Sunday, 31 March 2019

பூனையின் கண்களோடு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நான் 
பூனையின் கண்களோடு 
உலாவிக்கொண்டிருக்கிறேன்... 
வேட்டைதான் என் தொழில்... 
நீங்கள் 
எலிகளின் கண்களோடு இல்லையென்பது 
எனக்கு நன்றாகத் தெரியும்... 
நீங்கள் 
பசுக்களின் கண்களை வைத்துக் கொண்டாலும் 
எனக்குக் கொண்டாட்டம்தான்... 
புலிகளே 
பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்... 
ஆனாலும் 
நீங்கள் ஆடுகளின் கண்களைத்தான் 
அதிகம் விரும்புகிறீர்கள்... 
அடர்ந்த இருட்டிலும் வேட்டையாட 
எனக்குப் பூனையின் கண்களே 
போதுமானதாக இருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
01/04/2019

காற்றாடியின் கனவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நூலொன்றில் தொக்கிப்பறக்கும் 
காற்றாடியின் கனவில் 
என் இரகசியம். 
பறத்தலின் தூரம் நெடும் பாய்ச்சல்... 
நட்சத்திரங்கள் கையெட்டும் தூரத்தில் 
சுவாசக் காற்று ... 
அசைவும் நெளிவும் ஆனந்த தாண்டவம்... 
காற்றின் மொழி இசையில் இலயம்... 
மோகம் போகம் தலையின் உச்சம்... 
நானென்ற நான் ஆகாசம் 
அறுந்துவிழும் அந் நொடியில் 
வேண்டல் விரிகிறது 
சூட்சம நூலின் சுந்தர நேசிப்பு...

- முகமது பாட்சா*
29/03/2019

என் துயரத்தில் அவள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இரவு

அவள் இறந்துவிட்டதாக 
யார் சொன்னார்கள்? 
என் துயரத்தில் 
வாழ்ந்து கொண்டிருக்கிறாள், 
என் உறக்கம் இப்போது விழித்திருக்கிறது... 
நான் அவளைப் பற்றித்தான் 
பாடிக் கொண்டிருக்கிறேன்... 
என் மகிழ்ச்சி அவளோடு இருக்கும் போது , 
என் கவிதைகள் அவளோடு பேசும் போது, 
என் வெளிச்சம் அவளோடு திரியும் போது 
அவள் மட்டும் எப்படி இறந்திருப்பாள்? 
பார்க்காத கடவுளிடம் 
நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது 
இந்தக் கேள்வியை 
நான் யாரிடமும் கேட்டதில்லை... 
இப்போது கூட அவள் 
உங்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறாள்... 
நான் 
அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
31/03/2019

Saturday, 30 March 2019

கல்லறைக்குப் பிறந்த சொற்கள்

கல்லறைக்குப் பிறந்த சொற்கள்


மண்வெட்டியில் இடற்பட்ட சில வார்த்தைகள் 
பண்டையச் சொற்களை மீட்டியெடுக்கின்றன, 
அமைதியாக உறங்குகின்றன 
மக்கிப்போன எலும்புகள், 
வார்த்தைகளோடு புதைந்தவர்கள் 
வார்த்தைகளின்றி எதையோ சொல்ல வருகிறார்கள்... 
ஆடம்பரமென்பது 
நிச்சயம் மண்ணிற்கடியில் இல்லை... ஆனாலும் 
வார்த்தைகளின் பெரும் மூச்சு 
எப்போதும் எதையோ சொல்லிக் கொண்டேயிருக்கிறது. 
வார்த்தைகள் சுவாசிப்பதற்குக் 
காற்றுமட்டுமே அவசியமில்லை... 
அவை கல்லறைகளிலும் வசிக்கக்கூடியது. 
அங்கிருந்தும் சில சொற்கள் பிறக்கத்தான் செய்கின்றன... 
நாம்தாம் 
வாசிப்பு அனுபவம் இல்லாமல் அவற்றை 
அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.

- மு.முகமது பாட்சா*
30/03/2019

நாய்கள்

 à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: நாய் மற்றும் வெளிப்புறம்

ஒரு நாயின் பின்னால் 
சில நாய்கள் செல்கின்றன... 
நாய்கள் பேசிக்கொள்வதும் கூட 
குரைப்பதாகவே கேட்கிறது... 
நாய்கள் மட்டுமே
எல்லைச் சண்டைகள் போடுகின்றன
நாய்கள் சோற்றுக்கு அடித்துக் கொள்கின்றன 
நாய்கள் இடம் பார்க்காமல் 
புணர்ந்து கொள்கின்றன... 
நாய்கள் குட்டிகள் போட்டால் 
நாலாபுறமும் விசும்பல் சப்தம்... 
நாய்கள் நன்றி காட்டுகின்றன.. 
நாய்கள் காவல் காக்கின்றன... 
நாய்கள் கடித்தால் ஊசிகள் கடிக்கும்.. 
நாய் காலை தூக்குகிறது 
நாய்களில் எந்த நாய் பமோரியன்? 
இவையெல்லாம் நாய்களல்ல 
படிமங்களென்றால் 
ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்? 

- மு.முகமது பாட்சா*
30/03/2019

Thursday, 28 March 2019

எப்படிச்சொல்வேன்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்

நிலவைப் பார்த்து 
என்னவென்று கேட்டவள் - இப்போதும் 
ஆதிரை பாட்டி 
அங்கேயே இருப்பதாக நம்புகிறாள்... 
முத்தமென்பது - அன்பின் 
மொழியென்று மட்டுமே அறிந்தவள், 
மிச்சமில்லாமல் இறைக்கிறாள்... 
குட்டி பொம்மைக்குப் பாலூட்டித் 
தாயாகிறாள்... 
கதைசொல்லும் வேளையில் ம் கூட்டி 
இடைவெளி நிறைக்கிறாள்... 
பச்சரிப் பற்களைக்காட்டிப் 
பழிக்கும் என் செல்ல மகளிடம் 
எப்படிச்சொல்வேன்... 
தேவதைகள் இங்கு வாழ்வதற்காக 
கற்றுக் கொள்ளும் வித்தையை.........? 

- முகமது பாட்சா*
29/03/2019

காணாமல் போனவன் தேடாதீர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி மற்றும் குளோஸ் அப்

காணாமல் போனபிறகுதான் 
இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன்... 
என்னை யாரும் தேடாதீர்கள் 
நான் தொலைந்த இடம் 
உங்களில் யாருக்கும் தெரியாது... 
சிறகுகள் இருந்திருந்தால் 
நானே பறந்து வந்திருப்பேன்... 
கனவுகளில் நடந்தவன் 
கற்பனைக்குள் புதைந்துவிட்டேன்... 
உறவுகளின் மொழியறியாதவன் 
பாசங்களைப் பற்றியெழுதுவது பரிதாபம் 
இளமையைத் தின்றுவிட்டு 
முதுமைக்குப் பிச்சைக் கேட்பது 
என்ன நியாயம்? 
முகவரிகள் 
எப்போதும் யாருக்கும் சொந்தமில்லை... 
காணாமல் போனபிறகுதான் 
இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன்... 
என்னை யாரும் தேடாதீர்கள் 

- மு.முகமது பாட்சா*
28/03/2019

பேசாதவர் பேசினால்



நான் பேசுகிறேன் என்றதும்
அந்த நிமிடங்கள் உறைந்து நின்றன...
ஏழை மூதாட்டி சுருக்குப்பையை
அவசரமாக உதறிக்கொண்டிருந்தாள்
வங்கியில் உள்ள பணத்தையெடுக்க
பென்ஷன்தாரர்கள் விரைந்தார்கள்... 
ஏடிஎம் முன்பாகக் கூட்டம் கூடி நின்றது...
தேர்தல் முடிவுகள்
இப்போதே அறிவிக்கப்படும் என்று
அச்சம் ஓதிக்கொண்டே நகர்ந்தது....
மிசா போன்று ஏதாவது
கடா வந்து தொலைக்கலாம் என்று
புரட்சிகள் இடம் தேடின...
பேசாதவர்கள் பேசித் தொலைக்கும்போது
இப்படித்தான் ஏதாவது நடந்துவிடுகிறது!

- முகமது பாட்சா*

27/03/2019

சிறைக்குள் காத்திருக்கிறேன்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தக் கவிதை 
சற்றுமுன் என்னை விழுங்கியிருந்தது 
சீரணிக்கப்படாமல் 
அதன் வயிற்றில் 
உருண்டு கொண்டிருக்கிறேன்... 
வார்த்தைகளின் வீச்சம் தாங்காமல் 
தேகம் வதங்குகிறது... 
எழுத்துகளை இடம் மாற்றியும் 
இலக்கணப் பிழை வெளியே துப்பவில்லை... 
குவாண்டாநாமோ சிறைக் கைதிகள் போல் 
அதன் வயிற்றில் 
துயரங்களைக் கவிதையாக்குகிறேன்... 
வயிற்று வலியால் 
அந்தக் கவிதை இப்போது அழுகிறது... 
சற்று நேரத்தில் வாந்தியெடுத்து 
என்னை வெளியேற்றலாம்.. 
நான் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
28/03/2019

Wednesday, 27 March 2019

நிழலிடம் பேசுகிறேன்

 à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

சாலைகள் முழுவதும் 
வார்த்தைகள் இறைந்து கிடக்கின்றன
அமைதியில்லாதவன்
காற்றிடம் மட்டுமே பேசுகிறான்...
நிழலிடம் பேசும் என்னை
பைத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்
நீங்கள் பேசிய வார்த்தைகளை
அலசிப்பாருங்கள்
அவை நிச்சயம் கண்களை இழந்திருக்கும்...
சற்றுமுன் இறந்துபோனவன்
என்னிடம் பேசிவிட்டுப் போனான்
அவனின் வார்த்தைகளைத் தேடிப்பார்க்கிறேன்
அவை பொய்யென்று
இப்போது உறங்கிக் கொண்டிருக்கின்றன...
பூக்கள் பேசும் வார்த்தைகள்
வண்டுகள் புணருகின்ற மட்டுமே நிலைக்கிறது...
நதிகள் நம்மோடு பேசியவை
கடலில் சேர்ந்தபிறகு காணவில்லை...
செடிகளின் வார்த்தைகளில்
நதிகளின் மொழி ஒட்டியிருக்கலாம்...
வார்த்தைகளில்லாமல்தான்
நிழலிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
27 /03 /2019

Tuesday, 26 March 2019

வக்கிர பக்தர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

சுத்தமான மலைத்தேனை எடுத்துவந்து 
வார்த்தைகளில் குழைத்துக் கொடுக்கிறார்கள்... 
வீதிகளில் சந்தனம் தெளிக்கப்படுகிறது, 
ஏழைகள் இறைகளாக அவதாரமளிக்க 
ஆரத்தித்தட்டுகளில் விழுகிறது காணிக்கை... 
பிரபஞ்ச மோட்சம் கேட்டுக் 
கால்களில் விழுகிறவர்கள் கதறுகிறார்கள்.. 
கேள்விகள் கேட்ட கடவுள்கள் 
கடத்தப்பட்டுக் காணாமல் போனது வேறு கதை... 
கும்பிடும் கைகள் 
கடாட்சம் கேட்டு கைகளைக் கூப்பியுயர்த்த... 
அருள் பாலிப்பவர்கள் 
அந்தகாரத்தில் வெளிச்சம் கேட்டு அமர்ந்திருக்க 
வக்கிரம் ஒரு மூலையில் 
உதிரத்தைச் சுவைப்பதற்காக 
நாக்கினைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.

-மு.முகமது பாட்சா*
26/03/2019

Sunday, 24 March 2019

முடிவில்லாத விவாதம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்

எழுதாத கவிதைகளின் 
முடிவுகள் தொலைந்ததைப் பற்றிச் 
சூடாக விவாதிக்கிறோம் 
விவாதம் சூடு பிடிக்கத் 
தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது... 
தொடங்கும் போது வரும் வார்த்தைகள் 
முடிக்கும்போது கிடைப்பதில்லை 
முடிவே கிடைக்காததால் 
கவிதைகள் நீண்டுவிட்டதாகப் பராதி... 
தன்னை முடித்துக்கொள்ள 
கவிதைகளுக்கே தெரியும் என்ற வாதங்களை 
ஏன் கவிஞனுக்குத் தெரியாதா? 
என்ற வாதம் அலைக்கழிக்கிறது... 
மொழியறிவுதான் மூளையென்ற வாதம் 
நடுவில் சேர்ந்து கொள்ள... 
பெயர் அறியாத ஞானிகள் 
அங்கே வந்து அமர்ந்துகொள்கிறார்கள்... 
இன்னொருவர் மூளையினால் 
எழுத விரும்பாத இந்தக் கவிதை 
தன் வரிகளை 
இத்துடன் முடித்துக் கொள்கிறது. 
அறிவாளிகள் அங்கேயே அமர்ந்து 
தேநீர் அருந்துகிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
25/03/2019

உவமானமா? உவமேயமா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நான் உவமானமா?
உவமேயமா?
இடைச் சொற்களில் வாழும் நேசமா?
எங்குதான் செல்கிறது இந்தச் சாலை?
பயணத்தையறியாமல்
ரகசியம் படிக்கிறேன்
ரகசியம் என்னைத் தினமும் படிக்கிறது...
உலகத்தைப் படித்ததாய்
தினமும் ஓதிக்கொண்டேன்
இதயத்தைப் படிக்காதவன்
இருளைப் பற்றிப் பேசுவதில்
என்ன நியாயம்?
மழையென்று எழுதிவிட்டு
நனைகிறேன்
பனியென்று எழுதிவிட்டுக் குளிர்கிறேன்
சுவையென்று எழுதியப் பின்பும்
சுவைக்காத உணவுகளை
எப்படி ருசிப்பேன்?
பாதங்களில் ஒட்டிய மண்ணைக்
கழுவியவன்
தேகங்களிலொட்டும் மண்ணை
என்ன செய்வேன்?
எழுதாத தாளில்தான்
எத்துணை உவமைகள்?
உவமேயம் மட்டும் புரியாமல் அழுகிறது.

- மு.முகமது பாட்சா*
24/03/2019

Saturday, 23 March 2019

அழுக்கு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தப் பெண் 
அரைகுறை ஆடை உடுத்தியிருந்தாள் 
அருகில் அமர்ந்தவள் 
கடலைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருந்தாள் 
கடலை முறுக்கு விற்பவர்கள் 
அடிக்கடி கடந்து போய்க் கொண்டிருந்தார்கள் 
நீ யார் என்று கேட்கத் தயக்கமாக இருந்தது 
அரசியல் பேசினாள் 
லெனின் மாசோ எல்லாம் வந்து விழுந்தார்கள் 
ஈவாவின் காதலைச் சிலாகித்தாள் 
பாசிசம் தேவையென்றாள் 
உலகம் அழிவதற்குக் 
காரணங்கள் அவசியம் மச்சான் என்றவள்... 
சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தாள் 
புகை வளையமிட்டது... 
காஃபியை விட மது உற்சாகம் என்றவள் 
தன்னை 
யோனியின் அழுக்கு என்று சொல்லிவிட்டு 
அழுது கொண்டே எழுந்து போனால் 
நான் 
அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் 
அவள் அமர்ந்த இடம் 
தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 

- மு.முகமது பாட்சா*
23/03/2019

Friday, 22 March 2019

அந்த மாளிகை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தச் சாலையை
வியப்புடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்
அங்குதான் அந்த மாளிகை 
எல்லோரையும் 
வியப்பாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறது...
அந்த மாளிகையில்
ஒரு கனவு வாழ்ந்து கொண்டிருந்ததாக
எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்...
அது ரதமேறி வெளியில் வரும்போதெல்லாம்
ஏக்கங்கள் கைகூப்பி நிற்கும்...
வஞ்சங்கள் தரையில் விழுந்து தரிசிக்க
துரோகம் மட்டும் கூடவே பயணித்ததாக வரலாறு...
காற்றடித்த ஒரு நாளில் 
கனவு உதிர்ந்து காணாமல் போனது....
வஞ்சங்கள் 
புதிய கனவுகளை ஒட்டிக்கொள்ள
ஓடாத தேருக்கு 
ஒன்பது பேர் காவல் காக்கிறார்கள்...
மாளிகை மட்டும் 
கறையான்களுடன் இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது.

-மு. முகமது பாட்சா*
22/03/2019

Thursday, 21 March 2019

நிலவு இறந்துவிட்டதா?

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

யாருக்கான இரங்கல் கூட்டமிது? 
வானத்தில் இத்துணை மெழுகுவர்த்திகள் 
நிலவு இறந்துவிட்டதா? 

கால்கள் திசையறியாமல் போகின்றன 
கனவுகள் எனக்கு முன்னே செல்கிறது 
கஃபன்துணி வாங்கவா இத்துணை அவசரம்? 

நிழலை மடிக்கத் தெரியாதவன் 
நிஜம் நீயென்று நம்பிக்கொண்டிருக்கிறேன் 
இங்கு எதுதான் வெளிச்சம்? 

சிறகுகள் தேவையில்லை கண்ணே 
கைகளே போதுமெனக்கு 
உன்னைக் கண்டதும் கட்டியணைக்க... 

மண் சுவாசித்துக் கொண்டிருக்கட்டும் 
மண்ணறையில் உறங்கும் போதும் 
என் காதல் இறவாமல் சுவாசிப்பதற்காக! 

யாருக்கான இரங்கல் கூட்டமிது? 
வானத்தில் இத்துணை மெழுகுவர்த்திகள் 
நிலவு இறந்துவிட்டதா? 

- மு.முகமது பாட்சா*
22/03/2019

மாற்றம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, பூ மற்றும் இயற்கை

அவர்களெல்லோருமே மாறிக் கொண்டார்கள் 
தேவதூதர்கள் தேவையில்லையென்று 
கடவுள்களுக்கு மடல் அனுப்பப்படுகிறது.... 
கடாட்சத்தை அவரவர்கள் 
கழுத்துகளில் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்... 
தெருக்கடை வியாபாரி 
தொழில் அதிபராகக் கோலோச்சுகிறான்... 
பிச்சைக்காரர்கள் 
தர்மம் செய்வதற்காக ஆட்களைத் தேடுகிறார்கள்... 
நதிகள் 
சுதந்திரமாக ஓடிவருகின்றன... 
தேர்தல் அறிக்கைகள் 
கனவுகளை விரித்துப் படுக்க 
நான் குறட்டைவிட்டதாகச் சொல்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
21/03/2019

Wednesday, 20 March 2019

கொண்டாட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ


விரல்களின் நுனியில்
ஒட்டிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்
எனக்கு வாழ்த்துகள் சொல்கின்றன...
நான் எழுதும் தாள் படபடக்கிறது...
என்னையே 
பார்த்துக் கொண்டிருக்கும் வரிகள்
என்னைப் பற்றிய கவிதையை 
எழுதப் போகின்றதாம்...
நிலாவின் சுவரிலிருந்து
எழுத்துகள் பூக்களாகப் பொழிகின்றன...
நதிகள் சில வார்த்தைகளை
என் மீது வீசிவிட்டுச் செல்கிறது...
பட்டாம் பூச்சிகள் முத்தம் கொடுக்க
நான் வெட்கத்தால் சிவந்து போகிறேன்...
நட்சத்திரங்கள் கண் சிமிட்டியதை
அதிசயமாகப் பார்க்கிறேன்...
பறவைகள் பாட்டிசைக்க
கவிதை வனம் அழகாக மிளிர்கிறது...
ஏன் இத்துணைக் கொண்டாட்டம்?
இன்று கவிதைகள் தினமென
தென்றல்காற்று காதில் சொல்லிவிட்டு
பூக்களோடு மோதி சிரிக்கிறது.

- மு. முகமது பாட்சா*
21 /03/2019

நான் ஆடு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அஃதொரு அவசர கூட்டமாகத்தான் இருக்கவேண்டும். 
நான் எப்படி வந்தேன் என்பது தெரியவில்லை. 
அதில் உயரமாகவிருந்தவன் தன்னை 
XZ என்று சொல்லிக்கொண்டான். 
அடிக்கடி ஒப்பனை செய்து கொண்டிருந்தவள் 
நிச்சயம் நடிகையாகத்தான் இருக்கமுடியும். 
அவள் பிரதேசங்களை ரசிக்கும் சூழல் அங்கில்லை. 
குள்ளமாக இருந்தவன் தன்னை 
வெங்காயம் என்று அறிமுகம் செய்து கொண்டான். 
அடுத்த மேசையில் இருந்தவன் 
போதையில் இருந்து கொண்டே 
தன் பெயர் கங்கை என்றான்.. 
எல்லோரும் இப்போது என்னைப் பார்த்தார்கள்.. 
என் பெயர் நிச்சயம் தெரியவில்லை. 
முன்பு ஆடென்று கூப்பிட்டதாக நினைப்பு. 
அதையே சொன்னேன். 
இப்போது சூடான பாலில்லாத தேநீர் வந்தது. 
அதைக் கொண்டு வந்தவன் iam servent என்றான். 
காவலாளி கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தான். 
எதை எதையோ பேசினார்கள். 
அவர்களின் அந்த மொழி நான் அறியாதது. 
எனக்கான மேசையில் உணவுத் தட்டுகள் நிறைந்திருந்தன... 
நான் விரும்பிச் சாப்பிட்டேன். 
புரையேறும்போது நடிகை என் தலையில் தட்டினாள். 
அழுத்தம் சுகம். 
திடீரென்று விளக்குகள் அணைந்து எரிந்த போது 
அங்கு யாருமில்லை... 
அவர்களின் பேச்சுகள் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தன... 
நச்சென்று ஒரே வெட்டு 
என் தலை என்னைப் பார்த்துச் சிரித்தது... 
வெட்டியவனைப் பார்க்க முடியவில்லை... 
என்ன நடந்ததென்று புரியாமல்
உங்களை மாதிரிதான் 
நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
19/03/2019

அழுத்தம் அதிகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

மௌனத்தோடு 
உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். 
மௌனம் அழுத்தமாகவே இருக்கிறது... 
என் அருகில் இருக்கும் மரம் தீப் பிடித்து எரிய... 
அங்கு மழை பெய்வதாகக் 
கற்பனை எழுதிக் காட்டுகிறது. 
பூக்கள் பூப்பெய்தியிருக்கலாம் 
இரண்டு பட்டாம் பூச்சிகள் 
என்னைக் கடந்து போகின்றன... 
கடந்து போனவர்கள் என்னைப் பார்க்கவேயில்லை. 
துயரம் அங்கேயே அழுது கொண்டிருக்கிறது.. 
ஒரு சிறுமி கையாட்டிவிட்டுப் போகிறாள். 
கோமாளிகள் இருவர் 
மௌனத்தைச் சாட்டையால் அடிக்கிறார்கள்... 
மௌனத்தைக் காணவில்லை. 
அவர்களைக் கட்டியணைத்து 
முகமூடிகளைக் கழற்றுகிறேன்... 
அவர்களின் கண்கள் அழுது கொண்டிருக்கின்றன. 

- மு.முகமது பாட்சா* 
20 /03 /2019

Monday, 18 March 2019

கருங்கடலில் நீந்துகிறேன் - கஸல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

கஸலுக்கான குறிப்பொன்றை 
எடுத்துக் கொண்டிருக்கிறேன் 
உன் கைக்குட்டையில் மிகைத்த வாசம்! 
வார்த்தைகளில் 
அடிக்கடி மின்னல் வெட்டுகின்றது 
உன் புன்னகையில் எத்தனை வெளிச்சம்! 
கருங்கடலில் 
நான் மட்டும் நீந்துகிறேன் 
கருப்பு ஹிஜாப்பிற்குள் இரண்டு மீன்கள்! 
எழுத்துகள் வானத்தில் பறந்து 
நட்சத்திரங்களாகின்றன 
முழு மதியை மறைத்துக் கொள்ளாதே! 
பூக்களெல்லாம் வாடிவிட்டதாகப் 
பூங்கொத்து அழுது கொண்டிருக்கிறது... 
பாதங்களை ஏன் மறைக்கவில்லை! 
என் கவிதையைக் காணவில்லை 
புகார் செய்யும் முன்பாக 
உன் இதயத்தைத் திறந்தேனும் பார்த்துவிடு!

- மு.முகமது பாட்சா* 
18 /03 /2019

வேர்த்திரள்

வேர்த்திரள் 
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

உதிர்ந்த சருகின்மீது வீழும் 
இறகுக்கென்று ஒரு கதையிருக்கும்... 
மெல்லிய நரம்பினை மீட்டியதாகக் 
கொடிகள் அசைகின்றன... 
பால் கொடுத்த முலைக்காம்பின் நரம்புகளாய் 
வேர்கள் விதிர்க்க... 
வெட்டி வீழ்ந்த மரத்தில் சில கூடுகள்... 
கிளையொன்றில் நசுங்கிய முட்டை 
ஒரு சகாப்தத்தை இழந்ததாக அழுகிறது... 
அங்குப் பெய்யும் மழைக்கு 
இனி கண்ணீரென்று பெயரிடலாம்... 
சப்தக் கூடுகள் மௌனித்த அவ்வெளி 
இடுகாட்டின் பிரதிமை... 
நீங்கள் எப்போதும் தோண்டிப் பார்க்கலாம் 
வேர்த்திரள் 
சில கதைகளுடன் அங்கு இறந்து கிடக்கும். 

- முகமது பாட்சா*
17/03/2019

Sunday, 17 March 2019

சாத்தான் விரட்டப்படுகிறான்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஜம்ரத்துல் அகபாவில் 
ஏழு சிறு கற்களை எறிகிறார்கள் 
சாத்தான் விரட்டப்படுகிறான்... 
நீச பிசாசுகளை விரட்டிடும் 
சிலுவை ஐயாவே 
எமக்கு உதவியாக வாரும்... 
சாத்தான் விரட்டப்படுகிறான் 
பிடாரி 
ஆங்காரம் போர்த்தி ஆடுகிறாள் 
காலின் கீழ் பிசாசன் 
சாத்தான் விரட்டப்படுகிறான் 
மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் 
வாக்கு எந்திரங்கள் 
சப்தமிட்டு ஜெபிக்கின்றன... 

- மு.முகமது பாட்சா* 
18 /03 /2019

Saturday, 16 March 2019

முடிவு முடியாதது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எல்லாம் 
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்... 
முடிவு என்பது முடியாததென்று 
ஒரு பாடல் ஒலிக்கிறது... 
சப்தமில்லாத குரல்களில் அவர்கள் 
நன்றாகவே பேசிக் கொள்ளட்டும்... 
ஆழ்மனச் சப்தமொன்று 
அலைகளோடு பயணிக்கிறது... 
வலைப் பின்னும் சிலந்திக்கும் 
வலையில் மரணம் காத்திருக்க... 
இரையைத் தேடுவதற்கு 
எட்டுக் கால்கள் தேவைப் படுகிறது... 
உறங்குகின்றவன் எழுந்த பிறகுதான் 
மரணம் ஓய்வெடுக்கும்... 
மறுமை என்பது புரியாததென்றாலும் 
மரணத்திற்கு 
இங்கு முற்றுப்புள்ளியில்லை...

- மு.முகமது பாட்சா* 
17 /03 /2019

நிற்காத ஓட்டம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

யார் யாரோ சப்தமிட்டு ஓடிவருகிறார்கள் 
நானும் சப்தமிட்டபடியே 
ஓடிக்கொண்டிருக்கிறேன்... 
அவர்கள் 
என்னைத் துரத்துபவர்களாக இருக்கலாம்.. 
இல்லையென்றால் 
அவர்களுக்குப் பயந்து கொண்டு 
நான் ஓடிக் கொண்டும் இருக்கலாம்... 
எனக்கு முன்பாகவும் 
சிலர் சப்தமிட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்... 
சப்தம் எங்கும் நிறைந்திருக்கிறது... 
ஆனாலும் 
புரியாமல்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்... 
ஓட்டம் மட்டும் நிற்கவில்லை 

- மு.முகமது பாட்சா* 
16 /03 /2019 

Monday, 11 March 2019

தூர்த்த மிருகங்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்த ஒலிதம் 
அழுகிறது கதறுகிறது 
அரை நிர்வாணமாய் நின்று கெஞ்சுகிறது 
பசித்த மிருகங்கள் 
பற்களால் கீறுகின்ற போது 
வலிப்பதாகச் சொல்லி அலறுகிறது... 
கீழாடை உரித்தபின்பும் 
அண்ணா அண்ணா என்று கெஞ்சுகிறது 
அதற்கும் இரங்கா மிருகங்கள் 
யோனிப்பசி மிகுத்துக் குதறுகையில், 
நம் காதுகளின் நரம்புகளறுந்து 
கண்களின் வழி 
உதிரமாகவே கொட்டுகிறது... 
கோப நரம்புகள் முறுக்கேறச் 
சாந்தமாக அதனைச் சாத்திவிடாதீர்கள்... 
காமுகப் பிண்டங்களின் 
ஈரல்குலைகளைச் சிதைத்தெடுத்து 
நாம் வெளியில் வீசும் வரை. 

- முகமது பாட்சா* 
11 /03 /2019 

Sunday, 10 March 2019

எங்குத் தொலைந்தேன்?



இரண்டு நாட்களாக 
நான் காணவில்லையென்று 
புகார் மனுக்கள் குவிந்து கிடக்கின்றன... 
இணையத்திற்குள் 
தொலைந்திருக்க வாய்ப்புகளில்லை 
எங்காவது தட்டுப்பட்டிருப்பேன்... 
அடிக்கும் வெயிலில் 
உருகியிருக்கலாம் என்பது... 
சிலரின் கருத்து... 
எழுத்துகளோடு போனவன் 
எங்காவது 
புதைச்சொற்களில் சிக்கியிருக்கலாம் என்பது 
அன்பின் வாதம்... 
கவிதையின் கிணறு வரண்டுவிட்டதால் 
தாகத்தில் தவித்தும் செத்திருக்கலாம்... 
யோசனைகளின் தூரத்தை 
எளிதில் கடந்தவன் 
வழியறியாமல் தொலைந்திருப்பேனாம்..... 
என்னதான் நடந்தது? 
திருமண விருந்தொன்று என்னை 
அள்ளித் தின்ன... 
சற்றேயதிகம் அசந்துறங்கிவிட்டேன்... 
கிழிக்காத திகதிகள் என்னை 
வெறுப்போடு பார்த்துக் கொண்டிருக்க... 

- மு.முகமது பாட்சா* 
11 /03 /2019 

Thursday, 7 March 2019

நெளிகிறோம்


இப்போதெல்லாம் 
கால்களை நன்றாகவே கழுவுகிறார்கள் 
செல்லும் பாதையெங்கும் 
புன்னகைகளை 
விரித்து வைக்கிறார்கள்... 
வீட்டிற்குள் நுழைந்து 
பானை மோர் அருந்துகிறார்கள்... 
வேலையில்லாமல் இருப்பதைப் பார்த்து 
மனமுருகி வருந்துகிறார்கள். 
புறம்போக்குக் குடிசையை 
பட்டாவாக்க உறுதித் தருகிறார்கள்.... 
எப்போதும் தொடர்புகொள்ள 
இணைப்புக் கிடைத்துவிடுகிறது... 
அவர்களின் 
உதிர சொட்டுகளெல்லாம் 
மண்ணிற்கென்று முழங்கும்போது 
தலை குனிந்து நிற்கிறோம்... 
போகும்போது
செலவிற்குப் பணம் கொடுத்தவர்கள் 
எங்களின் காலணிகளை எடுத்துத் 
துடைத்து வைக்கிறார்கள்... 
அவர்கள் நகர்ந்தவுடன் 
எங்களின் கைகளில் ஆதாமின் ஆப்பிள்களும் 
வீடு முழுவதும் 
பாம்பின் தடங்களும் விரவி கிடக்கின்றன... 
நாங்கள் 
வெட்கத்துடன் நெளிகிறோம்.

- மு.முகமது பாட்சா* 
07 /03 /2019

Tuesday, 5 March 2019

நரகத்தில் விழுந்த வார்த்தைகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

பூத்தொடுக்கும் லாவகத்தோடு
சொற்கள்
தங்களைப் பின்னிக் கொண்டிருக்க...
அவை அத்தனையும்
புன்னகை முலாம் பூசப்பட்டிருக்கிறது...
சொற்களை ராகமாக்கி
காதுகளில் நுழைத்துக் கொண்டவர்கள்
சுவனத்திற்குள் நுழைந்து
கனவாகிக் கரைந்து கொண்டிருக்கிறார்கள்...
மதுக்குடுவையில் ஊறிய சொற்களைச்
சோமபானமாகச் சுகம் கூட்டிப் பருக
ரம்பை ஊர்வசி ஜதிகளின் யவனத்தில்
சொற்கட்டுகள் சிதறி விழுகின்றன...
தேவதூதர்களின் வாகனம்
சொற்களை ஏந்தி நரகத்திலெறிகிறது...
அனல் தீ சூழ்ந்து கொள்ள
அலறியழும் ஆத்மாக்களிடம்
கையசைத்து விடைபெறுகிறவர்கள்
நிச்சயம்
கடவுள்களாக இருக்க வாய்ப்பில்லை.

- மு.முகமது பாட்சா*
06/03/2019

காய்கள் நகர்கின்றன (தேர்தல் சிறுகதைகள்) 1

காய்கள் நகர்கின்றன...
----------------------   
பொம்மலாட்டம் க்கான பட முடிவு
  தேர்தல் தேதி வேறு அறிவித்து விட்டார்கள்! இன்னமும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் 
இழுபறியிலேயே நீடிக்கிறது. இந்த நேரத்தில் இது வேற!

     'தலைவர் நாகா' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப் படும் நாக நாதன் 
மிகுந்த குழப்பத்தில் இருக்கும் போதுதானா இப்படி ஒருச் செய்தி வரவேண்டும்? 
"யோவ், அந்த இராமசாமி வந்தானாயா?'

       "சொல்லிட்டேன் தலைவரே, இன்னமும் அஞ்சி நிமிஷத்தில வந்திடுவாரு! 
கிளம்பிட்டாராம்" - நாகாவின் செயலாளர் கதம்பம் .

     செயலாளர் சொல்லி முடிக்கவும் இராமசாமி உள்ளே வரவும் சரியாக இருந்தது. 
 தலைவர் உட்காரச் சொல்லியும் உட்காரவில்லை இராமசாமி. அமைச்சர்கள் 
அவர் எதிரில் உட்காருவது அவருக்கு பிடிக்காது என்பது இராமசாமிக்கு 
நன்றாகவேத் தெரியும்.

     "கதம்பம், கொஞ்சம் வெளியே இருங்க, பிறகு கூப்பிடறேன்!" - 
செயலாளரை வெளியே அனுப்பினார்.
   
இராமசாமி, கதவை மூடிட்டு வாயா! கதம்பம் லேஸ் பட்ட ஆளில்ல, 
ஒட்டுக் கேட்டாலும் கேட்பான்! "  இராமசாமி கதவை மூடிட்டு வந்ததும் -   
"யோவ் நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே? நீ இப்படி பண்ணுவேன்னு 
நான் கொஞ்சமும் நினைச்சி பாக்கலைய்யா!"

- "என்னான்னு தெளிவாச் சொன்னாத்தானே தலைவர புரியும்? !"

- " உன் தம்பி , நீலகிரி எஸ்டேட்டில ஒரு காபி எஸ்டேட்டை வளைச்சி போட்டிருக்கான்! 
மதிப்பு 20 கோடியாம்! உனக்கு தெரியுமா? தெரியாதா? "

 "என்னய்யா, சொல்றீங்க ! உண்மையிலேயே எனக்குத் தெரியாது தலைவரே! 
புரளியா இருக்கும் தலைவரே!" சும்மா அதிர்ந்தது போல் நடித்தார் இராமசாமி.

"ரொம்ப அதிகமா நடிக்காத இராமசாமி! உன்னை பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும்! 
ரிஜிஸ்தார் பத்திரத்தை பார்க்கிறீயா?" - மேசையின் டிராயரைத் திறந்து 
ஒரு பத்திரத்தின் நகலை வெளியே எடுத்துப் போட்டார்.

சத்தியமா எனக்குத் தெரியாது தலைவரே! இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! 
நான் அவனை இது பற்றி கேட்கிறேன் தலைவரே!"

"உன் சத்தியத்தை உடைப்பில போடுய்யா! பதவி ஏற்கும் போது நாம பண்ற 
சத்தியத்தை பற்றி எனக்குத் தெரியாதா!"

இராமசாமிக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.

"ஏன்யா, உனக்கு தெரியாதுன்னு சொல்றீயே! நீ என்ன மிட்டா மிராசு குடும்பத்திலயா பொறந்த? 
நீ சாதாரணமா ஒரு டீக் கடை வைச்சிருந்தே!
உன் தம்பி ஒரு ஜவுளிக் கடையில வேலை செஞ்சான்.எல்லாம் இந்தக் கட்சிக்கு வந்த 
பொறகுதானே சேர்த்தீங்க? உனக்குத் தெரியாதுன்னுச் சொல்றே!"
-நாகாவின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்திருந்தது.

"நீங்க கோவப் படாதீங்கத் தலைவரே! நான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்," 
- இராமசாமி எப்படியாவது சப்பைக் கட்டு கட்டலாம் என்று முயற்சி செய்தார்.

"நான் கோவப் படறது இருக்கட்டும்! உன் மாமன் எதிர்க் கட்சிக் காரன் தயாகரன் கிட்ட 
இந்த டாக்குமென்ட் எல்லாம் மாட்டியிருக்கே என்னச் சொல்லப் போறே? 
நாளைக்கு பிரஸ் மீட்டைக் கூட்டி உன்னோடு சேர்த்து என்னையும் காய்ச்சப் போறான்! 
தெரியுமா?"

"உண்மையாவத் தலைவரே! மன்னிச்சிடுங்க தலைவரே. அந்த நாய் இந்த நேரத்தில 
ரிஜிஸ்தர் வைச்சிப்பானா? நீங்கதான் எப்படியாவது சமாளிக்கணும் தலைவரே!" 
- சாஷ்டங்கமானார் இராமசாமி.

" உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சாமர்த்தியமய்யா! எனக்கு கூடத் தெரியாமா 
இவ்வளவு பெரிய சொத்துன்னா? எங்கேய்ய அடிச்சிங்க  இவ்வளவு பணத்தை ? 
என் கமிஷனை முழுசா முழுங்க பார்த்திருப்ப! எப்படியாயிருந்தாலும் 
என் பார்வைக்கு வராமப் போயிடுமா என்ன? !"

அமைதியாக இருப்பதுதான் இப்போதைக்கு நல்லதென்று இராமசாமி அமைதியாக 
கையை கட்டிக் கொண்டு நின்றார். கொஞச நேரம் ஏதோ யோசித்தவராக குறுக்கும் 
நெடுக்குமாக நடந்தார் நாகா. 

"இதப் பாரு இராமசாமி இப்ப ஒரே ஒரு வழி மட்டும்தான் இருக்கு. சொல்றதுக்கு 
எனக்கே கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. வேற வழியேயில்லை. உன்னை கட்சியின் 
எல்லா பொறுப்பிலயிருந்தும் இப்ப நீக்கிடறேன். இது விஷயமா ஒரு டம்மி கமிஷன் வைச்சி 
பிறகு ஏதாவது காக்கு மோக்கு பண்ணி உன்னை இதிலயிருந்து மெதுவா மீட்டிடறேன். 
இத விட்ட வேற வழியில்ல. என்னச் சொல்றே?"

வியர்வையை துடைத்துக் கொண்ட இராமசாமி, "எதையும் கொஞ்சம் யோசிச்சி செய்யுங்கத் 
தலைவரே!" - என்றுச் சொல்லிவிட்டு தலைவரின் மறு பேச்சிற்கும் காத்து நிற்காமல் கொஞ்சம் 
கோபத்துடன் வெளியேறினார்.

இதற்கு மேல் அங்கேயே நின்றால் அந்த சொத்தை தன் பேருக்கு மாற்றிக் கொண்டாலும் 
மாற்றிக் கொள்வார் என்பது இராமசாமிக்கு நல்லாகவேத் தெரியும்.

இராமசாமியின்  இந்தச் செய்கை நாகாவிற்கு பிடிக்கவில்லை என்பது அவரின் முகத்தில் 
நன்றாகவேத் தெரிந்தது. கதம்பத்தை உடனே கூப்பிட்டு கவர்னர் மீட்டிங்கிற்கு 
ஏற்பாடுச் செய்யச் சொன்னார்.

(2)

பத்திரிக்கைகளிலும், டிவி, சோஷியல் மீடியாக்களி லெல்லாம் 'இராமசாமியின் பதவி பறிப்பு 
பற்றிய பிளாஷ் நியூஸ்   விவாதங்களோடு நகர்ந்து கொண்டிருந்தது.

நாகாவின்  நண்பரும் அரசியல் ஆலோசகருமான கூட்டு களவானி சசிதரன் , " நல்ல வேளை 
செய்ஞ்சிங்க நாகா. அவன் சொத்து வாங்கினது மட்டுமில்லாமல் அடுத்த முதல்வர் அவன் 
தான்னு மாவட்டத்தை வைச்சி கோஷம் போட வைச்சிருக்கான். என்னத் தைரியம்!  நீங்க 
ஜெயிலுக்கு போன போது அவனை ஒரு நாள் சிஎம் மா இருக்க வைச்சே யில்ல அந்தக் 
கொழுப்புதான்!"

"சரி விடு சசி. அவனால நாம எல்லாரும் மாட்டிக்க பார்த்தோம். நானும் கூட்டுதான்னு 
தயாகரன் இன்னேரம் ஒரு ஸ்டேட்மென்டையே  ரெடி பண்ணியிருப்பான். 
முதல்ல நம்ம ஓட் பேங்கை காப்பாத்தியாகணும். அதுக்கு ஏதாவது 
ஒரு ஐடியா சொல்லு!"- நாகா

"இந்த தடவை நீ எந்த மறுப்பும் சொல்லக்கூடாது நாகா. எனக்கும் சீட்டுக் கொடுக்கிற!  
இவ்வளவு காலமா  நானும் உன்னோடு சேர்ந்துதான் தொடர்ந்து வரேன். 
மத்தவங்க ஏதாவது சொல்வாங்கன்னு என்னையும் ஒதுக்கியே வந்திருந்த . 
இப்பல்லாம்  உனக்கும் அடிக்கடி உடம்பு முடியாமப் போயிடுது. இதுதான் சமயம்ன்னு  
இராமசாமி மாதிரி ஆளுங்க, நாளைக்கு உனக்கு ஏதாவது ஆயிடிச்சின்னா, கட்சியை 
அப்படியேக் கொண்டு போய் தயாகரன் கிட்ட கொடுத்திடுவாங்கா!. நல்லா யோசிச்சி 
பார்த்து முடிவெடு." - சசிதரன்

"உண்மைதான் சசி. நானும் இத பத்தி யோசிச்சிகிட்டுதான் இருக்கேன். நானும் 
முடிவெடுத்திட்டேன் , இந்த தடவை நீ நிக்கிற. ஒரு வேளை நாம ஜெயிச்சோம்னா நீ தான் 
துணை முதல்வர்." - நாகா.

"அதென்ன ஜெயிச்சோம்னா? கண்டிப்பா ஜெயிப்போம் கவலையை விடு" - சசி, நாகாவிற்கு 
நம்பிக்கையைக்  கொடுத்தான்

"எனக்கென்னவோ டவுட்டாவே இருக்கு சசி. நாம இந்த தடவை ரொம்ப ஆடிட்டோமோன்னு" - 
நாகா

"நாகா, கவலையை விடு! எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். இந்த ஜனங்களை பத்தி 
உனக்கு தெரியாதா? காசை விட்டெரிஞ்சா எல்லாத்தையும் மறந்திடுவானுங்க. பணம் 
நமக்கென்ன பெரிசா என்ன? நீ ஹாயா இரி எதையும் போட்டு குழப்பிக்காத! பிரச்சாரத்துக்கு 
மட்டும் நீ வந்தாபோதும்! மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" - சசி

(3)

"....நீ வந்தா போதும் ! மத்ததெல்லாம் நான்பார்த்துக்கிறேன்"னு சசி சொல்லிட்டான் . 
தலைவரும் அதான் சரின்னு முடிவு பண்ணிட்டாரு! இப்ப நீங்க என்னப் பண்ணப் போறீங்க?" -  
கதம்பம் அங்கு நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் அப்படியே ஒட்டுக் கேட்டு வந்து 
இராமசாமியிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு இத மாதிரியெல்லாம் நடக்கும்னு முன் கூட்டியேத் தெரியும் கதம்பம்! 
நீ, அவன் ஆளுன்னு நினைச்சிகிட்டிருக்கான்! சரியான நேரத்தில சரியான விசயத்தைதான் 
கொண்டுவந்திருக்க. வேற வழியிலதான் அவனை மடக்கணும்" - இராமசாமி

இராமசாமிக்கு நாகாவின் மேலான கோபம் தணியவில்லை, " என்னவெல்லாம் பேசறான்! 
இவன் என்னவோ யோக்கியம் மாதிரி! இவன் மட்டும் அப்படியே ராஜ வம்சத்தில பொறந்தவன் 
மாதிரியில்ல பேசறான்!  இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சொத்து வந்தது? போதாதுக்கு 
கூட்டுக் களவானி சசி வேற ! அழிவு வந்திடுச்சி கதம்பம்!" 

" சரிங்க, இப்ப என்ன பண்றதா உத்தேசம்?" - கதம்பம்.

"நாளைக்கு பாரு கதம்பம், கிளைமேக்ஸ! "

(4)

'மக்களே நலன்' கட்சி அலுவலகத்தின் வாயிலில் பத்திரிக்கைகளும், மீடியாக்களும் பரபரப்பாக 
இயங்கிக் கொண்டிருந்தன 

இராமசாமியும், நாகாவால் சசியின் ஆலோசனையில் பதவி பறிக் கொடுத்த மற்றும் இரண்டு 
மந்திரிகள், சிலமாவட்டங்கள்,  சில ஆயிரம் தொண்டர்களோடு தலைவர் தயாபரன் முன்பாக 
மக்கள் நலன் கட்சியில் இணைந்தார்கள்.

செய்தியாளர்களை சந்தித்த இராமசாமி, 'நாகா தங்களை ஒரு அடிமை போல் 
வைத்திருந்ததாகவும், மக்களுக்கான  உதவித் திட்டங்களை சரிவர செய்யவில்லையென்றும், 
நாகாவிற்கு பதில் அந்த கட்சியில் சசிதரன் தான் எல்லாமுமாக இருப்பதாக' பேட்டிக் கொடுத்துக் 
கொண்டிருந்தார்.

மேலும் இந்த தடவை தயாபரன் ஆட்சிதான் வரும் என்று முழக்கமிட்டார்.

இதை நாகா , சசி , கதம்பம் மூவரும் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ச்சேய், இவன் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல சசி, எவ்வளவு 
அனுபவிச்சிருப்பான்! நன்றிக் கெட்டத் துரோகி!" - நாகா கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.

" அட வுடுங்க நாகா. சனியன் ஒழிஞ்சதின்னு விட்டுத் தொலைங்க! நான் தான் அன்னைக்கே 
சொன்னேனில்ல,  அவன் ஏற்கனவே தயாக்கிட்ட பேசிட்டான் " - சசி தூபம் போட்டுக் 
கொண்டிருந்தான்.

'எப்படியும் கட்சியை உங்கிட்டேயிருந்து சீக்கிரம் பிடுங்குறேன் நாகா! எனக்கான தருணம் 
இதுதான். பணம் காய்க்கும் அரசியல்ல நானும் உனக்கொரு துரோகிதான்' - மனதிற்குள்ளாக சசி 
சிரித்துக் கொண்டான்.

'தயாபரன் கட்சி மட்டும் ஜெயிக்கட்டும். எனக்கும் எதாவது ஒரு போஸ்ட் நிச்சயம் இருக்கு! 
தயாவே போன்ல உறுதியா சொல்லிட்டாரு!' - சந்தோஷத்தை வெளியேக் காட்டிக் கொள்ளாமல் 
விசுவாசிப் போல் கைக் கட்டிக் கொண்டு நின்றான் கதம்பம்.

(5)

இராமசாமிக்கு சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள நன்றாகவேத் தெரிந்திருந்தது. 
நாகாவால் தான் சொத்து வாங்கியதை பகிங்கரமாகச் சொல்ல முடியாது. 
அவர்களின் சொத்துப் பட்டியல் இராமசாமியிடமும் நகலாய் இருக்கிறது. 

தயாபரனுக்கு இப்போதையத் தேவை அரசியல் ஆதாயம் மட்டுமே. முக்கியமான ஆள் தன் 
கட்சியில் இணைந்ததால் அந்தக் கட்சியின் இமேஜை எளிதில் உடைக்க முடியும். அதனால் 
அவரும் இந்தவிவரத்தை வெளியிடமாட்டார். 

இராமசாமி தனக்குத் தானே தட்டிக் கொண்டார், "பிண்றடா இராமசாமி!"

........................முகமதுபாட்சா*-----------------------

Popular Posts