Friday, 30 March 2018

குற்றவாளி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

தேடப்படும் 
குற்றவாளியென்று சொன்னார்கள் 
அவன் ஒற்றை 
மருவை மட்டும் வைத்துக் கொண்டு 
மாறுவேஷத்திற்கு மாறிக்கொண்டான் 
அவனை இப்போது எல்லோரும் 
எளிதில் கடந்து போனார்கள் 
அவன் போகும் பாதைகளில் 
சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது  
கை குலுக்கியவர்கள் 
வெளிச்சம் வந்துவிட்டதாக 
பேசிக் கொண்டார்கள்  
அதிபர் அவனை 
அரவணைத்து மகிழ்வித்தார் 
அவனது சட்டைப் பணம் 
அவரது பைக்கு மாறிக்கொண்டது 
குனிந்த  போது விழுந்த மருவை 
எடுத்துக் கொடுத்த புலனதிகாரி 
பத்திரமாக ஒட்டிக் கொள்ளுங்கள் 
உங்களை இன்னமும் நாங்கள் 
தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். 
அவன்தான் இவனென்று 
சொன்ன பத்திரிகைக்காரனை 
கையும் மையுமாகக் கைது செய்தார்கள்  
அதிபர் மீது ஆவேச மைவீச 
முயன்றதாகக் குற்றச்சாட்டு 
-  வங்கியை நோக்கித்தான் 
போய்க் கொண்டிருக்கிறேன் 
கிடைக்காத கடனை  கேட்பதற்காக - 
என்ன செய்வது பயிர்கள் கருகுகிறதே!

- மு.முகமது பாட்சா*
31 /03  2018

நதிக்கரை நாகரீகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி மற்றும் வெளிப்புறம்

தண்ணீரில்லாத நதியில் 
நடந்து போகிறோம் 
வெப்பக் காற்றில் நாணற் புற்கள் 
எரிந்து கொண்டிருக்கின்றன 
யானைகளின் வழித் தடத்தில் 
எலும்புகள் மட்டுமே மிச்சமாய் கிடக்கிறது 
நதி சாகவில்லையென்று சொல்லி 
சிலர் மணலெடுத்துப் போகிறார்கள் 
இதில் எண்ணெய் ஆறு ஓடுமென்று 
ஒருவன் துளையிடுகிறான்...
நகரத்தின் விரிவாக்கம் 
நதிகளின் மேல் எழுந்தால்தான்  
நதிக்கரை நாகரீகமென்று 
வரலாறு எழுதப்படுகிறது . 
பரந்த கடவுளுக்கும் இங்கு 
அகன்ற சிலை வைப்போம் தண்ணீர் 
தாராளமாக வருமென்று மகரிஷி சொல்கிறார்  
தண்ணீர் கேட்பவர்களுக்கு 
பாலிடால் இலவசமாக தரப் படுகிறது 
வெடித்த மார்புகளுடன் 
நதி அழுது கொண்டிருக்கிறாள் தீர்வை 
பெருத்த மார்புகளில் 
தேடிக் கொண்டிருக்கிறான் அரசியல்வியாதி 
தாயை மட்டுமல்ல இனி 
நதியைப் பழித்தாலும் நாக்கை வெட்டுங்கள் 
நதியின் மகனாய் இருப்பதைவிட 
இந்தியனாக இருப்பது 
அத்துணியொன்றும் பெருமையில்லை.

- மு.முகமது பாட்சா*
30 /03 /2018

Thursday, 29 March 2018

ஆதிக்க உயிர்மிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

மெளனத்தின் வெளியில் 
சின்னக் கீறல் போட்டுப் போகும் 
கருவண்டின் திசுக்களில் 
கலந்திருக்கும் 
உன் அடர்ந்த ஆதிக்க உயிர்மிகள் 
நம்மின் ஆதிக் காதலை 
உயிர்ப்பித்துப் பறக்கின்றது... 
உறங்க மறுக்கும் விழிகளுக்குள்ளும் 
நழுவ மறுக்கும் தூசிகளாய்!

சற்றேனும் அடங்கிக் கிடந்தால் 
தொடர்வேன் மெளனத்தை! 


- மு.முகமது பாட்சா*
30/03/2016

பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி

யூதாஸ் கரியோத்தின் கைகளில்
பாவத்தின் சம்பளம் 
30  வெள்ளிக் காசுகள்

கைத்சமனித் தோட்டம் கண்கலங்கியது
பாவத்தின் படிமம் நிரப்பப்பட்டதால்

பாவத்தின் சம்பளம் அச்சமாகிறது
பேதுருவின் மூன்று முறை மறுப்பால்

பிலாத்துவின் பாவத்தைத் 
தண்ணீர் விழுங்கியது
கைகளை மூன்றுமுறை கழுவியதால்

சீமோனின் பாவத்தையும் 
சிலுவை ஏற்றது சுமக்க உதவியதால்

வெரோணிக்காவின் பாவம் 
துடைக்கப்பட்டது  
கைத்துண்டு வெளிச்சம் பெற்றதால்

சிலுவையில் ஏற்றப்பட்ட குரல் மட்டும் 
எப்போதும்  அழுகிறது
பாவத்தைக் கழுவுங்கள்.

- மு.முகமது பாட்சா*
30/03/2018

Wednesday, 28 March 2018

நானும் நானும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

யாருமில்லாத  தேசத்தில் 
நானும், நானும் மட்டுமே இருக்கிறோம், 
எனக்கும் நானுக்கும் 
எப்போதுமே ஐந்தாம் பொருத்தம் 
ஆனாலும் 
நானில்லாமல் நான் இருந்ததில்லை 
நானும் அவனில்லாமல் 
எப்போதும் இருப்பதில்லை, 
என் முதல் யோசனையை 
அவன்தான் எனக்கு எடுத்துச் சொன்னான், 
என் முதல் கனவை 
அவனிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டேன், 
என் முதல் மீசையை 
அவன்தான் அடையாளம் காட்டினான், 
என் முதல் காதலை 
அவனிடம் மட்டுமே நானும் சொன்னேன், 
சில நேரங்களில்  நான் 
என்னைக் குழியில் தள்ளிவிட்டுச் சிரிப்பான், 
என் சிராய்ப்புகளைத் தடவிக் கொடுத்து 
என்னோடு சேர்ந்தும் அழுவான், 
பல நேரங்களில் அவனுக்கும் எனக்குமான 
பிணக்குகள் பிடித்துப் போகும், 
அப்போதெல்லாம் புத்தன் போல் 
போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்வான், 
அரிதான நேரங்களில் 
அரிதாரம் பூசியென்னை அரக்கனாக்கி விடுவான், 
அவனைக் கழற்றிவிடப் பார்த்தாலும், 
என் நிழல் கூடவே வந்து படுத்துக் கொள்வான், 
பாவப்பட்டு நானும் சேர்த்துக் கொள்வேன், 
என்ன செய்வது? 
நானில்லாமல் போனால் 
இனி நானும் இருக்கப் போவதில்லைதானே 

- மு.முகமதுபாட்சா*
28/03/2017

புள்ளிகள்.....

தானியங்கு மாற்று உரை இல்லை.

அந்தக் கவிதையின் 
கடைசி முனை வரைச் சென்றவன்
அங்கிருந்த 
5  புள்ளிகளில் விக்கித்து நிற்கிறேன்
அதன் ஆறாவது புள்ளி 
என்னவாகயிருக்கும் என்பதுதான்
என் இப்போதைய யோசனை....
தொடரும் என்பதற்குக் கூட 
நான்கு புள்ளிகள்  போதும்  
அந்த ஐந்தாவதில் 
அவன் என்ன சிந்தித்திருப்பான்?
ஏதேனும் கெட்ட வார்த்தையை
இறைத்துவிட்டுச் சென்றிருப்பானோ?
புள்ளிகளை 
புள்ளிகளாக மட்டுமே பார்ப்பவர்கள் 
பாக்கியவான்கள். 
புள்ளிகள் என் மண்டையில்
புழுக்களாக ஓடுகின்றன...
புள்ளியிட்டு கோலம் போடுகிறவள்
கணக்கை நேர் செய்கிறாள்,
வாசல் இப்போது வரவேற்பறையாகிறது,
புள்ளிகளை 
அழித்துவிட்டு கவிதையைப் படிக்கிறேன்
முழுமை பெறாத அந்தக் கவிதை
கவிஞனோடு
இன்னமும் அங்கேயே நிற்கிறது.

- மு.முகமது பாட்சா*
28 /03 /2018




Tuesday, 27 March 2018

நான் அரசனானால்

தானியங்கு மாற்று உரை இல்லை.

'நான், அரசனானால்' போட்டிக்கு
ஆயத்தமானார்கள் மாணவர்கள்

'எதிரியை வீழ்த்துவேன்'  என்று
எழுதிக் கொடுத்தான் ஒரு மாணவன்

'மதுக் குடங்களை உடைத்துவிடுவேன்'
என்றான் இன்னொருவன்

'இன உரிமைக்குப் போரிடுவேன்' என்றான்
போராளி மாணவன்

'ஆட்சிதான் முக்கியம்..
அமர்ந்தப் பின் சொல்கிறேன்' என்றான்
நான்காமவன்

ஐந்தாவதாய் வந்தவன் போதையில்
'நான்தான் இங்கு அரசன்' என்றான்

சட்டென்று நால்வரும் - தங்களின்
வசனங்களைத் திருத்திக் கொண்டார்கள்...,
"ஆலம்பனா நாங்கள்தான்..
உங்களின் அடிமை"  என்று

- மு.முகமது பாட்சா*
28/03/2016

Monday, 26 March 2018

இராவண மாடசாமி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அகடம் தரித்தக் கபடனாய் அரிதாரம் பூசி
வாஞ்சையின் மகளுக்காய் 
துச்சாதனத் துயிலுரிந்த போதும்
மாரீசனாய் மானுடையுடுத்தி மாண்ட போதும்
ராஜபார்ட் கிடைக்காத சோகம்
கைப்பட்டோடைகளாய் காற்றிலாட
தத்தோம் தை தரிகிடத் தோம் என்று
ஜதிக்கட்டும் காலின் சலங்கைகளின் சிதறலில்
தொட்டால் பற்றும் தீயாய் சுழலும்
இராவண மாடசாமியின் முற்றத்தில்
காலொடிந்து நிற்கும் கட்டிலில் படுத்திருக்கிறாள்
தெருக் கூத்தின் யெவனவழகி....
கோவிலின் வாசலில் அவனைக் கண்டால்
சொல்லிவிடுங்கள்
அவள் பிழைப்பது மிகவும் கடினமென்று.

(இன்று உலக நாடக தினம்)

- மு.முகமது பாட்சா*
27 /03 /2018 

மக்களின் மந்திரிகளில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மலை, வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

உழவர்களெல்லாம் 
போராட்டத்தை 
உழுது கொண்டிருக்க, 
பூமியின் கருப்பையை அகற்ற 
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 
கருவேல மரங்களை 
அகற்றிக் கொண்டிருக்கிறோம், 
மரங்களை நடுவதற்கா? 
என்று கேட்டு விடாதீர்கள், 
மலடி வயிற்றின் மேல் 
மண்டபம் கட்டுவதற்காகத்தான்! 
திருமணம் நடக்குமா? 
என்றும் கேட்டு விடாதீர்கள், 
உழவர்களின் ஒப்பாரிகளை 
சிறை வைப்பதற்காகத்தான்! 
ஜந்தர்மந்தர் வீதியில் செல்லும் 
அமைச்சர்களின் கார்களுக்கு 
கும்பிடு போட்டு விடாதீர்கள் 
அவர்கள் சாப்பிடுவது 
உழவர்களின் உணவுமில்லை! 
அவர்கள்
மக்களின் மந்திரிகளுமில்லை !

- மு.முகமது பாட்சா*
27/03/2017

மரணத்தின் வலி கடன்

தானியங்கு மாற்று உரை இல்லை.


சொற்கூட்டங்கள் அவனை 
சூழ்ந்து கொள்கின்றன
மரணத்தின் வலி கடனென்பது
அவனது அடிவயிற்றில் எழுதப்படுகிறது
ஒரு மரத்தின் சுதந்திரம் விரைவில்
அவனால் அழிக்கப் படலாம்
அல்லது
ஒரு விடத்தின் குடுவையில்
அவன் பெயர் எழுதப்பட்டிருக்கலாம்...
பயம் அவனை
போர்வைக்குள்ளாற பொத்தி வைக்கிறது
தேநீர் குவளையின் கசப்புச் சுவை மட்டுமே
அவன் நாவில் ஒட்டியிருக்கிறது
முகமூடியும்
புன்னகைப்பதை மறந்துவிட்டது,
இரவை நேசிக்கும் மனம்
விடியலை நரகமென்று கற்பிக்கிறது
புழுவைச் சீரணிக்காத மீன்கள்
சட்டியில் வேகுகின்றன
நாளை அவன் போகும் பாதையில்
பூக்களோடு பயமும் இரைந்திருக்க
கடன் மட்டும் ஒரு மூலையில் நின்று 
வேடிக்கை பார்க்கும்.

- மு.முகமது பாட்சா*
26 /03 /2018

நான் இரசித்த கவிதைகள் - 116

ஆரூர் தமிழ்நாடன் இன் சுயவிவரப் படம்
.
உனக்கும் எனக்குமான ஞாயிறு...

என் ஞாயிறு சோம்பல் நிரம்பியது.
அது வெகுநேரம் புரண்டுவிட்டுத்தான்
கட்டிலை விடுவிக்கிறது. 

பின்னர் நாளிதழ் புரட்டுகிறது
தொலைகாட்சிச் சேனல்களை மாற்றி மாற்றி
ஆர்வமின்றிச் செய்தி கொறிக்கிறது.

மணிகொரு தரம் தேநீர் அருந்துகிறது
நண்பர்களுடன் தொலைப்பேசியில் அரட்டையடிக்கிறது.
கைமீறிப் போகும் அரசியலுக்காக எரிச்சலில் கொஞ்சம் வசவும் தயாரிக்கிறது.

பிள்ளைகளிடமும் உன்னிடமும் அனாவசியமாய் அதிகாரம்செலுத்துகிறது.
யாதொன்றும் நிகழ்த்தாது அது வெற்றுப்படகாய்
என் அன்றைய நதியைக் கடந்துவிடுகிறது.

உன் ஞாயிறு அவ்வாறில்லை.

அதிகாலையிலேயே என் கைவிலக்கி அது எழுந்துகொள்கிறது.

வியர்த்துக்களைத்து அடுக்களையைப் புதுப்பிக்கிறது.

நாட்கள் போட்ட குப்பைகளையும் அழுக்கையும் துப்புரவு செய்கிறது. 
மிக்ஸியிலும் கிரைண்டரிலும் கொஞ்சம் அரைபடுகிறது. 

இட்டலிப் பானையிலும் குக்கரிலும் வேகிறது.
அடுகளையில் புழுங்கி சமையலில் மணக்கிறது. 

அடம்பிடிக்கும் பிள்ளைகளைக் குளிக்கவைத்து உடைபூட்டி அமுதூட்டுகிறது.
சாப்பாட்டு மேசையில் கூட அது நிதானிப்பதில்லை.

கொட்டும் வெய்யிலில் அங்காடிக் கடைகளில் அது கொஞ்சம் ஏறி இறங்குகிறது.
பழவண்டி, காய்கறிக்காரனிடம் பேரம் பேசுகிறது.
லாண்டரி வண்டியிடமும் துணிகளைக் கொடுத்து வாங்குகிறது. 

சக்கரப்பொழுதுகளுக்கு மத்தியில் கடவுளுக்கும் வஞ்சகம் பண்ணாமல்
விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்கிறது.

இடையிடையே என் காதலுக்கும் அது கொஞ்சம் கருணை காட்டுகிறது.

பிள்ளைகளின் வீட்டுப்பாடத்திலும் சற்றே கரைந்து 
அவர்களின் புத்தகங்களை நேர்த்தி செய்கிறது.

வேலைகளின் நெரிசலிலும் அக்கம் பக்கம் சிநேகமாய்ப் புன்னகைக்கிறது
குடும்ப உறவுகளைப் பூக்கச்செய்யவும் அது தவறுவதில்லை.

குடும்ப பட்ஜெட் குழறுபடிகளையும் கூர்த்தமதிகொண்டு அது வகுக்கிறது.
அலுத்துவரும் இரவில் பிள்ளைகளின் 
தலைகோதிக் கதைசொல்லி உறங்கச்செய்கிறது

மொத்தத்தில் உன்னைக் கரைந்து 
எங்களை வண்ணமயமாய் வரைகிறது உன் ஞாயிறு.

இப்படியாய் இன்றைய பரிபாலனத்தை முடித்து
உலகக்களைப்போடு கட்டில் சாய்ந்து 
அப்பழுக்கற்ற குழந்தையாய் உறங்கிப்போகும் உன் ஞாயிறை
ஆழ்ந்து ரசித்துக் கொஞ்சம் கவலையுறுகிறேன்

பின்னர் அதன் கைபற்றி நன்றியோடு முத்தமிடுகிறேன்.

கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்

கவிதையல்லாதவொன்று

தானியங்கு மாற்று உரை இல்லை.


கவிதையல்லாதவொன்றை 
கவிதையென்று 
சிலர் சிலாகித்துக் கிடக்க, 
கவிதையல்லாதவொன்று 
கவிதையாகவேத் தன்னை 
சிங்காரித்துக் கொள்கிறது, 
புத்தன் சிலையிருக்கும் மரமெல்லாம் 
போதிமரமென்றால், 
ஞானம் 
எங்கே போய் ஒளிந்து கொண்டது? 
கற்பனைகளுக்கு 
உயிர் கொடுத்து நடக்கவிட்டதால், 
கற்பனைகள்தான் 
நம்மை ஆட்சி செய்கின்றன, 
நகல்களுக்கு நாணைக் கட்டிவிட்டு 
நிஜங்களை நாம் 
விவாகரத்துச் செய்து விடுகிறோம்! 
நிழல்களில் மட்டுமே 
வாழ பழகிக் கொண்டவர்கள்.... 
வெயில்களை வெறுப்பதில் 
ஆச்சரியமொன்றுமில்லை !

- மு.முகமதுபாட்சா*
26/03/2018

இலக்கியத் திரட்டு

தானியங்கு மாற்று உரை இல்லை.

இலக்கியச் சுவை
----------------------------
(சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். 
இவன் சோழன் செங்கணான் என்ற மன்னனோடு போரிட்டு 
அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைபட்டிருக்கையில் 
மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் தாகத்திற்குத் 
தண்ணீர் கொடுக்குமாறு காவலாளிகளிடம் கேட்க, காவலாளிகள் 
அம்மன்னன் மனம் புண்படும்படி இழிவுப்படுத்தி ஒரு மன்னன் 
என்று கூடப் பாராமல் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். 
தாகத்துக்குத் தண்ணீர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் மன்னன் 
மிகவும் மனம் வருந்தி, தந்த நீரைக் குடிக்காமல் 
வடக்குத் திசை நோக்கி அமர்ந்து ஒரு செய்யுளை எழுதி விட்டு உயிர் நீத்தான்.) 

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் 
ஆள் அன்று என்று வாளில் தப்பார் 
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய 
கேள் அல் கேளிர் வேளாண் இடர்ப்படுத்துச் சிறுபதம் 
மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத் 
தாம் இரந்து உண்ணும் அளவை 
ஈன்மரோ இவ் உலகத்தானே? 

****** 

புதுக்கவிதையில் 
--------------------------------- 
குழந்தையொன்று 
இறந்தே பிறந்தாலும் 
பிறந்தது பிண்டமெனவிருந்தாலும், 
ஆள் இவனென்றே 
அருமையின் பொருளறிந்து 
கூர் வாளால் மார்பினைக் கீறி 
புதைத்தோர் வீர மரபில் 
செருக்காய் பிறந்த மன்னன் , 
நானோ 
சிறு கீறலின்றிச் சிறைப்பட்ட 
சிறியோனானேன், 
மானமிழந்தே 
பெருந்தீ வயிற்றின் பிணித் தீர்க்க 
சிறுமதியால் தண்ணீர் கேட்டு 
காத்திருக்கும் கழிந்தவனுமானேன், 
காலம்தான் கடைவரையென்னை 
ச்சீயென்றே உமிழாதோ? 
மானம் பெரிதென்றால் 
மாள்வதும்தான் தகையன்றோ! 
ஞாலமே என்னை ஏற்றுக் கொள் 
மானம்வழுவாத நன்னன் இவனென்று ! 

- மு.முகமதுபாட்சா*
26/03/2017

Sunday, 25 March 2018

ஆழுமளவு வேகம்


தானியங்கு மாற்று உரை இல்லை.

கத்தியின் ஆழுமளவில் வேகம் கணக்கிட்டீர்கள்
நடுக்கத்தை அளவிடக் கருவியில்லையா?
பூனையின் கண்களில் எப்போதும்
எலிகள் ஓடிக் கொண்டேயிருப்பதில்லை,
கோபத்தைத் துளி துளியாக அருந்துங்கள்....
தந்திரத்தை எதிரிகள் அப்படித்தான் அருந்துகிறார்கள்,
ஓட்டைப் படகிலும் பயணம் செய்யலாம்
நீந்துவோம் என்ற நம்பிக்கையிருந்தால்,
கிழிந்து பறப்பது காலண்டரின் திகதிகள் மட்டுமே
கடந்த காலத்தின் நினைவுகள்  கிடையாது...
வாளின் முனையை தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்
இல்லையென்றால் துரு பிடித்து உடைந்துவிடும்
கனவுகள் என்றும் நிஜங்களாகாது
நிஜங்களைக் கனவுகளாக மாற்றிக் கொள்ளாதீர்கள்,
வீரியம் நெஞ்சிலிருந்தால்தான்
சதைப் பிடிப்பில் உரம் வந்து உட்கார்ந்து கொள்ளும்,
விரல்களை மடக்கியே வைத்திருங்கள்
அடுத்தக் குத்து நமதாகத்தான்  இருக்க வேண்டும்

- மு.முகமது பாட்சா*
25/03/2018

Friday, 23 March 2018

குருவித் தலையில் பனங்காய்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

குருவியொன்று
பனங்காயைச் சுமந்து கொண்டு போகிறது
எறும்புகள் 
நதிகளைத் தூர் வாரிக் கொண்டிருந்தன
மரம்வெட்டிகளை மரங்கள் சாப்பிடுவதாக
கிளிகள் பேசிக் கொள்கின்றன
விவசாயிகள் 
காலால் நிலத்தை உழுகிறார்கள்
இராக்கெட்டுகளை உருக்கி
கலப்பைகள் செய்து கொண்டிருந்தார்கள்
பண்டம் மாற்று வந்ததால்
பசிகள் இறந்து கிடக்கின்றன
சுவர்க்கம் யாருக்குச் சொந்தமென்று மதவாதிகள் 
நிலாவில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்
அரசியல்வாதிகள்
கனிமவளங்களை கொள்ளையடிக்க
செவ்வாய் கிரகத்திற்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.
புங்க மரக்காற்றிலமர்ந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
கனவாக இருந்தாலும் கலைத்து விடாதீர்கள்.

- மு.முகமது பாட்சா*
24/03/2018



எதுவும் அறியாமல்



அலைப்பேசியின் கோபுரத்தில் 
உட்கார்ந்திருக்கிறது நிலா
ஆந்தையின் கண்கள் 
மிரட்சியுடன் பார்க்கின்றன
சட்டைக் கிழிந்த யாசகன் 
என்னைத் தொட்டுவிட்டு சிரிக்கிறான்
கனகாம்பரம் சூடியவள் 
கிராக்கி படிய வேண்டிக் கொள்கிறாள்
சல்லாபம் செய்யும் நடைவாசிகளுக்கு 
வீடுகள் இல்லை
ஒரு நாய் அழுகிறது
பூனை நடையோடு ஒருவன் பதுங்குகிறான்
அசதியிலுறங்கும் முலையில்
அழுக்கான குழந்தை பால் குடிக்கிறது
கோவில் நடை சாத்தப் பட்டிருக்கிறது
தெருவோரத்து சாமி 
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
டாணாக்காரரின் விசில் 
களவாணிகளை உஷார் செய்கிறது...
மாடியில் எரியும் வீட்டில்
வயசுக்காரி சோரம் போயிருக்கலாம்
வாகனங்கள் எதையும் அறியாமல்
வேகமாகவே கடக்கின்றன
அவள் மட்டும் இன்னமும் வரவில்லை
விடிந்தால்தான் தெரியும்
என் பிணம் எங்கே ஒதுங்குகிறதென்று.

- மு.முகமது பாட்சா*


23/03/2018

Thursday, 22 March 2018

நா வறளும் நதி

தானியங்கு மாற்று உரை இல்லை.

தண்ணீரின் கதை
தரையிலிருந்தும் தொடங்கலாம்
மலையிலிருந்தும் தொடங்கலாம்...
காற்றின் பங்கு இல்லாமல்
மேகங்கள் உயர்வதில்லை...
சூரியனல்லவா
கடலை விழுங்கி 
மேகத்தில் துப்பவேண்டும்...
நவீனம் துப்பிய எச்சிலில்
நதிகள் சாக்கடைகளாக ஓடுகின்றன
ஆலைகளின் புகை
அமிலங்களையல்லவா
மழையில் கொண்டு சேர்க்கிறது...
பூமித் தாயின் உடலில்
துளைகளைப் போட்டு புணர்ந்துவிட்டு
யோனியில் குழந்தையெடுப்பது 
எப்படி சாத்தியம்?
அள்ளிக் குடித்த நீரை
வாங்கிக் குடிக்கும் வகைமைக்கு
நாகரீகம் என்று பெயரா?
தண்ணீர் நாள் என்பது
பன்னாட்டு நரிகளின் ராசத் தந்திரம்.
தாயை விற்று சேயை வாங்குவதும்
நிலத்தை விற்று நீரை வாங்குவதும்
எத்துணை முட்டாள்தனம்!
உரிமைகளை இனியும்
விட்டுக் கொடுக்காதீர்கள்....
நாளைக்கு உடையவர்கள் 
நம்மைத்தான் கேள்விகள் கேட்பார்கள்.
நா வறளும் நதிகளை
இனியாவது நாம் மீட்டெடுப்போம்.

- மு.முகமது பாட்சா*
22/03/2018 

Wednesday, 21 March 2018

முக்கியச் செய்திகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

கவிதைகளின் 
சில பக்கங்களைக் காணவில்லை, 
காவல் நிலையத்தில் 
புகாரளிக்கிறேன், 
அங்கு உட்கார்ந்திருந்த 
கவிதைகளைக் காட்டி 
இதிலேதும் இருக்கின்றதா? 
எனக் கேட்கிறார்கள், 
யார் யாரோயெழுதிய கவிதைகள், 
அம்மணமாய் உட்கார்ந்திருக்க... 
அங்கு வாசலில் 
கோலம் போட்டிருந்த 
உதிரத் துளிகளில் 
என் கவிதைகளின் வாசம் வீசுகிறது, 
காவல்காரர்களின் லத்திகளில் 
மிச்சம்மீதி எழுத்துகள் 
பிய்ந்து கிடக்க... 
நீதிதேவதை 
தற்கொலை செய்து கொண்டதாக 
முக்கியச் செய்திகளை 
வாசித்துக் கொண்டிருந்தன 
தொலைக் காட்சி செய்திகள் !

- மு.முகமது பாட்சா*
22/03/2017

நிறப்பிரிகையின் இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இரவு

இரவின் நிலம் 
காலின் கீழ் நழுவி வீழ்வதாக உணர்கிறேன்
நிறப்பிரிகையாய் ஊடுருவும் ஏழு வண்ணங்கள்
இறக்கைகளை அணிந்து கொள்கின்றன
இதயத்துள் நுழையும் அந்த நதி
நீண்ட கோடுகளாய் வளைந்து செல்கிறது...
கந்தக நெடி மூச்சுக் காற்றில் நிறைந்து நிற்க
கடலைப் பிடித்து குடுவையில் தருகிறேன்
மீனாக  அதிலவள்  நீந்துகிறாள்....
பூனையின் கண்களோடு 
அலைமோதும் பாம்பாகத் தவிக்கிறேன்...
வாசனைகளைத் தூவி 
வசந்த மண்டபம் நிறுவுகிறது மாயா பிம்பங்கள்...
பறவைகளின் மொழியில் பேசிக் கொள்கிறோம்...
மழைத் தூறலின் 
மகரந்த வாசம் பட்டாம்பூச்சிகளை கிளர்த்துகிறது
விரல்களைக் கொண்டு
விரல்கள் மொழி சமைக்கின்றன
வேர்கள் பின்னினால் இலைகள் சிலிர்க்கத்தான் செய்யும்
கருப்பு வெள்ளைக் கனவில்
இளஞ்சிவப்பு பூசிச் செல்கிறது மூங்கிலின் பாட்டு...
வனம் தொலைந்து மிருகம் அலைகிறது
நிறப்பிரிகையில்  மிருகம் தொலைந்து எழும்போது
வானம் துளிர்த்து பகல் விடிகிறது...

- மு.முகமது பாட்சா*
21/03/2018



வலியுடன் நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சுடரற்ற தளத்தில் 
என் வலி நடந்து போகிறது...
தேநீர் கோப்பையின் முனையில்
உட்கார்ந்திருக்கும் கறை
என்னைப்பார்த்து சிரிக்க
ஓங்கியெறிகிறேன்
உடைந்து சிதறுகிறது மனம்...
சன்னலோரத்து கேலிப் புன்னகைகள்
காக்டஸின் உடலில் முற்களைப் பதிக்க
நிர்வாணமாக நடந்து போகிறேன்...
வலி மிகுந்த செடிகளின் மீதுதான்
பூக்கள் அமர்ந்து சிரிக்கின்றன....
முகத்தை 
கைகளால் மூடிக் கொள்கிறேன்...
பின்னலிட்ட வலிகள்
சுயக் கூடமைக்கும் 
குருவியிடம் போய் சேர்கின்றன.
வலிகளை நாராய் கிழித்து பின்னும் 
அக் கூட்டில்
நானும் போய் அமர்ந்து கொள்ள...
இப்போது நானும் குருவியும்
சூடான தேநீர் அருந்துகிறோம்.

- மு.முகமது பாட்சா*
20/03/2018

நான் இரசித்த கவிதைகள் - 115

கவிஞர் ஜெயதேவன் க்கான பட முடிவு


வாழ்வின் மீது வெறுப்புற்ற அந்தக் கலைஞன் முதலில்
தன் ஆர்மோனியத்தை தூக்கி கடலில் எறிகிறான்.

தான் இசையமைத்த பாடல் துணுக்குகள்
ஒவ்வொன்றாகப் பிரிக்கிறான்

பல்லவி அனுபல்லவி சரணங்களை ஊதி
உச்சி மலையில் போய் உட்கார வைக்கிறான்
புல்லாங்குழலை மூங்கிலில் மாட்டுகிறான்
தபேலாவை இறந்த மாட்டை எழுப்பி அதன் 
முதுகில் பூட்டுகிறான்.

வீணை நரம்பறுத்து தகட்டின் தாயைத் தேடி
ஒப்புவிக்கிறான்.
களி மண்ணில் புதைக்கிறான் கடத்தை.
கருவிகள் ஒவ்வொன்றையும் அதன் 
பிறப்பிடம் விட்டு விட்டு குரல்களோடு நிற்கிறான்

ஆண் குரலை கடல் அலையிலும்
பெண் குரலை பள்ளத்தாக்கிலும் விட்டு விட்டு சுற்றிப் பார்க்கிறான்..

மிச்சம் இருந்தவை சுரங்கள் மட்டுமே
அவற்றை எடுத்து கடைசி முத்தம் தந்து விட்டு
காற்றிடம் கையளிக்கிறான்.

வர்ணங்களை வானவில்லிடமும
்சங்கதிகளை ஜதி சொல்லிய நதியிடம்
விட்டு விட்டு ஏகாந்தியாய் நடக்கிறான்.
ஒலிகளற்ற உலகு நோக்கி
இப்போது ஏதுமற்றவனாயிருக்கிறான்
எனவே..எல்லாமானவனாய் இிருக்கிறான்
பிரபஞ்சத்தின் ஆதி இசையின் ஒரு துளியாய் அவன் நடக்கிறான்.

இப்போது அவனுடன் இருப்பது 
கொஞ்சம் கடவுளும் கொஞ்சம் மரணமும்.

மரணத்தை அவன் இயக்கிய இசை வெல்லும்
கொஞ்சம் கடவுளோடு சேர்ந்து அவன் பாடும்
பாடலை மெட்டமைக்க..அதோ வருகிறான்
இன்னொரு இளம் கலைஞன்

கவிஞர் ஜெயதேவன்

Monday, 19 March 2018

குருவிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

ஜன்னலின் ஓரம் 
எட்டிப் பார்த்துப் போகும்... 
முற்றத்து மூலையில் 
கட்டிய கூட்டில் 
முறுவலாய்ப் பார்க்கும்
சிந்திய உணவுகளை 
சிதறாமலெடுத்து 
தத்தி நடைப் போட்டு 
தத்துவங்கள் சொல்லும்... 
ஒற்றை நிமிடம் ஓரிடத்தில் 
நில்லாமல் பறக்கும் 
அப்பத்தாக் கோபத்தை 
அடிக்கடிக் கூட்டும் 
ஒட்டடை அடிக்கும் போதும் 
கருணையில் தப்பிக்கும் 
இனப் படுகொலைகள் 
இயல்பாய்ப் போனதால் 
கானக் குருவிகளை 
காணாக் குருவிகளாக்கி 
எட்டுக்கு எட்டில் 
இப்போது 
எலி வாழ்க்கை வாழ்கிறோம்... 

- மு.முகமதுபாட்சா*
20/03/2016 

நன்றி : ஓவியம் 'பொன்வண்ணன்' அவர்கள்

இலக்கியத் திரட்டு

இலக்கியத் திரட்டு 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

சுவையென்றான் இதழை 
சுவைத்தேன்! 
அரும் பசிக்காரி யானும் 
உருப்பசியாய் மாறி ரசித்தேன் 
தேகன் அணைப்பின் 
தெவிட்டா மயக்க இளம் சூட்டில் 
தாகம் குளிர்ந்தேன்... 
நீண்டதொரு பாறையின் 
உச்சம் தொட்டுக் கட்டிய கூட்டில் 
கூதளி மரம் 
உரசியே விழுந்திட்ட ஓட்டையில் 
வழிந்திட்டத் தேனைச் சுவைக் கூட்டி 
ருசித்திட்ட முடவன் போல் 
களித்திட்டேன் அவனை யான்! 
தேகத்தின் சுவைத் தீரும் முன் 
சேர்வானோ என் தோழி

- மு.முகமதுபாட்சா* 

சங்க இலக்கியம் 

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் 
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன் 
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து 
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் 
நல்கார் நயவா ராயினும் 
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. 

குறுந்தொகை (பரணர்)

Sunday, 18 March 2018

திசையறியா பறவை

தானியங்கு மாற்று உரை இல்லை.

காற்றின் 
திசையறியா பறவையாகத் திரிகிறேன் 
என் இறகுகளின் பெருமூச்சு 
வானத்தை அசைக்கிறது, 
தொலைந்து போன சப்தங்கள் கூடமைத்து 
அசுரக் குஞ்சுகளைப் பொறிக்கின்றன... 
நிழலென்பது வானத்திற்குத் தெரியாது, 
அதன் நிசப்தம் 
பெரும் விசும்பலை உள்ளடக்கி உறங்குகிறது, 
எங்கோ கேட்கும் ஒரு பறவையின் குரல் 
என் கடந்த காலத்தின் பிரதியாகவே ஒலிக்கிறது.... 
உள்ளமென்பது உறுதியில்லாததால் 
உயரம் என்பது பள்ளத்தில் கிடக்கிறது, 
வல்லூறுகள் இல்லாத வானம் 
அர்த்தமற்றுப் போகிறது, 
எதிரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. 
மீண்டும் நான் திசையறிந்து பறப்பதற்கு.

- மு.முகமது பாட்சா*
19 /03 /2018

Saturday, 17 March 2018

மதியின் சூத்தை

தானியங்கு மாற்று உரை இல்லை.

செருக்கின் விளிம்பில் 
சிந்தனைகளை உட்கார வைத்து 
சிற்றின்பச் சூழலில் 
நினைவுகளைச் சுமந்து கொண்டு 
நானென்ற நானை நானே 
விடாமல் பிடித்துக் கொண்டும் 
தொழுகையின் விரிப்பில் 
ஏக இருப்பில் அமர்ந்து 
விரல் உருட்டும் தஸ்பீக்களிலும் 
உபதேசிக்கும் நாவிலும் மட்டுமே 
என் நாயன் அமர்ந்திருப்பானென்ற 
அகம்பாவ நச்சுக் கணக்கின் 
கூட்டல் கழித்தல்களை 
காலக் கணக்கன் 
சரியாகக் கணிக்கும் நேரத்தின் 
மகஷரின் வெப்பம் சூட்டில் 
கருகி நிற்கும் 
வீண்மதியின் கபடச் செயல்களை 
வித்தையென்பேனா? - நான் வேடமிட்ட 
மதியின் சூத்தை யென்பேனா? 

- மு. முகமது பாட்சா*
18/03/2016

உயிர்த்திசை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

உயிர்த்திசை 

தொப்புள் கொடியின் வாசம்
ஒட்டிக்கொண்டிருக்கும் உதிரத்துளிகளின்
நரம்புகளில் பாலருந்தும் இதயம்
அம்மா என்றுதான் துடிக்கிறது,
திசையறியா பெருவெளியிலும்
தாயன்பின் கருணை ஒட்டிக் கொண்டிருக்கும்,
ஒற்றைப் புன்னகையில்
அகிலத்தின் விதைகள் துளிர்விடுகின்றன,
அழகிய பொய்களோடு அமுதூட்டும் கலை
அவளுக்கு மட்டுமே இங்குச் சாத்தியம்,
தாயன்பின் சுவாசம் சுவாசிக்காதவன்
சுகப் பிறவியேயல்ல
கருவறைக்குள் பக்தனை வைத்து
காவல் காக்கும் சாமியைப் பார்த்ததுண்டா?
இயற்கையின் படர் விருட்சம் விரிகிறது 
தாய்மையின் நிழல் அருந்துகிறேன்,
பிள்ளைகளின் சுவாசத்தில்தான் 
பெருமை பூசிக் கொள்கிறாள் அழகிய தாய்...
சுவனத்தின் தலை வாசல்
தன் கதவுகளை என்றுமே மூடுவதில்லை
புன்னகையின் அம்சம்தான் தாய்மை
அதைப் புதைமணலில் புதைத்து விடாதீர்கள்,
அந்த நிலவையே இரசித்துக் கொண்டிருக்கிறேன்
அவள் சொன்ன அழகான பொய்கள்கூட
இன்னமும் அங்குதான் ஒட்டியிருக்கின்றன.

-மு. முகமது பாட்சா*
17 /03 /2018 

நான் இரசித்த கவிதைகள் - 114

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குளோஸ் அப் மற்றும் உரை


(சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்த மனைவியைக் 
கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்குக் காணக் கிடைத்தது)

சனிக்கிழமை சந்தைக்கு 
வந்திருந்தாய் நீ 
கைக்குழைந்தையை இடுப்பில் சுமந்தபட 
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு 
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு 
அவரை, வெண்டி, நெத்திலி 
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 
பை நிறைய வாங்கிக்கொண்டு 
நீ செல்கையில் 
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து 
உன் பின்னாலேயே வந்தேன் நானும் 
நீ காணவில்லை 
பொருட்களை வாங்கும் வரைக்கும் 
கைக்குழந்தையை வைத்திருக்கட்டுமா? 
இல்லாவிட்டால் காய் கறிப் பையை 
தூக்கிக் கொள்ளட்டுமா? 
நீ மிகவும் சிரமப் படுகிறாய்' என 
கூறவேண்டுமெனத் தோன்றிய போதும் 
கூறிவிட இயலவில்லை என்னால்!

கவிதை : கவிஞர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி(சிங்களம்)

தமிழில் எம்.ரிஷான் ஷெரிஃப்

நன்றி:Tamilauthorscom

நம்பிக்கைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

வெற்றிக் கதைகளைத் தேடி 
களைத்துப் போன என்னிடம் 
சொல்கிறது அந்தப் பட்சி.... 
தோல்வியின் முதுகில் 
உட்கார்ந்துப் போகிறதாம் வெற்றி... 
தெற்றிக் கதைப் பேசாதே 
தொற்றிக் கொள்ளென்று... 
தொற்றித் தொடர 
எத்தனிக்கும் தருணங்களில் 
பற்றி வரும் உறவுகளெல்லாம் 
பாழும் காலிழுக்கிறது... 
மெத்தனித்த தருணங்களை 
மீட்டெடுக்க முடியாமல் 
தத்தளிக்கும் மூச்சிரைப்பில் 
இன்னமும் ஒட்டியே தொடருது 
வீழ்ந்திடாத நம்பிக்கைகள்! 

- மு.முகமது பாட்சா*
17/03/2016

பாவத்தின் காசு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அந்தப் பள்ளிவாசலின் 
வெள்ளிக்கிழமைகளுக்கு  
மிகவும் பரிச்சியமானவர், 

தும்பைப்பூ உடையில் 
உட்கார்ந்து... 
தொழுகைக்குப் பிறகு 
யாசித்துக் கொண்டிருப்பார், 

கால்களில் அவருக்கு 
எண்ணிக்கை குறைந்தது 
கருணையைக் கூட்டியது, 

திக்ருக்களின் தூரத்தில் 
மரணத்தைக் கூட 
கேட்டுக் கொண்டிருக்கலாம், 

விரித்த துண்டில் விழுவது 
காசுகள் மட்டுமல்ல 
சில பாவங்களும் என்பது
நன்றாகவே தெரியும், 

அதானலென்ன? 

கண்ணில்லாத மனைவிக்கும் 
தனக்கும் 
இந்தப் பாவங்கள்தானே 
சில நியாயங்களைச் செய்கிறது... 

அத்தாவையிழந்த 
அடுத்தவீட்டு சபரினாவுக்கும் 
ஆசையாய் 
ஒரு பிரியாணி பொட்டலம் 
இந்தக் காசிலிருந்துதான் போகும் ! 

மு.முகமதுபாட்சா*
17/03/2017

Popular Posts