செருப்புகளைக் கழற்றிவிட்டுத்தான்
வீட்டிற்குள் நுழைந்தார்கள்...
செருப்புகள்
காவலாளிகளைப் போல்
வெளியவே காத்துக்கிடந்தன...
மீண்டும்
செருப்புகளை மாட்டிக் கொண்டவர்கள்
கோவிலின் வாசலில் கழற்றி விட்டு
உள்ளே நுழைந்து கொண்டார்கள்..
யாசிப்பவன்
களவு போகாமல் பார்த்துக் கொண்டான்...
அவர்களோடுவே
காரிலும் ஏறிக் கொண்டன செருப்புகள்...
மது விடுதிக்குள் நுழைந்தவர்கள்
அவற்றையும்
கூடவே அழைத்துச் சென்றார்கள்...
மிஞ்சிய போதையில்
செருப்புகளால்
அடித்துக் கொள்ளவும் செய்தார்கள்...
காரிலேறி பயணப்பட்டபோது...
செருப்புகள்
கால்களை விட்டுத் தொலைந்து போயின.
-முகமது பாட்சா*
19/09/2019
--------------------------------------------------------
நீ போட்ட புள்ளிகளில்
பிரச்சனைகள் வளையமிட்டிருக்க
அழகான கோலம் என்று
ஒருவன் கடந்து போகிறான்...
சன்னல் வழியே பூனையொன்று
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா
19/09/2019
----------------------------------------------------
சிறகுகளைப் பொருத்திக் கொண்டோம்
பூமி வானமாகவும்
வானம் பூமியாகவும் இடம் மாறிக் கொண்டது
முத்த மைகளை நிரப்பி
புத்தகங்களை அச்சிடத் தொடங்கினோம்...
சங்கீர்தம் கூட்டி
பாட்டுகளை மெட்டுக் கட்டினோம்
பசியின் விரகம் மூளையைச் சுவைக்கக்
கடித்துக் குதறி மிருகமானோம்...
கனவை உதறி எழுந்த போது
இருவரும் இங்கே இறந்து கிடந்தோம்.
- முகமது பாட்சா*
20/09/2019
----------------------------------------
ஒரு சொல்லிற்கும்
மறு சொல்லிற்கும்
எவ்வளவு இடைவெளி இருக்கலாம் என்பதை
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்...
இடைப்பட்ட தூரத்தை
நீ மௌனம் என்று சொல்கிறாய்...
காற்று நுழைந்து பேசிக்கொண்டிருப்பதை
அதன் அசைவுகளால்
நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்...
இடைவெளி என்பதே
இல்லாதவொன்றுதான் என்பது
யாருக்கும் புரிவதில்லை...
இட்டு நிரப்பாத இடைவெளிகளில் உட்கார்ந்து
சாத்தான் சங்கீதம் வாசிக்கிறான்...
எழுதாத பக்கங்கள்தான்
எப்போதும் நிறைந்திருக்கின்றன என்பது
சூபிகளின் சூத்திர மொழி...
நாம் நிரப்பாத சொற்களின்
இடைவெளிகளை நிரப்பி நிரம்பி வழிவது
நரகமாகவும் இருக்கலாம்..
நாளையென்பதே
இன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டால்
இடைவெளிகள் எப்போதும் இருக்காது.
- முகமது பாட்சா*
21/09/2019
-------------------------------------------------------
கீழடியில்
நாகரீகத்தை அகழ்ந்து ஆய்ந்து
தேடிக் கொண்டிருக்கிறோம்
ஆட்சியாளர்கள்
படிமங்களையெல்லாம்
நிலங்களுக்குள் தோண்டி
புதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்..
மண்ணுக்குள் புதைந்த நாகரீகம்
வெளிவரவர மூளைகளுக்குள்
களி மண்ணையள்ளி நிரப்பிக் கொண்டவர்கள்
கடவுள்களைத் தேடி
ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் புரள்வது சாக்கடையென்று
அவர்களுக்கே விளங்கவில்லை..
சிந்துவெளி நாகரீகத்தைத்
தூக்கிச் சுமந்தவர்கள்
இன்னமும் தோண்டினால் அதனடியில்
ஆரிய நாகரீகம் இருக்குமென்பது
அவர்களின் ஆறுதலாக இருக்கிறது...
அரசியல் நாகரீகம் அறிந்தவன் தமிழன்
அவன் காலடி மண்கூட
பகுத்தறிவு பேசும் என்பதை
வைகைக்கரை நாகரீகம்
இன்று பேசத் தொடங்கியிருக்கிறது....
இனி உங்களின் வரலாற்றில் எழுதிக்கொள்ளுங்கள்
தமிழன் நாகரீகம் திமிரானதென்று
- முகமது பாட்சா*
22/09/2019
-----------------------------------------------------
தற்கொலைக்கான குறிப்புகளைப்
படித்துப் பார்த்துச் சரி பார்த்துக் கொண்டான்
பூனை மெதுவாக
உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது...
அதற்கு மது என்று பெயர்வைத்தான்..
ஓபியம் வளையம் போட்டு
அவன் நாசிக்குள் நுழைந்தவுடன்
காட்டிற்குள் தனியானான்...
கைகளில் இரத்தமாக மிளிர்ந்தாள்
கத்தியை நாக்கில் துடைத்தவன்
கதவைத் தள்ளி வந்தவளிடம் மிருகமானான்
காசு கொடுக்காமல் விரட்டினான்..
அவள் வசைகளை வாங்கி
கசக்கிக் கஞ்சாவாகக் குடித்தான்..
கழுகொன்று
மூளையைக் கொத்திக் குதறியது...
ஈடிபஸ் அழுது கொண்டே சிரித்துவிட்டு
சாகாதே என்றான்
இன்னொரு கொலைக்காக
இப்போது விடியலுக்குக் காத்திருக்கிறான்...
நேற்று கொல்லப்பட்டவள்
சமையலறையில்
ஆவிகளோடு போராடிக் கொண்டிருந்தாள்...
- முகமது பாட்சா*
23/09/2019
--------------------------------------------------------------------
காற்று நகர்த்தும் படகில்
காதலையும் நகர்த்துகிறது
கலயத்தில் மிஞ்சியிருக்கும் சோறு...
பார்த்துக் கொடுத்த முத்தங்கள் துள்ளிவிழ
வலையில் சிக்கியதெல்லாம்
அவளின் பார்வைகள்...
போர்த்திக் கொள்ள நினைவுகளிருப்பதால்
போர்வைகள் தேவைப்படவில்லை..
காற்றின் உப்புதான்
அவள் தேகத்தின் வாசம்...
அவன் முத்தெடுத்துக்கொள்ள
மூர்ச்சையாகிக் கிடக்கிறது கடல்...
அலையில் ஒதுங்குகிறது
கடலெழுதிய பெரும் கதையொன்று...
காத்திருக்கிறாள்
அவனையே விழுங்கிய மீன்வாசக்காரி.
- முகமது பாட்சா*
24/09/2019
--------------------------------------------------------
யானந்தாவின் ஆனந்தம்
கைகளை உயர்த்தியதும்
பரவசம் பக்தியாகி வழிந்து கொண்டிருந்தது..
உத்ராட்சங்கள்
தங்கப் பூணூல்களை அணிந்து கொள்ள...
சந்தனம் தேகத்தில் சங்கமித்துதிர
சாம்பிராணி வளையமிட்டு உள்ளே நுழைகிறது...
தேவலோக பிரம்ம்ம்ம்மை
உச்சந்தலையில் நுழைந்து மூளையின்
நரம்புகளைத் திண்ணுக்கொண்டிருக்க...
அப்ஸரஸ்கள் வடித்த
கண்ணீர்களைச் சேகரித்து அபிஷேகிக்கிறார்கள்..
சுவாமி யானந்தா
சுவர்க்கம் காட்ட நுழைந்த வாசலில்
யோனிப்பூக்கள் பாதைகளை விரித்திருக்கின்றன...
கபால மரங்களில்
எழுதி வைத்த கதைகளில் உதிரும் இரத்தத்தைத்
தீர்த்தமெனப் பருக...
சாந்தி நழுவி தீயில் உருகிக் கொண்டிருப்பதை
மொழிப் பெயர்த்தவன்
பக்தி என்று முழங்கும் போது
கோவில்களின் கர்ப்பக் கிரகங்கள் ஆடுவதை
பூகம்பம் என்று
தயவு செய்து மொழி பெயர்த்து விடாதீர்கள்...
- முகமது பாட்சா*
25/09/2019
- போலி சாமியார்கள் மட்டும் கோபப்படலாம்-