Tuesday, 30 January 2018

காந்தியின் நினைவு நாள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உட்புறம் மற்றும் குளோஸ் அப்

தேசத்தின் முகவரி 
மூன்று தோட்டாக்களில் இடம் மாறியது, 
சுட்டவனும் 
சுடப்பட்டவரும் சொன்ன வார்த்தை 
'ஹே ராம்' 
இல்லாத இஸ்மாயில் 
கைகளில் ஒட்டிக்கொண்டது விசித்திரம், 
நான்கு மாதத்தில் தேசிய கொடி 
அரைக் கம்பத்திலழுதது, 
ஒற்றைப் புன்னகை களவுபோன தேசத்தில் 
தேசிய புன்னகையும் திருடு போனது, 
செல்லரித்த கிழவரின் கைத்தடியை 
சிற்றெறும்புகளின் கைகள் பிடித்திருப்பதாக 
பாவனைச் செய்கின்றன... 
திதி கொடுக்கும் தினத்தில் மட்டும் 
கதராடைகள் சூழ்ந்து கொள்கின்றன சமாதியை, 
சுட்டவனுக்கு 
சூடம் காட்டிக் கொண்டிருக்கும் கும்பல் 
காந்திக்காக அழுவதும் வேடிக்கைதான். 
ஓ இன்று மோகன்தாஸ் கரம்சந்தின் நினைவு நாள்! 
ரோசாக்களை இறைப்பதுவும் 
இரத்தக் கறைகள் தெரியாமலிருக்கத்தானா?

- மு.முகமது பாட்சா*
30/01/2018

The nation's address 
changed places
in three bullets.
The shooter 
and the shot
said the word
'Hey Ram'.
Strange that 
a non-existent Ismail
got stuck on the hands.
In four months,
the National Flag
wept at half last.
In the country 
where a lone smile was robbed,
the national smile got stolen.
Little red 
ants pretend
to hold the old man's 
moth-eaten walking stick...
Only on the day of his annual ceremony
Khadi dresses mob his resting place.
It is funny
that the same lot 
who worship the shooter
cry for Gandhi.
Oh. It's Mohandas Karamchand's death anniversary today.
Are rose petals being sprinkled
to hide the bloodstains?

~Sri 15:00 :: 30.01.2018 :: Chennai

தன் தனித் திறமையால் அருமையாக மொழிப்பெயர்க்கும் நண்பர் ஸ்ரீ வத்ஸா அவர்களின் சிறந்த
மொழிப் பெயர்ப்பில் இந்த கவிதை! அவருக்கு இனிய வாழ்த்துகளும் நன்றியும்

Monday, 22 January 2018

நெருஞ்சிக்காட்டு நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு மற்றும் இயற்கை

தருணங்களின் 
ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு நகர்கிறேன், 
என்னைச் சுற்றிலும் 
சில நிகழ்வுகள் உட்கார்ந்திருக்கின்றன, 
மற்றொரு முனையைப் பிரமைகள் பிடித்திருப்பதாக 
பிரக்ஞை சொல்கிறது. 
நிழல்களின் பிரதிகளை 
ஒருவன் விற்பனை செய்து கொண்டிருக்கிறான். 
கழைக் கூத்தாடியின் கால்களின் கீழ் 
உலகம் சுழல்கிறது 
பசி உயிரையும் பணையம் வைக்கும், 
வார்த்தைகளைப் பறி கொடுத்து விட்டு 
மௌனம் போர்த்திக் கொள்கிறேன்... 
கவிதைகளை விற்றுக் கொண்டிருப்பவன் 
கற்பனைகளைக் களவாடிச் செல்கிறான், 
தொடர்பில்லாத வார்த்தைகளாக 
நானென்பது தனியாகவே அலைகிறது... 
நெருஞ்சிக் காட்டின் நிழல் 
முட்கள் இல்லாமல் இருப்பது ஏன்? 

- மு.முகமது பாட்சா* 

Saturday, 13 January 2018

தளிமத் தாபம்



கடலினாழத்திலோடுகின்ற 
இரத்த நாளங்களின் திசுக்களில் 
ஒட்டியுறவாடும் அட்டைப் பூச்சிகளின் 
ஆழ்மனத் தியான வெளியில் 
மிளகின் காரமாய்ச் சற்றே காமம் , 
அலைகளில் பிரளயத்தில் 
ஆடைகளைக் களைகிறது உருவிய வாளின் 
அந்தகார வீச்சில் 
உருண்டோடிடும் வெட்கத்தின் தலை 
மோகிப்பின் முழுத் திரளாய் 
திமிங்கிலங்கள் மேலெழுகின்றன, 
பெரும் மூச்சின் வாசனையை 
அம்பராய் பூசிக் கொள்கிறது பெரும் திடல், 
சிற்றுயிரிகள் ஆழத்தில் நெளிய 
சீறிய எரிப் பிழம்பின் 
வாசம் பூசியக் கடற்குதிரைகள் 
பயணிக்கின்றன இலக்குகள் தெரியாமல், 
பவழப் பாறையின் தளிமக் கூறுகள் 
இடம் மாறி நிறம் கூட்டும் வேளையில் 
இதழ் திறந்த சிப்பியின் தெளிநீர் 
பாதரச சூட்டில் 
பக்குவமாய் மூடிப் பாதுகாப்பாகின்றது... 
அலைகள் 
கரைதனில் எழுதும் கவிதைகளைப் படிக்க 
காதலர்கள் 
எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

- மு.முகமது பாட்சா*
14/01/2018 (19) 

ஜெஸ்னா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ஹலப் நகரத்து வீதிகளில் 
ஜெஸ்னா அலைந்து கொண்டிருக்கிறாள், 

பீரங்கிகளின் அலை வரிசைகளைக் கடந்து 
சஜ்ஜிதாவில் வீழ்ந்துக் கிடந்த 
கட்டிடங்களின் புழுதிக் காடுகளில், 

பிணங்களின் கூறுகளுக்குள்ளாகத்தான் 
உறவுகளைத் தேடி, 
ஹலப் நகரத்து வீதிகளில் 
ஜெஸ்னா அலைந்து கொண்டிருக்கிறாள். 

'அல்லாஹூ அக்பர்'
'அல்லாஹூ அக்பர்' தக்பீர் முழக்கங்கள் 
அல்லாஹூவிற்கும் கேட்கவில்லையோ  

இரத்தக்கூழாய் சிதைந்த 
அத்தா அப்துல்லாவை 
அப்போதுதான் அவள் பார்த்துவிட்டு வந்தாள், 

இரண்டு கால்களும் சிதைந்த 
அம்மா ஆயிஷாவின் 
அந்தக் கடைசி இரத்தப் புண் நகையை 
எப்படிதான் மறக்க முடியும் ? 

"காணாமல்போன தம்பி ஸூபைரே! 
நீ என் கண்களில் மட்டும் பட்டு விடாதே, 
உனக்காக அழுவ 
என் கண்களில் கண்ணீர் மிச்சமில்லை. " 

"யாருக்காக ஹலப் நகரம் அழுது கொண்டிருக்கிறது ? 
அல்லாஹ் உனக்காகவா? 
யா அல்லாஹ் உனக்காகவா? " 

"என் அருமை ஹலப் நகரமே! 
எம் நாயகமும், கலிஃபா உமரும் இருந்திருந்தால் 
நீ இப்படி அழுது கொண்டிருப்பாயா?" 

"ஒற்றுமைக் கயிரை விட்டுவிட்ட இவர்களுக்கா, 
அல்லாஹ் சுவனத்தைச் சொந்தமாக்கப் போகிறான் ?" 

கண்ணீரைத் தொட்டு 
கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாள் ஜெஸ்னா 

"யா அல்லாஹ், என்னையும் அழைத்துக் கொள், 
உன்னிடம் 
நான் கேட்கவேண்டிய கேள்விகள் அதிகம் இருக்கின்றன" 

- மு.முகமதுபாட்சா*

13/01/2017 மீள்

Friday, 12 January 2018

எழுத்து வியாபாரி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்


எழுத்து வியாபாரி
--------------------
அரசு விருதுவிற்குத் தேர்வு பெற்றதால் 
அசிங்கமாக என்னை பார்த்தார்கள், 

இல்லாத ஜால்ராவை கைகளில் கொடுத்து 
இதுதான் விருதுவிற்குக் காரணமென்றார்கள், 

தம்பூராவைக் கையிலெடுத்தே 
நான் நடப்பதாகவே நகைத்துச் சென்றார்கள், 

குனிந்து வணங்கி நிமிர்ந்ததால்தான் 
நிமிர்ந்த விருது கிடைத்ததென்றார்கள், 

எழுதிய எழுத்துகளைப் பிரித்து வைத்து 
இதற்கா இவனுக்கு விருது என்றார்கள், 

எதற்கும் நான் சளைத்தவனில்லை, 
எத்துணை முறையும் சொல்லிக் கொள்ளுங்கள், 

நீங்கள் எழுதி கிழித்துப் பெற்றதை விட, 
நான் குனிந்து நிமிர்ந்து பெற்றதே அதிகம் 

மானம் வைத்து வாழ்வதற்கு 
நானொன்றும் மீசை வைத்த பாரதியில்லை, 

விருதுகள் வேண்டுமானால் வெட்கப் படட்டும் 
நான், என் எழுத்தை விற்கும் வியாபாரிதான்  

- மு.முகமது பாட்சா*

13/01/2017 மீள்

நகரத்து பொங்கல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

நகரத்தின் வாசல்களில் 
ஸ்டிக்கர் கோலம்

அம்மா 
முதியோர் இல்லத்தில்
பழையனக் கழிதலாய் 

இணையத்தில் தேடி 
மண் பானை  கிடைக்க வில்லை 
எவர் சில்வர் சட்டியில் 
சீனிப் பொங்கல்

முற்றம் இல்லாத வீட்டில் 
எலக்ட்ரிக் ஸ்டவ் தான் 
-எரியும் அடுப்பு

சூரியனை 
சுவற்றில் மாட்டி 
இரண்டு நாள் ஆகிறது

"வாடியம்மா பொங்கலைக் குலவிட" 

மகள் சொல்கிறாள்  "போம்மா.. 
தல, பாட்டு ஓடுது!" 

நீங்களாவது சேர்ந்துக் குலவிடுங்கள்

எங்களுக்கு மட்டுமே கேட்கிறது 
நாங்கள் சொன்ன 
"பொங்கலோ பொங்கல்!" 

- மு.முகமது பாட்சா*
13/01/2016 மீள்

பட்டாம்பூச்சிகளின் வார்த்தைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.


பறந்து போகின்ற பட்டாம் பூச்சிகள் 
சிதறி விட்டுப் போகிறது 
வார்த்தைகளை... 

சேர்த்தெடுத்து 
கவிதைகள் வடிக்கலாம் 
வா! 

காதல் பறவைகளின் சிறகுகளில் 
உன் வண்ணங்கள் 
ஒட்டிக் கொண்டால்..... 

வான வில்லிற்கு 
யார் நிறம் கூட்டுவது ? 

மின்மினிப் பூச்சிகளே.... 
நீங்கள் பச்சைச் சேலைகளுக்குள் 
பதுங்கிக் கொள்ளாதீர்... 

தவளைக் கூட்டங்கள் 
இருளில் தவிக்கின்றன! 

- மு.முகமதுபாட்சா*

12/01/2016 மீள்

நிழலின் நிழல்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நீண்டு, பரந்து, விரிந்த நிழலுக்கு 
உருவம் கொடுத்தவர்கள் 
இதுதான் 'நிஜம்' என்றார்கள். 

கிளைகள் முழுவதும் 
நகங்களை விளைவித்த நிழல், 
'நிழல்கள்தான், 
இனி நிஜங்களென்று' 
கர்வம் சூட்டிக் கொண்டது. 

நிஜத்தின் குறுக்கம் கண்டு 
"நீ நிழலாகிவிட்டாய்" என்று நகைத்தது. 

அடைக்கலம் வந்த பறவையொன்றை 
நிழலில் கூடு கட்டச் சொன்னது. 

சிரித்துவிட்ட பறவை, 

"நிழல்களெல்லாம், நிஜங்களானால் 
நிஜங்களென்பது 
காணாமல் போய்விடும்" என்றது 

"நிஜங்களொழிந்தால் 
நிழல்கள்தானே நிஜங்களாகும்" 
என்றது நிழல். 

"நிஜங்களொழிந்தால், 
நிழல்களுக்கு ஜனனமேது?, 

நீங்களே,நிஜங்களிட்ட பிச்சைகள்தான் 
நிழல்களெல்லாம், 
நிஜங்களின் கைபிடித்து மட்டுமே 
நடக்கத் தெரியும் ! 
கர்வத்தின் நிழலை கழற்றியெறி" என்றது 

பறவை கழித்த ஞான எச்சத்தில் 
தலைக் குளித்தெழுந்த, நிழலும் குறுகி 
நிஜத்தினடியில் குள்ளமாய் அமர்ந்தது. 

மரத்தினடியில் அமர்ந்திருக்கும் இவனே 
ஞானியென்று, 
ஒரு கூட்டமொன்று கூடி நிற்க, 
"நான் நிழல்தான்" என்று சொல்லிவிட்டு 
எதிர்த் திசை நோக்கி 
அவன் , மெல்ல நடக்கத் தொடங்கினான் ! 

- மு.முகமதுபாட்சா*
12/01/2017 மீள்

முட்டையே உலகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.
Art : Mohumed Batcha

முட்டையே உலகமென்று 
இரத்த திசுக்கள் 
சொல்லிக் கொண்டன 

அண்டப் பிண்டங்களின் 
களிப்பு நடனத்தில், 
ஒற்றைக் கருவாகி 
ஓருயிராய் வளரும் போது, 

மற்றொரு உலகம் 
இருக்குமென ஞானம் கூடி 
ஓடுடைத்து 
வெளிச்சம் கண்டது 

அதிசயத்தின் பக்கங்களில் 
ஆர்ப்பரித்தது உலகம். 

தாய்மையென்ற அன்பு 
சிறகு பொத்தி வளர்த்தது, 

எதிரிகளும் இருப்பதுதான் 
உலகமென்று 
இப்போது தெரிந்தது. 

பறக்கும் வரையிலும்கூட 
பயத்தை 
கட்டிப் பிடித்தே வாழ்ந்தது 

சிறகுகளை விரித்த பிறகுதான் 
அழகியல்களின் 
அதிசயத்தில் சேர்ந்தது. 

அடுத்தொரு உலகம் 
விரியுமா என்று 
இன்னமும் 
வானத்தில் நீந்துகிறது. 

- மு.முகமதுபாட்சா*
மீள் 12/01/2017

உருவமான அரூபம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

அரூபமொன்று 
உருவம் கொண்டு நடந்து போவதாக 
வதந்தியொன்று பறந்து வருகிறது, 
காற்றினைப் பைகளில் பிடித்துக் கொண்டு 
சிலர் நடந்து போகிறார்கள், 
மின்னலென்பது உருவமா? அரூபமா? 
வாதம் மேலோங்கி நிற்க... 
மேகங்களின் வேற்றுப் பிரதிகளாய் 
மழை வழிந்து கொண்டிருக்கிறது, 
தேநீர் சூட்டின் சுவை 
மூளையை லேசாக வருடிக் கொண்டிருக்க, 
நிழல்கள் 
உருவத்திற்காக உரிமை கொண்டாடுகின்றன, 
இரவு பகலின் நிழலென்றும் 
பகல் இரவின் அரூபமென்றும் 
நாடோடியின் பாடலொன்று இசைக்கிறது, 
இறந்தவனின் உயிர் 
மண்ணறைக்குள் புதைவதேயில்லை... 
எரித்தாலும் உடல் துர்நாற்றம் வீசுகிறது, 
காக்கைக்குச் சோறிட்டவனின் தந்தை 
ஆசிரமத்தில் அநாதியாகக் கிடந்தவன், 
உருவங்களாய் வாங்கிக் குவிக்கிறது ஆசைகள்... 
ஆசைகள் மட்டும் எப்போதும் அரூபமாய், 
எழுத்துகளால் நிரம்பி நடக்கும் இந்தக் கவிதை 
மனதிற்குள் உட்கார்ந்து கொள்ளும் அரூபமென்று 
வாசிக்கும் கண்களாவது அறியுமா? 

- மு.முகமது பாட்சா* 
12/01/2018 (18)

Thursday, 11 January 2018

நான் இரசித்த கவிதைகள் - 114

கூர் சரளைக் கற்கள் உள்ளங்கால்வழி
இதயம் குத்த தண்டவாளப் புதர்தேடியமர்ந்தேன்..
காலில் குத்திய காய்முள்கூம்புகள்
பாவாடைகளில் பதியனிட
நரகல் தவிர்த்து அமரப்போதில்
வெளிச்சம் வெட்கி விளகிக்கொள்ளும்
அவ்அவதை தீர்க்கும் அவதையில்
சின்னஞ்சிறுவன் ஒருவன் தண்டவாளக் கூரில்
காதுவைத்து எதையோ தேட
என்இதய நிலையத்தில் சரக்குவண்டியொன்று
வந்து நின்று சற்றே அசைந்தது..
என்னடா தேடுகிறாய்...?
கூரம் தோய்த்த என்சொல்
அவனின் காதுகளைக் குத்தக்காணோம்..
அக்கா வண்டிச்சத்தம் கேட்கிறதக்கா என்கிறான்
பார்த்திருப்பானோ முள்ளொன்றை
பூப்பின் அவதையொத்த சொல்காந்த முள் 
என் இதய வண்டியெங்கும் அடையாய்
அப்பிக்கொண்டது..
அவனின் முகமெங்குமோ பொங்கல் பூவின் கூம்புகள்
புத்தம் புதிதாய் பூத்திருந்தன...

கவிதை : ராகவப்பிரியன்

பொங்கல் கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

பொங்கலுக்காகத்தான்
கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருந்தேன்,

புத்தரிசி, புது நெல்லென்று
எழுதும் போதே
செத்துப்போன என் உழவனும்
சவளைப் பயிர்களும்
எழுதாதேயென்று 
சொல்லிவிட்டு போகிறார்கள்,

புதுக் கரும்பும், மஞ்சள் கிழங்கும்
செல்லாக்காசால்
செல்லரித்துப் போனதை
எப்படிதான் எழுதுவது ?

புத்தாடை என்றெழுதினால்
வெட்டரிவாள் 
கொண்டு வருவார்கள் பிள்ளைகள்.

புதுப் பானை, 
புத்தடுப்பு விற்காமல்
உட்கார்ந்திருக்கிறான் மண் பாண்டகன்.

மழை மேகம் மறைக்காமலிருந்தால்
சூரியன் மட்டும் வெளி வருவான்,
வாசலின் கோலங்களை 
பார்த்து, ரசித்து விட்டுப் போக.

வேறு யாருக்குத்தான் ..
வாழ்த்துகள் சொல்வது...

பொங்கி வழியும் வறுமைகளை
பொங்கிப்  பொங்கல் செய்யும் நரிகளுக்கா
பொங்கல் வாழ்த்துகள் ?

- மு.முகமது பாட்சா*
11/01/2017 மீள்

நான் அடிமையில்லை

afair க்கான பட முடிவு

சுதந்திரத்தின் 
சுவாசக் காற்றில் 
மட்டுமே சிக்கிக் கிடக்க, 
நானொன்றும் 
அடிமையில்லை 

நான் என்னை  
உன்னிடம் ஒப்புவிக்கிறேன் 
அடிமையாக ஏற்றுக் கொள் , 
உன்னால் மட்டும்தான் 
இனிமையான வதைகளால் 
இம்சிக்க முடியும். 

ஆம்,
இப்போதும் சொல்கிறேன், 

சுதந்திரத்தின் 
சுவாசக் காற்றில் 
மட்டுமே சிக்கிக் கிடக்க, 
நானொன்றும் 
அடிமையில்லை

- மு.முகமது பாட்சா*

மீள் 11/01/2017

அழகிய அமல்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம், இயற்கை மற்றும் வெளிப்புறம்

பனித் துளிகளோடு கை கோர்த்து 
சுவனத்தை நோக்கிச் செல்கிறேன், 
வழியில்  காற்றில் கரைந்து விடுகின்றன 

பூக்களோடு புன்னகையைச் சுமந்து 
மீண்டும் சுவனம் நோக்கிச் செல்கிறேன், 
வாடிய பூக்களை எப்படி எடுத்துச் செல்வது ? 

மேகங்களை 
துணையாக அழைத்துச் செல்கிறேன், 
மழையாகப் பொழிந்து தனியாக விடுகின்றது. 

காற்றுக்கு அனுமதியில்லையென்று 
இரண்டாம் வானம் தடுத்துவிடுகின்றது. 

ஆசைகளையெல்லாம் சேர்த்தழைத்துப் பார்க்கிறேன், 
அவை பூமியின் சொர்க்கமென்று 
நகர மறுக்கின்றன 

பொய்களெல்லாம்
நாங்கள் நரகத்தின் நண்பர்களென்று
வர மறுத்துவிட்டதால்....

அழகிய அமல்களை  எடுத்துச் செல்கிறேன், 
பூக்களோடு வாசல் புனிதமாகத் திறக்கிறது. 

- மு.முகமது பாட்சா*

11/01/2017 

உடையும் கோப்பை

தானியங்கு மாற்று உரை இல்லை.

தேநீர்க் கோப்பையில் 
எங்கோ விரிசல் இருக்கிறது.... 
வழிகிறது என் ரகசியங்கள்

போதி மரத்தை அரிக்கும் 
செல் பூச்சிகளுக்குத் தெரியாது.... 
புத்தனின் வரலாறு 

புதையலான - என் புற வெளி... 
புழுதியில் புரள்கிறது...
செல் பூச்சிகள் காத்திருக்கின்றன... 
அதற்கான உணவினைத் தேடி 

மக்கி மண்ணாகப் போவது 
மரம் மட்டுமல்ல 
உயிர் வழியும் கோப்பையும் தான்

நிலவின் முகம் காட்டுகிறது 
பனித் துளிகள்..
விடியலில் அவை உடைந்து போகும்....
நிலவு மட்டும் வானத்தில்... 
என்றுமே நிரந்தரமாக.

- மு.முகமது பாட்சா*
மீள் 11/01/2016

Wednesday, 10 January 2018

குற்றவாளியான கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

அந்தக் கவிதையை 
மடித்து வைத்து விட்டேன், 
படிமத்திற்குள் பதுங்கிக் கொண்டதாக 
பெரும் குற்றச்சாட்டு, 
படிமப் புறாக்களைப் பறக்க விடாமல் 
அடைத்து வைத்ததாகவும் குற்றப் பதிவு, 
வார்த்தைகளைக் கொன்று விட்டதாக 
ஒருவன் 
வழக்குத் தொடர்ந்திருக்கிறான், 
புரட்சி என்ற வார்த்தை 
அரசாங்கத்திற்கு எதிரானதென்று 
அமைச்சர் முழக்கமிடுகிறார், 
அதில் வரும் ஒரு வார்த்தை 
தன் மதத்திற்கானதென 
ஒருவன் தீயை கொளுத்திப் போட்டான், 
உளவுத்துறை 
இப்போது ஒவ்வொரு எழுத்துக்களாக 
பிரித்துக் கொண்டிருந்தது 
தமிழே தப்பான வார்த்தை என்று 
இந்தியில் எழுதி வைத்த குறிப்பை 
படிக்கும் முன்பாக 


பத்திரமாக அந்தக் கவிதையை  
மடித்து வைத்து விட்டேன். 

- மு.முகமது பாட்சா* 
11/01/2018 (17)

நானும் காகமும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன 
ஒவ்வொருவரும் 
கூடைகளில் அள்ளிச் செல்கிறார்கள் 
நான் இன்னமும் வரிசையில்தான் நிற்கிறேன் 
கூடவே ஒரு காகமும் நிற்கிறது 
இரையில்லாத போது 
எழுத்துகளைப் பசியாறுவது பழக்கமாக இருக்கலாம் 
எனக்கும் கூட அப்படித்தான் 
வார்த்தைகளை அவ்வப்போது நெய்து 
அதற்குள் பதுங்கிக் கொள்கிறேன் 
வார்த்தைகளைச் சேகரித்த ஒருவன் 
எரித்துக் கொண்டிருந்தான் 
அதனில் குளிர் காய்வது அவன் வழக்கமாம், 
வார்த்தைகளைத் 
துப்பிக் கொண்டிருந்தவனின் எச்சிலில் 
புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன, 
வடிவமாக்கிய ஒருவன் 
அவற்றைப் புணர்ந்து கொண்டிருந்தான்... 
ஆடை அவனை விட்டு நழுவி சிரித்துக் கொண்டிருந்தது, 
இரத்தம் சிந்திய வார்த்தைகளை 
மண்ணில் புதைத்தும் கொண்டும் இருந்தார்கள்... 
நிறைய வார்த்தைகளை உற்பத்தி செய்யும் என்பது 
அவர்களின் நம்பிக்கை.. 
வார்த்தைகளே வேண்டாமென்றவன் 
மௌனமாகக் களவாடிவிட்டுச் செல்கிறான், 
நானும் காகமும் மட்டும் மிஞ்சி நிற்கிறோம் 
வார்த்தைகளேதும் கிடைக்காமல். 

- மு.முகமது பாட்சா*
10/01/2018 (16) 

கவிதைக்காரன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

எனக்கும், 
கூடு விட்டுக் கூடு போகத் தெரிகிறது... 
கவிதைக் காரனாக!

மரணித்தும் எழுகிறேன் 
வார்த்தைகளில் உயிர் நுழைத்து

பட்டாம் பூச்சிகளை 
அழகிகளாய் மாற்றுகிறேன் 
என் நந்தவனத்திற்குள்

என் அககுரு அசைவுகளில் 
வானம் கீழ் இறங்கி வருகிறது

நிலாவை விளக்காக வைக்க முடிகிறது... 
நான் உறங்கும் அறைக்குள்ளாக

தோல்விகளை 
உதறித்தான்  எழுகிறேன்... 

உதறும் சில மசித் துளிகளில்!
எழுத்துருகளைக் கொண்டு 
சிரிக்கவும் 
அழவும் வைக்க முடிகிறது என்னால்!

எனக்குப் பிடிக்கிறது 
பறக்கிறேன்.... 
உங்களின் கைத் தட்டல் காற்றில்! 

நட்புடன்...முகமது பாட்சா*
10/01/2016 மீள் 

தாக்கோலில்லாத அறை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

தாக்கோலில்லாத அறைக்குள் 
நுழைந்து கொள்வது உசிதமானது. 

ஒரு புன்னகை மட்டும் போதுமானது, 
கதவுகள் தானாகத் திறந்து கொள்ளும். 

கைக் குலுக்கலில் தென்றல் காற்று 
தேடி வரும். 
கட்டித் தழுவி கொள்ளுங்கள் 
சுவாசங்கள் இடம் மாறிக் கொள்ளும். 

நான் நீயாகவும், நீ நானாகவும் 
மாறிக்கொள்வது இங்குச் சுலபம். 

அழகிய வார்த்தைகளுக்கு மட்டுமே 
இங்கு அனுமதியுண்டாம் 

நுழையும் முன்பாக 
வாசலின் அடையாளத்தை ,முதலில் 
பார்த்துக் கொள்ளுங்கள் 

"நட்பின் அறை' என்று 
தெளிவாக எழுதப் பட்டிருக்கும்.

நட்புடன்... முகமது பாட்சா*
மீள் 10/01/2017

Tuesday, 9 January 2018

புத்தகம் - 4

தானியங்கு மாற்று உரை இல்லை.

புத்தகம் 4

விரிந்து பரந்தக் கடலில்தான் 
ஒரு துளி நீராய் நான், 
பூக்களே கடலாய் விரிகின்றது, 
தேனீகளோடு நானும் சிறகசைக்கிறேன், 
போதி மரத்துப் புத்தர்கள், 
கடலுக்குள் ஞானத்தை விரித்து வைக்கிறார்கள். 
ஆன்மிக வாசல்களிலும் 
கட்டுக்கடங்காத கூட்டங்கள், 
காந்தியும், பெரியாரும் 
வெவ்வேறு தளங்களில் உரையாடிக் கொண்டிருக்க, 
சமையல் பிரியர்களும், சாப்பாட்டுப் பிரியர்களும் 
மீன்களைப் பிடித்து 
சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள், 
கடலுக்குள்ளும் ஆயிரமாயிரம் கதைகளிருப்பதாக 
கதைகளைச் சொல்லியபடி 
வண்ண வண்ணப் பறவைகள் பறக்கின்றன, 
கவிஞர்களெல்லாம் 
கவிதைகளைப் பரத்தி, நிலங்களைச் சமைத்த இடத்தில் 
கார்ட்டூன் நாயகர்கள் 
குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்க, 
கேலக்ஸிகளை இழுத்து வந்து கடலின் மேல் 
மிதக்க வைக்கிறது அறிவியல் விரித்த வானம். 
கடலைச் சின்னதாய் சுருக்கியெடுத்து 
கைப்பைகளில் எடுத்துக் கொண்டு நடக்கிறேன், 
கடல் வற்றாமல் மேலும் மேலும் விரிகிறது, 
நீங்களும் போனால் 
அந்த அதிசயக் கடலை ஆராதிக்கலாம், 
வலைதனை வீசி கடலினைப் பிடித்து 
உங்களின் பைகளிலும் நிரப்பிக் கொள்ளலாம்... 

பின் குறிப்பு : 
அந்தக் கடலின் பெயர் , சென்னை புத்தகக் கண்காட்சி 

- மு.முகமது பாட்சா*
10/01/2018 (15) 

பிசி வாழ்க்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், வானம், வெளிப்புறம், தண்ணீர் மற்றும் இயற்கை

நீர்த்த மெய்ம்மை நிழலொழுக்க 
பொய்ம்மையின் புறப்பாடு வானளவின் அதிகாரம், 
சாத்தனின் சகடத்தில் வழியும் ஆசை 
உதிரத்தின் நீர்மையில் ஊடுருவும் போதை, 
மோனச் செருவிளையில் 
மோகித்து நிரம்புகிறது காம மஞ்சம், 
கானத்திருமேனியில் 
போகிக்கும் முத்தங்களாய் பெரும் மழை, 
சாயல் கட்டுடைத்து 
நீர்க்கட்டாய் வலிபெருக்கும் பிசி வாழ்க்கை... 
நான் நீ பிம்பங்களின் 
நீள் பிரமையாய் விரியும் ஆகாயம், 
யார் நிழல்? யார் நிஜம்? 
காலத்தின்  நூழிலில் விளையும் சூனியம் .

- மு.முகமது பாட்சா*

Monday, 8 January 2018

புத்தகம் - 3

தானியங்கு மாற்று உரை இல்லை.

புத்தகம் 3

இருட்டிற்குள் கிடந்த அந்தப் புத்தகம் 
சுவாசத்திற்காகத் தன்னை 
ஒவ்வொரு தாளாகக் கிழித்துக் கொண்டது, 
தராசுக்காரனின் 
தட்டிலமர்ந்த போது தனித் தனியாகக் கழன்றது, 
வாங்கி வாசித்த அச்சனின் கண்கள் 
அத்துணைப் பரிச்சயம், 
பூவாக நகர்த்தும் அந்த விரல்களை 
அவ்வப்போது முத்தமிட்டுக் கொள்ளும், 
வாசிக்கும் கண்களில் 
வசிப்பதும் கூடத் தனிச் சுகம், 
உடைந்த கிடந்த அச்சனின் கண்ணாடியும் 
புத்தகமும் இனி ஒன்றுதான், 
எழுத்துகளை 
இணையத்தில் தேடிக் கொண்டிருந்தவர்கள் 
எடைக்குப் போடும் போது வருத்தப்படவில்லை... 
முறத்திற்காவது 
பூசி மெழுகச் சேருமா இந்தப் புத்தகம். 

- மு.முகமது பாட்சா*
09 /01 /2018  (13)

இரவின் வேதனை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

இரவு புளித்து 
நுரையாகப் பொங்கிக் கொண்டிருந்தது, 
பகலின் குறட்டை சப்தம் 
நிசப்தத்தைக் கொலை செய்து கொண்டிருக்க, 
உறக்கமில்லாத தலையணை 
உறங்குவதாகப் பாவனைக் காட்டுகிறது, 
பனி காலத்துக் குளிருக்கு 
துயரங்களை உறைய வைக்கத் தெரிவதில்லை, 
நாய்களின் எல்லைப் பிரச்சனை 
இரவினை நீண்ட தூரம் துரத்திக் கொண்டிருக்க.... 
நாடோடிகளின் நிம்மதி உறக்கம் 
இரவிற்கு மிகவும் பிடித்துப் போகிறது, 
காமுகர்களின் கட்டில்கள் 
இரவையே யோனியாக்கிப் புணர்கின்றன, 
ஆலயங்களின் வாசல்கள் பூட்டப் பட்டிருக்கின்றன... 
பிரார்த்தனைகள் 
அந்தரத்தில் தொங்குகின்றது நட்சத்திரங்களாக, 
ஆசைகளின் நீள்பிரதிகள் 
சில கொலைகளையும் களவுகளையும் செய்ய.... 
இரவு  நிம்மதியாக எப்படி உறங்கும்? 

- மு.முகமது பாட்சா* 
08 /01 / 2018  (12 )

கனி விற்பவள்



குடும்பத்தை 
கூடையில் சுமந்துத் திரிகிறவள்... 
பதனிழந்தக் கணவனையும் 
பரிசுகளான பிள்ளைகளையும் 

நளாயினியாக இருக்க வாய்ப்பில்லை?  
கதைகளில் மட்டுமே வாழ்கிறவள், 
இவள் கண்முன்னேத் திரிகிறாள்,
.  
தொடருந்து வண்டிகளிலும் 
ஆலயங்களின் வாசல்களிலும்...

கடவுளை நிந்தித்தவளாக.......
காணும் இவள் 
கனிகளை விற்றுக் கொண்டிருப்பாள் 

மு.முகமது பாட்சா*
08/01/2016

முற்று பெறாத வார்த்தை



இவன் இப்படித்தானென்று 
எழுதி வைத்த எண்ணங்களை 
சுட்டுப் பொசுக்கி விடு, 

அதன் சாம்பல் கங்குகளை 
நதி நீரில் கரைத்துவிட்டு, 
குடி நீராய்ப் பருகிப் பார்... 

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தது 
சில வார்த்தைகள்தான். 
துளிர்க்கப் போகிறேன் என்பதை 
நீ அறிய வேண்டாமா? 

கனவுகளென்பது 
கனவுகளாகவே இருக்கட்டும், 
கவிதைகள் , எல்லா நேரங்களிலும் 
பொய் பேசுவது கிடையாது . 

உதிர்ந்து போன முத்தங்களையெடுத்து 
ஒட்டவைத்துக் கொண்டே 
'இது காதலில்லை 'என்கிறோம். 

ஆன்மாவின் 
மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டு 
இறங்க மறுக்கும் உன்னை 
எப்படி நான் விரட்டியடிப்பது? 

குதிரைகளில் பயணம் செய்து கொண்டே, 
நடந்து கொண்டிருப்பதாக 
நாடகம் ஆடுகின்றோம். 

புழுதிகளின் தூசிகளைத் துடைத்து விட்டுப் பார் 
உன் கண்ணாடியில் 
என் முகபிம்பம் தெரியும் . 

உடைத்துவிட்டால் 
சிதறும், சிதறல்களின் பிம்பங்களாய் 
பெருகி நின்று நான் ரசிப்பேன். 

முற்றுப் பெறாத 
வார்த்தைகளை வைத்துக் கொண்டு 
முடிவுரையெழுத முயற்சிக்காதே, 

காற்புள்ளிகளென்பதே 
அடுத்து நாம் தொடர்வதற்காகத்தான் ! 

- மு.முகமது பாட்சா*
08/01/2017 (மீள்)

விற்பனைக்கு சூரியன்

தானியங்கு மாற்று உரை இல்லை.



















தேசத்தின் சுவர்களுக்கு 
வெள்ளையடிப்பதாகச் சொல்லி 
கறுப்பைப் பூசிக் கொண்டிருந்தார்கள். 

கண்களை 
மூடிக் கொண்டு பார்ப்பதால்தான் 
கறுப்பாகத் தெரிகிறதென்றும் 
சொல்கிறார்கள். 

நட்சத்திரங்களையும் நிலவையும் 
வரைந்து விட்டுப் போன ஒருவன், 
நாமெல்லாம், 
இரவில் இருப்பதாகச் சொல்கிறான். 

விடியுமா? என்று கேட்டதற்கு 
'விடிந்து விட்டால், 
கனவுகள் கலைந்து விடும் 
பரவாயில்லையா!' என்கிறான் 

தேநீர்க் கடைகளில் கூட்டமாய் நின்று 
பேசிக் கொண்டிருந்தார்கள், 
சூரியனை இழுத்துவந்து 
கட்டுவோமென்று, 

நேற்றே அது 
கடலில் விழுந்து இறந்துவிட்டதாக 
ஒருவன், 
துயரத்தைப் பகிர்ந்து கொண்டான். 

வெளிச்சத்தைக் கேட்டு 
அரசாங்கத்திடம் முறையிட்ட நொடியில், 
அதானி குழுமத்திடம் கேட்டிருப்பதாக 
பதில் வருகிறது. 

யாககுண்டங்களில் பாகம் வார்த்து 
வேள்விகள் நடக்கின்றன... 

சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் 
சிறப்புப் பிரார்த்தனைகள்... 

குதிரையில் வருவான் சூரியனென்று 
பார்த்துக் கொண்டே நிற்க, 

அமெரிக்காக் காரன் 
கடலை விற்றுக் கொண்டிருக்கிறான் 
நமக்கான களைப்பை போக்க ! 

அமேசான் ஆர்டர் செய்யச் சொல்கிறது 
சூரியனை பார்சலில் அனுப்புவதற்காக. 

அலிபாபா குகையைத் திறந்து 
சைனாக்காரன் அழைத்துக் கொண்டிருக்க 

நாங்களெல்லாம் 
பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம், 
வங்கிகளின் வாசல்களில் ! 

- மு.முகமதுபாட்சா* 

(மீள் - 08/01/2017)

Sunday, 7 January 2018

புத்தகம் - 2



புத்தகம் 2 

கனவுகளைப் புதைத்தவிடத்தில் 
புத்தகங்கள் முளைத்திருந்தன, 
அவற்றைக் கிழித்தொருவன் 
பறவைகள் செய்து கொண்டிருந்தான், 
நான்கு திசைகளிலிருந்தும் 
விதைகளைச் சேகரிக்கின்றன பறவைகள், 
புத்தகங்கள் வனமாக மாறி 
விலங்குகளை அதனுள் உலாவ விடுகிறது 
ஆடுகள் 
நுனிப் புற்களை மேய்ந்து கொண்டிருக்க 
ஆட்டிடையன் 
மேய்ச்சல் நிலத்தையே விற்றுக் கொண்டிருந்தான். 
கள்ளிக் காட்டில் நுழைந்த ஆடுகள் 
ஓநாய்களின் கழுத்துகளில் 
மாலைகளாகத் திரும்பிக் கொண்டிருக்க... 
புத்தகங்களெல்லாம் இப்போது 
புழுக்களாக நெளியத் தொடங்கின, 
விதைகளேயில்லாத மரங்கள் 
பெரும் வனமாகக் காட்சியளிக்கிறது... 
அலமாரியில் 
அந்து பூச்சிகள் வாசித்துக் கொண்டிருக்க 
மேடையில் 
அறிவு சீவிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
08/01/2018 (11)

Popular Posts