
எழுத்துகளுக்கும் எனக்கும்
சற்றுமுன்தான்
சண்டை நடந்து ஓய்ந்திருந்தது...
கணினியும் அவற்றோடு
சேர்ந்து கொண்டது ஆச்சரியம்..
அவலத்தை அடிக்கடி கொண்டுவந்து
அமரவைக்கிறேனாம்...
உலக நடப்பில் உனக்கென்ன அக்கறை?
ங்கே என்று உட்கார்ந்திருந்த எழுத்துகளும்
கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டன
சண்டையிடவே தெரியாது என்பது
ஆயுத எழுத்தின் குற்றச்சாட்டு...
காதல் வார்த்தையில் அமர்ந்து பார்க்க
வல்லினத்திற்கும் ஆசையுண்டாம்
இது மெல்லினத்தின் வக்காலத்துப் புலம்பல்...
இவன் காதலிக்கவே தெரியாதவன்
என்று நகைத்தது இடையினம்...
அவலமும்
தேசத்தின் காதலில்லையா? என்றேன்
அடுத்த மகாத்மா
எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று
ஒட்டுமொத்தமாய்ச் சப்தம் எழுப்பின...
நான் என்னதான் செய்யவேண்டும்?
'ஒரு காதல் கவிதையாவது
ஒழுங்கா எழுதிக்காட்டு இல்லையென்றால்
இங்கிருந்து நடையைக் கட்டு'
வருடத்தின் முதல் நாளே இப்படியா...
சமரசம் பேச யாரவது வருவீர்களா?
- மு.முகமது பாட்சா*
01 /01 /2019



































