Sunday, 30 September 2018

குப்பைக்கூடை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்

வயதான கிராமத்திற்குள்
இளைஞனாக உள் நுழைகிறேன்...
என்னைச் சுற்றிலும்
விளையாட்டுகள் சூழ்ந்திருக்கிறது
அலட்சியமாய் குளித்த குளம்
அலைகிறது நீரலையில் அழகாக
அத்தை மடியின் ஆகாசம்
மாமன் தந்த மரப்பாச்சிகள் எல்லாம்
உயிர் பெற்று சூழ்கின்றன
நிலாச்சோறு அதன் மேல் கிள்ளிய ஊறுகாய்
நாக்கிலொட்டிய சுவை...
தாயக்கட்டை அண்ணன்களின்
தகாத சகவாசங்கள்....
வெட்கப்படும் வெள்ளி மயில்...

இரசமிழந்த கண்ணாடி
என்னைப் பழுப்பாய் காட்டுகிறது...
நகரத்தின் எச்சில்
முதியோர் இல்லத்தின் குப்பைக்கூடை....

பழுத்த இலைகளை
கூட்டி அள்ளிக் கொண்டிருந்தார்கள்...
நான் மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
01/10/2018

Saturday, 29 September 2018

பிரபஞ்சம் v/s ஆண்டவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

பிரபஞ்சம் ஒன்றை
பாட்டிலில் போட்டு மூடிவைத்தான்...
காற்றிற்குச் சற்று இடம் கொடுத்து
அதனசைவுகளை கவனிக்கத் தொடங்கினான்
சுற்றிலுமுள்ள கண்ணாடிச் சுவர்களுக்குள் 
முட்டிமோதிக் கொண்ட பிரபஞ்சம்...
தீனிகள் போட்டவனை
ஆண்டவனென அறிவித்துக் கொண்டது...
பிரபஞ்சத்தின் வெளி அடர்த்தியானபோது
பிரபஞ்சம் இறந்து கிடந்தது...
பாட்டிலை தூக்கிப் போட்டுடைத்தவன்
ஆண்டவன் பட்டத்தை கழற்றி வைத்தான்.

அவன்
பாட்டிலின் மூடியை தேடிக் கொண்டிருக்க...
அண்டம்வெளி அடர்த்தியாகி...அடர்த்தியாக...
பிரபஞ்சம் இறந்துவிட்டதாக
சிலர் அழுது கொண்டிருந்தார்கள்.

- மு.முகமது பாட்சா*
30/09/2018



அவன் உலகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கனவிற்குள் நுழைகிறான் 
சிறகுகள் அவனுக்கு முளைத்திருந்தன 
தொடர்பில்லா 
மொழியொன்று தொற்றிக் கொள்கிறது... 
அடிமைகளைப் பார்க்கும் போதெல்லாம் 
மன்னனென்று மாறிவிடுகிறான் 
அந்தபுரத்தின் கதவுகளை உடைத்து 
அவ்வப்போது உள் நுழைகிறான் 
மாயா அவனைப் பார்த்து சிரிக்கிறாள் 
அவனிதழை ஒத்தடம் தருகிறாள் 
பருவ மலையின் மேலேற்றி 
பாட்டுகளைச் சொல்லித் தருகிறாள் 
அணைக்கும் போது யாரோ ஒருவன் 
அவள் மடியில் துயில்கிறான் 
கரப்பான் பூச்சியாக  மாறியவுடன் 
காகமொன்று 
அவனைக் கொத்திக் கொண்டு பறக்கிறது 
காகத்தை 
கொன்றுவிட்டதாகச் சொல்லும் போது 
மாயாவின் யோனியில் 
கரப்பான் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன... 
அவன் உலகம் பெரியது... 
கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும் என்று 
சிக்மண்ட் சொல்லிவிட்டு நகர்கிறான்... 
அவன் கால்கள் கட்டபட்டிருக்கின்றன. 

மு.முகமது பாட்சா* 
29/09/2018

Friday, 28 September 2018

முரண்பாட்டு சமன்பாடுகள் - பரீட்சன் - நூல்விமர்சனம்

முரண்பாட்டு சமன்பாடுகள் - பரீட்சன்
வெளியீடு : அசூர ஆயுதம் பதிப்பகம் - இலங்கை




சொற்கள் மலைபோல் குவிந்துகிடக்க, வார்த்தைகளை 
தேர்ந்தெடுப்பது கவிஞனின் பிரயத்தனம். 

மெனக்கெடல் தேவைதானா?

போகிறபோக்கில் சேருகிறவார்த்தைகளை சேமித்துக் கொண்டால் 
நெஞ்சம் குப்பைக்கூடையாக மாறிவிடும். ஞானம் என்பது 
தேடலின் ஆணிவேர். ஆனால், மரம் நிற்பதாக நாம் கருதுக்கோல் 
வைக்கிறோம் ... உண்மையில் வேர்கள் பயணப்பட்டுக் 
கொண்டேயிருக்கின்றன. சூஃபிகளின் பார்வைகளில் மரணம் கூட 
மலர்களின் வாசமாகிப் போகிறது.

தேடல்கள் நிறைந்த இந்தத் தொகுப்பை போதியின் நிழலென்றும் 
சொல்லலாம்.

இறைக்காதலுக்கு, தூய்மை வேண்டும் நான் அதற்கும் 
அருகதையற்றவன் என்று சொல்லும் கவிஞரின் இந்தக் கவிதையை எப்படி 
வியக்காமல் இருக்கமுடியும்?

'உன்னில் காதல் கொள்ள ஆசைதான்
ஆனால் காமத்தை கலந்து நஞ்சாக்கிவிட்டதனால்
வெறுப்புறுகிறேன்
கனன்று கொண்டிருக்கும்
வெறுப்புத்தனலில்
எங்கோ ஒரு மூலையில்
உண்மைக்காதலின்
சூத்திரமே வேறு அன்பே!'

திடமப் பொருளாக இருப்பதைவிட மல்லாந்த ஆமையாய் இருப்பதே 
மேலென நினைக்கும் ஞானம் புதிது...

'புகழ்பெற்ற சிலையைவிட
மல்லாக்க நகரும் ஆமைக்கு
உயிராயினும் உண்டென்று
ஆறுதல் அடைய விரும்பும்
ஆத்மாக்களை குறைகாணத் துணிந்திடல்
அநியாயத்தின் உச்சமல்லவா?'

கவிஞரின் பெரும் பாலான வரிகள் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. 


'உச்ச நவீனத்தின் பிந்திய காலத்தில்
ஒரு பாம்பு நூற்றாண்டுகளுக்கு
முந்திய வரலாற்றுப் பதிவுகளை
தன் இறக்கையில் சுமந்து பறக்கும்..' - (உயில்)


**

'எதையும் தர்க்கக் கணக்கில்
பெருக்கி கூட்டிக் கழித்து
மறுதலித்து
 முடியாத வாதங்களால்
சிறை பிடித்த வித்தைகள்
உனக்கான வரப்பிரசாதங்கள்...' - (வேகம் மறைந்த தூரம்)

***

'அவள் யாராய்?
நான் யாராய்?
ஆயினும்
உயிரின் வாசங்கள்
காலத்தில் கரைவதில்லை! ... '- (அழிய மறுக்கும் புராணம்)

**

கவிதைகள் எழுதுவது எத்துணை கடினம்? 
நான் தான் ஞான பிரஸ்தன் என்று பீற்றிக் கொள்ளும் எழுத்தின் 
ஞாம்பவான்களை கண்டு வியக்கிறோம். ஆனால் பரீட்சன் கண்டு வியப்பதை 
படியுங்கள்... கர்வம் தானாகக் கழலும்...

'கடலை ஒரு விரல் நுனியால்
கட்டி இழுத்து
காலடியில் புதைத்தாலும்
பூமிக்குக்கீழ் புது வானமொன்றை
கசங்கிடாமல் நுழைத்தாலும்
எச்சிலால் பல் சதுர வலை பின்னி
நூல் வீட்டை நூதனமாய் கட்டும்
சின்ன சிலந்தியின் சாமர்த்தியத்தின்
ஒரு சிறு துரும்புக்குச் சமனாகுமா
உனது கவிதைகளின்
வரிப் பின்னல்கள் எல்லாம்
சொல்லடா?'

மரணத்தைப் பற்றி சொல்லும் போது கவிஞர் கையாளும் வார்த்தைகள் 
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன...

'.... சாத்தானின் சாபத்திலிருந்து
தப்பிக்கவே சாவு....'
.....
'சாவென்றால் மரணமல்ல
அது ஒரு தப்பித்தல்....' ( உயிர் பிரியா மரணம்)

....
'நான் தப்பித் தவறி
பிழைத்திட பயமுறுகிறேன்
நீங்கள் தவறியேனும்
செத்திட அஞ்சுவது போல்!' (கலப்படம்)
......
'விளக்குகளை அணைத்துவிடு
பேரொளியை அணைத்துக் கொள்வேன்!' ( குயில் கூவுவதில்லை)

நான் வியந்து பார்த்த கவிதைகளில் ஒன்று 'ஒற்றை வரியில் ஒரு வரலாறு'
 - அஃதெப்படி ஒற்றை வரியில் சொல்லமுடியும்?  

குழந்தை பருவம் பிந்திய நாட்குறிப்பில் மங்கிப்போனதாம். காதல் பருவம் 
கரையான் குடல்களுக்குள் செமித்தும்விட்டதாம்... சரி, அந்த ஒற்றை 
வரியின் வரலாறுதான் என்ன?

'குருதி இரத்தமாகிய காலமது' - இவ்வளவுதாங்க...

இனப்படுகொலையின் கோர முகத்தை ஒரு வரலாற்றை இப்படியும் 
சொல்லமுடியும் என்பது மிகுந்த ஆச்சரியம்.

'ஏன் என்ற ஒரு கேள்வி
எதற்கென்ற ஒரு தேடல்
அடுப்பிலிருந்து தப்பித்த 
ஒரு புல்லாங்குழலின் ஊதல்
ஜீவிக்கும் வரை...
இந்தப் பிரபஞ்சம்
விரிந்து கொண்டேயிருக்கும் '- என்பது யோசனை தூரங்களையும்
கடந்த பிரமிப்பு!

சூஃபீயின் ஞான வரிகளாக வியக்க வைக்கும் சாதாரண வரிகளில் 
அமைந்த கவிஞரின் கவிதையொன்று...

'உதிர்ந்த இறகொன்று
இறக்கவில்லை நானென்று
எவ்வளவுதான் வாதிட்டாலும்
அனுதாபப் படலாமேயன்றி
வேறொன்றும் செய்திடல் இயலாதே!
என் செய்வேன்?' ( உயிர்ப்பு )

வித்தைச் செருக்கு கொண்ட ஒருவன் ( அறிவுஜீவி ) கவிஞருடைய 
ஒவ்வொரு கவிதையாக கிழிக்கிறான் 'எதுவும் சரியில்லை'யென்று 
ஆனாலும் கவிஞர் , நான் தோற்றுவிடுவேன் என்றா நினைக்கிறாய்? 
என்று சவால் விட்டுவிட்டு

'அண்டச் சராசரங்கள் அனைத்தையும்
அதற்கப்பாலுள்ள சுவனத்தையும்
பாதத்தின் அடியில் புதைத்துக் கொண்டிருக்கும்
என் தாயை எழுதிடுவேன்
நீ தோற்றுப் போவாய்
தோற்றே போனாய்! ' - என்று தனது தாயின் கவிதையில் 
மொழிகின்றவிதம் பூரிப்பு!

வாழ்வைப் பற்றி சொல்லும் போது...

'ஒரு ஒற்றைக்குமிழியின்
நம்பிக்கையில் தங்கிவிடுகிறது
வாழ்வு!' - என்பது கவிஞரின் ஞான வெளிப்பாட்டை நமக்கு உணர்த்துகிறது.

இலங்கையின் அரசியலுக்குள் முழுமையாக ஆட்படுத்திக் கொண்ட 
வாஃபா. ஃபாரூக் என்கின்ற கவிஞர் பரீட்சன். தன் கவிதை பயணத்தையும் 
தொடர்ந்து நகர்த்த வேண்டும் என்பதே இலக்கிய செழுமைகளின் 
ஆவலாய் தேங்கி நிற்கும்.

நட்புடன்.....முகமது பாட்சா*
29 /09 /2018

ஜங்கில் டிரெயின்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

என்னெதிரில் 
ஒரு கழுதை உட்கார்ந்து எப்போதும் 
கத்திக் கொண்டேயிருந்தது... 
பாவம் அந்தப் பூனை 
தன் கண்களை உருட்டி 
மிரட்சியாக என்னைப் பார்த்தது... 
சற்றுத் தள்ளி 
உட்கார்ந்திருந்த புறாவொன்றின் புன்னகை 
மெல்லக்கீற 
அருகில் வந்து உட்கார்ந்த குதிரை 
ஹலோ மிஸ்டர் காகம்' என்று 
என்னிடம் கைக் குலுக்கியது... 
கொறித்துக் கொண்டிருந்ததை மடித்து 
பையில் வைத்துவிட்டு 
வார இதழ் ஒன்றைப் புரட்டுகிறேன் 
அதுவும் ஒரு ஜங்கில் புக் தான்... 
புறா இரவல் கேட்க 
அருகில் இருந்த குதிரை 
என்னிடம் கேட்டது 
மிஸ்டர் எலி எங்கே போறீங்க... 
இப்போதுதான் கவனித்தேன் 
கழுதையின் அருகிலிருந்த பூனை 
ஒரு நாகமாகவும் 
குதிரை நரியாகவும் மாறுவதை.... 
புறா புறாவாகவே படித்துக் கொண்டிருந்தது.

- மு.முகமது பாட்சா*
28 /09 /2018 

Thursday, 27 September 2018

ரம்மியாடும் சொற்கள்

தொடர்புடைய படம்

கிளைக்கு, இலை 
சரியாகவிருக்கும் என்று தேர்ந்தெடுத்தேன் 
அருகும் சருகும் கூட 
அடம்பிடித்து அருகில் வந்து உட்கார்ந்து கொண்டது 
புத்தன் என்று எடுத்துவைத்தவுடன் 
எத்தன் என்னையும் சேர் என்கிறான் 
சொல் என்ற சொல்லுக்கு 
எள் ஏன்தான் ஆசைப்படுகிறது? 
எழுது'க்கு விழுது வந்து சேர்ந்ததில் 
கொஞ்சம் மகிழ்ச்சிதான் 
எருதுக்கும் விருதுக்கும் கூட 
ஏதாவது சம்பந்தம் இருக்கலாம் 
சிறைக்கு நிறை என்பதும் 
ஆட்சியாளர்களின் மொழிதானே! 
சாதிக்கு போதி என்று 
ஏன் வருகிறது விளங்கவில்லை 
மதத்திற்கு அதத்தை 
நானே தேர்ந்தெடுத்தேன் 
சுகம் என்றவுடன் முகம் 
அகம் இரண்டும் வித்தைக் காட்டுகிறது 
வார்த்தைகளை 
கலைத்துபோட்டு அடுக்குகிறேன் 
ரம்மி விளையாட 
தொலைக்காட்சியென்னை அழைக்கிறது 
வார்த்தைகள் கொஞ்ச நேரம் உறங்கட்டும் 
நான் 
கவிதையோடு ரம்மியாடிவிட்டு வருகிறேன். 

- மு.முகமது பாட்சா* 
27 /09 /2018 

Wednesday, 26 September 2018

கடவுச்சொல்லில் கைரேகை


Impasse

கடலை வரைவதைவிட
கடல் என்று எழுதிவிடுவது 
சுலபமாகவிருக்கிறது -
ஞாபகமறதிக்குள் உட்கார்ந்து கொண்டு
கட்டங்களைத் தேடுகிறேன்
காய்கள் பெட்டிக்குள் உறங்குகின்றன -
என் சுவருக்கு ஆயிரம் கண்கள்
நிர்வாணமாகவே என்மொழி உலாவுகிறது -
யன்னல் திரையை விலக்கி 
யாமக் கோடாங்கி 
ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கிறான் -
ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன்
நின்றவிடத்தை விட்டு  
பாதங்கள் சற்றும் நகரவில்லை...-
வரைந்துவிட்ட கோடுகளை பறவையென்கிறேன்
பறவையென்றுமே
நிஜமென்று நிரூபிக்கப் போராடுவதில்லை... -
கடவுச்சொல்லில் என் கைரேகை
யாரோ ஒருவன் திருடும் முன் 
நீயாவது என்னைக் களவாடிச்செல்.

- நட்புடன்.....முகமதுபாட்சா*
27 /09 /2018

Thanks by  painting: Rosie Greenhalgh

நுண்புனை கதைகள்

நுண்புனை கதைகள் 12

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்


நுண்புனை கதைகள்

அந்த நிழல் அவனையே பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது . சில நேரங்களில் 
அவன் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கும் . உச்சி வெயில் நேரத்தில் 
அவனைத் தனியாகத் தவிக்கவிட்டு மறைந்து கொள்ளும்.

அவன் சகவாசம் சரியில்லையென்று உறவுகள் அவனை வெறுத்து ஒதுக்கின. 
சிலர் அவனை ஏளனமாகப் பார்த்து சிரித்தார்கள். நிழல் மட்டும்,
 'அவர்கள் எப்போதுமே அப்படித்தான், கவலைப்படாதே' 
என்று ஆறுதல் சொல்லும். அவனுக்கும் அதனோடு மட்டுமே 
பேசிக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தமாகவிருந்தது. 
அவன் நின்றாலும் ஓடினாலும் விளையாடினாலும் பிரிவதேயில்லை.

மருத்துவரிடம் அவன் தன் நிழலை அம்மா என்று பெயரிட்டே 
அறிமுகப்படுத்தினான். தந்தை இறந்துவிட்டதாகச் சொன்னவன் 
பெற்றவளை பற்றிக் கேட்டபோது கோபமானவன் 
அந்த நிழல் ஒரு ஓடுகாலியென்று கத்திக்கொண்டே ஓடினான்.


- முகமது பாட்சா*
26/09/2018

Tuesday, 25 September 2018

பிரளயசங்கீதம்



பெரும் பிரளயத்தின் சப்த சங்கீதம் கேட்க
காதுகளின் மடல்கள் வளர்ந்து நிற்கின்றன
இசை நரம்புகளின் இறுக்கத்தில்
மரங்களின் வேர்கள் முனங்குவது கேட்கிறதா?
தொடர் மழைகளுக்குள்
அலைகளின் ஒப்பந்தம் என்னவாகயிருக்கும்?
தவளைகளின் சப்தமென்று 
எதையும் கடந்து போக முடிவதில்லை...
பூமியின் முளைகளை பிடுங்கிய பிறகு
கூடாரங்கள் சரிவதற்கு காரணம் ஏன்?
சாலைகளில் படுத்துக் கொண்டாலும்
சப்த ஒருங்கிணைப்புகள் நாடியைப் பிடுங்கிவிடும்
வண்ணங்களும் வர்ணங்களும்
வலைப் பாதுகாப்பு கொடுக்குமென்ற உத்திரவாதமுண்டா?
பூமிக்குள் புதைந்த காரூணின் செல்வம்
இன்றுவரையும் கிடைக்கவில்லை....
பிர்அவுன் புதைந்த பிறகு கடவுள் என்னவானான்?
நோவாவின் படகினை நோக்கி ஓடும்வரை
காலின் நரம்புகள் ஒத்துழைக்குமா? 
பிரளயத்தின் மொழியே சப்தகூறுகளாகும்...
இந்தக் கவிதை மெல்ல முறியும் போது....
பெரும் அலைகளில் என் பேனா மிதந்து செல்லலாம்
அத்துடன் இந்தக்கவிதை முற்றுப்பெறும்.

- மு.முகமது பாட்சா*
26/09/2018

சாபம் தூவும் மகரந்தம் - வத்சலா ரமேஷ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Vathsala Ramesh, நிற்கிறார் மற்றும் உரை


நூல்:  சாபம் தூவும் மகரந்தம் - 
கவிஞர்  வத்சலா ரமேஷ்

கவிதைகள் ஒவ்வொருவருக்குள்ளும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் - 
என்ற, கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களின் முன்னுரையுடன் 
கவிதையின் பக்கங்களுக்குள் நுழைகிறேன். 

கவிதைகளுக்கு பலமென்பது வார்த்தைகளின் ஒழுங்கென்பதைத் தனது 
முதல் கவிதையிலேயே நிருபித்துவிடுகிறார் சகோதரி வத்சலா அவர்கள்.

எனதுபாட்டியின்
இளமைப் பருவத்தை
நான் பார்த்ததில்லை -  என்று சொல்பவர் அதற்கு அடுத்தே

நான் வளர்ந்த பருவத்தில்
பாட்டியும் வீட்டில் இல்லை - 

என்று தொடர்கிறார்...குழந்தையாகவே மாறிப்போன பாட்டியை 
விடுதியிலிருந்து வீட்டிற்கே கொண்டுவரவேண்டும் என்ற பெயர்த்தின் 
பாசத்தைச் சொல்லும் அந்தக் கவிதை மிகவும் சிறப்பானது.

ஆறிப்போன  தேநீரில் ஆடை கட்டுவதையும் கூட ஒரு கவிதை 
காதலாய் மாற்றிக் கொள்கிறது...

நாங்களிருவரும் பேசியதை
வேடிக்கை பார்த்த தேநீர்கள் 
வெட்கம் கொண்டு
முகம் மூடிக் கொண்டது
அதன் ஆடையில். 

வறுமை, இயலாமை, முதுமை இவற்றின் வலிகளை, கவிஞர் வத்சலா 
அவர்களின் ஒவ்வொரு கவிதைகளுமே பேசத் தயங்கவில்லை.

குப்பை பொறுக்கும்
சிறுமியின் முகத்தில்
சொட்டிய வியர்வையால் கழுவப்பட்டது
அவள் புன்னகை - என்ற வரிகள் சற்றென்று நம் மனதில் பெரும் தாக்கத்தை  
ஏற்படுத்திவிடுகின்றது.

தாத்தாவின் வீடு என்ற கவிதையில் உள்ள அடுத்துவரும் வரிகள் நம் மனதைவிட்டு 
சீக்கிரம் நீங்கிவிடாது. அவரது பார்வையின் ஏழ்மை நம் மனதை அசைக்கிறது

எப்போதேனும் வந்தமரும்
ஒற்றைக் குருவியாய்
ஆகிப்போனது
சொந்தங்களின் வருகை

இறந்துவிட்ட பாட்டியை காணாமல், பெயர்த்தி ஒவ்வொருவரிடமும் 
பாட்டி எங்கே? பாட்டி எங்கே? என்று கேட்டு கேட்டுத் துளைக்கிறாள். 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி பாட்டி வெளியே 
சென்றிருப்பதாக ஏமாற்றுகிறார்கள்.  
அப்போதும் அவளின் மனம் தன் பாட்டியையே சுற்றி வருகிறது.   
அண்ணனின் துணையோடு மறு நாள் பாட்டிக்கு கடிதம் ஒன்றை 
எழுதுகிறாள் பெயர்த்தி...என்னவென்று பாருங்கள்...

உன்னோட வாக்கிங் ஸ்டிக்
ஹாலில் மாட்டியிருக்கும்
உன் படத்திற்கு முன்னால்
பத்திரமாக வச்சிருக்கேன்
அது இல்லாமல்
அங்கே நீ
எப்படி வாக்கிங் போறே? --- என்று நீண்டு கொண்டே வரும் அந்தக் கடிதத்தில் 
அவளுக்கே உள்ள குறும்போடு

உன் மூக்கு கண்ணாடிகிட்டயும்
வாக்கிங் ஸ்டிக் கிட்டயும்
பேசிப்பேசி விளையாடியதில்
அதற்குக் கொம்பு முளைத்து
என்னை முட்ட வருது...
நீ வா பாட்டி - என்ற அவளின் முறையீட்டு வரிகள், அவளுக்கும் 
பாட்டிக்குமான நேசப் பிணைப்பை  அழகாக சொல்லிவிடுகிறது.


மேலும் சிறந்த படைப்புகளைச் சகோதரியிடம் தொடர்ந்து 
இனியும் எதிர்பார்க்கலாம். இனிய வாழ்த்துகள்

மு.முகமது பாட்சா*
25/09/2019
  

Monday, 24 September 2018

குழப்பிக் கொள்ளாதீர்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஆழ்மனதினுள் எழும் கேள்விகளுக்குள் 
சதுரங்கக்காய்கள் நகர்கின்றன... 
முரண்களின் வனத்தில் 
மூங்கில் புதர் வளர்ப்பதுவும் 
வானத்தை வண்ணம் அடித்துவிட்டதாய் 
கற்பனை பூசுவதுமான 
பிரபஞ்சப் பெரும் கனவுகளுக்குள் 
ஒரு சிற்றெறும்பு எப்போதும் கடந்து போகிறது 
கேள்விக்குறிகளின் கீழிருக்கும் புள்ளிகள்தான் 
ஆச்சரியக்குறிகளின் கீழும் உட்கார்ந்திருக்கின்றன 
முட்டைதான் 
பிரபஞ்சத்தின் வடிவென்பதை யார் கணித்தார்கள்? 
கரு முட்டைக்குள்தான் எத்துணை ஜென்மங்கள் 
உள்ளீடுகளாக வாசம் செய்கின்றன! 
இங்கு நகர்தலென்பது நாமா? பிரபஞ்சமா? 
- குழப்பிக் கொள்ளாதீர்கள் - 
விடையே கிடைக்காத 
வினாக்களுக்கான தேடுதல் வேட்டையில்தான் 
விதிகளின் விளையாட்டும் இடம் மாறிக்கொள்கிறது 
குழந்தை அழும்போது 
பால் கொடுப்பவள் மட்டுமே தாயாகிறாள் 
பறவைகளுக்குள் இத்துணைத் தேடல்களில்லை 
மூங்கில்களால் 
வீடுகளைக் கட்டி புல்லாங்குழல் செய்யுங்கள்... 
இல்லையென்றால் நச்சரவங்கள் 
அங்குத்தானே குடியிருக்கத் தோன்றும். 

- மு.முகமது பாட்சா*
25/09/2018

புத்த பொம்மையொன்று

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

புத்த பொம்மையொன்று தானாக 
கண்திறந்து மூடுகிறது... 
பிரமையொன்றை பிடித்திழுத்து 
மேசையின் மீது உட்காரவைக்கிறேன் 
வனையாத வெள்ளைப்புறா 
ஒற்றை இறக்கையில் ஓடிவந்து விழுகிறது 
போதிமரம் விற்பனைக்கென்ற பலகை 
நீண்ட நாட்களாகத் தொங்குகின்றன... 
எழுதாத தாளில்தான் 
கவிதைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன 
தூரிகையெடுத்தவன் 
தரையைத் துடைப்பத்தால் சரி செய்கிறான் 
காட்சிகளை அமைத்துவிட்டுக் கண் உறங்குகிறேன் 
புத்த பொம்மையொன்று 
என்னை எழுப்பிக் கொண்டிருக்கிறது... 
நான் 
இறந்துவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். 

- மு.முகமது பாட்சா*
24 /09 /2018

Sunday, 23 September 2018

எழுதாத வார்த்தைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

எழுத்துகளை அடுக்கத் தெரியாமல் 
விழித்துக்கொண்டிருக்கிறது ஒரு கனவு 
பிழை வார்த்தைகளுக்குள் தலை 
அவ்வப்போது சிக்கிக் கொள்கிறது 
கூர்மையான வார்த்தைகளுக்கு 
கைப்பிடி மிகவும் அவசியம்... 
பற்றியெரியும் எழுத்துகளை எப்படி 
நீரிலான வார்த்தைகளில் சொருக முடியும்? 
குளிர்ந்த எழுத்துகளை 
அக்னிவார்த்தைகளுக்குள் அடக்கவும் முடியாது 
வைக்கக் கூடாத இடத்தில் வைத்த வார்த்தைகள் 
வசவுச் சொற்களில் நேசம் பூசிக் கொள்கிறது 
எழுதாத வார்த்தைகள் 
இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன என்று 
சில எழுத்துகளென்னை 
தினமும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.. 
தேன் கூட்டிலிருக்கும் வார்த்தைகளை எடுப்பது 
அத்துணைச் சுலபமில்லை 
காகத்தோடு இரையெடுத்த வார்த்தைகளை 
தண்ணீரில் கொட்டி சேகரிக்கிறேன் 
கனவு மட்டும் தூங்காமல் 
இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
24/09/2018 

Friday, 21 September 2018

சாதி

ரங்கோலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

புள்ளிகளைப் போட்டுச் சிறை வைக்கிறாய் 
அழகான கோலம் மிளிர்கிறது 
உன் புன்னகையை 
எத்துணை வரிகளில் எழுதுவது? 
விழிகளுக்குள் 
விழுந்து குளிக்க முயற்சிக்கிறேன்... 
நீயோ இமைகளை மூடி வெளியேற்றுகிறாய்! 
சிறகுகளைக் கட்டிக் கொண்ட எழுத்துகள் 
வார்த்தைகளைத் தேடுவதற்கு 
வனவாசம் போகிறது... 
கோலத்தைக் கையோடு கொண்டு செல்கிறேன் 
நீ கொட்டி வைத்த நாணங்கள் 
அதிலல்லவா ஒட்டிக் கொண்டிருக்கிறது... 
இரவுகளைப் பிடுங்கிக் கொண்ட ராட்சசியே... 
என் பகலுக்கான வெளிச்சத்தை - நீ 
எப்போது காட்டப் போகிறாய்? 
பிழை 
திருத்திக் கொண்டிருக்கின்றன எழுத்துகள் 
உன் புள்ளிகளிலிருந்து வார்த்தைகளை 
விடுவிப்பதற்காக! 

- மு.முகமது பாட்சா*
21 / 09 /2018 

painting  : ELIZABET CHAPMAN

Wednesday, 19 September 2018

அப்பத்தாவின் நாற்காலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

அப்பத்தாவின் 
- நாற்காலி வலுவிழந்து கிடக்கிறது... 
இனியதில் 
ஆணி அடிப்பதற்கே இடமில்லையென்று 
ஆசாரி சொல்லிவிட்டான்... 
இடம் பற்றாக்குறை 
வீட்டிற்குள் நுழைந்துவிட்டதாக 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள் 
எரித்துவிடலாமென்றால் 
விறகடுப்பிற்கே வேலையில்லாமல் போனது 
விலைக்கும் போகாத நாற்காலி 
யாருக்கும் தெரியாமல் 
குப்பைத் தொட்டிக்கு நகர்ந்து போனது... 
ஆக்சிஜன் நுழைந்துவிட்டதாக 
அசந்துறங்கும் அவர்கள் 
படுத்துறங்கி குறட்டை விடுவது மட்டும் 
அப்பத்தாவின் பத்திரத்தின் மேல்தான். 

- மு.முகமது பாட்சா* 
20 /09 /2018 

Tuesday, 18 September 2018

காதல் பொய்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

மயிரு என்கிற முடி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

முடியைப் பிடுங்கி ஊதுகிறான் 
வாயின் நரகலோடு நால்வீதி வலம் வருகிறது 
ஊதியவன் மீது குற்றமில்லையாம் 
பறந்த முடிக்கு 
சிறகுகளிருந்தால் வெட்டச் சொல்கிறார்கள் 
ஏழையொருவன் கேள்வி கேட்கிறான் 
பதிலில்லாத கேள்வியைக் கேட்டதற்காக 
அவனை அடித்து உதைக்கிறார்கள் 
சற்றே நிறம் மாறும் ஓணான் 
செடி தன் நிறத்தைத் திருடிக் கொண்டதாக 
பிராது சொல்கிறது... 
சிறைச்சாலைகள் சொகுசாகிப் போனதால் 
தேசம் சிறைச்சாலையாக மாறிக் கொள்கிறது 
நதிகளின் மௌனத்தை 
இறந்துவிட்டதாக மொழி பெயர்க்கிறார்கள் 
வெப்பக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது... 
அது 
வயிற்றிலிருந்து புறப்பட்டதாகவும் இருக்கலாம் 
பற்றியெரியும் போதுதான் அதற்கும் 
பதில் கிடைக்கும். 

- மு.முகமது பாட்சா* 
18 /09 /2018 

Monday, 17 September 2018

பந்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்


விலையில்லாத அரிசியில் 
கற்களைப் பொறுக்கி 
காகத்திற்கு இறைக்கிறாள் மூதாட்டி 
புழுக்கள் அவளிடம் பேசிக் கொண்டிருந்தன 
அவளிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான் 
எந்த ஓட்டலில் சாப்பிடலாம் என்பது 
செல்பேசிக்குள் ஓடிக் கொண்டிருந்தது 
சிட்டி மாலுக்குள் அவர்கள் நுழையும் போது.... 
அவள் ஏற்றி வைத்த ஊதுபத்தியில் 
மணமில்லை 
அநாதியாக்கி விட்டக் கிழவன் 
மவனுக்குத்தானே 
அத்தினையையும் விற்றுச் செத்தான்.... 
மணியார்டருக்காக அவள் காத்துக் கிடக்கிறாள் 
அதுகூட அவர்களின் 
ஞாயிற்றுக்கிழமையை விடக் குறைவு.... 
மறக்காமல் வந்துவிட்டது காகம் 
அதற்கும் அவள் அந்தச் சோற்றை வைத்தாள்... 
சர்வரின் பாக்கெட்டில் டிப்ஸ் 50 ரூபாய்! 

- மு.முகமது பாட்சா*
17 /09/2018

பூதம்

தானியங்கு மாற்று உரை இல்லை.


குடுவைக்குள்ளிருக்கும் பூதம் 
எப்போது வெளிவருமென்று தெரியவில்லை 
இரண்டு யெவனியர்கள் காவல் காக்கிறார்கள்... 
சித்திரம் தீட்டியவன் 
சிலுவையில் அறையப்பட்டிருந்தான்.... 
குயவனின் தலை 
ஜாடியின் மூடியாக அழுத்தப்பட்டிருந்தது... 
பார்வையாளர்கள் 
தொலைந்து கொண்டேயிருந்தார்கள்... 
புகை வரும்போதெல்லாம் 
பூதம் ஏமாற்றிக் கொண்டேயிருந்தது... 


அலாவூதீனின் விளக்கில் 
பூதம் வெளிவந்து ஆச்சரியம் கூட்டியது 
ஆலம்பனாவாக மாறிப்போனவன் 
அழகிகளை மட்டுமே தேடிக் கொண்டிருந்தான் 
லைலா மட்டும் 
சிந்துபாத்திடம் பதுங்கிக் கொண்டாள்... 


அலிபாபா தேடிவந்த குகை 
காலியாகவே இருந்தது 
காசீம்கானை மட்டும் காணவில்லை 
40 திருடர்களும் 
கழுதைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் 


ஷஹரஜாத் கதை சொல்லி முடிக்கும் போது 
சுல்தான் 
ஷாகிரயரின் தலை கீழே உருண்டு கிடந்தது 


மக்களுக்கான திட்டங்களை 
மேடையில் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தபோது 
சிறையின் கதவுடைத்த செவ்வெரும்புகள் 
ஊர்வலம் வந்து கொண்டிருந்தன. 

- மு.முகமது பாட்சா*
17/09/2018

Sunday, 16 September 2018

கேள்விகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.
சூழ்பெருவெளி நிசப்தம் 
காற்றின் வண்ணம்கூடி தழைக்கும் மழை 
ஒற்றைச் சருகாய் பறக்கும் மனம் 
யாருக்கலையும் இந்தப் பறவை? 

பேய் நிகர்த்தொரு பெருமாசை 
நித்திலச் சுகம் உழலும் நீள்பாதை 
சத்திரம் தங்க வந்தவனுக்கா 
தங்கத்தினால் மோதிரம்? 

கட்டறுத்துப் போகும் கடைமடையாறு 
நதியே தானென்ற பேராசை 
கடல் கொள்ளும் அத்துணை நீரும் 
வாய்க்கால் தூர்ந்து வரப்பாகுமா? 

கொட்டிவிட்ட வார்த்தைகள் 
குவியலாய் காலின் கீழ் 
குனிந்துதான் பார்க்கிறேன் குற்றமாய் 
நானெங்கே போனேன்?

- மு.முகமது பாட்சா*
16 /09 /2018

Wednesday, 12 September 2018

ஸ்மைலி பந்துகள்


ஏதாவதோர் இடத்தில் 
எதற்காகவோ எல்லோரும் கூடுகிறோம். 
ஸ்மைலி பந்துகளால் மெல்ல அடித்து 
விளையாடி மகிழ்கிறோம். 
அங்கும் சில பன்றிகள் இருக்கலாம் 
ஆங்கிரி பேர்டுகளும் இருக்கலாம்... 
கை குலுக்கும் போது 
சில கைகள் உஷ்ணமாகி எரிகிறது 
சில கைகள் பன்னீர் மழைத் தூவுகிறது... 
எனக்குப் பிடித்த நாடோடிப் பாடகன் பாடுகிறான் 
உலகம் சுருங்கிவிட்டதென்று... 
நாங்களும் காகமாகத்தான் இரையெடுக்கிறோம் 
பசியென்பது பொதுதானே? 
விடை பெறும் போது 
விழா முடிவடைந்து விடுகிறது... 
வீட்டிற்குச் சென்றவன் ஸ்மைலி பந்துகளை 
அடுக்கிக் கொண்டிருக்கிறேன் 
எங்கிருந்தோ வரும் அந்த நறுமணம் 
நிச்சயம் 
நான் விலை கொடுத்து வாங்கியதில்லை. 

- மு.முகமது பாட்சா* 
13 /09 /2018

Friday, 7 September 2018

தொலைத்தது



விடைத் தெரியாத மர்மங்கள் 
என் முன்னே விரிந்து கிடக்கின்றன 
என் நரம்புகளின் சுற்றுகளில் 
நான் 
சிக்கிக் கிடப்பது யாருக்குத் தெரியும்? 
தோலைப் போர்த்திய 
உடம்பிற்குப் போர்வைக் கேட்கிறேன் 
நிஜமென்பது நிர்வாணம் 
ஒப்பனைகளுக்குள் 
நானெப்படி உண்மையானவன்? 
ஆதி குடிலுக்குள்ளிருந்தவன் 
எப்போதோ இறந்துவிட்டான் 
நாற்புரம் 
சுவரெழுப்பிக் கொண்டது என் நாகரீகம் 
இச்சைகளுக்குள் 
நான் ஒடுங்கிக் கொள்கிறேன்... 
பறவைகள் மட்டுமே நிறம் மாறாமல்... 
இது வெறும் கவிதை மட்டும்தான் 
மீட்க முடியாதது 
நான் தொலைத்த நிர்வாணம்.

- மு.முகமது பாட்சா*
07 /09 /2018 

Thursday, 6 September 2018

சிறைச்சாலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

உவளகத்தில் 
பதுமைகள் கொட்டிக் கிடக்கிறார்கள் 
மனம் 
நகரத்தில் உலா சென்று கொண்டிருக்கிறது 
கூண்டுக்குள் வாழும் கிளிகளுக்கு 
பேசுவது மட்டுமே பொழுதுபோக்கு... 
குற்றமென்பது எப்போதுமே 
சிறைகளுக்குள் மட்டுமே இருப்பதில்லை 
ஞானம் தேடுபவனின் கால்களில் 
சுதந்திரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது 
சிறைச்சாலை 
சிந்திப்பவர்களின் கூடாரம்... 
தேசமே அரசியலின் சிறைக்கோட்டம் 
நிகழென்பது 
கம்பிகளுக்குள் வாழ்கிறது... 
வருங்காலத்தின் வாசல் 
பெரும் முழக்கங்களால் நிறைந்திருக்கிறது... 
ஆடும் வரைதான் ஆட்டம் 
ஆடியடங்கிப் போவதும் கூட ஒரு சிறைதான். 

- மு.முகமது பாட்சா* 
07 /09 /2018

Wednesday, 5 September 2018

குளிக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நான் 
நீதானா என்பது தெரியாது 
உன்னை நானாகத்தான் பார்க்கிறேன். 

என் நிழல் 
உன் பின்னால்தான் வருகிறது... 
உன் நிழல் 
உனக்கு முன்னால் அல்லவா செல்கிறது. 

நான் 
உன்னையே சுற்றி வருகிறேன் 
உன் வாசம் 
என்னையல்லவா சுற்றி வருகிறது 

இங்கு மட்டும் 
ஏன் இத்துணைக் குளிர் மழை? 
உன் பெயரை 
உச்சரித்துக் கொண்டேயிருக்கிறேன் 

என் உச்சரிப்பின் பிழைகளை 
உதாசினப் படுத்திவிடு 
காதலில் பூத்த கள்ளிப்பால் அது 

பிழைகளை 
நான் அருந்திக் கொள்கிறேன் 
உன் கடைக்கண் பார்வை
கட்டறுந்துக் கிடைக்குமென்றால் 

கட்டறுந்துதான் திரிகிறது மனசு 
கட்டிப்போட யார் வருவார்? 

கண்ணி வைத்து 
பேசுகிறேன் என நினைக்காதே... 
உன் கசலுக்குள் 
நான் குளித்துக் கொண்டிருக்கிறேன்

- மு.முகமது பாட்சா*
06 /09 /2018

எதிரெதிர் வினைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர், இயற்கை மற்றும் வெளிப்புறம்


நியாயங்களைக் கொன்று
ஆளுமையாகும் 
சில எதிர்-எதிர் வினைகள்!
புத்தரின் கைகளில் காட்சியாகும்
கொலை ஆயுதங்கள்!
பிழைகளை, 
நியாயங்களாய் மாற்றிக் காட்டும்
இரசவாதக் கண்ணாடிகள்!
மதங்களில் ஊடுருவி
நெளிந்து வெளியேறும்
நாற்றப்புழுக்கள்!
காயங்களை, கிளறி, நோண்டி
கற்பூரம் கொளுத்தி வைக்கும்
காட்சிப்பிழைகள்!
அரசியல் புணர்வில் வழியும்
வியர்வைத் துளிகள்!
விளம்பரம் தேடியோடும்
நரகல் கூளங்கள்!
எதிர் வினைகளைச் சாகடிக்கும்
எதிரெதிர் வினைகள்!

- மு.முகமதுபாட்சா*
05/09/2015

இறகு மனம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

உதிர்ந்த இறகோடு 
புத்தன் பேசிக் கொண்டிருந்தான்... 
சருகுகள் 
அவன் காலடியில் கொட்டிக்கிடந்தன 
அவனுக்குத்தெரியும் 
அமைதியென்பது நிச்சயம் 
சில சப்தங்களோடு கூடியதுதான்... 
ஆயனின் புல்லாங்குழல் இசைக்கிறது 
தனிமையை விரட்டுகிறது இசை 
சன்னலைத் திறந்து வைக்கிறேன் 
புழுக்கம் வெளியேறுகிறது... 
எழுத்துகளை முகர்ந்துவிட்டு 
தேநீர் அருந்துகிறேன்.... 
கவிதையில்லாமல் உறங்கவேண்டும் 
என் தனிமையென்பது 
நீ என்னோடு இருப்பது மட்டுமே. 

- மு.முகமது பாட்சா* 
05 /09 /2018 

Tuesday, 4 September 2018

திருமுழுக்கு வார்த்தைகள்



திருமுழுக்கு வார்த்தைகள் 
இன்னமும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது 
அண்ணாந்து புகைவிடும் போக்கியை 
பீடியை ஊதிக் கொண்டே பார்த்தோம்... 
கேன்சரில் இறந்தவர்களை 
விதிப்பயன் என்ற திருமுழுக்கு வார்த்தையால் 
குளிப்பாட்டினோம் 
கூரைவீடுகள் கேவலம் என்ற 
பொதுப்புத்தியின் வார்த்தைகளுக்குள் 
நுழைந்து கொண்டோம்... 
தரமான சிமென்ட், உறுதியான கம்பிகள் 
என்ற ஸ்லோகன்கள் 
எங்களின் உறுதிப்பாட்டினை அசைக்க 
கால்வாய்களை மடக்கி 
கான்கிரீட்டுகளால் சுவரெழுப்பிக் கொண்டோம்... 
உறவுகளின் சப்தங்கள் கேட்கவில்லை... 
திரைப்படம் வீட்டிற்குள் நுழைந்தது 
ஆலமரங்களை வெட்டி எடுத்துச் சென்றார்கள் 
ஆடுபுலியாட்டம், தாயம் அனாதையாயிற்று 
நதிகள் கொள்ளை போனது தெரியாது 
ஏனென்றால்  நாங்கள் 
வீதிகளைப் பார்த்து வியந்தவர்கள்... 
நிலங்களைப் பிடுங்கியபோதுதான் 
கிராமத்தையே தொலைத்தது புரிந்தது... 
வளர்கிறது இந்தியா என்ற திருமுழுக்கு... 
சற்றுப் போதையானதுதான்... 
நகரத்தின் சுவர்கள் 
எங்களைக் காறித்துப்பி வெளியேற்றுகின்றன... 
நாடோடிகளின் 
நடைபாதையாகிப்போன இந்தியாவில் 
இப்போதுதான் நாங்கள் குரலெழுப்புகிறோம்... 
தீவிரவாதிகளென்ற முத்திரையை 
துப்பாக்கி முனைகள் குத்திக் கொண்டிருக்கின்றன. 
இப்போது நாங்கள் என்ன கோஷமிடுவது... 
வாழ்க என்றா? அல்லது ஒழிக என்றா? 

- மு.முகமது பாட்சா*
04 /09 /2018

Monday, 3 September 2018

பாசிச மமதை ஒழிக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

வாயை மூடிக் கொண்டு 
கோஷமிட முயற்சிக்கிறேன்... 
என் முன் 
சில்லறைக் காசுகளை வீசிவிட்டுப் போகிறான் 
பரிதாபனென்று... 
விமானத்திலேறியவுடன் 
வாயில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது 
'அவசரத்திற்கு மட்டும் அழைக்கவும்'
மமதை என்னெதிரில் 
காலாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது... 
நான் வாயைப் பொத்திக் கொண்டு 
சன்னல்வழியே குதிக்கிறேன்... 
வலைவீசிய காவற்படை 
துப்பாக்கியோடு குதித்ததாக 
முதல் 
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கிறது... 
இப்போதாவது கோஷமிட்டுக் கொள்கிறேன் 
பாசிச மமதை ஒழிக! 
சற்றே திரும்பிபார்க்கும் அந்தக்காகம் 
இனி எல்லாவிடத்திலும் எச்சமிடும். 

- மு.முகமது பாட்சா* 
04 /09 /2018 

திரைக்கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், வெளிப்புறம்

எக்ஸ்'தான் 
அந்தக் கொலையைச் செய்கிறான் 
பழி ஒய்' மீது விழுகிறது... 
அப்படியென்றால் ஒய்'தான் ஏ'வின் காதலனா? 
நிச்சயமாகயில்லை 
வழக்கமாக அப்படிதான் சிந்திப்பார்கள் 
ஏ'வைக் காதலித்தவன் 
இஸட்' என்ற குருட்டுப் பாடகன்! 
அவனை ஏ' அடிக்கடி கடந்து போகிறாள் 
அடையாளம் தெரியவில்லை என்பது ஆச்சரியமில்லை 
அவன் முகம் சிதைந்திருக்கிறது! 
யார் சிதைத்தது? எக்ஸா? 
ஏன் ஒய்'யாகக் கூட இருக்கலாம்.... 
அப்படியென்றால் ஒய்'தான் 
ஏ'வை ஒருதலையாகக் காதலித்தவன்...சரிதானே 
ஒய்;க்கு ஏ'வையே தெரியாது.... 
ஆமாம் இறந்து போனவன் யார்? 
அவன்தான் ஏ'வின் உண்மையான கணவன்! 

சூப்பர் மச்சான் 
ஸ்கிரின் பிளே அட்டகாசம்... 
மிச்சகதையை நாளை யோசிப்போம் என்ற ஹரி 
பிரிட்ஜை திறந்த போது 
அதில் ஒருவன் அடக்கமாக இறந்து கிடந்தான்... 
ஹரிக்கு அப்போது தெரியாது 
அவன்தான் அந்த ஒய்'யென்று! 

- மு.முகமது பாட்சா* 
03 /09 /2018 

Sunday, 2 September 2018

எல்லாம் நாடகம்

 à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், மேடையில் உள்ளார், அமர்ந்துள்ளார், வாழும் அறை, காலணிகள், குழந்தை மற்றும் உட்புறம்
  
நாடகம் 
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள் 
நான் இன்னமும் 
அந்த இருக்கையில்தான் உட்கார்ந்திருக்கிறேன் 
அதிலுள்ள ஒரு வசனம் 
என்னைக் கடந்த காலத்திற்குக் கடத்திப் போக 
காட்சி மாறுகிறது 
அவளாக நீயிருக்கிறாய் 
அங்கேயும் 
என்னை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்... 
நாயகன் எடுத்த முடிவில் உடன் பாடில்லை 
அரங்கத்தின் வெளியே நல்ல மழை 
காபியோடு கவிதையைக் கேட்கிறாய்... 
இரண்டும் சூடாக இருந்ததால் 
நீ கொடுத்த 
மூன்றாம் சூட்டைப் பாதுகாத்துக் கொள்கிறேன் 
ஆனால், நீயேன் அப்படி நடந்து கொண்டாய்? 
மழை நின்றிருந்தது... 
என்ன சிந்தனை? 
என்று மனைவி அழைத்தபோதுதான் கவனித்தேன் 
அவர்களெல்லாம் சென்று விட்டார்கள்... 
ஆமாம் 
நாடகத்தின் கதைதான் என்ன? 

- மு.முகமது பாட்சா* 
03 /09 /2018  

Saturday, 1 September 2018

அந்தக் கேள்வி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர்

என்னிடம்
அவர்கள் அந்தக் கேள்வியை 
கேட்டிருக்கவேண்டாமென்றே நினைக்கிறேன்... 
அது தன் பரப்பை விரிவாக்கி 
ஒரு முற்றுப் புள்ளிக்குள் நிறுத்திவைத்து 
பல கேள்விகளை என் முன் இறைக்கிறது... 
என்னாடைகள் தளர்ந்து போகின்றன... 
என் வியர்வையில் 
நானே நீந்திக் கொண்டிருக்கிறேன் 
கரையேற ஒரு கட்டையாவது கிடைக்காதா 
என்பதும் கேள்வி குறிதான். 
என்னைச் சுற்றிலும் 
அது சுவரெழுப்பிச் சிறை வைக்கிறது ... 
அந்தக் கேள்வியே எனக்கானதுதானா என்பதும் 
இன்னமும் சந்தேகம்தான்.... 
அந்த வளைந்த கொக்கி 
எங்கும் நகரவிடாமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது 
நான் அடிக்கடி 
தடுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறேன்... 

- மு.முகமது பாட்சா* 
02 /09 /2018 

Popular Posts