Thursday, 29 August 2019

சிறையில் புதினம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தப் புதினம் இப்போது
விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருந்தது...
எழுதியவன்
தாடியைக் கோதிக் கொள்கிறான்...
வாசித்தவனுடன்
சிறைச்சாலைக் கம்பிகள் பேசிக் கொண்டிருந்தன...
அதிகாரிகள்
எழுத்துகளைப் பிரித்துவைத்து
குற்றங்களை
அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தார்கள்
ஆட்சிக்கு எதிரான சமர் குரல்கள்
நிறைந்திருக்கலாம் என்பது முதல் தகவலறிக்கை...
கலகம் பேசும் வரிகளைப் படிப்பது
தேசியக் குற்றமாகக் கருத வேண்டும் என்பது வாதம்..
நீதி தன் கண்ணாடியைக் கழற்றி
அழுக்குத் துணியால் துடைத்துக் கொண்டது...
பார்வை மங்கலாகத் தெரிவதைக்
கொஞ்சமும் காட்டிக் கொள்ளவில்லை...
வாசிப்பது குற்றமா? என வாசித்தவன் கேட்டான்
முட்டாள்களை உருவாக்கும் தேசத்தில்
புத்தகங்கள் வைத்திருப்பதும் குற்றம் எனத்
தீர்ப்பு எழுதப் பட்டபோது
அந்தப் புத்தகத்தின் சில வரிகள் எரிந்து கிடந்தன.

- மு.முகமது பாட்சா*
29/08/2019

அவாந்திரைக்குள் கரு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

மூளைக்குள்ளமர்ந்து 
இரவை வியாபித்துக் கொண்டிருக்கிறாய் ! 
அதனுள்ளிருக்கும் வெப்பம் தாங்காமல் 
சூரியன் நழுவியிருக்கலாம்... 
தவறான சங்கீதங்களை 
விரல்கள் மீட்டிக் கொண்டிருக்க.. 
பித்தனாக உலறிக் கொண்டிருக்கிறேன்... 
தேவதாருவென உன் தணல் எழுகிறது.. 
உருகி விழும் பிதற்றல்களைக் கோர்த்து 
மாலையாக அணிந்து கொள்கிறேன்... 
சிறகுகளை எரித்துவிட்டு 
முத்தப்பித்தங்களை மூளைக்குள் சொருகுகிறாய்.. 
விடிவதற்குள் 
விலகிக்கிடக்கும் ஆடைகளையும் எரித்துவிடு... 
நீ குளிர்ந்திருக்கும்போது 
என் மூளையுருக்கு இறுகி உறைந்திருக்க... 
அவாந்திரைக்குள் 
கருவாய் நான் உருண்டிருப்பேன்.. 
ஜென்ம விடியலுக்கு 
உன் உதிரத் தீட்டு இனி சாம்பல் பூக்கலாம்.

- மு.முகமது பாட்சா*
29/08/2019

Wednesday, 28 August 2019

7 வார்த்தைகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

7 வார்த்தைகளை எடுத்து வைத்துக் 
குலுக்கிப் போட்டு எடுத்தான்

தீ நாக்கு எரிகிறது 
கனவு கானல் வெளிச்சம் மழை

மீண்டும் குலுக்கி எடுத்தான்

கானல் நாக்கு மழை கனவு 
தீ வெளிச்சம் எரிகிறது...

கலைத்துப் போட்டு எடுத்தான்

கானல் தீ எரிகிறது 
மழை நாக்கு வெளிச்சம் கனவு

மற்றுமொரு முறை முயற்சித்தான்

எரிகிறது கனவு வெளிச்சம் மழை 
கானல் தீ நாக்கு

இறுதியாக 
இதுதான் வாழ்க்கை என்று கவிதையை 
முடித்துவைத்தான்.

- முகமது பாட்சா*
28/08/2019

பகடையாட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

பாண்டவர்களோடு 
கௌரவர்களும் பகடையில் 
உருண்டு கொண்டிருந்தார்கள்

சுபலனின் 
விரலைச் சுழற்றினான் சகுனி 
எண்ணிய எண்கள் விழுந்தன...

பாஞ்சாலியின் சிரிப்பு 
துச்சாதனின் கைகளில் சேலையாக 
உரிந்து கொண்டிருந்தது...

பங்காளிகள் சண்டை 
பற்றியெரிந்து கொண்டிருக்க 
எங்கோ கேட்கும் புல்லாங்குழலிசையை 
ஏகலைவன் 
இசைத்துக் கொண்டிருந்தான்

- மு.முகமது பாட்சா*
28/08/2019

எப்போதுமே நல்லாட்சிதான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ஐநக்ஸ் மாலில் 
அஞ்சப்பர் மீன் குழம்பு சாப்பாடு 
ஹிக்கிம் போதம்ஸில் 
காஃபியோடு சின்னதாக உறக்கம் 
சிக்னலின் அழுக்கு கைகளை உதறிவிட்டு 
முகம் சுளித்தல் 
பெட்ரோல் க்யூவின் ஆட்டோக்களைச் சபித்து 
அரைவட்டமடித்து 
அடுத்த நிலையம் நுழைதல்... 
இராத்திரிக்குக் காண்டத்தோடு 
பெடிகிரியும் பீட்ஸாவும் ஆர்டர்... 
விடிந்ததும் 
காலையில் கையில் ஹிந்து பேப்பர்... 
இவர்களுக்கெல்லாம் 
எப்போதுமே நல்லாட்சிதான் நடக்கிறது.

- மு.முகமது பாட்சா*
27/08/2019

மரங்களின் முறிவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

காற்றை அசைத்துவைத்து 
இலைகள் அசைகிறதா என்று கவனிக்கிறாய்..
நிழல்கள் அசையும் போது 
இல்லாத காற்றைத் 
தேடிக்கொண்டிருக்கிறது மனம். 
பிரபஞ்ச கூட்டல் கழித்தல் கணக்குகளில் 
விடைகள் விசித்திரமாக இருக்கின்றன... 
எழுதி நிரப்பிய பக்கங்களில் 
ஒரு நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது.. 
தொலைவிற்கு அருகில் அமர்ந்துகொண்டுதான் 
ஒப்பனைகள் தளிர் பாட்டுகள் பாடுகின்றன. 
வரைந்த சிறகுகளில் கனவுகள் ஒட்டிக்கொள்ள 
வானம் வசமிழந்து நழுவும் வேளையில் 
பிரபஞ்ச மூச்சுக்காற்றைச் 
சூறாவளியென ஒப்புவித்துக் கொண்டிருக்கிறாய்.. 
வனம் பற்றியெரியும் போது.. 
மரங்களின் முறிவை 
சங்கீதமாக ரசித்துக் கேட்கலாம்.. 
அதில் கருகிக் கிடப்பது
நம் அனைவரின் மூச்சுக்காற்றும்

- மு.முகமது பாட்சா*
25/08/2019

Wednesday, 21 August 2019

சுவரென்பது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சுவரேறிக் குதிப்பதைப் பற்றி 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்... 
சுவரென்பதே 
ஏறி குதிப்பதற்குத்தான் என்று 
திருடன் சொல்கிறான்... 
இனி வீடுகளில் 
சுவர்கள் இருக்கக் கூடாது என்று 
அரசாங்கம் சட்டம் இயற்றலாம்... 
சுவரென்பது 
சிறைச்சாலைகளுக்கு மட்டும் சொந்தம்.. 
சுவரில்லாமல் வீடு கட்ட 
அரசின் கைகளில் திட்டம் இருக்கலாம்... 
சுவருக்கான வரிகளைப் போட்டால் 
கட்டாமல் இருந்து விடுவார்கள்... 
எதிர்ப்புகள் இருந்தால் 
அதிகாரிகளுக்குச் 
சுவரேறிக் குதிப்பதற்கென்று 
பயிற்சி மையங்கள் தொடங்கலாம்.. 

- மு.முகமது பாட்சா*
22/08/2019

வார்த்தைகள் சீட்டாட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உட்புறம்

இதனை 
அறை என்று சொல்வதைவிடச் 
சிறையென்று சொன்னால் சரியாக இருக்கலாம்... 
முகங்களில்லாமல் 
உரையாடிக் கொண்டிருக்கிறோம்... 
எழுத்துகளைக் 
கலைத்துப்போட்டு அடுக்குவதுபோல் 
வார்த்தைகளைச் சீட்டாடுகிறோம்... 
ரம்மி சேராதது போல் 
பேச்சுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன... 
பசியின் நேரம் நெருங்கியதால் 
காரம் தூக்கலாகி 
வார்த்தைகள் எரிச்சலடைந்தது... 
எந்தவொரு வார்த்தையும் 
எங்களின் தாகத்தைத் தணிக்கவேயில்லை... 
கோபமான வார்த்தைகள் 
சூழ்ந்து கொண்ட அறையில்... 
துப்பாக்கிகள் செய்வதைத் தவிர 
வேறு வழி தெரியவில்லை... 
சற்று முன் தான் ஒருவரையொருவர் 
சுட்டுக்கொண்டு இறந்தோம்... 
எங்களைத் தேடிக்கொண்டிருப்பதாகச் 
செய்திகளை நீங்கள் கேட்டால் 
அவை பொய்யான செய்திகள் மட்டுமே.

- மு.முகமது பாட்சா*
19/08/2019

தூங்கிய தூரிகைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

போதி மரத்து வேர்கள் 
அங்கேயே உறைந்து கிடப்பதில்லை 
நீரைத்தேடிப் 
பயணித்துக் கொண்டேயிருக்கிறது...

இரைதேடிச் சென்ற பறவைகள் 
கூடடையும் வேளையில் 
பசியோடு வந்து உறங்குவதில்லை...

அழுகின்ற குழந்தைக்கு 
அம்மாவின் மடியில் பால் சுரக்கிறது...

மூலவர் 
கருவறையை விட்டு வருவதில்லை 
பக்தன் 
அலைந்து கொண்டேயிருக்கிறான்...

விளக்கை ஏற்றாமல் 
வெளிச்சங்கள் ஊடுருவுவதில்லை..

தடம் மாறும் 
விரல்களில் வழியும் இசை அபஸ்வரம்..

தூங்கிய தூரிகைகளைச் 
சபித்துக் கொண்டேயிருக்கின்றன 
வரையாத ஓவியங்கள்...

காதலென்பதும் இடம் மாறினால்தான் 
கண் திறக்கும்..

நம்பிக்கையை அணிந்தவன் 
இங்கு அழகனாகிறான்...

புத்தியைச் சொல்வதால் 
இந்தக் கவிதைக்குப் 
புத்தன் என்று பெயர் வைத்துவிடாதீர்கள்

சித்தன் என்றும் அழையுங்கள் 
காடுகளில் இவன் 
நன்றாக அலைந்து திரியட்டும்.

- மு.முகமது பாட்சா*
20/08/2019

ஒரு கவிதையின் பின்னால்



ஒரு கவிதையின் பின்னால் 
என்னவெல்லாம் இருக்கக் கூடும்... 
ஒழுகிய சிலதுளி மை 
ஒரு தூவல் 
வெள்ளையாக இருந்த தாள் 
கொஞ்சம் சிந்தனை 
இத்துடன் சிலதுளி நேரங்கள்... 
அல்லது 
கொஞ்சம் மின்சாரம் 
கொஞ்சமாய் விரல்களின் ஸ்பரிசம் 
விசைப்பலகைக் கணினி 
கொஞ்சம் சிந்தனை 
இத்துடன் சிலதுளி நேரங்கள்... 
அல்லது 
கொஞ்சம் வெட்டிப் பொழுது 
வாசிக்க இயலா அலுப்பு 
கொஞ்சமாய் வார்த்தைகள் திருட்டு 
இத்துடன் சிலதுளி நேரங்கள்... 
அல்லது... 
நானென்ற கர்வம் 
குளிர்ச்சியாக மது
கொஞ்சமாய்ப் புகழ் போதையில் மயக்கம் 
இத்துடன் சிலதுளி நேரங்கள்.

- மு.முகமது பாட்சா*
20/08/2019

முக்கியமில்லாத செய்தி

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தொலைக்காட்சி விரித்த செய்தியில் 
ஒருவன் இறந்து கிடந்தான்... 
அவனைச் சுற்றிலும் 
காமிராக் கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தன... 
ஒருவன் எழுதிய குறிப்பில் 
தற்கொலை தானாகச் சேர்ந்து கொண்டது... 
மற்றவன் குறிப்பில் 
விபத்து வந்து மோதியது... 
அடித்துவிட்டுப் போன வண்டிக்கு 
எண்கள் இல்லை என்று பேசிக் கொண்டார்கள்... 
இறந்தவன் 
தீவிரவாதியாக இருக்க வாய்ப்புண்டு... 
என்று ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார்.. 
இவன் போராளி என்று 
பொதுஜனத்தில் ஒருவன் கிசுகிசுத்தான்.. 
முக்கியச் செய்தியில் 
இறந்தவன் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு 
என்று ஓடிக் கொண்டிருக்க... 
தடையங்களை நாய்கள் 
நாக்கால் நக்கி அழித்துக் கொண்டிருந்தன... 

- மு.முகமது பாட்சா*
21/08/2019

Sunday, 18 August 2019

என்னதான் பேசினோம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது 
சற்றென்று கடந்து போகிறாய்.. 
உனது பக்கங்களை 
அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்... 
அவை தீராத பக்கங்கள்... 
எனது தேநீர் 
நீயருந்திய மிச்சமாக இருக்கிறது... 
என் சுதந்திரத்தை 
உன் கையில் வைத்து 
இசைத்துக் கொண்டிருக்கிறாய்... 
என்னைத் தேடி உன்னைத் தேடுகிறேன்... 
அவர்கள் சென்றபிறகும் 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்... 
என்னதான் பேசினோம் என்று... 
நீயோ சற்றென்று கடந்து போகிறாய். 

- மு. முகமது பாட்சா*
18/08/2019

Saturday, 17 August 2019

சுமைதாங்கி

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தச் சுமைதாங்கிக் கல்லை 
அகற்றிக் கொண்டிருந்தார்கள்... 
சாலை விரிவாக்கம் என அதிகாரி சொன்னான் 
தூரத்திலமர்ந்து 
நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள்.. 
ஒரு நாய் ஏக்கத்துடன் 
கல்லைப் பார்த்துவிட்டு நகர்ந்தது.. 
பக்கிரி எப்போதும் 
அதன் மீதுதான் 
மூட்டையை வைத்துவிட்டு உறங்குவார்... 
பள்ளி நாட்களில் 
நாங்களும் ஓடித் தாண்டி மகிழ்வோம்... 
பொக்லைன் 
சிரமப்பட்டுத் தூக்கி எறிந்த போது... 
அதன் அடி மனையில் 
ஈர ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தது... 
அறுந்த தொப்புள் கொடியுடன் பெருமாயி 
அழுது அலைந்து கொண்டிருப்பதாக 
ஊரில் பேசிக் கொள்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
18/08/2019

வெவ்வேறு காட்சிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் 
அவர்கள் 
கைகளை உயர்த்தி முழக்கம் செய்கிறார்கள் 
பெல்லட் குண்டுகள் சிதறி விழுகின்றன 
துப்பாக்கி வீரனின் 
மகள் எழுதிய கடிதம் கண்ணீர் வடிக்க... 
விழுந்து கிடந்த போராட்டத்தை 
மடியில் வைத்து அழுகிறான்... 
காளி வாசலின் தூளியில் 
தொப்பியொன்று இரத்தம் தோய்ந்து கிடக்கிறது... 
நாய்களெதுவும் சாகவில்லை... 
ஐக்கிய நாடுகள் விவாதிக்கின்றன... 
அழுக்குப் படியாத சட்டைகளுடன் தலைவர்கள்... 
இரத்தப் பொரியல் 
சுவையாக இருந்ததாகச் சொன்னவன் 
செத்தொழியட்டும் பீடைகள் என்றான் 
பல் குச்சி அவன் ஈறுகளைக் காயப்படுத்தியதில் 
சீழ் வடிந்து கொண்டிருந்தது... 
பர்ஜானாவிற்கு 
ஆறுதல் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா... 
தூரத்தில் துப்பாக்கிகளின் ஓசை 
பிரதமர் கொடியேற்றி உரையாற்றுகிறார்... 
எல்லாம் வெவ்வேறு காட்சிகள்தான் 
ஒன்று படுத்திவிடாதீர்கள் 
இஃது ஒருங்கிணைந்த இந்தியா... 
குப்பை வண்டி நகர்ந்து செல்கிறது நாற்றம் சுமந்து

- மு.முகமது பாட்சா*
17/08/2019

மங்களம் பாடிவிடாதே

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

லயம் கோர்த்த விழியால் 
அலாரிப்புகள் நிகழ்த்துகிறாய் 
ஜதிஸ்வரம் நெஞ்சில் தாளமிடுகிறது... 
தொலைவிலிருந்து நுழையும் சப்தராகம் 
தாழ்வொலியிலிருந்து 
மீயொலிக்கு மாறுகின்றன 
தபேலாவின் 
ஜதிப்பு விரல்கள் பல்கிப்பெருக 
நிருத்தியத்தில் காதலைக் கடத்துகிறாய் 
முத்திரைகளில் 
முத்தங்கள் சுழன்று சூழ்கின்றன... 
வர்ணமிசைக்க 
இதழ்கள் துடிக்கும் அபி நயத்தில்... 
சிக்கிக் கொள்கிறது 
அனாதையாகத் திரியும் காதல்... 
மங்களம் பாடிவிடாதே மாயவளே... 
நாட்டியமாடும் காதலுக்கு 
நாதஸ்வரம் தனித்தே இசைக்கட்டும்.

- மு.முகமது பாட்சா*
17/08/2019

panting : Artist Anubama

Wednesday, 14 August 2019

பகலில் கிடைக்குமா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

கண்களைக் கட்டி கைகளில் கொடுத்தார்கள் 
இதுதான் சுதந்திரம் என்று 
மூவர்ணக் கொடிகளுக்குள் முழுமையாகப் புதைந்தோம் 
தேசிய கீதங்களுக்கு எழுந்து நின்றோம் 
அகிம்சையை ஆடையாகத் தைத்துக் கொண்டோம் 
காந்திக்குச் சிலைகள் வைத்தோம் 
போராட்டங்களைப் புதைத்து வைத்தோம் 
பரந்த தேசத்தில் பாடித்தான் திரிந்தோம்... 
காலம் - மெல்ல எங்களை விழுங்கிக் கொண்டிருந்தது 
வந்த பாதைகளை விலைக்கு விற்றோம் 
வராத கனவுகளை விலை கொடுத்து வாங்கினோம் 
சுதேசியத்தைத் தூக்கியெறிந்தோம்.. 
இயற்கையின் கனவுகள் இடிந்து விழுந்தன 
நகரங்கள் எங்களை விழுங்கிக் கொண்டன... 
உடைகளில்லா ஒரு நாளில் எழுந்து பார்த்தோம் 
எங்களைச் சுற்றிலும் விலங்குகள் சூழ்ந்திருந்தன 
வெளிச்சம் விலகி இருந்தது 
இனியாவது பகலில் வாங்கச் சுதந்திரம் கிடைக்குமா? 
போராட்டங்களைத் தோண்டியெடுக்கிறோம் 
காந்தியின் கைத்தடி சிரித்துக் கொண்டிருக்கிறது.

- மு. முகமது பாட்சா
15/08/2019

Friday, 9 August 2019

சுவனத்தின் வரையறை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சுவனத்தின் வரையறை 
இதுதானென்று யூகித்தவன் 
நான்கைந்து கள்ளிச்செடிகளை 
வீட்டிற்குள் நடவு செய்தான்... 
பசிக்கழுத குழந்தைகளை வெட்டி 
கள்ளிகளுக்கு எருவூட்டினான்... 
பன்றிகளுக்கெல்லாம் 
பஞ்சணையில் வைத்து பால் புகட்டினான்... 
நரிகளை 
நாய்களென்று பெயர் மாற்றம் செய்து 
காவலுக்கும் கட்டி வைத்தான்... 
கடவுளுக்கும் கேட்காத கதையொன்றை எழுதி 
காவியம் என்று தொங்கவிட்டான்... 
வாழ்க கோசம் வளமானபோது... 
அந்த வீட்டிற்கு 
இறைவன் இல்லம் என்று பெயரிட்டான்... 
ஒரு நாள் 
முற்றத்தில் அமர்ந்து கொண்டவன் 
நான்தான் கடவுள் என்றபோது... 
நகரம் மெல்ல அழுகிக் கொண்டிருந்தது 
நரகத்தின் துர் நாற்றம் தாங்காமல்.

- மு.முகமது பாட்சா*
10/08/2019

இருட்டு



அவன் என்னைப் பின் தொடர்ந்து வருகிறான்.... 
நான் நிற்கும் போது 
முகம் திருப்பி வேறெங்கோ பார்க்கிறான்.. 
அவனை இதுவரை பார்த்ததில்லை... 
அவன் பார்த்தவன் போல் சிரிக்கிறான்... 
பொறுமையிழந்து வாய்விட்டுக் கத்துகிறேன்... 
அவன் அழுது கொண்டிருக்கிறான்... 
நீ யாரென்று கேட்கிறேன்... 
வைத்த கண் விலகாமல் பார்த்தவன் 
கனவு என்று சொல்லிவிட்டுக் கட்டித் தழுவுகிறான் 
அவன் தேகம் உடைந்துருகுகிறது 
நான் விதிர்த்தெழுகிறேன் 
இருட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

- மு.முகமது பாட்சா*
09/08/2019

பேயாக விரட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நானாக நீயும் 
நீயாக நானென்றும் 
எத்தனை காலம்தான் தொடர்வது?

நான் பூனையாகவும் நீ கிளியாகவும் 
மாறி 
ஒருவரையொருவர் அலைக்கழிப்போம்...

என்னைக் கொத்தித் தின்னும் 
கழுகாக மாறும் போது 
எலியாக மாறி அவதாரமெடுக்கிறேன்..

நீ நதியாக இரு 
நான் மீனாக நீந்துகிறேன்...

நீ பேயாக விரட்டு 
பயந்தான்கொள்ளியாக ஓடுகிறேன்...

நீ மானாகச் சாயும்போது 
நான் புலியாக உன்மேல் இருப்பேன்...

எல்லாம் முடிந்ததும் 
நீ நீயாகவும் நான் நானாகவும் 
முத்தங்களைப் பறி மாறிக் கொள்ளலாம்.

- மு.முகமது பாட்சா*
09/08/2019

Thursday, 8 August 2019

அவளுக்கு அதேமுகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

மற்றவர்கள் போல் நானும் கடந்த போது 
அந்த ஓவியம் கண்சிமிட்டியது... 
அதன் விழிகளில் தெரிந்த விளக்கில் 
நான் தலைகீழ் பிம்பமாகத் தொங்குகிறேன்... 
அருகிலிருந்த இரண்டு ஓவியங்கள் 
என்னை முறைத்துக் கொண்டிருந்தன... 
பின்னாலிருந்த ஓவியம் 
இங்கிருந்து நகர்ந்துவிடு என்று எச்சரித்தது... 
நகர முயற்சிக்கிறேன்... 
அது தன் ஆடைகளை மெல்லக் களைய... 
வா என்று உதடுகள் அசைந்த போது 
அவள் உடையிலிருந்த பட்டாம் பூச்சியின் 
உயிரில் கலந்து சிறகுகளைப் படபடக்கிறேன்...... 
என்னருகில் நின்றவள் 
வா சீக்கிரம் 
கூடத்தை மூடப் போகிறார்களாம் என்றாள்... 
அருகிலிருந்தவளுக்கு அவளின் முகம்

-மு.முகமது பாட்சா*
08/08/2019

Wednesday, 7 August 2019

எச்சில் தொட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

அழகான ஒரு மீன் தொட்டி 
அதில் விடுதலைக்காக நீந்துகிறது 
வாஸ்து மீன்...

பஞ்சுப்பொதி சார்மணையில் 
உறங்குகிறது 
விலைக்கு வாங்கிய பொமேரியேன்...

வழுக்கிவிடாமலிருக்க 
காஷ்மீர கம்பளித் தரை விரிப்புகள் 
க்ரானைட் கற்கள் சுவாசிக்கத் திணறுகின்றன...

சுவர் சித்திரத்தில் 
சுந்தரியின் விலை பத்து லட்சம் 
பூசை மாடத்தில் பித்தளை விளக்கு...

இதற்குமேல் 
இந்தக் கவிதையில் என்ன இருக்கப்போகிறது?

தெருவிலிருக்கும் நாயொன்று 
எச்சில் தொட்டியைக் 
கிளறிக் கொண்டிருந்ததைத் தவிர...

- மு.முகமது பாட்சா*
08/08/2019

என் மௌனத்தை
உன் வார்த்தைகளால்
பேசிக் கொண்டிருக்கிறாய்...
என் வார்த்தைகள்
எங்கு சென்றிருக்கும்?

- முகமது பாட்சா*

நிழல்தான் என்று
ஒதுங்கி செல்கிறேன்
அதன் கைகள்
நீண்டு கொண்டேயிருக்கின்றன...
நான் நிற்பதா? நடப்பதா?


- முகமது பாட்சா

கலைஞர் முதலாமாண்டு நினைவஞ்சலி

வீரமாக வா!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்
போராட்டங்கள் உன் கூடப் பிறந்தவை 
போய்வா தலைவா என்று அனுப்பிவிட்டோம் 
நீ போனபிறகுதான் 
உண்மையிலிங்கு தவிக்கிறோம்... 
நீ கற்றுக் கொடுத்தவற்றைக் 
காப்பகத்தில் பத்திரமாக வைத்திருக்கிறோம் 
எடுப்பதற்குத்தான் 
இன்னமும் எங்களுக்கு நேரம் வரவில்லை... 
உன் முத்தமிழ் 
இன்னமும் எங்களுக்குள் மூழ்கி 
முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது... 
நாங்கள்தான் தொலைத்துவிடப் 
பாசிசத்தின் வாயில் 
கைவிட்டுத் துழாவிக் கொண்டிருக்கிறோம்... 
நீ சிறகுகளைக் கொடுத்தாய் 
நாங்கள் அதைப் 
பதுங்கிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறோம்... 
எதிர்த்து நிற்க கற்றுக் கொடுத்தாய்.. 
ஏளனத்தை ஏற்புடன் வாங்கிக் கொள்கிறோம்... 
எப்போதுதான் வரப்போகிறாய்? 
எங்களுக்குள் விளைந்து நிற்கும் வீரமாக நீ!

- மு. முகமது பாட்சா*
07/08/2019
கலைஞர் முதலாமாண்டு நினைவஞ்சலி

Tuesday, 6 August 2019

பொருமல்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு 
விளையாடச் சொல்கிறார்கள்... 
ஆசிட்தான் அழுக்கை எடுக்குமென்று 
கண்களில் ஊற்றிவிட்டு 
காட்சிகள் தெரிகிறதா? எனக் கேட்கிறார்கள்... 
சுதந்திரம் என்பது 
சுவாசிப்பதற்கான அனுமதி மட்டும்தான் என்பது 
அவர்களின் வாதம்... 
எழுதாதக் கதைகளை எழுதியவர்கள் 
இதுதான் இனி சரித்திரம் 
என்றபோது வியந்து போனோம்... 
வீடுகளை விட்டு வெளியேற்றி விட்டு 
வீடில்லாதவர்களுக்கு நாடில்லையென்றபோது 
அகதிகளின் முகாம் மூடப்பட்டிருந்தது... 
அழுகைகள் விலைபோவதில்லை... 
கேள்விகளின் கூடாரத்திலும் ஆயிரம் பொத்தல்கள் 
ஆகாயம் நிர்வாணமாக இருக்கிறது 
பொருமல்கள் 
பூமிக்குள் ஊடுருவி வேர்களைப் பரப்புகின்றன 
என்றாவது ஒரு நாள் 
அவை 
எங்களுக்காக வெடிக்காமலாப் போகும்?

- மு.முகமது பாட்சா*
06/08/2019

சமூக உயிரோட்டம்

உங்களுக்குத் தெரியுமா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தொப்பி மற்றும் குளோஸ் அப்

உங்களுக்குத் தெரியுமா? 
படுக்கையறைக்குள் 
பூனைகள் எப்போது நுழையுமெனத் தெரியாமல் 
கட்டி அணைப்பதைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும் வரையில் 
மடியில் நெருப்புக்கனல் தகிப்பதைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
பால் மடி மறக்காத மழலைகள் 
இரத்த மடிகளில் உறங்குவதைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
பெல்லட் குண்டுகளால் 
சிதைந்துபோன வாழ்க்கையைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் 
பூட்ஸ் கால்களின் சப்தங்களைப் பற்றி...

நீங்கள் நனைந்தாவது இருக்கிறீர்களா? 
துப்பாக்கி குண்டுகளின் 
இடைவிடாத மழை வெளிகளில்...

இருந்திருக்க முடியாது 
அப்படி நேரும்போது நீங்களும் கூடப் பேசுவீர்கள் 
உரிமைகளைப் பற்றி.

- முகமது பாட்சா*
05/08/2019



----------------
நீங்கள் 
துப்பாக்கிக் குண்டுகளை
நிரப்பிக் கொண்டிருந்த போது
நான் 
தக்காளி ரசம் வைப்பதைப் பற்றிப்
படித்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் எனக்குக் கொடுத்த செய்தி
இது மட்டும்தான்

- முகமது பாட்சா*

தவறி விழுந்த வார்த்தைகள்



சன்னலை இறுக மூடிவிட்டு 
அசையாமல் அமர்ந்து கொள்கிறேன்... 
வெளியில் இருப்பவர்கள் 
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 
வியர்வை என் முகத்தைத் துடைக்கிறது... 
சப்தங்களைப் பிடித்துக் 
கிளிக்கூண்டில் வைத்துப் பாதுகாக்கத் தொடங்கினேன் 
அது தொட்டி மீன்களிடம் 
இரகசியம் பேசிக் கொண்டிருந்தது... 
தவறிவிழுந்த வார்த்தைகளின் அலறல் 
கதவைத் திறந்து கொண்டு 
வெளியிலோட 
இரண்டு நாய்கள் துரத்திச் செல்கின்றன... 
என் மேசையில் இருந்த புத்தகம் 
என்னை வெறித்துப் பார்க்க 
ஒவ்வொரு பக்கமாகக் கிழிந்து கொண்டிருக்கிறேன் 
சன்னல் திறந்து கொள்ளக் 
காற்று என்னைக் கடத்திச் செல்கிறது.

- மு.முகமது பாட்சா*
04/08/2019

நட்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

உயிர்ப்புடன் ஒரு மண்கட்டி



அவர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள் 
அவரின் பெயர் இப்போது எக்ஸ் 
நூறைக் கடந்தவர் என்று சொல்லும் போது 
பெருமையாக இருந்தது... 
பார்த்துப் பார்த்துச் சலித்ததால் இருக்கலாம் 
யாரும் அழவேயில்லை... 
அவர் யாரென்று கேட்டேன்... 
அதோ நிற்பவனின் தாத்தா என்றார்கள் 
சிலர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் 
அவர்களிடம் சென்று 
அவர் யாரென்று கேட்டேன்... 
நண்பனின் கொள்ளு தாத்தா என்றார்கள் 
அடக்கம் செய்வதற்கான வேலைகள் 
நடந்து கொண்டிருந்தன... 
இவரது மகன் என்ன செய்கிறார் என்றேன்... 
அவர் இவருக்கு முன்னமே 
இறந்துவிட்டதாகச் சொல்லிச் சிரித்தார்கள்... 
கஃபன் விட்டு 
கலிமா ஷகாதத்தோடு தூக்கி நகர்ந்தார்கள்... 
ஒருவர் மட்டும் 
அழுதுகொண்டே கூட நடந்து வந்தார்... 
இவர் யாரென்று அவரிடம் கேட்டேன்... 
நான் வாழ்வதற்கு 
உதவி செய்த மகான் என்று சொல்லிவிட்டு அழுதார்... 
கபர் குழி 
எக்ஸை பெருமையாக ஏற்றுக் கொண்டது... 
அதில் விழுந்த மண்கட்டிகளில் 
ஒரு கட்டி மட்டும் உயிர்ப்புடன் துடித்தது.

- மு.முகமது பாட்சா*
03/08/2019

கடவுச் சொல்லில் காணாமல் போனவர்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒரு கடவுச் சொல்லிற்குள் இருந்துதான் 
தாத்தாவை மீட்டிருந்தேன்... 
இளைத்தவராகவும் அதே இருமலுடன் 
வந்து அமர்ந்தார் 
அப்பாவிற்கான கடவுச் சொல்லில் 
சிறிது பழுதிருந்ததால் 
வெளிவருவதில் சிரமம் அதிகமாக இருந்தது 
தாத்தா சொன்ன குறிப்புகளுடன் 
அவரையும் மீட்டெடுத்தேன்... 
மூவரும் அமர்ந்து தேநீர் அருந்தினோம்... 
மூன்று கால இடைவெளிகளைப் 
பேச்சுகளால் நிரப்பிக் கொண்டோம்... 
அங்கு வந்த மகள் இவர்கள் 
யாரென்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்தாள்... 
நான் காணவில்லை 
அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்...

- முகமது பாட்சா*
02/08/2019

கருப்புப் பூனை

கருப்புப் பூனை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை
கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டது 
- 'க்ரோ.. நான் அழகாக இருக்கிறேன் இல்லையா!' 
என்று வியந்தது 
க்ரோ தலையைச் சாய்த்துப் பார்த்து 
- ;ஆம் மன்னா!'- ' என்றது... 
ப்ளாக்கன் என்ற அந்தக் கருப்பன் பூனை 
மீசையைத் தடவிக் கொண்டான்... 
நீ என்னைக் கடவுள் என்று கூட அழைக்கலாம்' 
க்ரோ பணிவாகத் தலையையாட்டி 
- 'அப்படியே காட்' என்றதும் 
- 'நான் என்னை ஏன் 
கடவுளென்று சொல்லிக் கொண்டேன் தெரியுமா?' 
- 'சொல்லுங்கள் காட்' 
- 'என் நிழல் கூட என் நிறம்தான்' 
என்று சிரித்த போது 
- 'என் நிழல் மட்டுமென்ன 
சிகப்பாகவா தெரியும்?' என்று கேட்க நினைத்தாலும் 
- 'ஆம் அதிசயம்தான் காட்' என்றது... 
அப்போது அந்தப் பக்கம் நகர்ந்த மௌஸ் 
சிரிக்க... 
கடுப்பானான் கருப்பன் 
- 'என்ன தைரியம்! என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்?' 
- 'நான்தான் உன் கடவுள் 
உன்னை ஓடஓட வேலை வாங்குவதே நான்தான்' 
என்று சிரித்தான் மௌஸ் 
சற்றென்று பறந்து மௌஸை கவ்விய க்ரோ 
- 'மன்னித்துவிடுங்கள் காட்... 
உங்களின் எதிரியை வீழ்த்தி 
நீங்கள் எனக்களித்த 
எளிய உணவாக மௌஸை எடுத்துக் கொண்டேன்' 
என்று சொல்லிவிட்டுப் பறக்க
கடவுள் பசியோடு இருந்தார்...

-மு. முகமது பாட்சா*
02/08/2019

படபடக்கும் வரிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

படபடக்கும் வரிகளில் 
இரசாயணம் தோய்ந்த மரணமொன்று 
ஒட்டிக்கொண்டிருக்கிறது...

மனதினழுத்தத்தால் சில எழுத்துகள் 
நசுங்கிக் கிடக்க....

எழுத்துகளைக் கோர்க்கும் போது அலைந்த 
தூவலின் அழுகை 
வார்த்தைகளை வலுவிழக்கச் செய்கின்றன...

கொட்டிய தேநீரின் சித்திரம் 
சருகின் சடசடப்பினை உள் வாங்கிக் கொண்டு 
நீள் வட்டப் பாதையில் ஒழுகிக் கிடக்க

மன்னித்திடு 
என்ற வார்த்தையினோரத்தில் சாய்ந்து 
அழுது கொண்டிருக்கிறாள்

வார்த்தைகள் படபடக்கின்றன...

- மு.முகமது பாட்சா*
01/08/2019

செய்திகளை வாசிப்பது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அடிபட்ட நாயைத் தூக்கிச் சென்ற 
அதே தெருவில்தான் 
ஒருவன் கைவெட்டுபட்டு ஓடுகிறான்...

ஒருவனின் 
உடைகளைக் கழற்றிவிட்டு 
ஓங்கி உதைத்துக் கொண்டிருந்தார்கள்... 
அவன் விளையாட்டாக 
சிரித்துக் கொண்டிருப்பதாகச் 
செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்கள்...

காவல்துறைக்குச் செல்லும் வழியில்தான் 
கார் மோதி இறக்கிறாள் 
கற்பழிக்கப்பட்ட அந்தச் சிறுமி....

சிறையிலும் போராடியவன் 
வெளியில் வரும் போது 
வயிற்று வலியோடு வாந்தி எடுக்கிறான்...

செய்திகளை வாசிப்பது 
உங்களின் 
உண்மையான கார்ப்ரேட் கம்பெனி.

- மு.முகமது பாட்சா*
01/08/2019

இராம காவியம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

காகம் கொத்தித் தின்ற பிணத்தினருகே 
ஓர் இராமகாவியம் ... 
ஶ்ரீராம் ஜெபம் மறுத்து 
அகலிகை மீண்டும் கல்லாகிப் போனாள் 
அனுமன் தன் இதயத்தைக் கிழித்து 
இராமனை மெல்ல இறக்கிவைத்துவிட்டு 
நடந்து செல்கிறான்.... 
குகனின் மறுதலிப்பில் மனமுடைந்த இராமன் 
இறங்கிச் சென்ற பூமி முழுவதும் 
பிணக்குவியல்.... 
உதிரம் சுவைக்கும் நாய்கள் 
கோஷம் இட்டுக் கொண்டிருக்கின்றன 
ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 
கூனி வாய்விட்டு சிரிக்கிறாள். 
முதன் முதலாகப் புன்னகை மறந்த ராமனை 
வரைகிறான் ரவிவர்மா.

- முகமது பாட்சா*
ஓவியம் உதவி: Ravi Palette

செய்தி: உத்திர பிரதேசத்தில் அப்துல் காலித் என்ற 18 வயது சிறுவனை 
ஜெய் ஶ்ரீராம் சொல்லவில்லையென்று சங்கிகள் மண்ணெண்ணெய் 
ஊற்றி எரித்து கொன்றுவிட்டனர்...

குரோதி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

வாளையுருவி 
தைத்தவனின் கழுத்தைத் துண்டித்தவன்... 
ஆக்ரோஷமாகச் சிரித்தான்...

தலை துடித்துக் கொண்டிருந்தது

மிகவும் நன்றாக இருக்கிறது இல்லையா ஹீப்ரு 
ஆடை சிரித்துக் கொண்டிருந்தது...

ஹீப்ரு உனக்குத் தெரியுமா? 
கொலை செய்வதை இரசிக்காதவன் 
பிணத்திற்கு நெருக்கமானவன்...

அழுகையைக் கண்டு ஆனந்தப் படு 
துயரம் உன்னைவிட்டு விலகிவிடும்...

கோழைகள் 
தானாக உருவாக மாட்டார்கள்... 
நாம்தான் உருவாக்க வேண்டும்...

அரசுக்கு எதிராகக் குரலெழுப்பினால் 
உணவைப் பறித்துவிடு 
பட்டினிக்கிடந்து செத்துத் தொலையட்டும்...

வனத்திற்குள் உலாவு 
மிருகங்களின் வேட்டையைக் கற்றுக் கொள்வாய்...

பதவியென்பது ஒருதடவைதான் வரும் 
வந்த பின் போகவிடக்கூடாது

கடவுளாக மாறிவிட்டால் 
பக்தர்கள் நம்மிடம்தான் 
பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள்....

ஹீப்ரு 
உன்னைச் சுற்றியும் எனது கண்கள் 
உலாவிக் கொண்டிருக்கின்றன மறந்து விடாதே!

குரோதி 
தன் வாளால் சிறு கீறல் போட்டு 
ஹீப்ரூவை எச்சரித்தான்.

- மு.முகமது பாட்சா*
31/07/2019

Popular Posts