிருப்பை காட்டுதற்காவது...

-மு. முகமது பாட்சா*
24 /02 /2018


Thursday, 22 February 2018

விழிக்கும் வெளிச்சம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இரவு 
வெப்பத்தால் வியர்த்து வழிகிறது
காட்டுக்குருவிகளின் சப்தம் 
மெல்ல விரியும் போது
பகல் கண்விழிக்கும்
அதுவரையில் மூச்சுகளின் வெப்பக்காற்று
மேகங்களையுரசி 
மின்னல்களை உற்பத்தி செய்யும்
கண்களுக்குள் சங்கமிக்கும் 
மா கடல் ஆர்ப்பரிக்கும் நெஞ்சிற்குள்
பட்டாம் பூச்சிகளின் வண்ணம் 
பவ்வியமாய் ஒட்டிக் கொள்ள
நிஜமில்லாதவொன்று தன்
யன்னலைத் திறந்து காற்றை வரவழைக்கும்
மின்மினிப் பூச்சிகள் விளக்குகளாய் மாற
அர்த்த சாமத்தின் அந்தரத்துப் பூசை
கற்பூர மணம் வீசும்...
கைகள் இரவினை இறுக்கிப் பிடிக்க
மெல்லப் பிதுங்கி விழிக்கும் வெளிச்சம்.

- மு.முகமது பாட்சா*
23 /02 /2018


வாய் பேசா மௌனம்

தானியங்கு மாற்று உரை இல்லை.


மௌனம்  
மௌனமாக இருக்கவேண்டிய 
அவசியமில்லை, 
போதிமரத்தின் சலசலப்பில்தான் 
புத்தன் மௌனத்தை தியானிக்கிறான், 
தியானத்தின் உச்சமாய் 
பீறிட்டழும் மழலையின் வரவில் 
மகிழ்வடைகின்றன இல்லத்தின் சுவர்கள், 
மரணத்தின் உச்சம்தான் 
மௌனமென வாதிக்கிறான் வெட்டியான்,
வாய்பேசா புழுக்கமென்று 
மூச்சுக் காற்றோடு பேசிக் கொண்டே 
மௌனம் எப்படி மௌனித்திருக்க முடியும்? 
அகராதிகளை 
வேண்டுமென்றால் திருத்திவிடலாம், 
மனம் பேசிக் கொண்டேயிருப்பதையும், 
விழிகள் பேசிக் கொண்டிருப்பதையும் 
மௌனம் சுவாசித்துக் கொண்டிருப்பதாக 
எப்படிப் பொய் சொல்லமுடியும் ? 
மரணித்துவிட்ட மௌனத்தை 
போலி மௌனத்தால் மறைக்கப் பார்க்கிறோம்... 
மௌனத்தின் பிரதியாய் விழுந்த சருகுகளிடம் 
போதி மரத்துக் காற்று 
பேசிக் கொண்டேதான் இருக்கிறது.

- மு.முகமது பாட்சா*

22/02/2017

இனத்தின் மிச்சமாய்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நெருட்டின் ஆழ்மன அசுரம்
பஞ்சு போர்த்தி மேகமென மெல்ல நகரும்
தருவையின் தழல் வெப்ப மூச்சு
பயிர்களின் கருவத்தை கருக்கியெரிக்கும்
நீள்விசும்பின் நிழல்தேடி
யாகத்தின் ஆசைத் தீ பயணிக்கும்...
கடோரன் கைகளில் அருள் முத்திரை ஜொலிக்க
சாஸ்வதம் சன்னியாசம் வாங்கும்,
போதியின் வேர்களில் புற்றீசல் கிளம்ப
புத்தவிகாரத்தில் இரத்தம் தெளிக்கும்,
மயானத்தின் எலும்புகளே ஆபரணங்களாக
நாகரீகம் நாலுகுணம் மறந்து போகும்,
கடையறியா காமத்தின் கழற்சி
கட்டற்ற கரைபுரண்டு கண்ணவிழ்ந்தோடும்
நீதியின் மார்பினில்
நெஞ்சுரக்க ஈட்டிகள் பாயும்...
கடாட்சன் என்பவன்
காருண்யம் என்ன விலையெனக் கேட்பான்,
யுகத்தின் கோபத்தீ வேர்களை பற்றியெரிக்க
உள்வாங்கும் உயிர்களின் சப்த அபயத்தில்
இனத்தின் மிச்சமாய் நிற்கலாம்
மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு கவிதை.

- மு.முகமது பாட்சா*
22/02/2018

Wednesday, 21 February 2018

போலியான பாத்திரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

தேச வரைபடத்தின் 
ஒற்றைப் புள்ளிகளாய் 
நீ எங்கோ? நான் எங்கோ? 
ஆனாலும் 
என்னை அறிந்தததாய் 
நீ பேசுகிறாய்! 
உன்னை அறிந்தவனாய் 
நான் பேசுகிறேன 
கிரிடமும் வெகுமானங்களும்
உனது நடிப்பின் பலனாய்! 
இன்னமும் - நான் 
அதே போலியான 
அட்சயப் பாத்திரங்களுடன்! 

- மு.முகமதுபாட்சா* 

22/02/2016

மௌனம் பஞ்சென மிதக்கிறது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி மற்றும் இயற்கை

நீள்வட்டப் பாதையில் சுழன்று
மெல்ல வீழும் சருகினிற்கு
மௌனம் பஞ்சென மிதக்கிறது...
பதுமைக் கடையில்
சிரிக்கும் பாவைகளுக்கு
குழந்தைகளை வாங்க ரொம்பவும் ஆசை...
ஆசை காட்டி சோறூட்டுகிறாள் அம்மா
நிலா அநாதியாக நின்று இரசிக்கிறது...
ஆசையான ஒன்று காதலாகிறது
காதல் கவிதையிலமர்ந்து காட்சியாகிறது...
காலம் நிதானமான ஒன்று
ஆசையில் உட்கார்ந்து கொண்டு
வேகமாகச் சுழல்வதாக பொய் சொல்கிறோம்...
விதைத்ததை எல்லாம் பதராக்கிவிட்டு
விதைக்காததை விளைச்சலாய் எடுத்து
பெருமை பேசுகிறோம்....
நிழலின் கீழ் 
நகர்ந்து கொண்டிருக்கும் பூமி
பசியோடு மெல்ல வாய் திறக்கிறது....
ஆசைகள் அறுந்து விழுந்து கொண்டிருக்க
ஓலங்கள் நிர்க்கதியாக அலைகின்றன...
மெல்ல வீழும் சருகினிற்கு
மௌனம் பஞ்செனவே மிதக்கிறது.

- மு.முகமது பாட்சா*
21/02/2018





குடு குடுப்பை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குதென்ற
மாயாண்டியின் குடுகுடுப்பை,
அடுத்த அதிர்வில்
'இந்த வீட்டு அய்யாவுக்குத் தோசமிருக்கு,
செய்வினை காத்தொன்னு சுத்தியிருக்கு'ன்னு
தூக்கி வைத்தான் அதிரடியை,
கண்ணேறு கூடியிருக்கு,
பிரயாணங்கள் ஆகாதென்றான்,
பத்து ரூபாய் தாளொன்று
பறந்தமர்ந்த அடுத்த அதிர்வில்
சங்கை முழங்கிய குடுகுடுப்பை,
சலசலவென்று கொட்டியது,
அய்யா தோசம் பொடியா போகும்...
தொட்டக் காரியம் பட்டென விளங்கும்...
மகாசக்தி துணையாயிருப்பா ...
மகாசக்தி துணையாயிருப்பா...!

- மு.முகமதுபாட்சா*
21/02/2017

Monday, 19 February 2018

காலின் கீழ் புற்கள் எரிகின்றன

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம் மற்றும் வெளிப்புறம்

காலத்தீயில் 
எதையாவது போட்டு பொசுக்கிக் கொண்டேயிரு
காளான்கள் குடை பிடித்தால்
புல் நனையாதென்பது புத்த பழமொழியா?
இரவுகளை போர்த்திக் கொண்டு
எங்கே நடக்கிறாய்?
உனது நிழல் உனது எசமான்.
விகடங்களைப் புகைத்து கொண்டிருக்கிறாய்
காலின் கீழ் புற்கள் எரிகின்றன..
அன்னையின் மடியில் ஆகாச பூதமொன்று
துளையிடுகிறது...
மீத்தேன் கிணற்றில் விளைவது
பஞ்சமா? பட்டினியா?
அடுத்த தலை முறைக்கு
அலுமினியத்தட்டுகளாவது கிடைக்குமா?
மரங்களைத் தேடும் போது
கள்ளிச் செடிகள் கைதட்டிச் சிரிக்கும்,
வறண்ட ஓடைகளில் தலை மட்டும் கவிழ்ந்திருக்க
நிஜம் நீரறுந்த கால சக்கரத்தை தேடும்,
நீயென்பதும் நானென்பதும்
நிச்சயம் அன்று அறுந்து போயிருக்கும்.
ஆளவந்தவனை அறுத்துத் தின்பார்கள் மக்கள்
சமத்துவம் ஒருவேளை
சங்கீதம் பாட தொடங்கியிருக்கலாம்,
அதுவரை
காலத்தீயில் 
எதையாவது போட்டு பொசுக்கிக் கொண்டேயிரு


மு.முகமது பாட்சா*
19/02/2018

சொல் வனம்




திடமிழந்து அலைந்தாடும் 
மனதின் அலைகளின் ஓரத்தில் 
அசைந்தாடும் 
அந்த ஒற்றைப் படகினில்தான் 
அலை மோதும் காற்றின் இடையேயும் 
ஒரு சிறு வெளிச்சமாய் 
என் வாழ்க்கை 
அணைவதும் அணையாததுமாய் 
காற்றின் நிலைப் பாட்டில்! 

...................................................................

போதி மரத்தின் கீழ்தான்
சிற்றெறும்புகளின் ஊர்வலம்
சித்தார்த்தன் இடம் மாறினான்!
----------------------------------------------------------

எழுத்துகளுக்கும் வாசனையிருப்பது
தெரியுமா உங்களுக்கு ?
அவள் அப்படிதான் சொல்கிறாள்!
...........................................................................

வார்த்தைகளை மறைத்து வைத்துக் கொண்டு 
கவிதையில் பிழை காண்கிறாள், 
கண்களில் தேடிக் கொண்டிருக்கிறேன் 
முழுமையான கவிதை வடிக்க !

------------------------------------------------------------------

தடுக்கி விழுந்த 
வார்த்தைகளில்தான்
அவளின் சிரிப்பு 
ஒளிந்திருந்தது !

----------------------------------------------------------------------

- மு. முகமதுபாட்சா*

19/02/2016

நாலு பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

ஒருவன் சொன்னான்
கஞ்சனென்று
மற்றவன் சொன்னான்
வள்ளலென்று
இன்னொருவன் சொன்னான்
இதுதான் வாழ்க்கையென்று,
நான்காமவன் சொன்னான்
இடுகாடு வந்ததென்று,
குழியில் இடும் முன் 
பார்த்தவர்கள் சொன்னார்கள்,
பொணம் சிரிக்கிறதென்று!

- மு.முகமதுபாட்சா*
19/02/2017

Sunday, 18 February 2018

பிரமையின் நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

என்னை தேடிக் கொண்டிருந்தவிடத்தில் 
சில கற்களையும் முட்களையும் எடுக்கிறேன், 
நானென்ற பிரமை நிழலாகவே விரிகிறது, 
சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த மௌனத்தை
எரியும் விறகுகள் 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன, 
புறாக்களின் தேவபாஷை 
காதலென்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.
மதங்கள் அறுவாளை தீட்டிக் கொண்டிருந்தன...
தார்சாலைக்கு நகர்ந்த புழு 
வெண்ணெய்யாக உருகுகிறது..
பழியை வெயில் சுமந்து செல்கிறது
நகரம் என்பது ஓரெழுத்தின் இடம் மாற்றம், 
வேர்களின் தவம் நீர்த் தேடும் பயணம், 
இயற்கையின் முலைகளில் நெருப்பின் சீற்றம், 
அலைகள் வருடிக் கொடுப்பது வாரியிழுப்பதற்குதான், 
மின்னல் எச்சரிக்கை, 
ஆசைகள் மூச்சுக்காற்றை உண்ணுகின்றன, 
எலும்புகளின் மிச்சங்கள்  
நான்- எனது கிரீடம் சூட்டிக் கொள்கின்றன!

- மு.முகமது பாட்சா*
19/02/2018 

Saturday, 17 February 2018

வார்த்தைகளோடு நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

வார்த்தைகளைத் தேடுவதில் 
ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, 
விரல்களின் அழுத்தத்தில் 
எழுத்துகள் ஒளிரும்போது 
நான் மீண்டும் பிறக்கிறேன். 
கலைத்துப் போட்டு 
வார்த்தைகளை அடுக்கும் போது 
சில எழுத்துகள் மிச்சமாகி விடுகின்றன.
மிச்சமான எழுத்துகள்தான்
முடிக்காத வார்த்தைகளை முழுமையாக்குகின்றன
வாசிப்பில் அடங்கியிருக்கும் ஓசைகளில்தான்
வார்த்தைகளின் உயிர் ஒளிந்திருக்கிறது,
வார்த்தைகளோடு நான்
இப்போது வசிக்கத் தொடங்கிவிட்டேன்,
காற்றடித்தாலும்
சில வார்த்தைகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன,
தூங்கும் போது
கண்ணிமையில் உட்கார்ந்திருக்கும் வார்த்தைகள்
கனவுகளாய் கவிதைகளை பொழிகிறது
நான் தனியாக பேசிக் கொண்டிருந்தால்
இவன் பைத்தியமென்று நினைக்காதீர்கள்...
வார்த்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
18/02/2018

இல்க்கியத் திரட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

இலக்கியத் திரட்டு

வெட்கத்தின் விளிம்பில் 
ஏன் நிற்கிறேன் எனக் கேட்கிறாய்? 
எப்படிச் சொல்வேன்  தோழி! 
கட்டற்ற அழகனவன்! 
கண் நிறைக் கொள்ளனவன்! 
காதல் பற்றற்ற இளம் பருவத்தில்... 
மட்டற்ற மகிழ்விலென்னை 
தொட்டே, கட்டியணைத்து 
வலியால் அழுவேனென்று 
மென் பூவால் பந்தெறிந்து 
பொல்லாச் சிரிப்பூட்டி 
அழகாய் மணலில் வீடு கட்டி 
மகிழ்வாய்த் தந்தனவன் 
சட்டென்றே எதிரில் வந்து நிற்கிறான்! 
பொற்கொடியாள் என் செய்வேன்? 
காதல் வெப்பத்தகிப்பினில் 
இடையணியும் நழுவி விட
காதலின் கற்பு நிலை எப்படி காப்பேன்?
என்போல் 
அவனும்தான் தகித்துப் போனான் 
என் அன்னை அவனெதிரில்
பட்டென்று வந்து நின்றாள்...
சட்டென்றே அவனும் 
சாமார்த்தியக் காய் நகர்த்தி 
தாகத்தின் பிணித் தீர்க்க 
தண்ணீர்தான் வேண்டுமென்றான்... 
உட்பொருள் நானறிய, 
மேம் பொருளுமறியா அன்னை
நீர்க் கொடம்மாவென்று நகர்ந்து விட்டாள்! 
தளும்பி நின்ற நீர்க் குவளை 
நானாகி அவன் கவனம் திசைத் திருப்ப 
சட்டென்றே பிடித்து விட்டான் 
சாமர்த்தன் என் வளைக் கரத்தை !
அய்யோ ! 
பிறவிப் பெண்மையின் அச்சம் சூழ்ந்தே 
அம்மா ! என்றலறிவிட்டேன்
பதறித்தான் போனாலம்மா, 
பெண் பிள்ளை என் ஆனாலோ என்று 
ஆகா!
தப்பன்றோ!  சடிதியில்  உணர்ந்தவள் 
'தாகத்தால் இவன் விக்குகிறான் அம்மா'   
என்று பொய்யுரைக்க 
'சற்றே பொருமையடா' என்றே 
தாயன்பில்
அவன் தலையை துவட்டிச் சென்றால் தாய்! 
சொல்வாயா தோழி என் துயரை, 
என் வெட்கத்தின் நிறம் மாற்றிச் சென்றவனை  
பக்கத்தில் என்றேனும் முகம் பார்த்தால்! 

 - மு.முகமதுபாட்சா*
17/02/2016 

           ***

மூலப் பாடல் :

சங்க இலக்கிய காதல் கதை - குறிஞ்சிக்கலி
------------------------------------
சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன். 

- கபிலர்*

மேயும் ஆட்டுக் குட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

கூடாரத்திற்குள் நுழைந்த 
ஒட்டகத்தின் தலையை வெட்டிவிட்டு 
ஒட்டகத்தை மீட்டு விட்டதாகச் சொல்கிறான், 
நிழல்கள்தான் தன்னை மிதித்திருப்பதாக 
குற்றம்சாட்டிய அதேவேளையில் 
வாளின் கூரால் சிதைத்துவிட்டுச் சிரிக்கிறது 
அசுர நிழலொன்று... 
விறைத்துக் கிடக்கும் மருள் விழிகளினுள்ளே 
உருண்டு வரும் இறந்தகாலம் 
நிகழ்காலத்தின் கூற்றுகளைச் சபிக்க, 
ஆன்மாவை அடக்கிக்கொண்ட அவ்வுடல் 
உரமாகி விருட்சமொன்றை விளைவிக்கிறது, 
அதில் பூத்த தளிர் தழைகளை மேயும் 
ஆட்டுக்குட்டியும் 
தலையிழந்த ஒட்டகத்தை நினைவில் மீட்டி 
நிழலை மிதித்து நடக்க, 
யாரோ ஒருவன் கூவிக்கொண்டே செல்கிறான், 
உண்மைகள் விற்பனைக்கென்று... 
அவன் பின்னால்தான் செல்கிறது உண்மையும் 
பொய்களைக் கூடையில் சுமந்து கொண்டு

- மு.முகமதுபாட்சா
17/02/2017

ஏழைகள் சாவ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை


ஏர்க் கலப்பையைப் பிடுங்கிவிட்டு 
டிராக்டரில் வந்தார்கள் 
உழவு மாடுகளை 
அடிமாட்டுச் சந்தைகளுக்கு 
நகர்த்திப் போனோம்... 
கறவை மாடுகளின் வாயிலடிக்க 
வைக்கோலை 
பதராக்கியது ஒர் எந்திரம், 
நாற்று நட, களையெடுக்க 
நெல்லடிக்க, பதர்நீக்க 
மூட்டைப் பிடித்து தைத்து வைக்க 
அத்தனைக்கும் எந்திரங்கள்! 
ஏழைகளின் பசிப் போக்க 
ஏன் ஒன்றுமில்லை! 
நகரத்தில் வேலைக் கேட்டால் 
வேலையும் எமக்கில்லை! 
கிராமத்திற்கே மீண்டும் போனால் 
கிராமமே காணவில்லை! 
நல்லாகத்தான் முன்னேறுகிறோம் 
நாக்குத் தள்ளி ஏழைகள் சாவ! 

- மு.முகமதுபாட்சா* 
16/02/2016

அரசியல் செய்யாதே

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்

அரசியல் செய்யாதே 
என்று சொல்லிவிட்டு 
அழகாய் இருக்கிறாய் என்று 
அரசியல் செய்கிறாய் , 
பூக்களை பிடிக்குமென்று 
சொல்லிவிட்டு 
என்னைத்தான் 
முகர்ந்து பார்க்கிறாய் , 
புற்களுக்கு வலிக்குமென்று 
பாதங்களுக்கு முத்தமிடுகிறாய், 
பார்வைகளால் 
என்னைத் திருடி போவதற்கு 
கண்களுக்கு 
கற்றுக் கொடுத்திருக்கிறாய், 
தேனைப் பற்றி 
நீ பாடம் எடுப்பது 
எதற்கென்று எனக்குப் புரிகிறது... 
சொல்லவந்ததை 
உடனே சொல்லிவிடு, 
நானும் உன்போல்தான் 
உன்னையே 
ரசித்துக் கொண்டிருக்கிறேன் !

மு. முகமதுபாட்சா*

16/02/2017

Friday, 16 February 2018

நான் - நீ - களிமண்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அடித்தளமில்லாத 
ஸ்தூபியின் மீது உட்கார்ந்திருக்கும் பறவைக்கு
பயமென்பது ஒன்றுமில்லை,
பேருந்தின் ஓட்டத்தையும் மிஞ்சிப் பயணிக்கிறது
பயணிகளின் எண்ணம்,
உடைந்த சிலைக்கு உள்ளுணர்வுகளில்லை
அழுது கொண்டிருக்கிறான் ஸ்தபதி,
கிழித்துப் போட்ட ஓவியங்கள்
அதே கோடுகளால் வரையப் படுவதில்லை,
காதுகளையும் கண்களையும்
இரசனை ஆக்கிரமித்துக் கொள்ள...
நாக்கினை சுவைக்கிறது ருசி,
இதயம் என்பது
எப்போதுமே ஒரு மாமிசப் பொருள்,
சிந்தனையென்பது
மூளையில் முகம் பார்க்கும் கண்ணாடி,
காதல் உணர்வுகளின் சங்கமம்
நேசமும் வேசமும் அதன் இரண்டு பக்கங்கள்,
சுண்டிப் போட்ட நாணயத்தில் விழுவது
காட்சிப் பிழை,
வெற்றிகளென்பது
மண்டைக்குள் தொங்கும் தோரணம்,
மமதை மண்ணுக்குள் புதைவது,
நான் - நீ - களிமண்
சுடாத பாத்திரம்
சுற்றும் வரை பம்பரம்.

- மு.முகமது பாட்சா*

17/02/2018

Thursday, 15 February 2018

பெயர் தாங்கி

தானியங்கு மாற்று உரை இல்லை.

பெயரும் நானும் பேசிக் கொள்வதில்லை
பெயரை தூக்கிக் கொண்டேத் திரிவது
மிகவும் கஷ்டமாக இருக்கிறது,
யார், பெயரைச் சொல்லி அழைத்தாலும்
நான்தான் திரும்பி பார்க்கிறேன்...
நானென்பதின் மேல்தான் உட்கார்ந்து 
அஃது அதிகாரம் செய்கிறது,
அங்கீகாரங்கள் அத்திணையையும்
பெயரே எடுத்துச் செல்கிறது,
நான் மட்டும்
எப்போதும் நானாகவே இருக்கிறேன்,
பெயர்களேயில்லாத
ஆதிகாலத்திற்குள் நுழைந்துவிட
இப்போதும் ஆசைப் படுகிறேன்...
பொது விளிப்புகளில் உட்கார்ந்து
பொதுவுடைமையாவது பேசியிருப்போம்...
அகந்தையின் முதல் ஆரம்பமே
பெயராகத்தான் இருக்கக் கூடும்.
சாதிகளையும் மதங்களையும் கூட
பெயர்கள்தானே கட்டமைக்கின்றன...
பெயர் 
என்னையே தின்று கொண்டிருக்க
நான் மட்டுமே தனியாக உட்கார்ந்து
என் பெயரை பற்றியே 
சிந்தித்து கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
16/02/2018

கட்சியென்பது சும்மாயில்லை

தானியங்கு மாற்று உரை இல்லை.

அரசாங்கத்தின் கஜானக்களை 
காலிச் செய்யாதீர்கள்...

மக்களுக்காக சிந்திக்க 
குளுகுளு மலையில் 
ஐம்பது ஏக்கரில் 
சின்னதாகவொரு 
குடிசைக் கட்ட வேண்டும்,

ஓய்வூதியங்களை 
ரத்துச் செய்து விடுங்கள்... 
சேமிக்கும் பழக்கத்தை 
நாம்தானே கற்றுத் தர வேண்டும், 

நூலகங்கள் எதற்காக? 
அறிவு வந்தால் கேள்விகள் வரும் 
வினைதான் நமக்கு, 

யாகங்கள் நடக்கட்டும் 
திசைத் திருப்ப 
நிச்சயமாகப் பயன்படும், 

இலவசங்கள் கொடுப்பதை 
நிறுத்த வேண்டாம். 
கமிசன் வரவு 
தடைப் பட்டுப் போகலாம்,

மாசு வந்தால் விட்டு விடு 
அதைத் தடுக்கும் மானியம் 
நமக்குதான் வரும்!

கட்சியென்பது சும்மாயில்லை 
நடத்திப் பார்த்தால்தான் தெரியும் 
கஷ்டம் என்னவென்று. 

- மு.முகமதுபாட்சா*
15/02/2016 

உமிழும் முன்பாக

தானியங்கு மாற்று உரை இல்லை.

உமிழும் முன்பாக 
சரியாக முடிவு செய்யுங்கள் 
உமிழப்படும் நபர் இவர்தானா? 
உருவங்களைப் பார்த்து 
முடிவு செய்ய முடியாது... 
கண்கள் 
சில நேரம் ஏமாற்றி விடுகின்றன! 
நம் நிழலே கூட 
ஓர் உருவமாய் 
நம் எதிரில் நிற்கக் கூடும்... 
நாம் நேசித்த நபராகவும் 
இருக்கலாம், 
துரோகத்தின் நிழல் நின்றால் 
உடனே 
தாமதிக்காமல் துப்பி விடுங்கள் , 
இல்லையென்றால் 
சட்டென்று நிறம் மாற்றி 
நட்பு போர்வை போர்த்தி 
தப்பித்துக் கொள்ளும், 
பிறகென்ன 
கூடா சகவாச கூட்டுச் சதியால் 
நிழல்கள் கூட ஒன்று கூடி 
நம் மீதே காறி உமிழக்கூடும் !

- மு.முகமதுபாட்சா*
15/02/2017

Wednesday, 14 February 2018

புகையும் இதயம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், மரம், வானம், செடி, வெளிப்புறம் மற்றும் இயற்கை

ஊருக்கு ஒதுக்குப் புறமாயிருந்த
ஆலமரத்தின் சந்துக்குள்
தன்னிதயத்தை வைத்திருந்தான்,
அங்குதான் அவள்
அவனிதயத்தில் கூடு கட்டினாள்,
பார்வைகளைப் பின்னி
பஞ்சு மெத்தையமைத்தாள்,
இதழ் மலரில் தேன் கொடுத்து
இதயத்திற்கு வலு கூட்டினாள்,
ஆலம் விழுதுகளை ஆட்டிவிடச் சொல்லி
ஊஞ்சலாடினாள்,
சிரிப்புகளை அதிகதிகமாயிரைத்து
பறவைகளுக்குப் பாசம் காட்டினாள்,
அதன் கிளைகள் ஒவ்வொன்றும்
மினாராக்களாய் வனைந்து
தாஜ் மகாலாய் மாறிக் கொண்டது...
ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனவர்கள்
அப்போது அறியவில்லை...
அவள் அங்குதான்
தொங்கு சமாதி அமைத்துக் கொண்டாள் !
ஷாஜஹான்  தாஜ் மகாலை
தேடிக் கொண்டிருக்கிறான்....
அவனிதயத்திலிருந்து வழியும் கரும் புகை
புகை போக்கி வழியே 
மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது.

 மு.முகமது பாட்சா*
15/02/2018

பரிசலோட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

நீ கொடுத்த வெள்ளைத்தாளில் 
மது குடுவை 
நுரைத்துப் பொங்குகிறது... 
வாசம் பட்ட இதயம் 
காற்றில் பறக்க, 
வாசல் தேடும் பட்டாம் பூச்சிக்கு 
வழி காட்ட 
பூக்கள் மறுக்கின்றன... 
கூதல் காற்றின் குளுமையிலும் 
வியர்த்துக் கொட்டும் சித்தாந்தம், 
தேனீக்கள் பாடம் நடத்துகின்றன 
தேன் எடுப்பது எப்படியென்று... 
ஆழ்ந்த தேடலின் வேளையில் 
முத்தங்களால் 
முகவரியெழுதுகிறாய்... 
பரிசலோட்டி 
நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறான், 
பார்வைத் தூண்டிலில் மீட்டெடுத்து 
மீண்டும் 
நீருக்குள்தான் விடுகிறாய்... 
மூச்சடங்கி இறந்தவன் 
சொர்கத்தின் பூமியில் 
ஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்... 
தேவதைகள் அத்துணைப் பேரும் 
நீயாக மாறி நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்க, 
நான் குடிக்கும் மதுவின் துளிகள் 
வெள்ளைத்தாளில் விழுந்து 
கவிதைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன!

- மு. முகமதுபாட்சா*

14/02/2017

Tuesday, 13 February 2018

காயிஸின் காதல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அத்தனை பூக்களும் 
அழகுதான் 
லைலா மட்டும் அதில் தனியழகு! 
காயிஸின் 
இதயத்தைப் பறித்துக் கொண்டு 
அவன் கவிதைகளை 
காதலின் பக்கம் மடை மாற்றி 
முகம் மறைத்த முந்தானைக்குள் 
கண்களால் 
காதல் பேசியவள்! 
இதயத்தின் இசையாகத்தான் 
காதல் இருக்க வேண்டும்... 
காயிஸின் சோக இராகத்தை 
கண்களின் வழியாய் 
லைலா எளிதில் கடத்துகிறாள்! 
மஜ்னூன் என்ற பழிச் சொல்லை 
மரணத்தால் 
உடனே கழுவுகிறாள்! 
பைத்தியங்கள் மட்டுமே அவனை 
மஜ்னூன் என்கிறார்கள்... 
காயிஸ் மட்டும் லைலாவிற்கு 
காதலாகவே வாழ்கிறான்! 

 

மு.முகமதுபாட்சா*



14/02/2016 

சங்க காதல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது 
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு 
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது 
பசலை உணீஇயர் வேண்டும் 
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”

              கொல்லன் அழிசி
              (சங்க கால பாடல்)


மடி நிறைந்த ஆவின் பால்
இளம் கன்றிற்கும் உதவாமல்
கறவைக்கலத்திலும் வீழாமல்
நிலத்தில் விழுந்து
வீணே போதல் போல்
எனக்குமே ஆகாமல்
என் அவனுக்குமே சேராமல்
காமத்தின் நோயா உண்ண வேண்டும்
படர் அல்குலின் மாமை அழகை!

* மு.முகமது பாட்சா*
14/02/2018

Popular Posts