Tuesday, 30 July 2019

சன்னல் திரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

குழுவாக அமர்ந்து 
பேசிக்கொள்ளத் தொடங்கினோம் 
எதிர் வீட்டுப் பிரச்சனைதான் என்றாலும் 
தனியாகக் குடிவந்திருக்கும் அவளைப் பற்றியதுதான் 
அவள் பெயர் என்னவென்று இதுவரை தெரியாது... 
பொதுவில் அவளுக்கு 
ஆகரி என்று பெயர் வைத்தவன் ரகுமான் ரசிகன் 
இரவில் பாடிக்கொண்டே இருப்பாள்.. 
வேலை நிமித்தம் வந்தவளாக இருக்கலாம் 
ஆனாலும் இரவில் அடிக்கடிக் காணாமல் போகிறாள்... 
நுரைத்த மதுவை 
தம்பளர்களில் ஊற்றிய இலக்கிய ரசிகன் 
அவள் ஒரு படிமக்குறியீடு எனப் பிதற்றத் தொடங்கினான்... 
சூர்யாவிற்கு ஏற்ற ஜோடி இவள்தான் என்றவன் 
ஓர் உதவி இயக்குனன் 
நான்கு வண்ணங்கள் அவசியம் தேவை 
அப்போதுதான் அந்த முகத்தின் புன்னகை வெளிவரும் 
என்று சிலாகித்தான் ஓவியம் பயில்பவன்... 
நானும் கலந்து கொள்ளவா? 
என்று அருகில் வந்தவள் 
பிரன்ச் நறுமணம் பூசியிருந்தாள்.... 
ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம்...
தன் பெயர் ஆகரி என்றவள் 
வேலைத்தேடுவதாகச் சொன்னாள்...
குறும்படமொன்றில் 
நடிப்பதாகச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள்.. 
நான்கு வண்ணங்கள் 
அவளின் முகத்தில் பிரதிபலித்தது... 
அவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க 
அவள் வீட்டின் சன்னல் திரை 
மெல்ல அசைந்து கொண்டிருந்தது 
அவளின் நிழல் பாட்டொன்றைப் பாடிக் கொண்டிருக்க... 

- மு.முகமது பாட்சா*
30/07/2019

லட்சுமணக்கோடு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சீதையை வருத்திய லட்சுமணக்கோடு 
நீண்டுகொண்டே செல்கிறது.... 
அகலிகையின் சாபம் இணையும் புள்ளியில் 
மாரீச மோட்சம் 
மானின் அம்பை பிடுங்கியெறிய... 
விழுந்த இடத்தில் சூர்ப்பனைகையின் துயரம் 
தொட்டுத் தொடர்கிறது அசோகவனத்தில்.... 
நிழலில்லாத் தகிப்பில் 
ஜானகி மிதிலையைத் தேடுகிறாள்.... 
'பார்த்து நடந்துக்க... 
இனி எல்லாமே புகுந்த வீடுதான்' 
என்று சொல்லும் அப்பாவின் விரல்கள் 
ஒரு நீண்ட கோட்டை வரைந்து செல்ல...

- மு.முகமது பாட்சா*
30/07/2019

கட்டிய ஒட்டகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஒட்டகத்தைக் 
கட்டி போட்டுவிட்டு 
இந்தக் கவிதையை எழுதுகிறேன்...

ஒட்டகம் அலைந்துகொண்டே இருக்கிறது 
என்னை மேய்த்துக்கொண்டு..

கூடாரத்தை நன்றாக மூடி வைத்துவிட்டு 
ஒட்டகத்துடன் படுத்திருக்கிறேன் 
திமில்கள் 
உரசிக்கொண்டே இருக்கின்றன...

ஒட்டகத்தின் மீது 
எறும்பொன்று சவாரி செய்து கொண்டிருக்கிறது 
ஒட்டகத்திற்குத் தெரியுமா?

ஒட்டகம் என்னை அருந்துகிறது 
நான் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்

பாலைவனத்தைச் 
சுருட்டி வைத்துவிட்டு 
கூடாரத்திற்குள் நுழைகிறேன்... 
ஒட்டகத்தைக் காணவில்லை!

- மு. முகமது பாட்சா*
29/07/2019

Monday, 29 July 2019

ஹைக்கூ கவிதைகள்

ஊஞ்சலாடும் நிலா

அந்தக் கவிதையை 
இப்படித்தான் எழுதவேண்டும் என்று 
நிபந்தனைகள் விதித்திருந்தார்கள்... 
ஆரம்பத்தில் 
'ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டியாடும் நிலா' 
என்ற வரியை 
நியமனமும் செய்து விட்டார்கள்... 
காதலுக்குள் ஊடுருவி 
சிலர் அழகாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருக்க 
ஒருவன் தாயை 
அதில் தாலாட்டிக் கொண்டிருந்தான்... 
நிலாவை ஊஞ்சல்தான் 
சிறை வைத்திருப்பதாக ஒருவன் 
குற்ற நகல் எழுதிக் கொண்டிருக்க.....
ஒருவன்
பூமியைக்காட்டி ஒருத்தி 
நிலாவுக்குச் சோறூட்டுவதாகச் சிலாகித்தான்... 
என் கைகளை உதறித் தள்ளிய தூவல் 
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டியாடும் நிலா 
ஊஞ்சலாடும் போதுதான் 
பூமி இங்குப் 
பற்றி எரிந்து கொண்டிருந்ததாக எழுதிவிட்டு 
கூர்ப்பை உடைத்துக் கொண்டு 
கீழே விழுந்து இறந்தது.

- மு.முகமது பாட்சா*
28/07/2019

உப்புமா கம்பெனி



'உப்புமா கம்பெனி' 
அந்த நிறுவனத்தின் பெயர் 
அப்படித்தான் எழுதப்பட்டிருந்தது... 
இப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள்! 
வியந்து போனேன்... 
ஒரு பிளேட் உப்புமா கேட்டு 
உள்ளே நுழைந்த போது 
அஃதொரு 
கன்சல்டண்ட் கம்பெனி என்று சொன்னார்கள்... 
உப்புமா எங்குக் கிடைக்கும்? 
என்று ஆராயத் தொடங்கினார்கள்.... 
அதன் நிர்வாகி 
உப்பு கிடைக்கும் இடங்களையும் 
மாவு கிடைக்கும் இடங்களையும் 
பரிந்துரைக்கத் தொடங்கினார்.... 
ரவைதானே அதற்கு வேண்டும்? 
என்று கேட்டபோது... 
அவரது இணையம் 
பஞ்சாபிலுள்ள 
ரவை கம்பெனிகளைப் பட்டியலிட்டது... 
உப்புமாவுக்கு 
இத்தனை அலப்பறையா என்று நாங்கள் 
எழுந்து கொண்டபோது... 
செகரெட்டரி 
அவரது மேசையின் மேல் 
ஒரு பிளேட் 
உப்புமாவை வைத்துவிட்டுச் சென்றாள்.

- மு. முகமது பாட்சா*
27/07/2019

ஆற்றூர் ரவிவர்மா கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

என் தாத்தாவின் நெருக்கம் 
கோடுகளும் குறிகளும் உள்ள 
பிரிட்டிஷ் கொடி... 
அவர் அப்போது அங்கு 
அதிகாரியாக வேலை செய்தார் 
என் தந்தையிடம் 
மூன்று வர்ணக் கொடி இருந்தது... 
அவர் சுதந்திரப் போராட்ட வீரர்... 
நான் பிடித்தது செங்கொடி... 
என் பேரனின் கைகளில் இப்போது 
ஐம்பது நட்சத்திரங்களுடன் 
அமெரிக்க ஐக்கியக்கொடி !

- ஆற்றூர் ரவிவர்மா 
தமிழ் - முகமது பாட்சா*

நீங்கள் எப்படி?

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நானொரு பறவையென்று நினைத்தால் 
அஃது உங்களின் கோளாறு... 
சற்றுமுன்தான் ஒருவனைப் பார்த்துவிட்டு 
பூனையாகப் பதுங்கிச் சென்றேன்... 
ஆனாலும் விசித்திரம் 
அப்போது என் நிழல் புலியாக இருந்தது... 
அப்படித்தான் நேற்று 
மனைவியிடம் கரடியாக மாறி கத்தினேன் 
அவள் முயலாக மாறி விதிர்த்தாள் 
என் நிழல் சாத்தானாக மாறியிருந்தது... 
குரங்காக மாறி 
நான் தாவிக் கொண்டிருந்த போது 
சாலையிலொருத்தி மலராகச் சிரித்தாள்... 
என் நிழல்தானே.. 
வேறென்ன பன்றியாகத் திரிந்தது... 
இப்போது நான் 
நானாக இருந்ததைத் தேடிக் கொண்டிருக்கிறேன் 
நீங்கள் எப்படி?

- மு.முகமது பாட்சா*
26/07/2019

Thursday, 25 July 2019

நெய்திருக்கும் துணியொன்று

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நமக்கிடையில் 
மெல்லிய வெளிச்சம் போதுமாக இருக்கிறது... 
சன்னலிடை சரசரக்கும் கோணி 
எட்டி எட்டி பார்த்துவிட்டு அலைய... 
அப்படி என்னதான் பேசிவிடப் போகிறோம்? 
கீற்றின் மூங்கிலிடையோடும் எலிகள் 
சரசம் பாய்கின்றன... 
கிழிந்தப்பாயில் அழுந்திய முதுகில் 
கோலம் போட்டு இரசிக்கிறாய்.... 
உடைந்த இதயத்தை ஒட்ட வைப்பது 
உன் முத்தச்சூடு மட்டுமே... 
அட்டையில் தொங்கும் அந்தகார சாமிகள் 
காற்றில் திரும்பிக்கொள்கிறார்கள்... 
ஒத்திக் கொள்கிறோம் வியர்வை வாசத்தை 
பாவில் ஊடையோடி பரவசம் ஊசலாட... 
நெய்திருக்கும் துணியொன்று 
நேர்த்தியாய் விடியும் சில கிழிசல்களோடு... 
இது போதும் நமக்குக் காதலே! 

- மு. முகமது பாட்சா*
25/07/2019

Wednesday, 24 July 2019

மூச்சிரைக்கும் ஒன்பது துளைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

இடையைப் பற்றி எழுதிய கவிதையில் 
சொல்லொன்று நழுவுகிறது... 
வெட்கத்தைத் 
துடைத்துத் துடைத்து எறிகிறாள் 
வியர்வைக் கொப்பளிப்பு அடங்காமல்... 
தேகத்தில் 
நாயொன்று ஊடுருவித் திணற 
அதன் நாக்கு 
அகலத்தில் எதையோ ஆராய்கிறது.... 
நூறு எலிகள் பாய்கின்றன... 
விரகம் மீசையைத் தடவிக் கொள்கிறது... 
புல்லாங்குழல் எரிந்து கொண்டிருக்க 
ஒன்பது துளைகளும் மூச்சிரைக்கின்றன.... 
விருந்தினோரத்தில் 
குதறப்பட்ட எலும்புத்துண்டுகளோடு 
அவளது ஆடைகள்... 
பசி மீண்டும் வயிற்றைப் பிறாண்டியது!

- மு.முகமது பாட்சா*
25/07/2019

எதற்காக?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்... 
எனது தேசத்தில் நானில்லை .. 
இதுதான் என் தேசம் என்று கட்டமைக்கிறீர்கள்! 
என் கால்களின் மொழியை 
அறியாத காலணிகளை அணிந்திருக்கிறேன்... 
எனக்கான கல்வி உயரத்தில் தொங்குகிறது.... 
பீட்ஸா கடைகளில் தோசை கிடைக்கவில்லை 
நீருக்கான அரசியலில் 
உப்புக்கான விலையை மறந்தேவிட்டேன்... 
சைனாவோடு 
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்... 
அன்னிய மணம் தடவிக் கொள்கிறேன்... 
சுதேசிகளின் கைத்தடிகளில் அமெரிக்க முத்திரை! 
பிரான்சின் மது போத்தல்களில் 
ஆடைக் கட்டிக் கொள்கிறது சுதந்திரம்... 
சவப்பெட்டிக்கு 
அமேசான் ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய விளம்பரம்... 
மாட்டிறைச்சி - மனிதர்களைச் சாப்பிட்டு ஜீரணிக்க 
பீப்பர்க்கர் 
எளிதாகக் கிடைக்கிறது நட்சத்திர விடுதிகளில்... 
ஜெய் ஹிந்த் சொல்வதற்கு
எதற்காக 
ஜெய்ஸ்ரீ ராம் தெரியவேண்டும்.... ?
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...

- மு.முகமது பாட்சா*
24/07/2019

கனவுப்பெட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உட்புறம்

நீயும் நானும் 
கனவுகளைப் பெட்டியில் போட்டுப் 
பூட்டி வைத்திருக்கிறோம்.... 
அதனுள்ளிருந்து 
அவ்வப்போது மீகமச் சங்கீதம் இசைக்கிறது... 
இரவை 
அச்சத்துடன் நெய்யும் நிலவை இரசிக்கிறோம்... 
வானம் முழுவதும் 
துப்பாக்கிகளின் ஓசை 
நட்சத்திரங்களாய் துளைப் போட்டிருக்கின்றன... 
உனது எல்லையும் எனது எல்லையும் 
வேலிகளைத் தகர்த்து
காதல் தேசத்தைக் கட்டமைக்க... 
உன்னையும் என்னையும் பிரிக்க 
உரிமைச் சீட்டுகளால் மட்டுமே முடியும்.... 
நீ என் தேசத்துத் துரோகியென்றும் 
நான் உன் தேசத்துத் துரோகியென்றும் 
இராணுவத்தின் கண்கள் தேடிக் கொண்டே இருக்கட்டும்... 
எல்லைகளைக் கடந்த பிறகும் 
காதலென்பது காதல்தான் 
விடியும் வரை நன்றாக வெடிக்கட்டும் 
அவர்களின் விடிவிற்குள் வராத பட்டாசுகள்... 
விடிந்த பிறகு 
அவர்களே மூடி வைத்துவிடுவார்கள் 
நம் கதையை இரத்தச் சகதியில்.... 
அப்போது இந்தக் கனவுப் பெட்டி 
எந்த எல்லையில் புதைக்கப் பட்டிருக்கும்?

- மு.முகமது பாட்சா*
23/07/2019

விதுரம் கோர்த்த மழை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்

விதுரம் கோர்த்த மழையில் 
கண்களை ஊசலாட்டிக் கொண்டிருக்கிறேன்... 
நினைவுகளை அகலத் திறந்து 
நரம்புக்கருவிகளை இசைக்கிறாய்.... 
தோல் கருவியில் 
உரசும் விரல்களாய் 
வார்த்தைகள் உழல்கின்றன... 
பிரிவின் மௌனம் பேரண்டத்தின் பூகம்பம்... 
அடவுகளில் 
ஆடைக் கட்டும் பெரும் நிழலில் 
நான் - நீ 
நகர்ப் பறையின் உச்ச ஆரோபிதம்.

- மு.முகமது பாட்சா*
22/07/2019

Friday, 19 July 2019

வியர்வை முகிழ்த்தம்




இரவின் பிரமைக்குள் 
ஒரு நீண்ட மொழியாடல் உறைந்திருக்க.... 
உனக்கும் எனக்குமான 
பார்வைகளின் இடைவெளியில் 
சில பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன.... 
ஈரம் உலர்த்தும் பறவைகள் போல் 
சிலிர்த்து விரல்களைக் கோதியெடுக்கிறோம்... 
ஆயுள் பிரபந்தம் கோர்த்து 
மெல்லிய பாடலொன்று அரங்கேற... 
விலா எலும்புகளின் இசைக்கூட்டிலிருந்து 
தம்பூரா மீட்டும் வலி இழைகிறது... 
கச்சை நழுக்குமிரவு மிச்சமாய்ச் சுவைக்க 
எச்சில் இழையாடுகிறோம்... 
இன்னிசைக்குள் நுழையும் பிசுபிசுப்பில் 
வியர்வை முகிழ்த்தம் விழைய 
உனக்கும் எனக்குமான சங்கீதக் கீர்த்தனங்கள் 
நம் உதிரத்துளிகளில் ஒட்டிக்கொள்ள... 
இரவைத் துடைக்கிறது 
பிரபஞ்சத்தின் ஒரு பெரும் நாக்கு.

- முமுகமது பாட்சா*

19/07/2019

கழிவறைச் சுவர்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
அந்தக் கழிவறைச் சுவர்கள் 
தங்களைக் கழுவிக் கொண்டதேயில்லை... 
முதலில் வெள்ளை அடித்திருந்த போது 
மூக்கை மூடி கண்களைக் கட்டிக்கொண்டது... 
போவோர் வருவோரெல்லாம் 
பான்பராக்கின் எச்சில்களைத் துப்பிய போது 
விழுந்துவிடாமல் கடைகால் பிடித்துக் கொண்டது... 
சிலர் அதனிடம் 
குறைகளைச் சொல்லியழுதபோது 
தாமொரு பயனுரு என்று நினைத்தது... 
சிலர் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டிய போது 
காதுகள் இறந்துவிட்டன... 
சிலர் கைகளைக் கொண்டு சுகம் புணர்ந்தார்கள் .... 
கண்கள் அழுக்கானது... 
அஃது இப்போது ஒரு சித்திர கூடமாகவே மாறியது... 
ஆபாச சித்தர்கள் வரைபடங்கள் வரைந்து 
புணர்வியல் இலக்கணம் எழுதினார்கள்... 
அவனோ அவளோ அடிக்கடிக் கற்பழிக்கப் பட்டார்கள்... 
விந்துகளை வீசிவிட்டு அவர்கள் 
வெளியில் செல்லும் போது 
உயிரணுக்கள் சுவரில் மோதி இறந்துக் கிடந்தன... 
அது மட்டும் 
அவர்களின் அந்தரங்கத்தைத் 
தெளிவாகவே வாசித்துக் கொண்டிருந்தது....

- மு.முகமது பாட்சா*
18/07/2019

Wednesday, 17 July 2019

இடைவெளி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

உனக்கும் எனக்குமான இடைவெளியில் 
மேசையில் உட்கார்ந்திருக்கின்றன 
சில விவாதங்கள் ...
உன் கனவுக் கோப்பையிலிருந்து 
அவ்வப்போது மது அருந்திக் கொள்கிறாய்... 
உன் விரல்கள் நடுங்கும் போது 
சில வார்த்தைகள் என்னை விழுங்கித் தின்ன... 
நான் மௌனத்தை 
ஒரு குமிழிக்குள் அடைத்து வைக்கிறேன்... 
அதற்குள்ளிருக்கும் சில வண்ணங்கள் 
என் நிறத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது... 
குமிழுக்குள் அழுத்தம் அடர்த்தியாக 
வெடித்துச் சிதறுகிறேன்... 
நீ என்னெதிரில் இறந்து கிடக்கிறாய்.... 
என் மிச்சப்பட்ட வார்த்தைகள் 
அங்கிருந்து அழைத்துச் செல்கையில்... 
உன் விரல்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. 

- மு. முகமது பாட்சா*
17/07/2019

Monday, 15 July 2019

யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

அவரவர்கள் 
நடந்து சென்று கொண்டிருக்க.. 
ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான் 
அவன் மணிக்கட்டில் 
சில சாமிக் கயிறுகளைத் தவிர 
வேறொன்றுமில்லை....

யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

அமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்த 
தண்ணீர் லாரி 
பெண்ணையும் இறக்கிவிட்டுச் செல்கிறது... 
காலிக்குடங்கள் 
வீதியில் புரண்டு கொண்டிருந்தன...

யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

தமிழ் என்பதில் 
ழகரம் செத்து தமியானது 
இந்தியில் அரசுத் தேர்வுகள்... 
தும்கு இந்தி மாலும்?

யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்

ஆர்ட்டிக்கிள் 15 காணவில்லை 
தேடிக் கொண்டிருக்கிறார்கள்

யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

சற்று முன் 
இந்தக் கவிதை கைது செய்யப்பட்டுள்ளது... 
தேச விரோத செயல்களில் 
ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு...

- மு. முகமது பாட்சா*
16/07/2019

காணாத பக்கம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தக் கதையின் ஆறாம் பக்கத்தைத் 
தேடிக் கொண்டிருக்கிறேன் 
யாராவது பார்த்தீர்களா? 
அங்கிருந்துதான் 
அவள் ஆடைகளைக் கலைந்துவிட்டுச் சென்றாள் 
22 ம் பக்கத்தில் 
அவளைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் இருக்கிறது 
அதற்குப் பிறகு 
அவளில்லாமல்தான் கதை நகர்கிறது... 
149 வது பக்கத்தில் 
அவளை எரித்துக் கொண்டிருப்பவன் 
அவளது வெளி நாட்டு மகன்... 
மூடிவைத்த பிறகும் அவளில்லாத அந்தக்கதை 
உறுத்திக்கொண்டேயிருந்தது 
நிமிர்ந்து பார்க்கிறேன் 
மாலை போட்ட ஒரு படத்திற்கு 
அம்மா என்று பெயர் வைத்துச் 
சிறு விளக்கொன்று எரிந்துகொண்டிருந்தது.

- மு. முகமது பாட்சா*
15/07/2019

Sunday, 14 July 2019

உதிர அழுத்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

நானெழுதிய அந்த ஒற்றை வரி 
என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது 
எனக்கும் அதற்கும் சில சச்சரவுகள் உண்டு... 
அடுத்த வரியை எழுத மாட்டேன் என 
இறுமாப்பில் இருக்க... 
தான் உறங்கிவிட்டதாகப் பொய்க்கதை புனைகிறது 
அமைதியில் நகரும் அப் பொழுது 
ஆடைகளைக் களைந்து கொண்டு வெளியேற 
அவ்வரியை 
அழித்துவிடுவதென முடிவெடுக்கிறேன்... 
மசியைக் கொட்டி மறைத்தபின் 
வாய் திறந்த குப்பைக்கூடைக்குள் எறிகிறேன்..
ஆனாலும் 
சன்னல் வழியாக எட்டிப்பார்த்த அந்த வார்த்தை 
உள்ளே வரலாமா எனக் கேட்கிறது
நீ இறந்து விட்டாய் போய்விடு எனச் சப்தமிடுகிறேன் 
உன் மூளைக்குள்தான் நான் 
உட்கார்ந்திருக்கிறேன் என்று சிரிக்கும் 
அதன் ஆணவச் சிரிப்பில் 
நரம்புகளின் உதிரஅழுத்தம் எகிறித்தொலைக்க 
நான் இறந்து விட்டதாகச் சிலர் சொல்லிவிட்டு 
என்னருகில் நின்று 
அழுது கொண்டிருக்கிறார்கள். 

- மு. முகமது பாட்சா*
15/07/2019

Saturday, 13 July 2019

கவிச்சி

கவிச்சி
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, சூட்
சாத்தான் எப்போதும் தன்னை
கடவுள் என்றே
பிரகடனப் படுத்திக் கொள்கிறான்.

அவனது கைகளிலிருந்து
ஏதாவது ஒரு தீர்த்தம்
வழிந்துகொண்டே இருக்கிறது...

நரகத்தின் வாசலை
அலங்கார வார்த்தைகள் கொண்டு
அழகு படுத்துகிறான்...

உதிரத்தைத் தெளித்து
அவன் பூக்களை வரையும் போது
நாங்கள்
இரசிக்கத்தான் செய்கிறோம்...

வண்டுகளுக்காக
அவன் தன்
நாக்கையே வீசியெறிகிறான்...

அவன் ஆசனத்தினருகில்
அத்தர் தெளித்துக் கொண்டிருப்பவன்
உதிரத்தின் கவிச்சியால்
எப்போதோ உயிரை விட்டவன்...

தலைகளைக் 
கைகளில் வைத்துக்கொண்டு
வரிசையில் நிற்கிறோம்
அவனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக.

கடாட்சம் வழங்கக் 
கத்திகள் 
தயார் நிலையில் இருக்கின்றன.

- மு. முகமது பாட்சா*
14/07/2019

Friday, 12 July 2019

கோழைகளின் நகரம் பகல்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இப்போதெல்லாம் வெளிச்சத்திற்கு 
அதிகமான கைகள் முளைத்துவிடுகின்றன 
சாமியாடி யாரையாவது 
காவு வாங்கிக் கொண்டே இருக்கிறான் 
விடிந்ததும் இரவைத்தான் தேடுகிறது மனசு... 
வாய்களை ஒட்டிக் கொண்டுதான் 
வெளியில் செல்கிறோம்... 
சங்கேத மொழிகள் கற்றுக் கொண்டோம்... 
பிரச்சனைகள் துணைக்கு வரும் போது 
துப்பாக்கி முனைகளைப் பற்றி 
எப்படிச் சிந்திப்பது ? 
பலகீனத்தின் பெயர்தான் தைரியம் என்று 
பாடுவது வழக்கமாகிவிட்டது... 
எங்களின் சிரிப்பிற்கு முகமூடிகள் கிடையாது 
ஆனாலும் அதை நம்பாதீர்கள்... 
கோழைகளின் நகரம் பகல் என்று 
ஒரு கவிதையை அவசரமாக எழுதிவிட்டுப் 
பதுங்க வேண்டும் இரவிற்குள்... 
வெளிச்சம் இரத்த வாடை வீசுகிறது. 

- மு. முகமது பாட்சா*
13/07/2019

Thursday, 11 July 2019

காலைகளின் நரக வேதனை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

காலையொன்றும் 
பொன் பூசி அழகாக மலர்ந்திடுவதில்லை... 
எழுந்திருக்கும் போதே இடிக்கும் வாசற்படியை 
எப்படிக் கோபித்துக் கொள்வது? 
கடன் காரன் தட்டும் கதவைக் 
கழற்றி வைக்க இயலாதவன் வீட்டில் 
பால்காரனின் ஹாரனின் சப்தம் கொடூரம்... 
காலையிலேயே 
பேஸ்ட்டைப் பிதுக்கித்தான் 
பற்களைத் துலக்க வேண்டியிருக்கிறது... 
சொட்டு நீர் குளியல் 
சுகம் தருமென்று யார் எழுதி வைத்தார்கள்? 
'ஏங்க...! வரும்போது...' என்பதில் 
ஒரு நீண்ட கடன் பட்டியல் ஓடும்... 
மூளையைக் கழற்றி வைத்துவிட்டு 
வண்டியை ஓட்டுவது மிகவும் கொடுமை... 
இதிலும் ஓர் ஆறுதல் 
வீட்டிற்குள் நுழைந்து எதையாவது கொறிக்கும் 
கொறிணிக்குத் தெரியாது 
இந்தக் காலைகளின் நரக வேதனை.

- மு. முகமது பாட்சா*
12/07/2019

விலையானது ஓவியம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்த ஓவியம் 
கோடுகளால் சில கதைகளைப் பேசியது... 
பார்வையாளர்கள் 
சில கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள் 
ஆத்ம தரிசனம் என்று 
ஒருவன் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான்... 
அடங்காத வன்மம் என்று 
ஒருவன் விளக்கம் பகிர்ந்தான்... 
விலங்குகளின் உடையணி நாகரீகம் 
எத்தனை அருமை என்று 
ஒருவன் சிலிர்க்க... இதிகாசக் காலம் 
இடறி விழுந்து கொண்டிருந்தது...
ஆபாசம் அழகென்றும் வசனம் 
வண்ணங்களைத் தெளித்தவன் வரைவை 
மறந்துவிட்டான் எனச் சிலர் சிரிக்க 
விலையானது ஓவியம்.. 
பெரும் ரகசியத்தை ஏந்திக்கொண்டு.

- மு. முகமது பாட்சா* 
11/07/2019

Wednesday, 10 July 2019

நன்றாக வேகிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
என்னை அறிந்துபோட்டு 
கறிகளை நன்றாக அலசிக் கழுவுகிறார்கள்... 
உப்புத் தடவுவது 
கெட்டு போகாமல் இருக்க என்பது ஆறுதல்.. 
மஞ்சளைத் தடவிக் காயவைத்தால் 
அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளலாம் 
என்ற வாதம் நிகழ்கிறது... 
மசாலா வாசம் 
எண்ணெய்யில் மிகுக்கும் போது 
நான் நன்றாகவே வெந்து கொண்டிருந்தேன்.

- மு. முகமது பாட்சா*
11/07/2019

குஜிலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உட்புறம்

த்தப்பாரு பிகிலு 
சும்மாக்காட்டியும் மெர்சுப் பண்ணாத! 
நாங்கவொன்னும் ஜோப்டாயில்ல... 
உன் பிஸ்கோத்து வேலயெல்லாம் 
வேற எங்காயச்சும் வச்சிக்க... 
அப்பாலிக்கா நிஜாரு அவுந்துடும்னு 
மாரி சப்தமிடவும்... 
காண்டான பிகிலு லுங்கியை 
டவுசருக்கு மேல தூக்கி கட்டிக் கொண்டு 
அட்டு பிகருக்காட்டி 
ஸீன் காட்றல்ல மச்சான் 
எனக்குன்னு ஒருத்தி குந்தியிருக்காடா... 
நீயே சொல்லுவப்பாரு 
உங் குஜிலியைவிட இவ நல்ல பிகருன்னு 
பிகிலு சிரிக்க... 
சாமான் கழுவிக்கினிருந்த சுப்பு 
அவனைப் பாத்து நைஸா கண்ணடிக்க... 
அது தெரியாத மாரி 
இவன் என்ன லூஸாடா ! என்று முறைக்கிறான்... 
அங்கவந்த குஜிலி அடச்சீ வா ன்னு 
மாரியை இஸ்துகினு போகிறாள்.... 
சுப்புவை பாத்து சிரிச்சிகிட்டே!

- மு. முகமது பாட்சா*
10/07/2019

ஓவியம் - இளையராஜா

அவர்கள் வரும்போதே


அவர்கள் வரும்போதே 
பாப்லோ நெருடாவோடுதான் வந்தார்கள் 
கை குலுக்கியவர் 
என்னைப் பார்த்திருக்கிறாயா? என்றார் 
கண்ணாடியைப் பார்ப்பதில்லை என்றேன் 
ஏதோவொன்று விளங்கியிருக்க வேண்டும் 
சிரித்தார்... 
கீட்ஸின் தோளில் சாய்ந்து கொண்டே 
ஒருவன் வந்தான்... 
கீட்ஸின் கண்கள் பேனி ப்ரவுனையேத் 
தேடிக் கொண்டிருந்தது.... 
சம போதை! 
ப்ளாத்தின் கவிதையில் வழுக்கி விழுந்தவன் 
'நீ அருமை' என்றான் 
அவள் விட்ட அனல் மூச்சில் 
கார்பன் மோனாக்சைடு நகைத்தது... 
எழுத்துகளை விற்பவன் 
சந்தையில் நின்று கூவிக்கொண்டிருந்தான்... 
என் எழுத்துகள் 
என்னைத் தனியாக அழைத்துச் செல்கின்றன.

- மு.முகமது பாட்சா*
09/07/2019

Tuesday, 9 July 2019

மாய வேலிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

என்னைச் சுற்றிலும் 
சுவர்கள் இல்லையென்றாலும் 
கம்பிகளின் வேலி இருக்கிறது... 
என்னை எனக்குள் வைத்து 
அடைத்து வைத்திருக்கிறார்கள் 
வெளியேற வேண்டும் என முயற்சிக்கிறேன் 
இல்லாத சங்கிலி கால்களை இழுக்கிறது... 
எனக்குள்ளிருக்கும் ஆடு 
மேய்ச்சல் நிலத்தைப் பார்வையிட... 
வேலித் தாண்டி விரைகிறேன்... 
மேய்ப்பன் துறட்டிக் கோலோடு ஓடி வருகிறான்... 
நானிப்போது 
எனக்குள்ளிருக்கும் பூனையை எழுப்பிப் 
பதுங்குகிறேன்... 
எலியொன்று சிரித்துவிட்டுப் போகிறது... 
நானிப்போது 
எதுவாக மாறவேண்டுமோ அதுவாகவே 
நிறையபேர் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்... 
எனக்குள் என்னை - நானே 
இப்போது பூட்டிக் கொள்கிறேன்... 
என்னைச் சுற்றிலும் 
மின்சாரக் கம்பிகளின் வேலி இருக்கிறது.

- மு. முகமது பாட்சா*
08/07/2019

Monday, 8 July 2019

மூடு பனியின் வாசல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சன்னல்களை அகலத் திறந்துவைத்தாள் 
காற்றை நுகர்ந்தால் 
இரசனை இழையும் படுக்கை இசைக்கிறது... 
கண்களை மூடிக் கொண்டால் இருட்டு 
படுக்கையில் மதமதர்ப்பு வழிகிறது... 
பெண்ணாக இருக்கும் பகுதிகள் 
ஆணின் தேடலைச் சுவாசிக்க நுழைகின்றன... 
மூடு பனியின் வாசலில் 
கற்பனைகளைக் கோர்த்து மாலையாக்குகிறாள்... 
மணமகனாக ஒருவன் நுழைகிறான் 
முகம் உரு மாறிக்கொண்டே இருக்கிறது... 
அவன் ஈர முத்தம் 
வாசனையாக நெஞ்சுக்கூட்டில் நிறைகிறது... 
வெட்கம் பெண்ணின் அங்கம் 
அதையவன் ஆபரணமென்று முகர்கிறான்.. 
அழகு அவளை 
அவனிடம் விற்றுக் கொண்டிருந்தது... 
படுக்கையில் மதமதர்ப்பு வழிந்து கொண்டிருக்க 
அவள் இப்போது 
எதற்காகவோ அழுது கொண்டிருக்கிறாள்

- மு. முகமது பாட்சா*
09/07/2019

Saturday, 6 July 2019

தனியாக விடுங்கள்

lonely sad man in the room painting' க்கான பட முடிவு

கதவை 
நன்றாக அறைந்து சாத்திடுங்கள்... 
அறைக்கு வெளியே 
சட்டங்களைக் கொண்டு இறுக்க ஆணியால் அறையுங்கள் 
என் சப்தம் வெளிவராமலிருக்கச் 
சன்னல்களைப் பூசி மெழுகுங்கள்... 
வெளிச்சத்தின் வழி எனக்குத் தேவையில்லை 
எனக்கு நானே சப்தமிட்டு அலறவேண்டும்... 
எனக்கு நானே சப்தமிட்டு அழவும் வேண்டும்.. 
என் பற்களால் என்னைக் கடித்துக் குதறிக் கொள்வேன் 
என் நகங்களால் என் உருப்புகளைச் சிதைத்துக் கொள்வேன் 
உங்களுக்கான கோஷங்களை 
இங்கு நான் சப்தமிட்டு முழங்குவேன்... 
இந்தச் சுவர்கள் எனக்காக அவை திரும்பவும் முழங்கும்... 
நீங்கள் எனக்காக இரக்கப் படாதீர்கள்.. 
அறைக்குள் புழுக்கள் நுழைகின்ற போது.. 
அறையை அழித்துவிடுங்கள் 
அனேகமாக நானிங்கு இறந்து கிடப்பேன்..

- மு. முகமது பாட்சா* 
07 /07 /2019

லைலாவின் முத்தங்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
மஜ்னூவின் கைகளில் 
லைலாவின் முத்தங்கள் 
கல்பில் ஆடுகிறாள் 
காதலை அவன் கபுறூவில் தேடுகிறான்... 
ஏளனத்தின் எச்சில்கள் சுற்றிலும் குளம் கட்ட 
எலும்புருக்கி நோயின் பெயர் 'காதல்' 
எழுதாத வார்த்தைகளை நிறைத்தவன் 
எழுதி வைத்த குறிப்பில் 
இறைவனின் பெயரும் 'காதல்' 
தேடலின் முடிவில் சந்திப்பு நிச்சயம் 
காதலின் தளம் ' கபுறூ' 
கலிமா விரைகிறது தூதுவத்தின் மொழியேந்தி 
கல்லறையின் ஈரம் 
காதலர்களின் காயாத முத்தம்...

- மு. முகமது பாட்சா*
06/07/2019

நுழைபுலம் இல்லாதவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நுழைபுலம் இல்லாமல் நுழைகிறேன் 
கவிதைகளின் தொகுப்பிற்குள் 
சொற்கூட்டங்கள் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன... 
அதிலிருந்து வந்த காகம் 
எலியாகப் பாவித்து 
என்னைக் கொத்தித் தின்னுகிறது... 
நான் மலராக மாறி 
அவளின் நாசியை நுகர்கிறேன்... 
என் நிழலை 
ஒருவன் ஆய்வு செய்து கொண்டிருக்கிறான்... 
நான் கடலாக இருப்பதைவிட 
மீனாக நீந்துவதை நதி விரும்புகிறது... 
நிர்வாணத்தை 
சில சொற்கள் கேலிப் பேசுகின்றன.. 
ஆடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் 
அடுத்த பக்கம் நிர்வாணமாக இருந்தது... 
அலமாரியில் புத்தகம் உறங்கிக் கொண்டிருக்க 
நான் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறேன் 
எழுத்துகள் என்னோடு 
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன...

- மு. முகமது பாட்சா*
06/07/2019

Friday, 5 July 2019

சிக்கிக்கொண்ட படிமங்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
படிமத்திற்குள் நுழைந்து விட்ட பறவையொன்று 
வெளியில் வர இடம் தேடுகிறது... 
நாற்புறமும் சுவர்கள் சூழ்ந்திருக்கின்றன... 
கடலொன்று 
கண்ணாடித் தம்பளரில் தளும்பிக் கொண்டிருக்க 
மீன்கள் தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கின்றன... 
காந்தியின் கண்ணாடி பார்வை இழந்து கிடக்க... 
ஒழுக்கத்தின் குறியீடுகளாகக் 
குரங்கின் படிமங்கள்... 
கடவுள்களைப் படிமங்களாக்கி 
கைகளில் ஆயுதம் தரித்துக் கொண்டவர்கள் 
கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்க... 
தேசம் வரைபடத்தின் படிமமாக மாறி 
செழிப்பாக இருக்கிறது... 
நாய்களின் படிமத்தோடு நாக்கை உலரவிட்டு 
சிலர் வால்களை ஆட்டிக் கொண்டிருக்க... 
மன்னனின் படிமத்தில் 
சாத்தான் வேதம் போதித்துக் கொண்டிருக்கிறான்.

- மு. முகமது பாட்சா*
05 /07 /2019

Wednesday, 3 July 2019

என்னோடு நான் இருந்தால்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

என்னோடு நான் கை குலுக்கிக் கொள்கிறேன் 
சற்றுமுன் என்னோடு பேசிக் கொண்டிருந்த போதுதான் 
இருவரும் அடித்துக் கொண்டோம்... 
என்னை அவன் 
இப்போதும் கூடக் கேவலமாகத்தான் பார்க்கிறான்... 
அவனுக்கு நானென்றாலே கசப்பாகத்தான் இருக்கிறது... 
நான் என்றுமே என்னைத் திட்டியதில்லை... 
ஆனால் அவன் அப்படியில்லை... 
என்னை அசிங்கமாகத் திட்டவும் செய்வான்... 
ஒரு நாள் அவனை விட்டு 
விலகிப் போய்த் தனியாக உட்கார்ந்திருந்தேன்... 
அவனாக வந்து தழுவிக் கொண்டவன் 
இனி இதுபோல் நடக்கவே நடக்காதென்றான்... 
அஃது அன்று நாள் மட்டும்தான் நிகழ்ந்தது 
அவன் எப்போதுமே அவனாகத்தான் இருக்கிறான்... 
ஆனால் நான் நானாக இருக்க முடிவதில்லை.

- மு. முகமது பாட்சா*
03/07/2019

சன்னலைத் திறந்து

lovers in window - painting க்கான பட முடிவு

சன்னலைத் திறந்து கொண்டு 
காற்று நுழைகிறது 
அதற்கு அவள் 
தென்றலென்று பெயரிட்டு 
முடிக்கற்றையை அலையவிடுகிறாள்.. 
நானதற்கு 
தேநீர் சுவாசமென்று பெயரிடுகிறேன்... 
வெளியே பார்வையை நீட்டி 
பூவொன்றைப் பறித்து அவளிடம் கொடுக்கிறேன் 
அறை மணக்கிறது... 
பார்வையால் திருடுகிறாள் 
பாசாங்கு செய்யாமல் களவு போகிறேன்... 
முத்தங்களைப் பறித்து 
புத்தகங்களின் பக்கங்களை நிரப்புகிறேன்... 
அவள் காலிடிக்கிறது 
ஒடுங்கிப் படுங்கள் என்றாள்... 
விழித்துக் கொண்டேன் 
கற்பனைபோல் இருப்பதில்லை நிஜம் .

- மு.முகமது பாட்சா* 
03/07/2019

Tuesday, 2 July 2019

முல்லாவை காணவில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தொப்பி

முல்லாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
கழுதையோடு காணாமல் போய்விட்டதாகப் 
பிராது பதிவாகிறது.. 
கழுதை அவருடையதுதான் என்றாலும் 
கட்டியிருந்த கயிறு கடன் வாங்கியது... 
கயிறுதானே என்று கேட்கலாம் 
அஃதொரு ஒட்டகத்தைக் கட்டியிருந்த கயிறு 
அதனால்? 
ஒட்டகம்தான் இப்போது ஓடிவிட்டதே..... 
ஒட்டகத்தைத்தானே தேட வேண்டும் ? 
அதைக் கட்டிப்போடக் கயிறு வேண்டுமே... 
ஒட்டகம் யாருடையது? 
அமைச்சரின் வைப்பாட்டி உடையது 
அவளிடமே கேட்க வேண்டியதுதானே...? 
அதற்கும் கூட முல்லா கிடைக்கவேண்டும்...
ஏன்?
முல்லா காணவில்லையென்று
பிராது கொடுத்தவளே அவள்தான்...

-மு. முகமது பாட்சா*
02/07/2019

நுண்புனை கதைகள் - மகன்


நுண்புனை கதைகள்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மகன்

அவன் நிச்சயம் நன்றாகப் படித்தவனாகத்தான் இருக்க முடியும். 
சற்று அழகாகவும் இருந்தான். அவனைவிடவும் அவன் மகன் இன்னமும் 
அழகாகஇருந்தான். அப்பாவுடன் பைக்கில் வருவதென்றாலே 
பிள்ளைகளுக்குத் தனிக் குஷி. பைக்கை ஒரு கடையின் முன் நிறுத்தினவன் 
'இதோ அப்பா மருந்துவாங்கிட்டு வந்திடறேன்' என்ற போனவன் 
பிராந்தி பாட்டிலை ஒரு பேப்பரில் சுற்றி எடுத்துவந்து 
டேங் கவரில் வைத்தான். பிறகு, 'செல்லத்திற்கு என்னவேணும்' என்று 
மகனிடம் கேட்டவனை, சற்று நேரம் கண் இமைக்காமல் பார்த்தவன்... 
கண்களிலிருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கன்னத்தில்வழிய.., 
'எனக்கு நீ மட்டுந்தாம்பா வேணும்' என்றான்.

- முகமது பாட்சா*
02/07/2019

Monday, 1 July 2019

சந்தூக்கு

 சந்தூக்கு
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
சற்று முன்தான்
மௌத்து என்ற சொல்லிற்கு
மாறிக் கொண்டான்...
ஆடையை மாற்றிக்
கிடத்தி வைத்திருக்கிறார்கள்...
கைபிடித்தவள்
கடந்த காலத்திற்குச் சென்று
அழுது கொண்டிருக்கிறாள்...
அவளோடு பயணப்படும் வார்த்தைகள்
வருபவர்களையும்
கட்டித் தழுவிப் புலம்புகிறது...
குளிர் பதனத்தில்
அதிகமாகவே உறைகிறான்...
கபன் விட்டவர்கள்
கஸ்தூரியைத் தெளிக்கிறார்கள்...
கபருக்குள் கலிமா இறங்குகிறது...
இறக்கிவிட்ட சந்தூக்கு
யாரை அழைத்துவர 
அவசரமாகப் புறப்படுகிறது?
கல்லறைச் செடிகள் இன்னமும்
கிளைவிட்டிருப்பது 
யாருடைய கபருக்காக ?
சாம்பிராணியின் புகை
அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
02/07/2019

ஆடியின் சில்லுகள்


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 

எதிரில் நின்று கொண்டிருந்தவன்
அத்துணை அடர்த்தியானவன் இல்லை...
அவன் முகம்
பூனையை ஒத்ததாகவும்
விரல்கள்
புலியை ஒத்ததாகவும் இருந்தன...
முகத்தைக் கழுவிக்கொள்கிறேன்
நாயொன்று
எதிரில் வாலாட்டிக் கொண்டிருக்கிறது......
சிரிப்பை ஒட்டி வைத்தேன்
குரங்காட்டி நின்று கொண்டிருந்தான்...
என்னை உடைப்பதைத் தவிர
வேறு வழித் தெரியவில்லை...
ஆடியின் சில்லுகள் 
என்னை அருவெறுப்போடு பார்க்கின்றன.

- மு. முகமது பாட்சா*

01/07/2019

Popular Posts