Monday, 30 April 2018

மூலதனம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், தாடி

ஜென்னியின் கண்ணீர்த்துளி 
மார்க்சின் கைகளில் விழுகிறது... 
வறுமையின் கோப்பை 
நிரம்பி வழிய 
மூலதனத்தின் முதல் அத்தியாயம் 
முடியாத வறுமையில்... 
வீட்டின் சுவர்கள் 
அடிக்கடி இடம் மாறிக் கொண்டன 
ஏங்கல்சின் கைக்குட்டை 
ஏனோ கூடவே பயணிக்கிறது 
எழுதாத வார்த்தைகளை 
வியர்வையின் 
துளிகளல்லவா எழுதுகின்றன! 
கருப்பு என்பது 
வஞ்சித்தலின் அடையாளம் 
சிகப்பு கொட்டி ஆலைகள் நிறைகின்றன 
முதலாளிகளின் வக்கிரம் 
மூலதனத்தைச் சுட்டெரிக்கப் பார்க்கிறது 
கருணை என்பது 
என்றுமே தந்திரத்தின் பேச்சு... 
காலணி தைப்பவன் 
காலணியில்லாத கால்காரன் 
வாகனங்களின் சொகுசுப் புகை கூட 
ஏழைகளின் சுவாசத்தைத்தான் 
எளிதில் பாழ் செய்கிறது... 
ஆலைகளுக்கு எப்போதுமே 
அடங்காத பெரு மூச்சுதான்..... 
ஏன்? எதற்கு ? எப்படி ? 
என்ற கேள்விகளை 
எடுத்து வைத்தவன் மேசையில் 
அப்படியே கிடக்கிறது 
விடைத் தெரியாத நிழலொன்று... 
மார்க்ஸின் படம் மாட்டிய அறைகளில் 
ஜென்னியின் கண்ணீர் துளிகளை 
யாராவது பார்த்தீர்களா? 
நிறம் போர்த்த துண்டு மட்டுமே 
நிஜமல்ல தோழரே 
மூலதனத்தை மறந்து விடாதீர்கள். 

- மு.முகமது பாட்சா*
01/05/2018

வருகையின் பக்கங்கள்

Image result for bad king emotion people - painting

சூட்சமம் பெருஞ் சூழ்வெளி 
சுடரற்றக் காற்று பெரும் வனத்தீ 
நிராகரிக்கப்பட்ட வானத்தில் 
சிறகுகள் எரிகின்றன 
வார்த்தைகளை 
விற்பனைச் செய்கிறான் நாடோடி 
மாமிசம் 
மனிதனைச் சாப்பிடுகிறது 
கற்பிதத்தின் சக்தி 
கந்தகப் பெரும் மூளையாய் விரிய 
கற்பனையின் ஆட்சிக் கட்டில் 
அதிகாரம் மேவுகிறது... 
விழாக்குழுவில் 
வேடிக்கை பார்த்தவன் வேந்தனாகிறான் 
மூன்று தலை 
பன்னிரண்டு கரங்கள் முளைக்கின்றன 
கடாட்சத்தின் பல நூறு தலைகள் 
காலடியில் கிடக்க... 
ஆதாமின் எலும்பில் 
எழுந்த ஆயுத வார்த்தையொன்று 
பூமிக்குள் பெரு மூச்சு விடுகிறது 
சர்ப்பமொன்று மெல்ல நகர்ந்து போவது 
மீண்டும் சாத்தானின் 
வருகைக்காகக் கூட இருக்கலாம் 
எதற்கும் கேள்விக் குறிகளை 
பதுக்கிக் கொள்ளுங்கள் 
அதுவே உங்களுக்கு ஆயுதமாகவும் இருக்கும்.

- மு.முகமது பாட்சா*
30 /04 /2018 

Saturday, 28 April 2018

இரையெடுக்கும் காகங்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

காலைக் கடற்கரை கண்விழிக்கும் போது
சுக்கு காபியின் மணம் சூடேற்றுகிறது
வயதைத் தொலைத்தவர்கள்
வாழ்க்கையைத் தேடி நடந்து கொண்டிருக்க
இளமைகள் ஆங்காங்கே
எகிறி குதித்துக் கொண்டிருக்கின்றன
சூடான இடியாப்பம் தேங்காய்ப் பால்
பேச்சிலர்களின் காலைக்காகக் காத்திருக்க
மூன்று சமாதிகள்
கிராமத்தின் வேடிக்கையாகிப் போகிறது
கடற்கரை காகங்கள்
காற்றின் வேகத்திலும் இரையெடுக்கின்றன
கூட்டம் கூடி சிரிப்பவர்கள்
அருகம் சாற்றுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்
செருப்பணியாதா கால்தடங்களையே
கடல் அலைகள் அடிக்கடி முத்தமிடுகின்றன
உறவுகளை தேடிக் கொண்டிருக்கும் ஒருவனை
கடந்து போகிறாள் காதலனைத் தேடுபவள்
காலை வெய்யில் மெல்லன விரியும் போது
மணற் பரப்பும் பொன்னிறம் பூசிக் கொள்கிறது
போராளிகளின் தலைகள்
மெல்ல மெல்ல பூக்கத் தொடங்குகின்றன...
ஒன்றிரண்டு காக்கிச் சட்டைகள்
ஓராயிரமாகக் குவிந்து கைத்தடிகள் 
எல்லோரையும் கலைந்து போகச் சொல்லுகிறது
கடற்காற்றும் உஷ்ணமேந்தி பதற்றமடைகிறது
அலைகளின் வேகம் இரு மடங்காகி வீச
காற்றின் வேகத்திலும் இரையெடுக்கின்றன
இப்போதும் கடற்கரைக் காகங்கள் !

- மு.முகமது பாட்சா*
29 /04 /2018




போனவன் போனான்டி

தானியங்கு மாற்று உரை இல்லை.

போனவன் வரவில்லை 
போக்கத்த நண்பனோடு... 
கூடித் திரிகிறானோ? 
குடிக் கடையில் கிடக்கிறானோ?! 
வாடிக் கிடக்குமென்னை 
வஞ்சித்துப் போனவனை... 
வாஞ்சையில் காத்திருக்கேன் 
வாசலில் பிறர் பார்த்து நிற்க! 
கூடி மகிழ்ந்த நாட்கள் 
மனவறையில் குலவையிட... 
கூத்தாடி வருவானோ...? 
கூழ்வார்த்தைப் பேசியென்னை 
கண்ணீரைப் பெறுவானோ?! 
ஆனாலும் காத்திருக்கேன் ... 
ஆம், காத்திருக்கேன் 

காதலின் வார்த்தைக்காக! 
காமத்தின் சோறுண்ட 
ஆசையின் கூட்டலுக்காக! 

- மு.முகமது பாட்சா*
28/04/2016

சாமி இல்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

திருவிழாவில் ஊர்வலம் போன 
சாமிக்குத் தெரியாது... 
சாதிச் சண்டைகள் நடக்குமென்று! 
கும்பிடப் போனவர்கள் 
குத்திக் கொள்கிறார்கள்... 
ஆம் குத்திக் கொல்கிறார்கள்! 
சாமிக்குச் சேதாரம் ஆகாமல் 
காவல்துறைப் பாதுகாப்பு ! 
சாதிப் பார்க்காத காதலர்களுக்குள் 
சங்கடங்கள் நுழைகிறது! 
சாமியை மறந்துப் போனவர்கள் 
பரம்பரை நியாயம் தீட்டுகிறார்கள்! 
வாழ்விற்கு 
வரம் கேட்டுப் போனவன் வீட்டில் 
சாவிற்குச் சங்கொலிக் கேட்கிறது! 
சாமி இல்லை! இல்லவே இல்லை! 
சாதிக்குப் பறிக் கொடுத்தவள் 
சாமிக்கு அர்ச்சனைச் செய்கிறாள்! 
வலிக்கு நிவாரணமாய்ச் சாமி! 
வலிகளுக்கும் காரணமாய்ச் சாமி! 
சாமி ஊரை விட்டுப் போய் 
ரொம்ப நாளாச்சி! 
வேதனைத் தாங்காமல் சொல்கிறார் 
இவரும் வேத விற்பன்னர்!

- மு.முகமது பாட்சா*
28/04/2016

மரணன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

மயக்கத்தில் கிடக்கிறான் மரணன்... 
மாயவன் சொல்லும் வரை! 
உறக்கத்தில் வருவது உதாரணன்! 
தர்க்கத்தில் எளிதில் சிக்காதவன்! 
வாவென்று சொன்னாலும் வரமாட்டான்! 
வந்த பின் 
போவென்று சொன்னாலும் போகமாட்டான்! 
யாரென்றும் அவனுக்குத் தெரியாது 
பார் அதியென்று சொன்னாலும் புரியாது! 
சீரெனத் தந்தவன் உயிரைக் கேட்கின்றான்... 
சட்டென்று கொண்டுபோய்ச் சேர்க்கின்றான்! 
மாயனின் ஓரறிவு ஒற்றனவன்... 
வேறறிவு அவனுக்கும் தேவையில்லை! 
நூறறிவு நுட்பங்கள் நமக்குமில்லை.... 
நாயனின் சேரறிவில் சேரும் காலம் வரை! 

- மு.முகமது பாட்சா*
28/04/2016

அநாதி மரம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

தகிக்கும் சூரியனை 
தண்ணீரில் முக்கிக் குளிர்விக்கிறேன், 
நிழலுலர்த்தும் மரங்கள் 
வெப்பத்தைக் குடித்துக் கொண்டிருக்க, 
பறவைகள் தஞ்சம் புகுகின்றன, 
மரத்தின் கருணையைக் கடவுளாக்கி 
நட்டக் கல்லொன்று 
குறிச் சொல்லிக் கொண்டிருக்க, 
ஆடைச் சுற்றிக் கொண்ட மரம் 
மூச்சுத் திணறலில் முகம் கருத்தது, 
கடந்து போகும் பறவைகளின் ஏக்கத்தை 
பகிர்ந்து கொள்கிறது மரம் 
தான் மட்டும் அநாதையென்று !

-முகமது பாட்சா*
28/04/2017

அவள் கூந்தலின் பூக்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், பூ
என் கவிதையொன்றை 
ஓர் ஓரமாய் 
எடுத்துவைத்துவிட்டு 
உறங்குகிறேன், 
அஃது உறங்காமல் 
என்னைப் பற்றிய 
ஒரு கட்டுரை எழுதுகிறது, 
அதன் விமர்சனங்களில் 
கிழிந்து தொங்கும் என்னில் 
நாரெடுத்து 
பூத் தொடுக்கிறாள் 
கனவின் வழி வந்த கன்னி, 
கூந்தலுக்குள் உட்கார்ந்து கொண்டு 
கூடவே பயணிக்கிறேன், 
கவிதையைச் சூடிக் கொண்டதாக 
கர்வம் கொள்கிறாள், 
என்னைப் பற்றி 
அவளெழுதிய கவிதையில் 
நான் நாராகவும் 
அவள் பூவாகவும் இருக்கிறோம்
விழித்துப் பார்க்கிறேன் 
என்னருகில் 
அவள் கூந்தலின் பூக்கள்!

 மு.முகமது பாட்சா*
-

அறிவான ஜீவிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இந்தப் பிரபஞ்சம் சில எழுத்துகளால் 
என்னிடம் வந்துவிடுகிறது

வார்த்தைகளுக்கு 
புனுகுப் பூசி உலாவ விடுகிறேன்...

இரவல் வாங்கிய இலக்கியம் 
நகலெடுத்து வானத்தில் பறக்கிறது...

விட்டெறிந்த காசுகள்
விருதுகளாக வந்து குவிகின்றன...

திரைப்படத்திலொரு பாடல்
அல்லது வசனம் போதும்
அறிவு ஜீவிகள் 
அழகாக முளைத்து விடுகிறோம்,

காப்பியம் எழுதுபவன் என்றும்
கைதட்டல்களுக்கு அலைவதில்லை

கைதட்டல்களே இல்லையென்றால்
நாங்களெல்லாம் 
அறிவான ஜீவிகளேயில்லை.

- மு.முகமது பாட்சா*
28 /04 /2018



Friday, 27 April 2018

சிலர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அது உண்மைதான் 
என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் , 
அப்படி இருக்க முடியாது என்று சொன்னவர்கள் 
அங்கேயே நின்று கொண்டிருக்க 
அப்படிதானாம் என்று ஒருவன் 
வேகமாகச் சொல்லிவிட்டு ஓடுகிறான். 
இப்படியும் நடக்குமா ! என்று பதைத்தவர்கள் 
அப்படி இருக்கக் கூடாது 
என்று வேண்டிக் கொண்டார்கள். 
அப்படி என்னதான் நடந்துவிட்டதென்று 
ஒருவன் சாவகாசமாக கேள்வி கேட்கிறான். 
எல்லோரும் அவனையே திரும்பிப் பார்க்க 
இவனெல்லாம் இப்படியிருக்கவேதான் 
அப்படியெல்லாம் நடக்கிறது என்று 
ஒரு கிழவன் சலித்துக் கொள்கிறான்...
இது எனக்கு அப்போதே தெரியும் என்றவள்
முருங்கைக்காயை நறுக்கிக் கொண்டிருக்க...
நிகழ்ச்சியை மாற்றிக் கொண்டது தொலைக்காட்சி, 
செய்தித் தாளை
ஒருவன் சாவகாசமாக மடித்துக் கொண்டிருந்தான்,
ஒரு சிலர் சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்க
ஒருவன் செருப்பை திருடிக் கொண்டிருந்தான்
கிழவர் இன்னமும் 
அந்தப் பழைய நவீனத்தின் புதிய பக்கங்களை
சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தார்.

- மு.முகமது பாட்சா*
27 /04 /2018

Thursday, 26 April 2018

ஓவியம் வரைகிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

கனவு தேசத்திற்குள் நுழைந்து 
தூரிகையெடுத்து 
ஓவியம் வரைகின்றேன்... 
நகாசு தொடுதல்களில் 
வண்ணங்கள் 
மாயம் பூசி ஜாலங்கள் புரிகின்றன... 
நட்சத்திர மின்னல்களில் 
நாட்டியாஞ்சலி நடைபெறுகின்றது, 
காணாத அருவியொன்று 
கரை புரண்டோட 
காதலர்களின் மெல்லிய ஆடை 
தெள்ளிய நீரில் நழுவிச் சாய 
நாணம் நழுவுகின்றதென 
எழுதும் கவிஞனை 
நானெப்படி வசை பாடுவது ? 
வண்ணங்களைக் குழைத்து 
வாரியிறைக்கிறேன் அவன் மேல் 
அதைக் கவிதைக்குள் இடம் மாற்றி 
பட்டாம் பூச்சிகளைப் பறக்க விடுகின்றான், 
வேறுவழியில்லாமல் 
பூக்களையெல்லாம் வரைகின்றேன்... 
தேனீக்களும் அடம்பிடித்து 
ஓவியத்திற்குள் நுழைந்து 
இடம் பிடிக்கின்றன 
கூட்டிற்காக வரைந்த மரங்களில் 
மந்திகள் இடம் தாவிக் கொண்டாட, 
இளங்காற்று வந்தென்னை 
இருக்கையில் சாய்க்க... 
நெட்டியெடுக்கும் அவளை மட்டும் 
எப்படி மறந்து போனேன் 
ஓவியத்தில் என்றும் நிலையாயிருத்த !

- மு.முகமதுபாட்சா*
27/04/2017

மனம்

மனம் 
செறிவாக இருப்பதேயில்லை

வெற்றிடங்களை வைத்துக் கொண்டு 
நிரப்புவதற்காக 
பொருட்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறது,

அஃதோர் 
எல்லையில்லா வானத்தை விரிக்கிறது

வசந்தங்களைத் தேடியலைகிறது

துயரங்களுக்குள் 
துப்பட்டா போட்டு பதுங்கிக் கொள்கிறது,

ஆசைகளை அடுக்கி வைத்து 
மாளிகையெழுப்பி உட்கார்ந்து கொள்கிறது,

பசி தீராமல்தான் அலைகிறது...அலைகிறது 
அலைந்து கொண்டேயிருக்கிறது...

வெற்றிடங்களை இன்னமும் 
நிரப்ப முடியாமல் தவிக்கிறது...


தவ போகர்களின் மனத்திலும் 
புகழென்ற எச்சத்தை ஒட்டிவைத்துவிட்டு 
தத்துவம் பேசித் திரிகின்றது,

- மு.முகமது பாட்சா*

27/04/2017

Wednesday, 25 April 2018

இன்ஷா அல்லாஹ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, புல் மற்றும் வெளிப்புறம்

ஓநாய் பார்வைகள் ஒளிந்திருக்கின்றன
ஓடிடாதே என் ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் அவை சிதைந்துவிடும்

வேலி போட்டவன் பயிரை வளர்த்தவன்
மேய்ந்திடாதே ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் புல் எங்கும் இருக்கும்

கருவை முள்ளும் கருணை கொடுக்கும்
கலங்கிடாதே ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இருக்கும்

இங்கு நிழலைத்தானே நிழல் மேய்கிறது
எங்கே போனாய்  ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் விரைவில் கிடைப்பாய்

நம்பிக்கைதானே இன்ஷா அல்லாஹ்
நானும் காத்திருக்கிறேன் நீயும் விரைந்து வா.

- மு.முகமது பாட்சா*
26 /04 /2018


Tuesday, 24 April 2018

யாக்கை யாப்பில்லாத கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கனவு பெருவெளியின் காற்று
நிசாந்தம் நிலையில்லா பிறப்பு
கூடுகள் கலையக்கூடியது
நூக்கம் பறவையின் சிறகு மொழி
அகலிடத்தின் அகலம் நொச்சியாம்
அனிகம் அனாயாச கௌரவம்
நீதியின் மறு பெயர் நிழலி
நிடூதனம் வார்த்தைகளின் சாயை
சாகரம் அல்லலுறும் மனசு
சத்தியம் சந்தர்ப்பத்தின் முகமூடி
மூகன் மூச்சனின் வாள்
முகவரி முகமேயில்லாத பிம்பம்
யாப்பு கவிதைகளின் அணி
யாக்கை யாப்பில்லாத கவிதை
கனவு பெருவெளியின் காற்று.

- மு.முகமது பாட்சா*
23 /04 /2018

நீயும் எரிந்து கொண்டிருப்பாய்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

என் சிறகுகளைப் பிடுங்கி கொளுத்திவிட்டு
பட்டாடைகளை 
அணிந்து கொள்ள சொல்கிறாய்,
என் தேகம் 
வர்ணனைகளால் பூசப்பட்டிருக்கிறது,
நான் நிற்குமிடத்தில்
நிழல்கள் என்னையே நோட்டமிடுகின்றன,
நானென்பது நீயாகிப் போனதால்
நான் நானாகவேயில்லாமல் நிற்கிறேன்,
வார்த்தைகளின் மழையால்
அவ்வப்போது பன்னீர் தூவுகிறாய்...
வசந்தம் என்பது
என் கனவுகளின் முடக்கம்,
உன் ஆற்றாமையின் அந்தரங்க பசி
அடிக்கடி என் மீதே படர்கிறது
வீணை என்கிறாய் பனுவல் என்கிறாய்
வாசித்து முடித்ததும் 
மூலையில்தான் எறிகிறாய்...
என் உறங்காத இரவுகளின்
ஒரு மூலையையாவது கொளுத்திப் பார்....
என்னோடு சேர்ந்து நீயும் எரிந்து கொண்டிருப்பாய்.

- மு.முகமது பாட்சா*
24 /04 /2018

சாண்டில்யன் கதை புத்தகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தப் பழைய புத்தகத்தின் 
18ம் பக்கம் உனக்கே உனக்கானது
அங்குதான் உன் ஒட்டுப் பொட்டு 
இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

2ம் பக்கத்தின் சில வரிகளை 
நீ கோடிட்டு வைத்திருக்கிறாய்...
அங்கிருந்து செல்லும் வரைந்த அம்பு
23ம் பக்கத்தின் 
சில வரிகளோடு சேர்ந்து விடுகிறது...

காதலைச் சொல்ல நீ 
கற்றுக் கொண்ட தந்திரத்திற்கு 
சாண்டில்யன் துணை போனதொன்றும் 
ஆச்சரியமில்லை

72ம் பக்கத்தில் உன் விரல்களை 
என் விரல்களோடு பின்னத் தொடங்கினாய்
அங்கிருந்துதான் உன் கண்களையே 
நான் வாசிக்கத் தொடங்குகிறேன்...

உன்னிதழ் வரிகளில் என்னிதழ் வரிகளைப் பொருத்தி
கவிதைகளை நெய்கிறேன்...
நாடாவாக உன் விழிகள் அலைகின்றன

ஊடையும் பாவுமாக ஓடிக் களித்து
அறுக்கும் போது கிழிந்த துணி
கவிதைகளோடு கந்தலாகி கீழே கிடக்கிறது

கடைசி பக்கத்தில் நீ வரைந்த இதயம்
இன்னமும் 
துடித்துக் கொண்டேதான் இருக்கிறது...

சுபம்

சாண்டில்யன் எழுதாத இந்தக் கதை புத்தகம்
கவிதை புத்தகமாக 
என்னிடம் மட்டுமே இருக்கிறது

நீ யாருடைய கவிதையை 
இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறாய்?

- மு.முகமது பாட்சா*
25/04/2018

Saturday, 21 April 2018

இரத்த பிசுபிசுப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தக் கதையின் முடிவு
ஒரு பாதகக் கொலையில் முடிந்திருந்தது,
கதையின் ஆரம்பம்
காதலாகத்தான் தொடங்கியது,
எழுதியவன் பேனா
அவளின் தேகத்தை எள்ளவும் விடவில்லை,
இரசனையென்பது
வாசிப்பவனையும் தொற்றிக் கொள்கிறது,
இடையில் வந்தவன் நண்பனாகிறான்,
அவனிடம் ஒட்டிக் கொண்ட பிரச்சனை
பக்கங்களை
எச்சில் தொட்டு நகர்த்துகிறது...
விழுந்து கிடந்த ஆயுதத்தின் இரேகைகளை 
இடம் மாற்றிக் கொண்டிருந்தவர்கள்
பிணத்தை கூறுக்கு அனுப்பி வைத்தார்கள்,

புத்தகத்தை மூடிவிட்டு
கைகளை கழுவிக் கொள்கிறேன்
இரத்த பிசுபிசுப்பு அறுவெறுப்பாக இருக்கிறது.
கதவைத் தட்டிவிட்டு
உள்ளே வரலாமா என்று நுழைந்த காவலதிகாரி
கண்களில் எழுதப்படாத அடுத்தகதையை
துழாவி தேடிக் கொண்டிருந்தார்.

- மு.முகமது பாட்சா*
21/04/2018


Friday, 20 April 2018

திக்ருகளின் ஹூ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சூஃபியின் புல்லாங்குழலிசை 
சுயம் மறந்து சுற்றுகிறது
திக்ருகளின் ஹூ 
மூன்றாம் பால்வெளியில் கடக்க
கோடியின் பெருக்கத்தில் 
விண்மீன்கள் சுழல்கின்றன
ஆசை நிரம்பிவழியும் கோப்பையில்
எத்துணை ஈக்கள் 
பெருங் காற்றின் வெளியிடை
சுற்றித்திரிகிறது வெற்றுத் தேகம்
அதிரசமுண்டவன் 
அடக்கவிடத்தில் புழுக்களின் தீனி...
ஒட்டகத்தின் பசி முட்களை அறிவதில்லை
நேசியை வாசிக்காதவன்
நித்திரையில் தினந்தினம் யாசிக்கிறான்
பசியைப் பார்த்து பயந்தவன்
பசியோடுவே சாகிறான்...
தேசாந்திரியின் இசை 
தேடுதலில் மட்டுமே தொலைந்து போக
இறந்து போன காகத்தினருகில்
ஒரு பூ விழுந்து கிடக்கிறது....
யாருக்காக அழுகிறது இத்துணைக் காகங்கள்?

- மு.முகமது பாட்சா*
20 /04 /2018

இவர்களைத் தெரியுமா?

தானியங்கு மாற்று உரை இல்லை.

டோன் மில்ட்டனைத் 
தெரியுமா உங்களுக்கு? 
தெரியாதென்றால் 
அவரை எனக்கு 
நன்றாகவே தெரியும்... 
அவரது 
பூனைகளின் கூடுகளுக்குள் 
நானும் 
நுழைந்து வந்திருக்கிறேன், 
கேவின் ஜோஸ்வாவை 
உங்களுக்கு 
தெரிந்திருக்க நியாயமில்லை, 
அமெரிக்கன் டைம்ஸில் 
அவரது கவிதை மொழிகள் 
அத்துணைப் பிரசித்தம் 
கிமிக்கோ ஷிகியின் 
ஜப்பனீஸ் கதைகளில் 
என் கவிதைகளும் 
கடந்து போகின்றன... 
இவர்களைப் 
படிக்காத கவிதைகள்தான் 
ஷெல்லியையும், 
ஜான் கீட்ஸையும் மட்டுமே 
தூக்கிப் பிடித்து திரிகின்றன, 
அவை நீயுட்டனின் 
மூன்றாம் விதிகளுக்குள் 
முக்காடிட்டும் 
பதுங்கிக் கொள்கின்றன, 
இணையத்தில் தேடிப் பாருங்கள்: 
நிச்சயம் இவர்கள் யாரும் 
உங்களுக்கு 
அகப்படவே மாட்டார்கள், 
நானும் ஒரு பந்தாவிற்காகத்தான் 
இந்தக் கவிதையில் 
இவர்களைப் பிரசவித்திருக்கிறேன்! 
இனியாவது 
தமிழ்க் கவிஞர்களையும் 
தமிழ் அறிஞர்களையும் 
தூக்கி பிடிக்கப் பாருங்கள் ! 

- மு.முகமது பாட்சா*
21/04/2017

Thursday, 19 April 2018

சன்னலின் வெளிச்சம்

சன்னலின் வெளிச்சம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நானில்லாத அறை
தேநீர் கோப்பையை வெறித்துப் பார்க்க
நீண்ட வெளிச்சம்
சன்னலுக்குள் வேகமாக நுழைகிறது
சன்னலின் மறுபக்கம்
சில முகங்கள் எட்டிப் பார்க்கின்றன
நெருஞ்சி முள்ளின் பதம் நீக்கி
குருவியொன்று கனிக் கொய்கிறது
மூங்கிலில் நெளியும் பச்சைப்பாம்பு
இலைகளை சரசரக்க
வேட்டை முடித்து ஓணான் நகர்கிறது
எங்கேயோ கேட்கும் அழுகுரல்
ஓர் இழவிற்கானது
நீராடாத வாய்க்காலின் பனைமரம்
மேகங்களுக்காகவே காத்திருக்கலாம் 
வார்த்தையை ஒட்டிக் கொண்ட விழிகள்
சன்னலுக்கு வெளியே காத்திருக்க
சூடாறிய கோப்பையில்
நான் மெல்லிய ஆடையாகப் படிகிறேன்

- மு.முகமது பாட்சா*
19/04/2018







Tuesday, 17 April 2018

பொய்யின்மெய்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி

மெழுகுவர்த்தியைப் பாராட்டுகிறோம்
தீக்குச்சிகளை மறந்துவிட்டு

தண்ணீரைச் சேந்தியது வாளி மட்டுமல்ல
தாம்புக் கயிறும்தான்

வேர்கள் 
நீரைத்தேடி அலையவில்லையென்றால்
விருட்சங்கள் தலையாட்ட முடியாது

எறிந்தவனின் பந்து பறக்கிறது
காற்றை எளிதாக மறந்துவிடுகிறோம்

துரோணனின் சூழ்ச்சிதான்
ஏகலைவனின் கட்டை விரலை
காணிக்கையாகக் கேட்டது

நிழலை இருட்டென்றுதான் சொல்லுகிறோம்
இருட்டுதான் 
வெளிச்சத்தை அடையாளம் செய்கிறது

வனங்களுக்குள் 
பதுங்கிக்கொள்கிறது மகா பிரபஞ்சம்
கடலுலகம்  காட்சிப் பொருளல்ல...

ஆன்மாவிற்கு அடையாளம் கிடையாது
ஆனாலும்
பொய்யின் மெய் தினந்தினம் புலம்புகிறது

- மு.முகமது பாட்சா*
18 /04 /2018


ஒற்றை இறகு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

காற்றில் மிதந்து வந்த இறகு
சன்னலின் கதவில் ஒட்டிக் கொண்டது
தோற்றப்பிழையெனக் கண்ணாடியை 
துடைத்து மாட்டுகிறேன்
புறாவொன்றின் கதறல் செவ்வானத்தை நகர்த்த
கடலில் மூழ்குகின்ற சூரியன்
கண்ணீரை  மறைத்துக் கொள்கிறான்
'சபிக்கப்பட்ட ஆயுதங்கள் 
இங்குச் சமாதானம் பேசுகின்றன...'
தொக்கி நிற்கிறது அந்தக் கவிதையின் வரி
சன்னலைத் திறந்து வைக்கிறேன்
உள்ளே நுழைந்த இறகு
கவிதையின் வரிகளில் ஒட்டிக் கொள்கிறது
தேநீர் குவளையில்
கழுகின் படம் சூடாகப் பறக்க
இதழின் சூட்டை இலேசாகத் தணித்து 
கவிதையை தொடர்கிறேன்
போதிமரம் குறுகி போன்சாயாக மாற
புத்தனின் கால்வழித் தடங்கள்
கடல் மணலில் புதைந்து கிடக்கிறது...
மதங்களை விற்றுக் கொண்டிருந்தவர்கள்
இலவசமாக 
உயிர்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்
இறகையெடுத்து 
இப்போது பூந்தொட்டியில் வைக்கிறேன்
அழகு என்பதும் பெரும் வலிதானென்று
அந்தக் கவிதை 
தன்னை முடித்துக் கொண்டிருந்தது.

- மு.முகமது பாட்சா*
17 /04 /2018




Monday, 16 April 2018

அறுக்கக்கூடாத பிணம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

ஒரு மௌனத்தை அறுவை சிகிச்சை 
செய்து கொண்டிருந்தார்கள்
அதனுள்ளிருந்து 
சில பட்டாம் பூச்சிகள் பறந்து சென்றன
சில மழைத்துளிகள்
குளுமைக் கட்டிகளாக உறைந்திருக்க
காமத்தின் பிசுபிசுப்பு
ஆங்காங்கே வழிந்து கொண்டிருந்தது
உறக்கம் தொலைத்த இரவுகள்
பச்சைப் பாசிகளாக கட்டியிருந்தன
மரமொன்று வளர்ந்து
விழுதுகளை வேர் விட்டிருந்தது
தபயோகியின் தரிசனமாக
குரங்கொன்று அழுகி இறந்து கிடக்க
பாம்பொன்று நெளிந்து நகர்ந்தது
பூனையின் கண்கள் வெறித்துக் கிடக்கின்றன
சாக்கடைப் புழுக்களெல்லாம் 
சரசரவென்று வெளியேறத் தொடங்க
அங்கிருந்த நகர்ந்த மருத்துவர்கள்
எழுதி வைத்த அந்த  ஆய்வு குறிப்பு
'மௌனம் என்பது  
எப்போதுமே அறுக்கக் கூடாத பிணம்' 
என்றே எழுதியிருந்தது.

- மு.முகமது பாட்சா*
17 /04 /2018

சுதந்திரமானவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நம்புங்கள் நான் சுதந்திரமானவன் 
ஆனாலும் நானொரு சிறைவாசி

என் கைகளில் துப்பாக்கியிருக்கிறது
பிஸ்டலின் முனை
எப்போதும் என்னைப் பார்த்தபடி
என் வார்த்தைகளின் மொழிபெயர்ப்பு
என்னைத் தீவிரவாதியென்று சொல்கிறது

நம்புங்கள் நான் சுதந்திரமானவன்
ஆனாலும் நானொரு சிறைவாசி

என் தேசத்தின் மலர்களில்
தினந்தோறும் கேள்விகள் பூக்கின்றன...
பதில்கள் மட்டும் உலர்ந்தேதான் கிடக்கிறது
விழிகளைக் கழற்றி வைத்து விட்டுத்தான்
இங்கு இதிகாசங்களையே படிக்கிறேன்...
என் நாக்கில் சொருகப்பட்டிருக்கும் அம்பு
நிச்சயம் பிரார்த்தனைக்கானதல்ல
என் காதுகளை 
களிமண் சுவர்களால் மறைத்துக் கொள்கிறேன்
வண்டுகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக

நம்புங்கள் நான் சுதந்திரமானவன் 
ஆனாலும் நானொரு சிறைவாசி

இருட்டைத்தான் 
வெளிச்சமென்று எனக்கு போதிக்கப் பட்டிருக்கிறது...
இருட்டில் வாழ 
எனக்கு எப்போதும் பிடிப்பதேயில்லை... 
என் கால் சக்கரங்களின் இயக்கியைத் தேடாதீர்கள்
ஐந்து வருடத்திற்கொருமுறை
யாரிடமாவது கொடுத்து  விடுகிறேன்
என் சிரிப்பிற்கான இயக்கம் என்றும்
முகமூடிகளுக்கு மட்டுமே சொந்தமானது...

நம்புங்கள் நான் சுதந்திரமானவன் 
ஆனாலும் நானொரு சிறைவாசி

- மு.முகமது பாட்சா*
16/04/2018





நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

ஐந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுகளையும்
பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் கொடுத்த
கண்ணம்மா கிழவி
பேரனின் தலையைத் தடவிக்கொண்டே சொன்னாள்
என் பொணத்தை எடுக்க
யாருகிட்டேயும் கையேந்திடாதே!
சரியென்றழுத 
பேரனின் கண்ணீருக்கு மட்டுமேத் தெரியும்
அவை  எப்போதுமே செல்லாதென்று!

-மு. முகமது பாட்சா*
16 /04 /2018

Saturday, 14 April 2018

நானும் நாடோடி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

என் விரல்களையெடுத்து
நீயெழுதும் கவிதையை இரசிக்கிறேன்
காற்றின் சிறகுகளில் ஒட்டிக் கொள்ளும் 
மகரந்த துகள்கள்
மொழியறியாக் கூட்டிற்குள்
எழுத்துகளை கடத்திச் செல்கின்றன
துளி நீரருந்தும் காகம்
இயைபுக்குள் நுழைந்து கொள்ள
அருகாமையின் வாசம் 
வானத்தை பரத்துகிறது பரவசத்திற்குள்
வேடனின் குறியெய்யா அம்புகள்
குடுவைக்குள் உறக்கம் தொலைக்கின்றன
வில்லின் நாணெடுத்து இசையை மீட்டுகிறேன்
வேடனை மான்கள் வேட்டையாடுகின்றன
அரூப அசரீரிகள் ஒன்றிணைந்து
அறைகிறது என் பெரும் வனத்தை
நீயும் நானும் எளிதில் பற்றிக் கொள்கிறோம்...
காகம் பசியாற 
அலகுகளை தீட்டிக் கொள்கிறது
எழுதிய விரல்களில் முத்தமொன்று 
முற்றுப் புள்ளி வைக்க
முடியாத கவிதையை அணைத்துக் கொள்கிறாய்
முகவரியே!
நானும் கூட ஒரு வழிப் போக்கன்தான்
வார்த்தைகளை இன்னமும் தேடி அலைகிறேன்.

- மு.முகமது பாட்சா*
15 /04 /2018

Friday, 13 April 2018

சட்டத்துக்குள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

சிலைகளுக்குள் சிக்கிக் கொண்ட 
பாபா சாகெப் அம்பேத்கரை 
எப்படித்தான் மீட்கப் போகிறோம்? 
அடிமை விலங்கை அகற்றிவிட்டுப் போவது 
அத்துணை சுலபமாகத் தெரியவில்லை, 
வீதிக்கொரு சிலையை வைத்துவிட்டு 
சாதிக்கொரு சங்கம் வைத்து திரிகின்றோம், 
வீட்டுக்கொரு அம்பேத்கரை 
யாராவது விதைத்தோமா? 
பாடப் புத்தங்களில் தொலைத்த மனிதரை 
வீட்டில்வைத்து படிக்க யார் தடை போட்டது? 
பிறந்த நாளில் மட்டும் 
மாப்பிள்ளையாகி விடுகிறார் பாபா சாகெப்  
சட்டமியற்றியவரை 
சட்டத்துக்குள் 
அடைத்து வைத்திருக்கிறது  சமூகம்  
ஏனென்றால் அவர் இன்னமும் ஒரு தலித்

- மு.முகமது பாட்சா*
14/04/2017

சாத்துவிகம் சரியா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கூட்டம்

எமெக்கென்று ஒரு தேசமுமில்லை 
எமெக்கென்றொரு ஊருமில்லை! 
குடிக்கின்ற நீரிலிமொரு 
தடுக்கின்ற மதமுமிருந்தால் 
எமெக்கென்று ஒரு தேசமுமில்லை... 
எமெக்கென்றொரு ஊருமில்லை! 
விலங்கினினும் கேடாக 
திரிந்திடும் பிறவியென்று 
சாத்திரம் வசையும் சொன்னால் 
எமெக்கென்று ஒரு தேசமுமில்லை! 
எமெக்கென்றொரு ஊருமில்லை! 
தீண்டாமைத் தீயின் ஊற்றில் 
எரிகின்ற சாதிகளா நாங்கள்? 
சாகாமல் சாகின்றோமே...உத்தமனே! 
சாத்துவிகம் சரியென்றாகுமா? 

(மேதை. அம்பேத்கர், தங்களின் சமுகத்தின் 
கொடுமையான நிலையை 
காந்திகளிடம் பகிர்ந்த வேதனை வார்த்தைகளை 
கவிதையாய் மாற்றியுள்ளேன்) 
-
- மு. முகமது பாட்சா*
14/04/2016

இறந்துவிட்டதாக...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உணவு

கோப்பையை நிரப்பியவன் 
குளுமை கட்டிகளைப் போட்டான்
எரிச்சலுக்கு 
இதமாக இருக்குமென்பது அவனது வாதம்
சிறிது மிடறியவன் 
உதட்டை துடைத்துக் கொண்டான்
நீ யாரென்று அவன் கண்கள் பேசின...
என் மௌனம் 
அவனை ஒன்றும் செய்யவில்லை
கோப்பையை உடைத்து 
கைகளை கீறிக் கொண்டான்
இரத்தம் வழிந்தது
பயப்படாதே சாகமாட்டேன் என்றான்
இறந்துவிட்டால் 
சமாதி யாருக்காகக் காத்திருக்கும் ?
சப்தமிட்டு என்னைத் திட்டினான்...
நீ புத்தன் நான் போகி
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
ஓங்கி அறைந்தான்
சுமையாவை கொன்றதும் நீதான்
பழித்தவன் காறி உமிழ்ந்தான்
இரத்தம்  சட்டையில் தெறித்துச் சிதறியது
அவன் இறந்துவிட்டதாக
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் அங்குதான் நின்று கொண்டிருந்தேன்
அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

- மு.முகமது பாட்சா*
13/04/2018 


புலம்பல் நிற்கவில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

சுயமிழந்த வார்த்தைகளை 
ஆடைகளாக உடுத்திக் கொண்டிருந்தோம், 
கேவலமான பார்வைகளை 
எங்களின் முகங்களில் எழுதிவிட்டுச் சென்றார்கள், 
நடக்கும் பாதைகளில் முற்களைப் பரப்பிவிட்டு 
ரத்தினக் கம்பளமென்று 
பச்சையாகத்தான் பொய் சொன்னார்கள்... 
எங்களின் இரவுகளை 
அவர்கள் உறங்கவிட்டதே கிடையாது, 
பகலில் நாங்கள்தான் 
அவர்களுக்குப் பச்சை குதிரை விளையாட்டு... 
இவைதான் சாமிகளென்றார்கள் 
கும்பிடப் போனால் 
தூர நில்லு நீங்களெல்லாம் தீட்டு என்றார்கள், 
கேடுகெட்ட அவர்களையெல்லாம் 
தங்களைச் சாமியென்றே கூப்பிட வைத்தார்கள்.. 
அவர்கள் சொன்ன 
கடவுள்களின் பெயர்களைத்தான் 
நாங்களும் எங்களுக்கு வைத்துக் கொண்டோம்.... 
அவர்கள் என்றுமே 
கடவுள்களைத் தீட்டென்று சொன்னதே கிடையாது... 
தமிழில் பெயர்கள் வைக்கத் தொடங்கினோம், 
ஆச்சரியமாகப் பார்த்தார்கள்... 
அறிவுத் தளத்தில் நுழைந்து வந்தோம் 
அச்சத்துடன் பார்த்தார்கள்... 
உரிமைகளைக் கேட்டு வரும்போதுதான் 
தேசத் துரோகிகளென்று முத்திரை குத்தினார்கள்,

இப்போதும் அவர்களின் புலம்பல் நிற்கவில்லை

இறந்து போன ஈரோட்டுக் கிழவன்தான் 
எங்களையெல்லாம் கெடுத்துவிட்டதாகச் சொல்லி 
புலம்பிக் கொண்டே திரிகிறார்கள் !

- மு.முகமதுபாட்சா

13/04/2017

Thursday, 12 April 2018

கருப்புக்கொடி

கருப்பு கொடி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

இருண்டு போன நம்பிக்கையை
கைகளில் பிடித்து திரிகிறோம்
சன்னல்களை அடைத்துவிட்டு
காற்று வருகிறதென்று 
நன்றாகக் கதை சொல்கிறாய்
காய் நறுக்கும் கத்திகளெல்லாம் 
துருப்பிடித்துக் கிடக்கும் போது
ஆள் நறுக்கும் ஆயுதங்களை 
விற்பதற்காக வந்துவிட்டாய்...
ஏர் கலப்பையை பற்றி 
ஏதாவது தெரியுமா?
நிலம் விடும் 
பெரு மூச்சினையெல்லாம்
வளம்தரும் 
எண்ணெய் வயல் என்கிறாய்...
பால் நரம்பை நறுக்கிவிட்டு
அன்னையென்று சொல்வது அக்கிரமம்
நீ குடிக்கின்ற நீருக்குத் 
தடை வாங்கினால்
எத்துணை நாள்தான் உயிர் பிழைப்பாய்?
கோலோச்சுவது உன் அகம்பாவம்
குடிகளின் கைகளில்
இப்போது கொடி எழுகிறது
வயிற்றுத் தீ வானில் எட்டும் போது
எரிந்துவிடும் சர்வாதிகாரம் .

-மு.முகமது பாட்சா*

12/04/2018

உடைந்து கிடக்கிறது



இழவு வீட்டின் ஒப்பாரிகளில் 
எங்காவதொரு மூலையில் 
மது பாட்டில்கள் உட்கார்ந்திருக்கின்றன,

வன்புணர்வுகளின் வழக்குகளில் 
மறைந்திருக்கும் மது பாட்டில்கள் 
எப்போதுமே கண்களுக்குத் தெரிவதில்லை...

அரசியல் கூட்டங்களைக் கூட 
மது பாட்டில்களும், 
பிரியாணி பொட்டலங்களும்தான் 
வசியம் வைத்து வரவழைக்கின்றன,

சுயம் கற்றுக் கொடுக்கும் 
மது பாட்டில்கள் 
உறவுகளை நேசிக்கக் கற்று தருவதேயில்லை,

வீதிகளில் விழுந்து கிடப்பது 
குடிகாரர்கள் மட்டுமல்ல... 
தேசத்தின் அவமானமும்தான்,

ஆலை ஓநாய்களின் 
இதழ்க்கடைகளில் ஒட்டியிருக்கின்றது... 
ஏழைகளின் பச்சை ரத்தம் ,

இப்போதுதான் மெல்லிய விடியல் 
புரட்சியுடன் புறப்பட்டிருக்கிறது,

வீதிகளில் உடைத்துக் கிடப்பவை 
மது பாட்டில்கள் மட்டுமல்ல, 
அரசாங்கத்தின் பொய் முகங்களும்தான்....

இது போராட்டத்தின் உச்சமல்ல 
போருக்கு முன்பாக நடத்தும் 
ஓர் ஒத்திகை மட்டும்தான்!

- மு.முகமது பாட்சா*
12/04/2017

அம்மா கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், குழந்தை மற்றும் குளோஸ் அப்

அம்மாவின் கவிதையில் 
முத்தங்கள் மிளிர்கின்றன! 
ஓரப் பார்வையில் அவள்வீசும் 
புன்னகைக் கவிதையை 
யார்தான் எழுதமுடியும்? 
கற்பனைக்குள் அடங்காத கவிதையவள் 
அவளின் 
வெப்ப மூச்சுக் காற்றின் கவிதைக்கு 
இலக்கணத்திலேது பிழை! 
நானெழுதும் 
மொத்தக்கவிதையும் கூட 
அவளுக்குத்தான் சொந்தம்... 
ஏனென்றால், 
நானே அவளெழுதிய கவிதைதான் ! 

- மு.முகமது பாட்சா*
12/04/2017

Popular Posts