
மழை
மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது
இரவின் மிச்சம் போல்
வானம் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது
பூச்சிகள் பறப்பதுபோல்
தரை உச்சுகளைக் கொட்டிச் சிலிர்க்கிறது...
காற்றிற்குக் கற்பூர வாசனை...
தேநீர்க் கடைகளில் உஷ்ண மூச்சு...
குளிரென்பது அனுபவிக்கச் சுகமானது...
சூடான சோற்றில்
காரம் சேர்த்த கறியாணம் போல் மனம்...
வீட்டிற்கே வரும் சொர்கத்தை விட
குற்றாலம் அத்துணைக் குளுமையில்லை...
கொஞ்சம் அனுபவித்துப் பார்
பாரதிதாசன்
நம் வீட்டில் பாட்டெழுதிக் கொண்டிருப்பான்.
- மு.முகமது பாட்சா*
16/10/2019
---------------------------

அவன்
அவனுக்குள்ளிருந்தே
மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தான்
அவனது காலத்தை
கி.மு வில் புதைத்தவர்கள்
அவனை விஷ
விருட்சமென்று வெட்டிக் கொண்டிருந்தார்கள்..
அவன் சொற்கள் இலைகளாக உதிர...
உடலைச்
சிராய்களாக இறைத்துக் கொண்டிருந்தான்..
அவனுக்கான பூமி
அதிர்ந்து கொண்டேயிருந்தது...
அவனை நிலமில்லாதவன் என்று
சூளையில் போட்டு எரித்த போது
அவன் அச்சிக் கற்களில் இடம் மாறி
உஷ்ணத்தைக் கோபமாய்க் கொட்டிக் கொண்டிருக்க...
அவர்கள் அவன் மீது நீரூற்றி
செங்கல்லாக்கி
மாளிகைகள் கட்ட ஆயத்தமானார்கள்.
-மு. முகமது பாட்சா*
16/10/2019
No comments:
Post a Comment