
ஜென்னியின் கண்ணீர்த்துளி
மார்க்சின் கைகளில் விழுகிறது...
வறுமையின் கோப்பை
நிரம்பி வழிய
மூலதனத்தின் முதல் அத்தியாயம்
முடியாத வறுமையில்...
வீட்டின் சுவர்கள்
அடிக்கடி இடம் மாறிக் கொண்டன
ஏங்கல்சின் கைக்குட்டை
ஏனோ கூடவே பயணிக்கிறது
எழுதாத வார்த்தைகளை
வியர்வையின்
துளிகளல்லவா எழுதுகின்றன!
கருப்பு என்பது
வஞ்சித்தலின் அடையாளம்
சிகப்பு கொட்டி ஆலைகள் நிறைகின்றன
முதலாளிகளின் வக்கிரம்
மூலதனத்தைச் சுட்டெரிக்கப் பார்க்கிறது
கருணை என்பது
என்றுமே தந்திரத்தின் பேச்சு...
காலணி தைப்பவன்
காலணியில்லாத கால்காரன்
வாகனங்களின் சொகுசுப் புகை கூட
ஏழைகளின் சுவாசத்தைத்தான்
எளிதில் பாழ் செய்கிறது...
ஆலைகளுக்கு எப்போதுமே
அடங்காத பெரு மூச்சுதான்.....
ஏன்? எதற்கு ? எப்படி ?
என்ற கேள்விகளை
எடுத்து வைத்தவன் மேசையில்
அப்படியே கிடக்கிறது
விடைத் தெரியாத நிழலொன்று...
மார்க்ஸின் படம் மாட்டிய அறைகளில்
ஜென்னியின் கண்ணீர் துளிகளை
யாராவது பார்த்தீர்களா?
நிறம் போர்த்த துண்டு மட்டுமே
நிஜமல்ல தோழரே
மூலதனத்தை மறந்து விடாதீர்கள்.
- மு.முகமது பாட்சா*
01/05/2018





























