
அந்தப் புதினம் இப்போது
விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருந்தது...
எழுதியவன்
தாடியைக் கோதிக் கொள்கிறான்...
வாசித்தவனுடன்
சிறைச்சாலைக் கம்பிகள் பேசிக் கொண்டிருந்தன...
அதிகாரிகள்
எழுத்துகளைப் பிரித்துவைத்து
குற்றங்களை
அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தார்கள்
ஆட்சிக்கு எதிரான சமர் குரல்கள்
நிறைந்திருக்கலாம் என்பது முதல் தகவலறிக்கை...
கலகம் பேசும் வரிகளைப் படிப்பது
தேசியக் குற்றமாகக் கருத வேண்டும் என்பது வாதம்..
நீதி தன் கண்ணாடியைக் கழற்றி
அழுக்குத் துணியால் துடைத்துக் கொண்டது...
பார்வை மங்கலாகத் தெரிவதைக்
கொஞ்சமும் காட்டிக் கொள்ளவில்லை...
வாசிப்பது குற்றமா? என வாசித்தவன் கேட்டான்
முட்டாள்களை உருவாக்கும் தேசத்தில்
புத்தகங்கள் வைத்திருப்பதும் குற்றம் எனத்
தீர்ப்பு எழுதப் பட்டபோது
அந்தப் புத்தகத்தின் சில வரிகள் எரிந்து கிடந்தன.
- மு.முகமது பாட்சா*
29/08/2019
































