மௌனத்தைத் தின்றவன்
அறையைவிட்டு வெளியேறுகிறான்...
அவனைச் சுற்றிலும்
வெப்பம் கழன்று எரிந்து கொண்டிருக்க...
இரவுகளைத் தின்றும் சீரணிக்காத மௌனம்
சதைகளை மென்று ருசிப் பார்க்கிறது...
அவன் இவன்தான்
என்று சிலர் சப்தமெழுப்புகிறார்கள்....
கண்களையுருட்டி
கால்களையகட்டி ருத்ரமாடும் அஃது
அவன் மீதேறி
உதிரத்தை உறிஞ்சிக் குடிக்கும் போதும்
கண்ணீர்த் துளிகளுடன் மட்டுமே
நடந்து சென்று கொண்டிருக்கிறான்...
உள் மனம் எப்போதோ இறந்துவிட்டிருந்தது.
- முகமது பாட்சா*
07/11/2019
நாவலொன்றை எழுத எத்தனிக்கிறேன்
முன்பாகச் சில குறிப்புகள்
என்னை எழுத முற்படுகின்றன
துரோகமொன்று
'என்னை விட்டுவிடாதே' என முந்துகிறது
என்றோ இறந்து போனவள் 'என்னை
மறக்கவில்லையே' என்று கேட்டழுகிறாள்
பால்யம் தலைகாட்டி
'நான் உன் நிழல்' என்று அலட்டிக் கொள்கிறது
விட்டுத் தொலைந்த வீடு
'மீண்டும் கட்டுவாயா?' எனக் கேட்க..
எழுதாத பாவமொன்று
' நான் தொடர்வேன் ' என்று மிரட்டுகிறது...
எழுதும் முன்பாகத்
தட்டச்சும் விரலொன்றில் சிறு வீக்கம்
வின்னென்று வலிக்க...
நிரப்பப்படாத பக்கங்களால்
நாவலும் நானும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
- முகமது பாட்சா*
06/11/2019
சுவர் வெள்ளையாகத்தான் இருந்தது
அதிலொருவன்
சிறு நீரையாட்டி ஓவியம் என்று ரசித்தான்
சாணியடித்தவன் அற்புதமென்றான்
சாதிக்கான பெயரையெழுதி
சங்கத்திற்கு ஒருவன் உரிமை கொண்டான்
காதல் கிறுக்கன்
ஹாட்டினுக்குள் அம்பை விட்டு
காதலிக்குத் தூதுவிட்டான்
ஓட்டுக் கேட்பவன்
கைக்கூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தான்
போராட்டக்காரன் புரட்சி எழுதினான்
இறந்தவர் செய்தியொன்று சுவரை ஒட்டிக்கொள்ள...
வீட்டிற்குப் பாதுகாப்பாய்
அங்கேயே நிற்கிறது அந்தச் சுவர்.
- முகமது பாட்சா*
05/11/2019