Tuesday, 31 July 2018

உள்ளேன் ஐயா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம் மற்றும் உணவு

இருப்பின் வருகைப் பதிவேடுகள் 
அவசரவசரமாகப் பதியப்படுகின்றன 
தலைவா நானிருக்கிறேன் என்று 
தொண்டர்கள் குரலை உயர்த்துகிறார்கள் 
நாங்கள் இங்குதான் நிற்கிறோமென்று 
உறவுகள் சொல்லிக் கொள்கின்றன 
பகைவர்கள் கூட வசை மொழிகளால் 
வருகையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் 
எதிரிகள் 
நாங்களெப்போதும் எதிரிகளல்லவென்று 
எழுதிவிட்டுப் போகிறார்கள் 
வராதவர்களெல்லாம் வருகிறார்கள் 
வரக்கூடாதவர்களும் கூட வருகிறார்கள் 
ஏனிந்த அவசரம்? 
எதற்காகவிந்த இருப்பின் தக்க வைத்தல்? 
ஒரு மூச்சுக்காற்றினோசை அச்சுறுத்துகிறது 
நாளைய கணக்குகள் 
காய்களை மெல்ல மெல்ல நகர்த்துகின்றன 
நிழல் படிமங்களில் 
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்... 
மரணம் ஓரிடமாய்ப் போய் உறங்குகிறது. 

- மு.முகமது பாட்சா*
01 /08 /2018

தகவல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், செல்ஃபி மற்றும் குளோஸ் அப்

'தகவல் சொல்லி விட்டாச்சா ?' 
விடுபட்ட 
எண்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள் 
தகவலறிந்தவர்கள் 
ஒவ்வொருவராக வரத் தொடங்க 
என்ன நடந்திச்சி? ஏனிப்படி? 
என்ற தகவல்கள் பரிமாறிக்கொண்டன 
முக்கியமான தகவல் 
குளிர்பதனப் பேழையில் உறைந்து கிடக்க... 
தகவல்களே இல்லாத தகவல்களும் 
அங்கே முளைக்கத் தொடங்கியது 
சந்தூக்கிலேறி தகவல் ஊர்ந்து நடக்க 
தகவல்கள் ஒவ்வொன்றாக வீதியில் 
உதிரத் தொடங்கின... 
தகவலைத் தாமதிக்காமல் புதைத்தார்கள் 
கசிவது கொஞ்சம் குறைந்துவிட்டது 
தகவல் இப்போதுதான் 
உண்மையில் மிகவும் பத்திரமாகவிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா*
31 /07 /2018

Sunday, 29 July 2018

காலி கோப்பை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காபிக் குவளை மற்றும் பானம்

வெள்ளைத் தாளின் அருகில்தான் 
அந்தத் தேநீர் கோப்பையும் அமர்ந்திருந்தது 
அதுவும் காலியாகத்தான் இருந்தது 
அங்கிருந்த நாற்காலி எப்போதோ 
இறந்துவிட்டதாக இரண்டும் பேசிக் கொண்டன 
எழுதாத பேனா ஈரமிழந்தததால் 
அதுவும் அப்போதே இறந்திருக்கலாம்... 
நீ எழுதப்பட்டிருந்தால் என்னருகில் 
இருந்திருக்க மாட்டாயோ? என்றது கோப்பை 
கவனித்தாயா 
இன்னமும் அந்த மூச்சுக் காற்று 
இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறது 
அதனால்தான் இன்னமும் படபடக்கிறேன் 
காற்றொன்று சன்னலை தடதடக்க 
கோப்பை சிதறிக் கீழே விழுகிறது 
பறந்த வெள்ளைத்தாள் சுவரில் ஒட்டிக் கொள்ள 
ஒரு பூனை மெல்ல நகர்கிறது 
காட்சி ஓகே டேக் போகலாம் என்ற போதுதான் 
அதுவும் கூட நிகழ்ந்தது 
வெள்ளைத் தாளில் யாரோ எழுதியிருந்தார்கள். 

- மு.முகமது பாட்சா*
30 /07 /2018

எந்தன் முகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இதுதான் 
உந்தன் முகமா? என்று கேட்டார்கள் 
இதுவும் என்றேன் 
ஏனிப்படியென்று? எள்ளிப் பார்த்தார்கள் 
ஆகா! 
இஃது ஆகாத முகமென்றார்கள் 
முகத்தில் பருக்கள் அதிகமென்றார்கள் 
வீசியெறிந்துவிட்டு வா 
நல்ல முகம் 
நான் தருகிறேன் என்றார்கள் 
கடை விரித்து 
முகங்களையும் காட்சியாக்கினார்கள் 
ஒவ்வொரு முகமும் 
புறணிகள் பேசிக் கொண்டிருந்தன 
ஆதாயத்திற்காக ஆமாம் போட்டுக் கொண்டன 
காற்று வந்த திசைகளில் கண்ணடித்தன 
அழகான முகங்கள்தான் 
ஆனாலும் அதனியக்கம் அவையிடமில்லை 
என் முகம் என்னைப் பார்த்துச் சிரித்தது 
எந்த முகம் வேண்டுமென்று 
என்னையே கேட்டது.... 
சொந்த முகம் நீ போதுமென்று 
சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினேன் 

- மு.முகமது பாட்சா* 
29 /07 /2018 

Friday, 27 July 2018

நிழல் மரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

தலைப்புச் செய்திகளை 
எல்லோரும் தேடித் தேடி வாங்குகிறார்கள் 
அதுவாக இருக்கக்கூடாதென்று 
பலரின் மனம் அடித்துக் கொள்கிறது 
சிலர் 
அதுவாகத்தான் இருக்க வேண்டும் 
என்பதற்காகவே வாங்கித் தேடுகிறார்கள் 
ஆங்காங்கே சிலர் 
குப்பைகளைக் கொளுத்திக் கொண்டிருக்க 
கண்ணீர் துளிகள் 
அவற்றை அணைத்து விடுகின்றன 
நிழல் தந்த மரமொன்று படுத்துகிடப்பதாக 
ஒருவன் 
புலம்பிக்கொண்டே செல்கிறான்... 
பறவைகள் 
அங்கேயே முகாந்திரமிட்டு இருக்கின்றன 
காற்றுவரட்டும் 
கலைந்து போங்கள் என்று சொன்னாலும் 
அஃதெப்படி சாத்தியமாகும்? 
முதிர்ந்த மரம்தான் அஃது என்றாலும் 
பறவைகளுக்குத் தாய் வீடல்லவா? 
வேர்களில் கண்ணீர்த்துளிகள் விழுந்து 
ஈரம் கூட்டலாம் 
சின்ன இலைகள் இனியும் துளிர்க்காதா ? 
பறவைகளின் ஏக்கம் மெய்யாகட்டும். 

மு.முகமது பாட்சா* 
28 /07 /2018 

Wednesday, 25 July 2018

தேநீர் வார்த்தைகள்

 à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: பானம்

எழுதாத அந்தக் கவிதையை 
எடுத்தெறிந்து வீசி விட்டேன் 
மோசமாக 
என்னைப் பார்த்துவிட்டு நகர்ந்தது 
காற்றில் அடித்துவந்த சில வார்த்தைகளை 
பைகளில் நிரப்பிக் கொண்டேன் 
பேருந்தில் ஏறும்போது 
சில வார்த்தைகள் இறங்கிக் கொண்டன 
யாசகம் கேட்டவனிடம் 
சில்லறையைப் போட்டுவிட்டு 
சில வார்த்தைகளை வாங்கிக் கொண்டேன் 
சாலையில் இறந்து கிடந்த நாய்மீது 
சில வார்த்தைகள் மொய்த்துக் கொண்டிருந்தன 
அவள் தந்த வார்த்தைகளை 
ஊதிப் பறக்கவிட்டேன் 
சன்னலைவிட்டு வெளியே சென்றது 
சில வார்த்தைகளை 
பூக்கடையில் வாங்கி முகர்ந்து கொண்டேன் 
பிழைகளையெல்லாம் நீக்கிவிட்டு 
வார்த்தைகளைத் தேடினேன் 
பை காற்றில் பறந்து கொண்டிருந்தது 
அவள் கொடுத்த தேநீரில் 
மிதந்து வந்த  வார்த்தைகள் 
என்னை 
இரசித்துச் சுவைக்கத் தொடங்கியது. 

- மு.முகமது பாட்சா* 
26/07/2018

Tuesday, 24 July 2018

என் கோபி

தானியங்கு மாற்று உரை இல்லை.

இடமிருந்து மூன்றாவதாக நிற்பவன் கோபால் 
நன்றாக நினைவிருக்கிறது 
அவன்தான் அடிக்கடி சண்டையிடுவான் 
முதலில் நிற்பவன் முத்துராஜ் 
நன்றாகப் படிப்பான் 
ஒருவேளை அமெரிக்காவில் இருக்கலாம் 
அங்குதான் அவன் அக்காள் இருந்தாள் 
இரண்டாவதாக நிற்பவனை மறக்கவே முடியாது 
ஐ லவ் யூ சொல்லிவிட்டு 
என் அண்ணனிடம் அடிவாங்கிய டேனியல் 
நான்காவதாக நிற்பவள் நான்தான் 
அப்பவே அப்படியொரு அழகியில்லையா? ! 
என்னருகில் நிற்பவன் என் கோபிகிருஷ்ணா... 
என்' இனிஷியலல்ல என்னுடைய 
நான்தான் அவனுக்கு முதலில் சொன்னேன் 
நான்தான்  முதலில் விருந்தானேன் 
என் கோபி முன்பு போலில்லை 
என்னையே அவனுக்குத் தெரியவில்லை 
நானும் என்னைக் காட்டிக் கொள்ளவில்லை 
இப்போதும் கூட நன்றாகத்தான் ஒத்துழைத்தேன் 
அவன்தான் இயந்திரமாக இயங்கினான்... 
போகும் போது மட்டும் சொல்லிவிட்டுப் போனான் 
உன் போலவே எனக்குமொரு தோழியுண்டு. 

- மு.முகமது பாட்சா*
25 /07 /2018

கிழித்தான்



அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

வாசலை இடித்துவிட்டுச் சுவரெழுப்பினான் 
சன்னல் திரைகளைக் கனமாகப் போட்டான் 
தொட்டில் மீன்களைத் தரையில் விட்டு இரசித்தான் 

அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

காடுகளை வெட்டி சாலை போட்டவன் 
கால்வாய்களை வெட்ட மறந்தான் 
வெள்ளம் ஊருக்குள் நுழைந்து உணவருந்தியது 

அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

ஆதாரில் இருப்பது தானில்லையென்றான் 
தனது நாடும் இவ்வுலகில் இல்லையென்றான் 
குழிக்குள் விழுந்தவன் எழுந்திருக்க மாட்டாமல் 

அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

- மு.முகமது பாட்சா*
24 /07 /2018

Monday, 23 July 2018

வெளிச்சம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கழுகுகள் கொத்தி முடித்ததும் 
பொன்னாடைகள் போர்த்தப்பட்டது 
வலிகளை 
தொடைகளுக்கு நடுவில் மறைத்துக் கொண்டாள் 
புன்னகையை 
கவ்விக் கொண்டன காமிராக்கள் 
வார்த்தைகளை ஒழுகவிட்டு முத்தம் வீசினாள் 
கண்களைக் கவ்வி கொண்டிருந்தான் ஒருவன் 
கைவிரல் பட்டதில் மழை பெய்தது ஒருவனுக்கு 
வெற்றிப் படத்தின் பாராட்டுவிழா 
அமைச்சர் தேதி கேட்டுக் கொண்டிருந்தார் 
படத்தின் பெயர் 
'ஒரு நடிகை ஊர்வலம் போகிறாள்'

- மு.முகமது பாட்சா*
23 /07 /2018

Sunday, 22 July 2018

அருமை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

- அருமை - 
அந்தக் கவிதைக்கு 
அப்படித்தான் போட்டாக வேண்டும் 
அவரோர் அறிவு ஜீவி! 
ஓரோரத்தில் நின்று 
கைதட்டிக் கொண்டிருக்கிறேன் 
எல்லோரும் கைதட்டிக் கொண்டிருந்தார்கள் 
சினிமா வெளிச்சம் 
அவர் மீது விழுந்து கொண்டிருந்தது 
வார இதழில் படித்த கவிதையில் 
வார்த்தைப் பிழைகளைக் 
காகம் பொறுக்கிக் கொண்டிருந்தது 
நூலகத்தில் எலிகளைப் பிடிக்கும் முன் 
நூலாம்படை அடிப்பதும் மிக முக்கியமானது 
எழுத்துகளை உலர்த்தி வைத்திருக்கிறேன் 
ஈரம் அதிகமாகவிருக்கிறது 
ஆத்திச்சூடியை வாசலில் விற்கிறான் 
ஏழை வியாபாரி 
கூறுகட்டி நிற்கின்றன புத்தக விற்பனைகள் 
பாப்கார்ன் சற்று விலையதிகம்தான் 
குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு 
வெறும் கையோடுவே நகர்கிறோம்.... 
என்ன செய்வது? 
எப்போதும் போல் பாக்கெட் காலிதான் 
புத்தகங்கள் ஏக்கமாகப் பார்க்கின்றன. 

- மு.முகமது பாட்சா* 
22 /07 /2018 

Saturday, 21 July 2018

நுண்புனை கதைகள் 11

நுண்புனை கதைகள் 11

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப் மற்றும் வெளிப்புறம்
ஏழைத்தாய் 

'நீங்கள் இந்த மகனின் தாயா?' 
'ஆம் நீதி அவர்களே நான் அவரின் ஏழைத்தாய்' 
'என்னது ஏழைத்தாயா?' என்று வியந்த நீதி 
அவரின் மகனைப் பார்த்து 
'எதற்காக இவரை இப்போது கூண்டிலேற்றினீர்கள்?' 
'ஐயா கணம் நீதி அவர்களே! இவர் ஏழைத்தாயென்பதால் 
மற்றவர்களின் கண்களைப் பார்க்கவே கூசுகிறது..." 
'ஏன் அப்படி?' 
'நான் ஏழைத்தாயின் மகனென்பதால்... 
தாழ்வு மனப்பான்மையில் குறுகிப்போகிறேன்' 
'அதற்காக இந்தத் தாய் என்ன செய்வார்?' 
'இந்தக் குற்றச்சாட்டிற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தாயே?' 
'இவர் மகாப் பொய்யர் ஐயா!' 
'எப்படிச் சொல்கிறீர்கள்?' 
'இவர் இப்போது கோடீசுவரர்...' 
'இருந்தாலும் அவருக்குக் கில்டி இருக்கத்தானே செய்கிறது?' 
'இவர் இப்போது பார்ப்பதெல்லாம் 
கோடீசுவரர்களின் கண்களை மட்டும்தான் ... 
ஏழைத்தாய்களின் கண்களைப் பார்ப்பதற்கு மிகவும் கூச்சப்படுகிறார்!' 
'உண்மையாகவா!' என்று வியந்த நீதி 
'நீங்கள் இந்தத் தாயை கட்டி அணையுங்கள்' - என்று கட்டளையிட்டார் 
'மன்னிக்க வேண்டும் நீதி அவர்களே, எனது உடை 
உலகில் மிகவும் விலை உயர்ந்தது கசங்கிவிடும்...' 
'சீமான்களைத் தழுவும் போதும் கசங்கத்தானே செய்யும்?' 
'அங்கு ஆடைகள் விளையும்...இவரின் அழுகை கரையாக்கிவிடும்' 
'அதற்காக என்ன செய்யலா'ம் 
'நாட்டில் ஏழைத்தாய்களே இல்லாமல் .....' 

'நீயூஸ் கேட்டுகிட்டே தூங்கறத பாரு! வெளங்கிடும்' என்ற அவனது அம்மா 
'டீக்கடையில கிளாஸ் கழுவுற வேலையிருக்காம் 
உன் இஞ்சினியர் படிப்புக்கு இதுவொன்னும் குறைச்சலில்ல 
போய் என்னான்னு பாரு....' 

- முகமது பாட்சா* 

இருட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இரவு


இருட்டின் வெளிச்சம் அலாதியானது 
நிழலில் நிழலை இரசிக்கலாம் 
என்னெதிரில் நான் எதிர்ப்படுகிறேன் 
மரங்களின் பேச்சுகள் சுவாரசியமானது 
விரக்தியின் ஆன்மா இறந்து கிடக்கும் 
பயமற்றது இருட்டு 
பாயும் துணிச்சல் இருட்டு 
உறக்கத்தின் மொழியே இருட்டுதான் 
வெளிச்சமென்று எதைச் சொல்கிறாய்? 
கண்மூடினால் பதுங்கிக் கொள்வதையா? 
அத்துணை அண்டங்களையும் 
அதிசயமாகக் காட்டுகிறது இருட்டு 
இருட்டிற்குள்ளிருந்துதான் சொற்கள் பிறக்கின்றன 
இருட்டிற்குள் பிணைகிறது ஒரு பிரபஞ்சம் 
பிரபஞ்சத்தின் இசை இருட்டு 
இருட்டிற்குள் கண்மூடி யோசிக்கிறேன் 
என் நிழல் என்னை அணைக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
21 /07 /2018 

Thursday, 19 July 2018

ஒரு வார்த்தை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார், மேஜை மற்றும் வெளிப்புறம்

ஒரு வார்த்தையை வைத்துவிட்டு 
வாதிடத் தொடங்குகிறோம் 
வார்த்தைகள் பெருகி 
மேசை முழுவதும் ஆக்கிரமிக்கின்றன 
அப்போது அங்கிருந்த தேநீர் 
சில வார்த்தைகளை மிடறிக்கொள்கிறது 
சில வார்த்தைகளை 
குப்பைக்கூடையில் எறிகிறோம் 
வார்த்தைகள் தீராமல் 
இன்னமும் வந்து கொண்டேயிருக்கின்றன 
மௌனமும் 
சில வார்த்தைகளைப் பறித்துக் கொள்ள 
இருவரும் 
காகங்களாக மாறி இரையெடுக்கிறோம் 
குறையாத வார்த்தைகள் 
இரவைச் சூடாக்கி சமர்ப்பிக்கிறது 
பார்வைகளில் 
சில வார்த்தைகள் பதுங்கிக்கொள்கின்றன 
இதழில் ஒட்டிக் கொண்ட வார்த்தைகள் 
இதயத்தில் புன்னகை செய்கிறது 
அத்துணை வார்த்தைகளையும் 
அலமாரியில் வைத்துவிட்டு 
வார்த்தையேயில்லாத 
போர்வையைப் போர்த்திக் கொண்டோம் 
விடிந்த பிறகுதான் தெரியும் 
அந்த ஒரு வார்த்தை என்னவென்று. 

- மு.முகமது பாட்சா* 
19 /07 /2018 

Wednesday, 18 July 2018

நுண்புனை கதைகள் 10

நுண்புனை கதைகள் 10

முடை நாற்றம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

காறியுமிழ்ந்துவிட்டுப் போனவன் 
தொடைக் கக்கத்தில் சொறிந்து கொண்டான். 
இரண்டுபேர் ஓரமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் 
லிப்ஸ்டிக் சற்று அதிகமாகத் தெரிந்ததால் 
கைக்குட்டையால் துடைத்துக் கொண்டவள் 
பார்வையை அங்குமிங்கும் வீசினாள் 
ஒருவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு 
'என்ன ரேட்' என்று கேட்டான் 
காதில் சொன்னதைக் கையால் துடைத்துக் கொண்டு நகர்ந்தான் 
அந்த இராத்திரி 
அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது 
ஒருவரும் வராததால் களைப்படைந்தவள் 
தன்னையே நொந்து கொண்டாள் 
விடியற்காலை மணி 3 .௦௦ 
வாயைக் கொப்பளித்துவிட்டு டீயும் பிஸ்கட்டும் வாங்கிச் சாப்பிட்டவள் 
அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தாள் 
காலைத் தினசரிகளின் பார்சலை பிரித்த கடைக்காரன் 
முகப்பு செய்திகளைக் கடையின் முன்னால் தொங்கவிட்டான் 
வேகமாக எழுந்த அவள் அதன் மீது காறிதுப்பிவிட்டு 
கெட்ட கெட்ட வார்த்தைகளாக அர்ச்சித்தவள் 
அங்கிருந்து வேகமாகக் கடந்தாள் 
'சிறுமையைக் கற்பழித்த கயவர்கள்' காவல் நிலையத்தில் 
உட்கார்ந்திருந்தார்கள் 
'யோவ் ஏட்டு...இந்த மொகரைகளுக்கு டீ வாங்கியாந்து ஊத்துயா' 
- என்ற சப் இன்ஸ்பெக்டர் போனையெடுத்து 
'குட்டிம்மாவை பத்திரமா நீயே கொண்டு போய் 
ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடும்மா... 
காலம் ரொம்பக் கெட்டுகிடக்கு' என்று மனைவிக்கு அறிவுறுத்த 
ஸ்டேசன் முன் டி ஆர் பியை ஏத்திக்கொள்ள ஒரு கும்பல் கூடி நின்றது 
'ச்சேய்! த்தூ!' 

- முகமது பாட்சா* 
18 /07 /2018

Tuesday, 17 July 2018

பூனையோடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், மலை, வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்

நான் என் பூனையோடு நடந்து செல்கிறேன் 
வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு
நிழல்கள் கூடவே வருகின்றன 
இலைகளின் மௌனத்தை 
காதில் சொல்கிறது பெரும் காற்று 
எரிந்து கிடக்கும் சாம்பலைப் பூசிக்கொள்கிறது 
மயானத்து மௌனம் 
எழுதாத வெள்ளைத்தாளொன்று 
எரிந்து கொண்டிருக்கிறது 
துப்பாக்கி முனையில் உட்கார்ந்திருப்பதும் 
மௌனம்தான் 
எலியென்பது படிம சித்தியாகவிருக்கலாம் 
பூனை என்னை விட்டு ஓடுகிறது... 
வார்த்தைகளை யாசகம் கேட்டு...
நிழலோடு பேசிக் கொண்டிருக்கிறேன் 
நிழல் இரவோடு பேசிக் கொண்டிருக்கிறது

- மு.முகமது பாட்சா* 
17 /07 /2018

Monday, 16 July 2018

வாய்ப்பேசா பிறை நிலா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்

வெளிச்சம் கண்களை மூடிக்கொள்ள 
சதைத்தோல் மிருகங்கள் உலாவுகின்றன 
மூத்திரம் நாவில் வழிகிறது 
முடை நாற்றம் முகர்ந்து பறிக்க 
வாய்பேசா பிறை நிலா சிதைந்து கிடக்கிறது 
யோனிக்கு மலர்த்திய பசியில் 
ஒரு தாய் ஆடையவிழ்ந்து கிடக்கிறாள் 
எத்துணை நரிகள்தான் எச்சில் செய்யும்? 
என் சேயிற்கு என்ன சொல்வேன்? 
புதைகுழி சகதிக்குள் அவள் சிக்கியிருக்கிறாள் 
புண்ணியமாகப்போகும் 
அவளை மேலும் சிதைத்துவிடாதீர்கள் 
இனி எழுந்து வரும் தீர்ப்பாவது 
எலும்பில்லா 
மிருகங்களை நசுக்கித் தொலையட்டும்... 

- முகமது பாட்சா* 
17/07 /2018 

பூத்திருக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்

வெறுப்பான வார்த்தைகளைக் கொண்டு 
திரைச்சீலை நெய்கிறாய் 
உன் வருகைக்காகவே 
சன்னோலரத்தில் பூத்திருக்கிறேன் 
சில நூற்றாண்டின் முத்தங்கள் 
நம் மூளைகளில் ஒட்டியிருக்கின்றன 
பார்வையால் முத்தமிட்டபோதே 
பள்ளத்தாக்கில் 
விதைகள் முளைக்கத் தொடங்கிவிட்டது 
நேசமென்பது பட்டுப்பூச்சிகளின் கூடு 
இதயத்திலிருக்கும் 
கால்தடங்களை எப்படி அழிப்பேன்? 
நிழலைப் பிடித்து நிஜமென்கிறாய் 
நிஜம் 
உன் வாசலில்தான் பூத்துக்கிடக்கிறது 
வெளியே வந்து எட்டிப்பார் 

- மு.முகமது பாட்சா* 
16 /07 /2018 

Friday, 13 July 2018

தரிசனங்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சற்று முன்தான் 
புத்தன் இந்தப் பக்கம் சென்றதாகச் சொன்னார்கள் 
அவர்களுக்கு இதுவே வேலையாகி விட்டது 
நேற்றுகூட ஏசுவைப் பார்த்ததாக ஒருவன் சொன்னான் 
அங்குப் பெரும் கூட்டம் கூடியிருந்தது 
அவன் மொட்டையடித்திருந்தான் 
அகிம்சையை 
அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டிருந்தவன் 
முழு நிர்வாணி 
அடிக்கடி அழுக்கைச் சொறிந்து கொண்டான் 
ஒரு பக்கம் எருக்கங்குச்சிகளை 
போதிமரத்து வேரென்று விற்றுக் கொண்டிருந்தார்கள் 
ஆசைகளுக்கான விண்ணப்பங்கள் 
அவன் காலடியில் குவிந்து கொண்டிருந்தன 
ஒரு சிலர் அல்லாவை அழைத்து வருவதைப்பற்றி 
பேசிக்கொண்டிருக்க 
அங்கிருந்து மெல்ல நழுவினேன் 
ஒருவன் கையைப் பிடித்திழுத்தான் 
அந்தப் பக்கம்தான் ஈசன் உட்கார்ந்திருக்கிறாரென்று 

- மு.முகமது பாட்சா* 
14 /07 /2018 

ஒப்பாரி ராகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

உயிரற்ற சடலத்தை 
ஒன்பதுபேர் சூழ்ந்திருக்கிறார்கள் 
ஒப்பாரியின் ராகங்கள் மாறுகின்றன 
மேற்கில் சூரியன் பிறக்கும்போது 
கல்லறைகள் பிளக்கலாம் 
நிதானம் குழியின் வழி மூச்சுவிடுகிறது 
விசும்பல்களை 
யாரும் சேமிப்பது கிடையாது 
இந்த அழுகை 
எப்போதும்போல் போலியானது 
பூக்களின் ஆடம்பரம் வெற்றுக் கௌரவம் 
கல்லறை வாசகங்கள் காட்சிக்கு மட்டும் 
கை கொடுத்துவிட்டு இறங்குங்கள் 
பயணத்தை மற்றவர்கள் தொடரட்டும். 

- மு.முகமது பாட்சா* 
13 /07 /2018

Thursday, 12 July 2018

நுண்புனை கதைகள் 9

நுண்புனை கதைகள் 9
தானியங்கு மாற்று உரை இல்லை.

நான்சி 

அவள் தன் பெயரை ,'நான்சி' என்று அறிமுகப்படுத்திக் 
கொண்டாள். 
என் பெயரை அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன். 
பெயரொன்றும் எங்களுக்கு இடைஞ்சலாக இல்லை.... 
நாங்கள் அப்போது சிரித்துக் கொண்ட சிரிப்பு அவ்வளவு 
கேவலமானது. 
நாங்கள் உட்கார்ந்திருந்தவிடம் மிகவும் குறுகலானது... 
வேறுவழியில்லை உரசிக்கொண்டுதான் உட்கார்ந்திருக்க 
வேண்டும். 
அவள் வேகமாக ஓடிவந்ததால் மூச்சும் வேகமாகயிரைத்தது. 
கன்னத்தை வெட்பம் உரசியபோதும் கண்களில் பீதியோடுவே 
இருந்தாள் 
அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்தேன் 'பயப்படாதே நான்சி' 
சத்தம் வராமல் சிரித்தாள்...' நானொன்று கேட்கட்டுமா?' 
என்றவள் 
உதட்டை சமிக்ஞையாக்கினாள் 
சூடு உடலில் பரவும் போது அவள் நெற்றியிலிருந்து 
இரத்தம் வழியத் தொடங்கியது 
பூட்ஸ் சப்தங்கள் மெல்ல எங்களை நெருங்கிக் கொண்டிருந்தன... 
இறுகப் பற்றியிருந்த நான்சியின் கையில் உரிமையின் 
அடையாளமிருந்தது 
இப்போதுதான் நினைக்கிறேன் 
பயந்து ஒளிந்ததற்குப் போராடியிருக்கலாமென்று... 

- மு.முகமது பாட்சா* 
12/07/2018 

Wednesday, 11 July 2018

குட்டிச்சுவர் நினைவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஒரு குட்டிச்சுவர் போதும் 
எதுவும் ஏறி சற்று உட்கார்ந்துகொள்ள 
யார் என்ன சொல்லப்போகிறார்கள்? 
அந்தரங்கங்களை அலசிக் காயப்போடலாம் 
அழுக்குகளைப் பூசிக்கொள்ளலாம் 
பனைமரத்து வண்டுகள் எங்கும் பறக்கின்றன 
பனம்பழத்தின் வாசனை அலாதியானது 
வரப்பிழந்த வயலில் 
காட்டாமணக்குப் பூக்கள் கண் சிமிட்ட செய்யும் 
காட்சிகள் மட்டுமே எப்போதும் மாறுகின்றன 
காத்துக் கிடக்கும் சுமைதாங்கி 
எந்தக் கர்ப்பிணியின் நினைவுகளைத் தாங்கிக் கொள்கிறது? 
மனிதம் தனியாக அலைகின்ற போது 
ஆசை சிறகுகளைக் கட்டிக் கொண்டு பறக்கின்றது 
காலம் காலடியில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்க 
தவறான கணக்குகளை எப்போதும் சரியென்கிறோம் 
அந்தக் குட்டிச்சுவர் சுமந்திருக்கும் கதைகளை 
யாரும் எப்போதும் நினைத்ததேயில்லை 

- மு.முகமது பாட்சா* 
12 /07 /2018 

நுண்புனை கதைகள் 8


நுண்புனை கதைகள் 8

கிணற்றுத் தவளைகள்
தானியங்கு மாற்று உரை இல்லை.
அளந்து முடிந்தவிடத்தை மீண்டும் அளந்தார்கள். 
இப்போதும் வீட்டோடு அந்தக் கிணறும் சாலை அபகரிப்பிற்கு ஆளாகியே நின்றது. 
அந்தக் கிணற்றின் ஊற்று எப்போதும் குறைந்ததேயில்லை... 
சுவையும் குறைத்ததில்லை 
கிணற்றை மட்டுமாவது காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியே அடைந்தன 
மூடுவதைத்தவிர வேறுவழியில்லையென்று கைவிரித்துவிட்டார்கள் 
நீரென்பது எவ்வளவு அத்தியாவசியமானது ! ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? 
அபிதாவின் கண்ணீர்த்துளி கிணற்றில் விழுந்த போது 
கிணறு சற்றே சிலிர்த்தது... 
அங்கிருந்த தவளையொன்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. 
அதன் கண்ணீரை யாரும் பார்க்கவில்லை... 
இந்தக் கிணற்றை நம்பித்தான் எத்துணைச் சிற்றுயிர்கள் வாழ்கின்றன! 
இரவு மணி 12 .௦௦ இருக்கும் 
தவளையின் சப்தம் ஆக்ரோசமாய் எழுந்தது... 
இப்போது ஆங்காங்கே தவளைகளின் சப்தங்கள் வானளாவ உயர்ந்தன 
அளவிட வந்தவர்களின் அலறல் சப்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்தார்கள் 
ஆச்சரியம் தாங்க முடியவில்லை 
லட்சக்கணக்கான தவளைகள் கிணற்றை ஆக்கிரமித்திருந்தன. 
அளவீட்டார்கள் ஒவ்வொருவரையும் அவை ஒவ்வொன்றும் ஆக்ரோசமாகத் தாக்கின... 
ஒரு தவளையின் எடை எப்படியும் 50 அல்லது 60 கிலோவிருக்கலாம். 
தவளைகளை அழிக்க இராணுவ உதவிக் கோரப்பட்ட நேரத்தில் 
பாம்புகள் ஒவ்வொன்றும் நகரத்திற்குள் மெல்ல நுழையத் தொடங்கியது....

- மு.முகமது பாட்சா* 
11 /07 /2018

Tuesday, 10 July 2018

காகத்தின் கனவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், இரவு மற்றும் மேகம்

அந்தக் காகம் 
அப்படித்தான் ஒவ்வொன்றாகச் சேர்த்தது, 
அதன் கூடு மிக அழகானது... 
என் கனவுகள் போல் 
முட்டைகள் அடைகாத்துக் கொண்டிருக்கின்றன, 
வெப்பம் உயிர்ப்புடன் சுவாசிக்கிறது, 
காகம் 
என்னைப்போல் அசட்டையாக இருப்பதில்லை, 
அது தன் கனவுகளை 
பத்திரமாக வைத்திருக்கிறது, 
கால்களின் நகங்களைக் கூர் தீட்டியிருக்கிறது, 
இறகுகளின் சுவர்கள் 
உறுதியாகவே இருக்கின்றன, 
இரண்டொரு நாட்களில் அதன் கனவுகள் 
சப்தமெழுப்பக்கூடும்... 
என் கனவுகளில் 
இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறேன்... 
படுக்கையறையின் திரைச்சீலை 
வெளிச்சத்தைத் தடுத்திருக்கிறது... 

- மு.முகமது பாட்சா* 
10 /07 /2018 

Sunday, 8 July 2018

பயமென்ற பயம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

எல்லோருக்குள்ளும் 
ஒரு பயம் வந்து உட்கார்ந்து கொண்டது 
வார்த்தைகளை அவசரவசரமாக 
பெட்டிகளில் வைத்துப் பூட்டினார்கள் 
ஓடியோடித் தடங்களை அழித்தார்கள் 
காடுகளைப் பூட்டி 
கம்பளியால் மறைத்தபோது 
வெளியில் தெரிந்த ஒன்றிரண்டு மரங்களை 
வெட்டியெறிந்தார்கள் 
தவளைகள் 
பாம்புகளின் புற்றில் பதுங்கிக் கொண்டன 
காகங்கள் 
கூடுகளைக் கலைத்துக் கொண்டோடியது 
வேர்கள் 
எட்டிப் பார்ப்பதற்கும் பயந்தன 
நாளை இங்குத் தேடிப் பார்ப்பதற்கென்று 
எதுவுமேயிருக்காது 
கண்ணீரால் பூசப்பட்ட சாலை 
கண நேரங்களை வெகுவாகக் குறைக்கக் கூடும் 
கருப்பால் எழுதப்பட்ட பக்கங்கள்
எட்டுவழிச் சாலைகளாக நீள்கின்றன 
நாளைய செய்தியை எடுத்துப் படிக்கிறேன் 
அவை எப்போதும் காலியாகவே இருக்கின்றது. 

- மு.முகமது பாட்சா* 
08 /07 /2018 

Saturday, 7 July 2018

பஞ்சும் நெருப்பும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ

எனக்கும் கூட 
அந்தச் சந்தேகமுண்டு 
பஞ்சும் நெருப்பும் பேசிக்கொண்டதாக 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள் 
நெருப்பின் தோளில் 
பஞ்சு கைபோட்டுப் போனதை 
பார்த்ததாக ஒருவன் சொன்னான்... 
நெருப்புதான் முதலில் முத்தம் கொடுத்ததாக 
காட்டுத்தீயொன்று 
சொல்லிவிட்டு நகர்ந்தது 
பஞ்சுக்கேன் இந்த வேலையென்று 
சிலர் அலுத்துக் கொண்டார்கள் 
வதந்தி 
ஒவ்வொரு வாசலாகச் சென்று புலம்பியது 
வாசல் கோலங்கள் 
ஊர் முழுவதும் வியாபித்தன 
சற்றுமுன் வந்த செய்தி 
'பஞ்சி முழுவதுமாகப் பற்றிக்கொண்டது' 
தெருக்கள் பற்றியெரிய ஆரம்பித்தன.... 
யாருக்கும் தெரியாத சேதி 
பஞ்சு தனக்கான நூலை நூற்றுக் கொண்டிருக்க 
இது நெருப்பு பற்றவைத்த தீ! 

- மு.முகமது பாட்சா* 
08 /07 /2018 

பதினொன்றாம் மர்மம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

இரவு பதினொன்று 
பதினொன்றாம் பக்கம் என் கையில் 
'அமைதியான இரவு' என்று தொடங்கி 
அச்சத்தை மெல்லக் கூட்டுகிறது... 
இரண்டு ஒன்றுகள் அருகருகே நிற்பதுபோல் 
யாரோ நெருங்கி நிற்க உணர்கிறேன் 
11 டைரிகளின் பக்கங்கள் மெல்லச் சுழல்கின்றன 
11 பிணங்கள் 
11 குழாய்கள் 
11 வருடங்கள் 
11 கம்பிகள் 

தலைகீழ் அத்தியாயத்தின் ஒரு பெரும் மரணம் 
11 ஆண்டுகளுக்கு முன்பு 

மரணமென்பது காத்திருக்கும் மர்மம் 

அன்பென்பது அறியாமையின் கூட்டிற்குள் 
ரௌத்திரமாய் வந்து உட்கார்ந்து கொள்கிறது... 

அதன் கைகளில் இப்போது 11 கயிறுகள் 
ஒரு பிணத்தைத் தேடியலைகின்றன 11 பிணங்கள் 
பதினொன்றும் பதினொன்றாய் தவம் செய்ய 
ஹிட்ச்காக்கின் மர்மம் சூழ்ந்து கொள்கிறது... 

11 என்பது இரண்டு கத்திகளாகவும் இருக்கலாம் 

11 ம் அத்தியாயத்தில் நுழையும் காவலர்களைத் தேடி 
அவசரவசரமாய்க் கடைசிப் பக்கத்திற்கு விரைகிறேன்... 

இப்போது மணி பதினொன்று 
இரவு நகராமல் இன்னமும் அப்படியே நிற்க 
பதினொன்றாம் பக்கம் என் கையில் ! 

சில்லென்று நகரும் நிழல் யாருடையது? 

- மு.முகமது பாட்சா* 
07 /07 /2018 

Friday, 6 July 2018

காதல் பிசுபிசுப்பு



உத்திரத்தில் தொங்கும் புடவைக்கும் 
ஒரு நூறு கதையிருக்கும் 
இதயம் திறக்காத பெட்டகத்தில் 
பாம்புகளின் படுக்கையிருக்கலாம் 
காட்சியால் வருவதெல்லாம் 
காதலென்றாவதில்லை 
மோகத்தின் வாசம் காமத்தின் பசி 
காதல் கண்மூடித் திறக்கும் தவம் 
வண்டையுண்ணும் மலர்கள் 
வாசலை அழகாகவே திறந்திருக்கும் 
இறக்கிவைத்த பிணத்தில் 
இதயம்தான் முதலில் இறந்து கிடந்தது 
காமத்தின் கழிவறையாய் 
யோனி பிசுபிசுக்க 
கடைசியாய் அவளெழுதிய கடிதம் 
அவள் காதலை காறித்துப்பியது 

- மு.முகமது பாட்சா* 
07 /07 /2018 

Thursday, 5 July 2018

என் என்னோடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

என் தோள்களில் சாய்ந்து கொள்கிறேன்
என் விரல்கள்
என்னைக் கிள்ளி முத்தமிடுகின்றன
என் பார்வையில்
என்னைச் சிறைவைத்துக் கொள்கிறேன்
என் என்பது
என் இல்லா வட்டங்களின் நீர்க்குமிழி
என் எங்கேயோ தொலைந்து போகவில்லை
என் அருகில்தான் என்னுடைய நான்
என் கதையின் பிரதி என் நிழல்
என் சொல்வாடைகளில் என் சொப்பனம்
என் சுயம் என் சமாதி
என் கையைப் பிடித்து நடக்கிறேன்
என் வீடு நான் விடையறியாத மர்மம்
என் எனக்குள்ளிருக்கும் பெரும் எழுச்சி
என் எனக்கான துயரம் என் ஆசை
என் கண்ணீர் எனக்கான கதைகளின் மழை
என் என்னோடு பேசுகிறேன்
என் என்னோடுவே உறங்குகிறேன்
என் என்பது நிச்சயம் நானில்லை! ஆனாலும்
என் என்பது என்றும் என்னோடுதான்.

- மு.முகமது பாட்சா*
06 /07 /2018

இந்தக் கவிதையை உடனே மொழியாக்கம் செய்தளித்த நண்பர் Sri N Srivatsa அவர்களுக்கு நேசத்துடன் நன்றிகள் !

My shoulders 
I lean on
My fingers 
pinch and kiss me
My sight 
is where I
imprison myself
My 
is the ripple of
my non-existent circles
My is not lost 
somewhere 
My is right next to
my me
My story's copy is
my shadow
My dreams are in
my wordplays 
My self is 
my grave
My hand I hold and walk
My home is 
my unsolved mystery
My is the big uprising inside me 
My sorrow for meare
my wishes
My tears are the rain for
my stories
My conversations are with
my self
My slumber is with me for company 
My is definitely not me
but
My is always with me


~Sri 11:47 :: 06.07.2018 :: Noida

Wednesday, 4 July 2018

பூட்டப்பட்ட மௌனம்

தானியங்கு மாற்று உரை இல்லை.


மௌனம் 
தன்னைப் பெட்டியில் வைத்துப் 
பூட்டிக்கொள்கிறது 

கனவுகளின் சாலை 
தன்னை முடித்துக்கொள்வதில்லை 

மரத்தின் வேர்களில்தான் 
மலர்களின் வாசம் துளிர்க்கிறது 

பூக்களின் உதிர்விற்காக 
மரங்களென்றும் அழுவதில்லை 

காய்களின் வருகைக்கான 
கர்ப்பப்பைத் தாய்களே அதுதான் 

வெளிச்சத்தைக் கடத்தவில்லையென்றால் 
நிலவிற்கும் மதிப்பில்லை 

மலைகள்தானேயென்று 
மௌனமாகக் கடந்து விடாதீர்கள் 

பூமியின் முலைக்காம்புகளைத்தான் 
வீணாகச் சிதைக்கிறோம் 

இயற்கையின் ஆடையை உருவிவிட்டு 
புராணத்திற்குச் சேலைத் தருகிறவன் 
நதிகளை அம்மணமாகப் பார்க்கிறான் 

மௌனம் வெடிக்கின்ற போது 
பெட்டியின் சிதறல்கள் 
நம் கவனத்திற்கும் கூட வராது 

இந்தக் கவிதையின் சில வார்த்தைகள் 
மௌனம் காக்கின்றன... 

காட்டுத்தீயின் வார்த்தைகளை 
செய்தித்தாள்களில் மட்டும் கடந்து விடாதீர்கள் 

.............................. 

- மு.முகமது பாட்சா* 
04 /07 /2018 

Tuesday, 3 July 2018

செய்தித்தாளில் இன்று

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
செய்தித்தாள் 
மெல்ல என்னை விழுங்கிக் கொண்டிருந்தது 
அரசியல் வியாக்கியானங்கள் 
சூடு பறக்க தைலம் தேய்க்கின்றன 
நகைச்சுவைக்கென்று தனிப்பகுதியில்லை 
அமைச்சர்களின் ஆலோசனைகள் போதும்... 
நிகழப்போகாத திட்டங்களைப்பற்றிய 
நிதர்சனமான கட்டுரையொன்று 
இன்றிரவே கார்த்திகை செல்வன் அல்லது 
செந்தில் விவாதிக்கலாம் 
குழந்தை கடத்தியதாக 5 பேர் கொலை 
கடத்துபவன் 
இந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்க 
மிஸ் இந்தியா விரைவில் 
தூய்மை இந்தியாவிற்கு விளம்பரமாகலாம் 
ரஜினி வருவாரா மாட்டாரா? 
கமல் என்னதான் சொல்கிறார் 
விஷால் ஏன் பெரு மூச்சு விட்டார்? 
இதையெல்லாம் கடந்தால் உருப்படியாக ஒரு செய்தி 
'அசுரவதம்' பார்க்கலாமென்ற சினி விமர்சனம் 
வேறு வழியில்லை 
நாளைக்கு எப்படியாவது பார்க்க வேண்டும்... 
என்னது? எட்டுவழிச்சாலை.. 
ரூபாய் மதிப்பிழப்பு, மணல் கொள்ளை 
இவைப் பற்றியா? 
பேஸ்புக், வாட்சப்பில் வரும் பார்த்துக்கலாம். 

- மு.முகமது பாட்சா*
03 /07 /2018

Sunday, 1 July 2018

நுண்புனை கதைகள் 7

நுண்புனை கதைகள் 7
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கேள்வியின் நாயகன்

சமீபகாலமாக எழிலன்
கேள்விகளை அதிகமாகக் கேட்கத் தொடங்கிவிட்டான்.
'கேள்விக்குறியேன் குனிந்திருக்கிறது?' என்றான்
'நாம் நிமிர்வதற்காக இருக்கலாம்' என்றேன்
' இல்லையப்பா நாம் எப்போதும் குனியாமல் இருப்பதற்காக'
- என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
'இரண்டும் ஒன்றுதானே!' என்று ஆச்சரியம் காட்டினேன்.
'எப்படிப்பா? நாமென்ன இப்போது குனிந்தா இருக்கிறோம் ?
அப்படியென்றால் நான் சொன்னதுதானே சரி '
- நான் அவன் வழிக்கு வந்துவிட்டேன்.
அவனை மடக்குவதாக நினைத்து
'வயசானவங்கெல்லாம் குனிஞ்சுதானே இருக்காங்க?' என்றேன்,
'இனிமே அவர்கள் நிமிர்ந்தாலும் பயனில்லையப்பா ,
அவர்களின் கேள்வியெல்லாம் மரணத்தைப் பற்றிய
பதில் தெரியாத கேள்வியாகத்தான் இருக்கும்' என்று
ஒரு போடு போட்டான். என்ன சொல்வது ?
இப்போது நான் அவன் முன் மெல்ல குனியத் தொடங்கினேன்....

- முகமது பாட்சா*
02 /07 /2018

நகராதக்கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தக் கதையின் முதல் வரியில் 
உட்கார்ந்துகொண்டு பயணிக்கிறேன், 
இடை நிறுத்தலில்லாமல் பயணம் நகர்கிறது, 
நடத்துநரிடம் ஒருவன் சில்லறைக்காகச் 
சண்டையிட்டுக் கொண்டிருந்தான், 
"கொய்யா கொய்யா" என்றவளின் கூடையில் 
கதையை வைத்துவிட்டு 
அவளின் கதையை வாசிக்கிறேன், 
அழகை மறைக்கத் தெரியாதவள் 
அழுக்காக இருந்ததும் நல்லதற்கே, 
அவளிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தவன் 
கையில் பலான புத்தகம், 
வண்டி மீண்டும் நகர... சிறிது தூரம் ஓடிவந்தவள் 
கதையை என்னிடம் கொடுத்துவிட்டு 
புள்ளியாக மறைந்தாள் , 
ஆங்காங்கே ஆலைகள் சுவாசித்துக் கொண்டிருந்தன, 
வயல்களுக்கு வயதாகி பாதம் வெடித்துக் கிடந்தது, 
அழுவதற்கும் கண்ணீரில்லாமல் 
ஏரியொன்று அழுது கொண்டிருக்க... 
கதையில் இப்போது முக்கியத்திருப்பம் 
'ப்ப்ஷ்ஷ்ஷ்'ஷென்று டயரிலிருந்த ட்யூப், 
மூச்சை இறக்கி இயலாமையை இலகுவாக்கியது. 
எல்லோரின் வாசிப்பும் டயரின் பக்கம் திரும்ப ... 
ஸ்டெப்னி 
தன்னைப் பெருமையாகப் பார்த்துக் கொண்ட தருணம்... 
தொடரும் பயணத்தின் அடுத்த நிறுத்தம் 
டீக்கடைதான். 
அப்படியொன்றும் இங்கு நிகழவில்லை 
பலான புத்தகக்காரன் 
பேரம் பேசாமல் டீத்தண்ணீக் குடித்தான் என்பதுதான் 
முக்கியமான செய்தி 
ஓட்டுநர் வந்தால் வண்டி நகரத்தானே செய்யும், 
ஊர் வந்து இறங்கிய பிறகுதான் கவனித்தேன் 
நான் வாசித்த கதையின் முதல் வரி 
இன்னமும் நகராமல் அங்கேயே உட்கார்ந்திருந்தது. 

- மு.முகமது பாட்சா* 
01 /07 /2018

Popular Posts