Tuesday, 30 April 2019

மௌனீஸ்வரி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஆங்காரியாய் காளியின் நாக்கு 
ஆயுதங்களாக நகங்கள் 
அடுக்கடுக்காய்ப் பிணங்கள் 
செவந்திருக்கும் வானம் உமிழும் எச்சம் 
மிச்சமில்லாமல் தெரித்த அமிலம்... 
இரத்த வாடை 
எட்டியை விழுங்கும் ஆக்ரோசம் 
எடுத்தவடி எழுந்திருக்கும் எரிமலை 
இத்தனையும் புதைந்து 
சமையற்கட்டில் ஒரு மௌனீஸ்வரி 
கடுகு பொரிகிறது.. 
தீக்கமழ வாயுமிதக்கும் அடுப்பு.

- மு.முகமது பாட்சா*
01/05/2019

சிகப்பு என்பது....

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சிகப்பு என்பதைப் பற்றிதான் 
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.. 
சிகப்பென்பது புரட்சியென்று 
ஒருவன் உரத்துக் கூறுகிறான்... 
சிகப்பென்பது 
உதிரத்தின் நிறமல்லவா! என்று 
ஒருவன் வியப்புக் கூட்டுகிறான். 
சிகப்பு என்பதே சிந்தனையின் 
வடிவம் என்று ஒருவன் புகழ... 
இல்லையில்லை சிகப்பென்பது 
வெட்டிமடம் என்று ஒருவன் ஏளனிக்கிறான்... 
சிகப்பு என்பது அணுக்குண்டுகளென 
ஆலை முதலாளிகள் அலற 
ஆமாமாம் அஃதொரு தேசவிரோதமென 
அரசு ஆணை பிறப்பிக்கிறது... 
சிகப்பு என்பதே வறுமையின் நிறம் என்று 
ஏழை விவசாயி கண்ணீர்விட... 
சிகப்பென்பது வண்ணங்களின் பிதாமகனென 
ஓவியன் அழகுறுத்துகிறான்... 
சிகப்பு என்பது 
சிகப்பே அல்லவென்று சொல்லும் 
நிறக்குருடன் 
நிலைகுலைந்து விழுந்தபோது 
தூக்கிவிட்ட சிகப்பு 
உதவி என்று தன்னைச் சொல்லிக் கொண்டது... 
சிகப்பு என்பதே ஒரு 
பேசுபொருள்தான் என்பது 
இந்தக் கவிதைக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.

- மு.முகமது பாட்சா*
30/04/2019

Sunday, 28 April 2019

அதைவிட அபாயம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை

நாய்கள் 
தொடர்ந்து குரைத்துக் கொண்டேயிருக்கின்றன... 
அவள் 
என்னருகில் அச்சமாகவே அமர்ந்திருக்கிறாள்... 
காட்டேறி கதைகள் 
அவளுக்குள் நுழைந்து வெளியேறியிருக்கலாம்... 
இரவில் காகம் கரைந்து 
நானும் கூட இப்போதுதான் கேட்கிறேன்... 
எலிகள் தள்ளிவிட்ட தம்பளர்களின் சப்தம் 
இதயத்துடிப்பில் நுழைந்து அதிர்கிறது... 
பூனைகள் 
களவிப் பிறாண்டிக் கொண்டிருக்கின்றன... 
குழந்தைகள் அழுவதைப் போன்றே அலறல்கள்... 
'கொலை செய்வது அத்தனை சுலபமல்ல'... 
நாவல் காற்றில் படபடக்கிறது... 
விடிந்ததும் தெரிந்துவிடும் 
எங்களில் யார் இறந்திருக்கிறோம் என்று... 
இல்லையென்றால் 
தெருவில் ஒரு கொலை நடந்திருக்கக் கூடும்... 
அதைவிட அபாயம் 
கடன் காரன் கதவைத் தட்டுவதுதான். 

- மு.முகமது பாட்சா*
29/04/2019

Saturday, 27 April 2019

மூளைகளைத் துவைத்து

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மூளைகளைத் துவைத்து 
அழுக்காக்கிக் கொண்டிருக்கிறார்கள்... 
பூக்களாக நுழைந்த மதம் 
புழுக்களாக 
ஊடுருவிப் பன்றிகளாக வளர்கின்றன... 
சாத்தான் கடவுளர்களின் கண்களைப் 
பொருத்திக் கொள்கிறான்... 
கால்களின் கீழ் 
அன்பை மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்... 
உதிரச்சுவை உன்னதம் என்று 
வேதங்கள் எழுதப்படுகின்றன... 
நம்பிக்கையென்பது 
துப்பாக்கிகளின் 
முனைகளில் உட்கார்ந்து கொள்ள 
அக்னிக்குண்டுகள் ஆங்காங்கே 
வெடித்துச் சிதறுகின்றன... 
ஆதாமின் களிமண் சகதியாக மாறிப்போக 
பன்றிகள் நாக்கினைச் சுழற்றி 
நரகலை உண்ணும் வேளையில்... 
ஏவாவின் தேவன் கடலுக்குள் நுழைந்து 
பூமிக்குள் ஊடுருவுகிறான்... 
ஒரு பிரளயத்தின் கதையை 
பெரும் மின்னலொன்று எழுதிப்போக 
காரூனின் புதையல்கள் மேலெழும்புகின்றன... 
ஆலயங்கள் 
அச்சத்துடன் கதவைத் திறந்து வைத்திருக்க... 
மனிதத்தை 
மதங்கள் தின்று கொண்டிருக்கின்றது. 

- மு.முகமது பாட்சா*
28/04/2019

காதலென்பது கலிமாவின் மொழி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, பூ, இயற்கை மற்றும் வெளிப்புறம்

மௌனத்தைக் 
குடைந்து செல்லும் வண்டுகள் போல் 
உன் நினைவுகள் ரீங்காரிக்கின்றன.. 
என் சப்தம் கேட்காதவெளி 
உன் இதயத்தின் தூரம். 
என் துயரம் அலையும் பாலை 
நேர்கோட்டில் செல்கின்ற நேசக்கானல்... 
உன் பார்வையின் வெளிச்சம் 
என் வழியின் இருட்டு... 
பறவைகளின் அடர் சப்தசாரம் 
வனத்தின் சங்கீதம்... 
காதலென்பது கலிமாவின் மொழி... 
மீசான் தட்டுகளில் 
அலைமோதும் ஞானக்குழப்பம் 
நானென்ற அகந்தை... 
நேசம் சிதறாமல் அடைபட்ட மனதில் 
எப்போதும் காதல் மயக்கம் . 
மௌனத்தைக் 
குடைந்து செல்லும் வண்டுகள் போல் 
உன் நினைவுகள் ரீங்காரிக்கின்றன..

- மு.முகமது பாட்சா*
27/04/2019

Friday, 26 April 2019

வீடுபேறு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எதிரெதிரே 
ஆட்டத்தில் அமர்ந்திருக்கிறோம் 
நீயும் தாயம் போடுகிறாய் 
நானும் தாயம் போடுகிறேன் 
சில எண்கள் உன்னை 
ஏணியில் ஏற்றி விடுகின்றன.. 
சில எண்கள் 
என்னை விழுங்கிவிடுகின்றன... 
தாயமுருட்ட சகுனியின் 
விரல்கள் தேவைப்படுகின்றது 
ஏணியும் வேண்டாம் 
பாம்பும் வேண்டாம் என்பதும் 
ஓர் ஏகாந்த நிலை.. 
இருந்தாலும் வீடுபேறு அடைதல்தான் 
முக்தி என்று சொல்கிறது 
தாயக்கட்டைகள்... 
ஆட்டத்தை விடமுடியாமல் 
தொடர்கிறோம்... 
இப்போது நான் ஏணியில் 
ஏறிக்கொண்டிருக்கிறேன். 
பாம்பு நெளிந்துகொண்டிருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
27/04/2019

Thursday, 25 April 2019

ஆகாசம் இறங்கி வராது


அந்தப் பறவை 
அநாதையாகக் கிடக்கிறது... 
இறகுகளைப் பிடுங்கி 
காதுகளைக் குடைந்து கொள்கிறார்கள் 
அதன் மாமிசம் பகிர்ந்து கொள்ள 
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது... 
அதன் உதிரங்களில் 
பிழைகள் நிறைந்திருக்கலாம்... 
எச்சமிட்டவிடத்தில் எத்தனை எறும்புகள் 
இறந்தனவென்பதுதான் கணக்கு... 
அதன் உயரம் 
தரை மட்டம்தான் என்பதை 
இப்போது அஃது உணர்ந்திருக்கிறது... 
ஆகாசம் இறங்கி வராதென்பது 
நன்றாகவே தெரியும்... 
ஆனாலும் பறப்பதை நிறுத்தினால் 
பூமியும் காறி உமிழ்ந்து விடும். 

- மு.முகமது பாட்சா*
26/04/2019

பச்சையும் இல்லை சிகப்பும் இல்லை ஆனாலும் சமிக்கை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சமிக்கைகளைக் கடந்து 
சென்று கொண்டிருக்கிறேன்... 
சமிக்கைகள் 
எதற்கானதென்று இன்னமும் 
யாருக்கும் விளங்கவில்லை. 
சாலையை நிறுத்தும் மஞ்சள் கோடுகள் 
பிரயாணத்தை அழகாக்குகின்றன... 
பச்சையும் சிகப்பும் அவ்வப்போது 
ஓய்வெடுத்துக் கொண்டாலும் 
மஞ்சள் மட்டும் கண் உறங்காமல் 
விழித்துக் கொண்டிருக்கிறது... 
சமிக்கைகளைக் கடந்து 
சென்று கொண்டிருக்கிறேன்... 
வேகவோட்டம் மிகையெடுத்தவன் 
போகுமிடத்தைத் தவறவிட்டு 
இரத்தமாய் விழுந்து கிடக்கிறான். 
நிதானம் என்பதும் சமிக்கைதான் ... 
போகுமிடத்தை 
நெருங்கிய பிறகுதான் உணர்கிறேன்... 
இங்கு எங்குமே 
சிகப்பும் இல்லை பச்சையும் இல்லை 
ஆனாலும் சமிக்கை.

- மு.முகமது பாட்சா*
25/04/2019

Tuesday, 23 April 2019

அமிலம் வீசிவிட்டேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

எனக்கான கேள்விகளை 
ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டியிருக்கிறேன் 
திறந்து பார்க்கும் நீங்கள் 
ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் 
கைது செய்கிறீர்கள்! 
நான் நிழலோடு நடந்து போவதை 
உளவோடு நடந்து போனதாக 
உங்களின் செய்திக்குறிப்புகள் சொல்கின்றன... 
எனக்கான கோபத்தை 
ஒரு கொடியின் மீது திணித்துவிட்டுப் 
பறக்க விடுகிறீர்கள்... 
என் விரல்களைத் துப்பாக்கிகளென்று 
வெட்டும் போதுதான் உணர்ந்தேன்... 
கேள்விகளென்பது 
பூட்டி வைப்பதற்கில்லையென்று... 
காறி உமிழ்கிறேன் 
அமிலம் வீசி விட்டதாக 
இப்போது அலறிக் கொண்டிருக்கிறீர்கள்.

- மு.முகமது பாட்சா*
24/04/2019

முக்கியச்செய்திகள் - BREAKING NEWS -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 8 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர்


ஒப்பனையுடன் கூடிய அந்தச் செய்தியை 
எல்லோரும் பிடித்து 
ஓடிக்கொண்டிருந்தார்கள்.. 
ஒப்பனையில்லாத செய்தியொன்று 
தட்டேந்தி 
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது. 
செய்திகள் தொலைக்காட்சிகளை 
வாசித்துக் கொண்டிருந்தன. 
அவ்வப்போது அச்செய்திகளுக்கு 
வதந்திகளை ஒத்திக் கொண்டிருந்தார்கள்... 
செய்திகள் 
செய்திகளாகவே நகர்ந்துவிடும் 
என்பதுதான் உண்மை. 
ஆனாலும் சில செய்திகள் 
ஆயுதக்கிடங்குகளில் 
கங்குகளை மூட்டிக் கொண்டிருந்தன... 
செய்திகள் மீதே 
சிலர் செய்திகளைத் தடவிச் 
சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்... 
இங்கு உடைந்த நாற்காலிகள் 
ஆடாமல் இருப்பதற்கும் 
செய்திகளே முட்டுக் கொடுக்கப்படுகின்றன... 
செய்திகளை 
வீதிகளில் சிதறவிட்டுவிட்டு 
ஒப்பனைகள் மட்டுமே தொலைக்காட்சிகளில் 
அவ்வப்போது உடைந்து விழுகின்றன 
- BREAKING NEWS -

- மு.முகமது பாட்சா*
23/04/2019

Monday, 22 April 2019

என்னைச் சுற்றிலும் கதைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

நானொரு 
கதை சொல்லியாக அமர்ந்திருக்கிறேன். 
என்னைச் சுற்றிலும் 
பல கதைகள் உட்கார்ந்திருக்கின்றன... 
'ஒருவன் நடந்து போகிறான்...' 
என்று தொடங்கும் அந்தக்கதை 
உட்காருவதற்காகத் 
திண்ணைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது... 
தாகம் தணிக்க நுழைந்த வீட்டில் 
ஒரு தெரு நாய் இறந்துகிடக்க , 
ஆடைகளை ஒருத்தி 
சரி செய்து கொண்டிருக்கிறாள். 
இறைந்து கிடந்த காமத்தில் 
தேசப்பிதாவின் புன்னகை என்னமோ செய்கிறது... 
வலிகளை அழைத்துக் கொண்டு 
அங்கிருந்து அவன் கடந்து போக.. 
அவளின் தனங்கள் அவனை உரசிச் செல்கின்றன... 
பஞ்சடைந்த கண்களில் 
பசி என்பது ஏதுவென்று யோசிக்கும் வேளையில், 
அவன் இதழ்க்கடையில் விழுந்த 
அந்த மழைத்துளி ரசனைக்கானதல்ல... 
அவன் அருகில் நின்றிருந்த அந்தக் கதை 
பரிசுக்குரியதாக இருக்கலாம்... 
நிச்சயம் அவன் பசிக்கு உரியது இல்லை.

- மு.முகமது பாட்சா*
22/04/2019

Sunday, 21 April 2019

ஏன் எம்மை கைவிட்டீர்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நீ உயிர்த்தெழுந்த நாளில்
மரணித்திருக்கிறார்கள் பிதாவே!
அவர்களின் உதிரத்தைத் தெளித்து
உம்மை உசுப்பிவிட்டவன்
சாத்தானாக மட்டுமே இருக்க முடியும்!
சிலுவைப் பாதையில்
இரத்தங்கள் இன்னமும் காயவில்லை...
போதி மரத் துண்டுகளை ஆணிகளாக்கி
தேகத்தில் அறைந்திருக்கிறார்கள்!
நீ எழுப்பிய வினாதான்
இன்னமும் நிறைந்திருக்கிறது இயேசுவே!
'பிதாவே ஏன் எம்மைக் கைவிட்டீர்?'

-மு. முகமது பாட்சா*

22/04/2019

Friday, 19 April 2019

பொய்களின் இராட்சசம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

பொய்களைத் திரட்டி வீசுகிறார்கள் 
அது பறந்தோடி 
குடிசைகளாகப் பார்த்து எரிக்கிறது... 
பொய்கள் உருண்டு திரண்டு ரூபமெடுக்க 
கைகளின் ஆயுதங்கள் 
ரத்த முத்தங்களைச் சுவைக்கின்றன... 
வர்ண அடுக்குகள் 
இராட்சசம் பூசி 
மெல்ல எட்டிப் பார்க்கிறது.... 
உதிரத் தீட்டுகளில் 
ஓநாய்கள் நாக்குகளைப் போட்டுச் சுழற்ற... 
வெட்டியானின் அழுகை 
எரியும் கபாலங்களை அறைகிறது... 
ஒரு யுகத்தின் கோபம் 
ஓர் அருவாளுக்கும் கூடவா இல்லையென்று 
நாடோடி பாடிச் செல்கிறான்... 
கோணங்கியின் விரல்களில் 
நகங்கள் முளைக்கத் தொடங்குகின்றன 
ராஜபாட் 
இன்னம் சற்று நேரத்தில் இறக்கலாம். 

- மு.முகமது பாட்சா*
20/04/2019

இரவை காவல் காக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம், இயற்கை மற்றும் வெளிப்புறம்

அப்பாடா! 
சற்று நிம்மதியாகக் கண்மூடுகிறேன் 
காந்தி ஊர்வலம் சென்று கொண்டிருக்க 
ஹிட்லர் நாஜி படைகளை 
நிறைத்துக் கொண்டிருக்கிறான்... 
நைஜீரியா குழந்தைகள் 
மண் ரொட்டி செரிக்காமல் இறக்க... 
இறந்த குழந்தையை வல்லூறொன்று 
கொத்திக் கொண்டிருக்கிறது... 
சிலையொன்றுக் கவிழ்ந்து 
நர்மதை கடலாய்ப் பிரளயமெடுக்க... 
கடல் உள் வாங்கிப் பெரு மூச்சு விடுகிறது... 
சாத்தான் தன் கண்களை 
அகல விரிக்கும் அவ்வேளையில் 
வாக்குப் பெட்டிகள் நிறம் மாறுகின்றன...
கனவாக நகர்ந்திட
இரவை நான் காவல் காக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
19/04/2019

பாதையெங்கும் வெளிச்சம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி மற்றும் வெளிப்புறம்

பாதையெங்கும் 
வெளிச்சத்தைத் தூவிவிட்டு 
இரவு என்கிறாய்... 
நிழல் என்பதே இளைப்பாற என்பது 
இங்கு யாருக்கும் புரியவில்லை. 
ஆசை மட்டுமே 
கனவுகளை வழி நடத்துகிறது... 
சோலைக்குள் அமர்ந்து 
பூக்களை இரசிக்காதவன் சோம்பேறி. 
தாகத்தைக் கடும் வெயில் 
கற்றுக் கொடுக்கிறது... 
மரணத்தை மறந்தவன் மட்டுமே 
உறவுகளை வெறுக்கிறான்... 
நோய்கள் தேகத்திற்குப் 
பாடங்களைக் கற்றுத் தருகின்றன... 
சிரிக்க மறந்தவன் 
சிந்திக்கத் தெரியாதவன். 
வெளிச்சம் 
ஒரு புள்ளியில் தொடங்கி 
கருந்துளைக்குள் மூழ்கிவிடும்... 
சந்தூக்கு பெட்டி 
சந்தனமாக இருந்தாலும் 
நேரம் கடந்துவிட்டால் 
பிணம் நாறத்தான் செய்யும். 
வெளிச்சத்தை 
இதயத்தில் வைத்துக் கொண்டால் 
இருட்டும் கூட 
நடப்பதற்குச் சுகமானதுதான்.

- மு.முகமது பாட்சா*
19/04/2019

Wednesday, 17 April 2019

ஒரு விரல் மந்திரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

எதை எதையோ செய்து பார்த்தார்கள் 
எதுவுமே நடக்கவில்லை 
கும்பிட்டார்கள் , 
குனிந்து கேட்டார்கள் 
ஆரவாரம் செய்து ஊர்வலம் போனார்கள் 
பழிகளைப்பேசி பாசாங்குச் செய்தார்கள் 
நுண்ணறிவுத் துறையையே 
நூலாக்கித் திரித்தார்கள் 
மிரட்டியும் பார்த்தார்கள்... 
தேர்தல் ரத்து என்று அறிவித்து 
முகமூடி கழற்றினார்கள்... 
கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் 
கேட்காததையெல்லாம் விடைந்தார்கள்.. 
பணத்தையும் இரைத்தார்கள் 
இருந்தும் 
பயத்துடன் தான் இருக்கிறார்கள் 
ஒரு விரல் மந்திரம் 
ஒற்றுமையாகப் புரட்சி செய்து விட்டால்!

-மு. முகமது பாட்சா*
17/04/2019

கறை ஆபத்தானது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தேங்காயை உருட்டிவிட்டு 
உலகம் 
உருண்டோடுவதாகச் சொல்கிறார்கள் 
எலுமிச்சைப் பழம் 
மந்திரித்து வைக்கப் படுகிறது... 
நரிகளெல்லாம் வாசலைத் தட்டி 
பழங்களைக் கொடுக்கின்றன ... 
வானத்தை நோக்கிச் சுடுகிறார்கள் 
வாக்களிக்கிறவன் பதுங்கிக் கொள்கிறான் 
வாக்குப் பெட்டிகளுக்குள் 
அச்சம் நிறைந்திருக்க 
காட்டெருமைகள் வனத்தை அசைக்கின்றன... 
தேவதூதன் முகத்தைக் கழுவ 
கோரைப் பற்கள் 
வெளியே நீளுகின்றன... 
விரல் நகங்களில் உதிரக்கறை... 
கறை மிகவும் ஆபத்தானது.

- மு.முகமது பாட்சா*
17/04/2019

Monday, 15 April 2019

நிர்வாணமல்ல

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

அந்தக் கல்லறை தன்னைச் 
சருகுகளால் மூடியிருக்கிறது 
நிழலுக்காக வளர்த்த மரம் 
அச்சமூட்டினாலும் 
அழகான பறவைகளும் 
இனிமையான சப்தங்களும் 
நிறைந்திருக்கின்றன.. 
மரணம் முடிவல்ல என்று 
வேர்கள் அதனை ஊடுருவுகின்றன... 
வெளிச்சம் 
அங்கும் விழத்தான் செய்கிறது... 
சற்றுமுன் ஒரு நாகம் 
ஓய்வெடுத்து நகர்ந்த தடம்... 
பூக்கள் தூவ உறவுகள் மட்டுமே 
போதுமென்பது முட்டாள்தனம்.. 
ஒரு ரோஜா பூத்திருப்பதை 
வண்டுகள் ரசிக்கின்றன... 
விசாலமான காற்றில் 
பச்சை விரிப்பாகப் புல்தரை... 
ஓடியாடும் சிறு அணில்கள் ... 
காகத்தின் எச்சம் கோலமிட்டுக் 
கோலமிட்டு ஒப்பனை அலங்காரம்.. 
எங்கோ கேட்கும் மூங்கில்களின் உரசல்... 
அந்தக் கல்லறை
உறவுகளிழந்த நிர்வாணமல்ல.

-  மு.முகமது பாட்சா*
15/04/2019

Sunday, 14 April 2019

விழுதாக நீ



என் இதயம் 
தனியாக நடந்து போகிறது... 
இருளும் துணைக்கு 
விரல்கள் பிடித்து நடக்கின்றது... 
கனவின் மொழியோ காலில் நழுவ 
கற்பனையெல்லாம் உதிர்கின்றது... 
சிறகுகள் இழந்த நிழலும் கூட 
உன்னைத் தேடி நடக்கிறது... 
மொழியின் சுவர்கள் தாங்கிப் பிடிக்க 
முகவரித் தேடி அலைகின்றேன்... 
விழுந்திடும் மரத்தின் 
நம்பிக்கையாய் உன் 
விழுதுகள் பிடித்தே நிற்கின்றேன்...

- மு.முகமது பாட்சா*
14/04/2019

Saturday, 13 April 2019

மாடலழகி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அஃதொரு ஆபாசப் படம்தான். 
பார்த்தவர்கள் 
சற்றே வழுக்கி விழுகிறார்கள்... 
இளமையின் திமிர்கள் 
எக்கச்சமாகக் கொட்டிக் கிடக்கின்றன. 
சருகாடை 
அங்கத்தை விட்டு விலகி காற்றிலாட... 
பார்ப்பவர்களின் புழுக்கம் 
தேகத்தில் வியர்த்திருக்கிறது... 
நிழலில் எடுத்த படம்தான் . 
ஒப்பனைத் தொட்டவன் 
சற்றே சிலிர்த்திருக்கலாம்... 
காமிராவின் கண்ணோடு 
கூடுதலாய் இரண்டு கண்கள்... 
எத்துணை டேக் என்று தெரியவில்லை... 
உச்சமாய்த் தொட்ட டேக்கில் 
அவள் முழுசாய் உரிந்திருந்தாள். 
ஆடையை உடுத்திய பிறகுதான் 
வெட்கத்தை மறைக்கப் பார்க்கிறாள்... 
உடம்பு கூசத்தான் செய்கிறது... 
மனசு என்னமோ 
பார்த்துவிட்டு போ என்று வெறுக்கிறது.

- மு.முகமது பாட்சா*
14/04/2019

இன்றும்



படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.


இன்றும்

பாடைகள் போவதற்கு 
தடைகள் இருக்கிறது!

தண்டவாளத்தில் உருள்வதெல்லாம் 
தாழ்த்தப்பட்டவனின் 
பிணம்தான்!

அம்பேத்கர் சிலைகளுக்கும் 
காவல் தேவைப்படுகிறது

பெரியார் 
கழுத்தை இழந்தாலும் 
கைப்பிடியோடுதான் நிற்கிறார்.

இடுப்புத் துணிதான் 
தோள்களில் ஏறியிருக்கிறது 
கால்களில் செருப்புகளில்லை.

கீழவீதிகள் 
மேலைத்தெருக்களில் வசிக்க 
144 தடை உத்தரவு

இன்றுதான் 
ஜெய்பீம் அம்பேத்கர் பிறந்த நாள்.

- முகமது பாட்சா*
14/04/2019

Friday, 12 April 2019

யார்தான் நிர்வாணம் ? (சுபைனா)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சங்கீத வாய்ப்பாட்டிற்குள் 
அடங்காத அந்த வரிகளைத்தான் 
நீ கவிதையென்று கொண்டாடுகிறாய் சுபைனா! 
ஒரு நீண்ட சுவரின் ஒரு முனையில் நீயும் 
மறுமுனையில் நானும் பார்த்துக் கொள்கிறோம்... 
இடையினில் பார்வைகளெழுத 
ஒரு நிலா தேவைப்படுகிறது... 
இருட்டை வெளிச்சமென்று கொண்டாடுகிறோம்... 
ஒரு வெளிச்சம் 
இருட்டறைக்குள் தவம் செய்ய நுழைகிறது... 
நீண்ட  சுவரின் இடைவெளிகளில் 
விஷ விருட்சங்கள் வேர்களைப் பரப்புகின்றன... 
எனக்குள்ளிருந்த நீ 
அந்த வரிகளைத்தான் 
இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறாய்... 
நான் நகர்ந்த விடத்தில் 
பாம்பின் தடமொன்று படர்ந்து கிடக்கக் 
கூடவே 
பாதியாக நாம் சுவைத்த ஓர் ஆப்பிள் கனியும். 
இப்போது யார்தான் நிர்வாணம் சுபைனா?

- மு.முகமது பாட்சா*
12/04/2019

Thursday, 11 April 2019

பூமி இறக்கும் முன்பாக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், இரவு மற்றும் தண்ணீர்

பேரண்டப் பெரு வெளியில் 
எனக்கான வார்த்தைகளைத் 
தேடி அலைகிறேன்... 
வெளிச்சம் 
உன் பார்வையில் சிறு புள்ளி... 
நான் விளக்கைத் தேடும் 
விட்டில் பூச்சி... 
விளக்குகள் 
தீப்பொறியினைத் தேடுகின்றன... 
சூரியன் எரிகிறதென்பது 
அண்ட வெளிச்சத்தின் 
அப்பட்டமான கற்பனை... 
எந்தக் கோள்களுக்கும் 
நேரமில்லை 
ராசிகளைப் பார்த்துச் சுற்றிவர.... 
வாயுக்களால் மிதப்பது 
தேகம் மட்டுமல்ல 
பூமி என்ற பெரும் பந்தும் கூட... 
வார்த்தைகளுக்கும் 
காற்றுத் தேவைப் படுகிறது.... 
பூமி இறக்கும் முன்பாக 
தண்ணீரைத் தேடுகிறான் மனிதன்... 
இறுதிச் சொட்டு இல்லாமல் 
மிச்சமாய் மிதக்கும் ஒரு வார்த்தையில் 
நிச்சயம் வெளிச்சம் இருக்கும். 

- மு.முகமது பாட்சா*
12/04/2019

நாங்கள் கைகளை ஆட்டுகிறோம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அவர்கள் இப்போதும் 
வேகமாகத்தான் கடந்து போகிறார்கள் 
கேள்விக் குறிகளை 
குனிந்து பார்க்க 
அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.... 
அவர்கள் கையசைக்கும் முன்பாகவே 
கொடிகள் காற்றில் அசைகின்றன... 
அவர்களின் முகங்களைவிட 
சின்னங்கள்தான் 
முகபடாம்களாக உயர்கின்றது... 
'நான் வந்தால்' 
'நான் வந்தால்' 
'நான் வந்தால்' 
எதுவும் புடுங்கமாட்டார்களென்பது 
எல்லோருக்குமே தெரியும்... 
அவர்களின் கவலை 
அவர்களைப் பற்றியதாகவே இருக்கிறது... 
இப்போதும் 
கீழிறங்கி வரத் தயங்குகிறார்கள்... 
அவர்களின் உச்சரிப்புகளில் 
மந்திர வார்த்தைகள் மறைந்திருக்கின்றன.. 
நாங்கள் 
அவை மாயமான பிறகுதான் உணர்கிறோம் 
அடிமை சாசனம் எழுதிக்கொள்ள 
ஐந்து வருடம் இனியும் 
காத்திருக்கவேண்டும் என்பதை...

நாங்கள் கைகளை ஆட்டுகிறோம் 
கண்டு கொள்ளாமல் 
அவர்கள் இப்போதும் 
வேகமாகத்தான் கடந்து போகிறார்கள்

- மு.முகமது பாட்சா*
10/04/2019

இளைப்பாற மரம் தேவை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி மற்றும் உரை

ஒரு கவிதைக்கும் 
இன்னொரு கவிதைக்கும் இடையில் 
தாகத்துடன் 
அலைந்து கொண்டிருக்கிறேன்... 
அண்டைப் பந்திற்குள் அடங்கியிருக்கும் 
என் சிறகுகளுக்கான மொழியை 
இலைகள் 
காற்றினில் சேமித்து வைக்கின்றன... 
வேர்களோடு ஊர்வலம் போகும் போதுதான் 
மண்ணின் வாசத்தையே 
எழுத்துகளாக 
சேமித்தெடுக்க முடிகிறது... 
மழையைப் பற்றி எழுதும் முன் 
அதன் கருவறைக்குள் நுழைந்து 
குளிர்ந்த வார்த்தைகளைக் களவாட வேண்டும்... 
எரிகிற தீயில் 
எழுத்துகளைப் போட்டு விட்டுத்தான்... 
அரசியல் பற்றிய கவிதைகளை 
என்னால் எழுத முடிகிறது... 
கற்பனைப் பூங்காக்கள் இல்லையென்றால் 
காதல் கவிதைகள் 
சருகுகளாய் உதிர்ந்திருக்கும்... 
சூஃபிச வார்த்தைகளென்னை 
சூட்சம வனத்திற்குள் அழைக்க ... 
வெட்டப்பட்ட மரத்துண்டுகளில் 
போதி வனம் தேடிக் கொண்டிருக்கிறேன்... 
இந்தக் கவிதைக்கும் 
அடுத்தக் கவிதைக்கு மிடையில் 
இளைப்பாற 
எனக்கொரு மரம் அவசியம் தேவைப்படுகிறது. 

- மு.முகமது பாட்சா*
11/04/2019

Tuesday, 9 April 2019

துவாக்களின் பூக்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நான் இறந்துவிட்டதாக 
அலைப்பேசிகள் 
செய்திகளை விரைவாகக் கடத்துகின்றன... 
ஆச்சரியத்துடன் 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி 
இரங்கல் துஆ 
உறவுகளால் தூவப்படுகின்றது... 
அப்படியா! என்ற சில ஆச்சரியக்குறிகளோடு 
என்னவாயிற்று? என்ற 
கேள்விக்குறிகளும் இணைந்து கூடுகின்றன... 
போய்ச் சேரட்டும் என்பதும் கூட 
துவாக்களின் பூக்கள்தான்... 
அழுகையின் கண்ணீர்த் துளிகள் 
சந்தூக்கில் தூவும் பன்னீர் சாரல்கள்... 
என் எழுத்துகள் 
சுற்றி நின்று என்னை வாசிக்கின்றன... 
சுமந்து செல்லும் பாதையில் 
உதிர்ந்துகிடக்கும் 
வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறேன்... 
மண்ணறையில் 
என் கவிதையோடு நான் பேசிக் கொண்டிருக்க.... 
நீங்கள் கலிமாவோடு 
இறக்கிவிட்டுச் செல்லுங்கள்... 
உங்களின் துஆக்கள் 
சில வார்த்தைகளைக் கொண்டுவரட்டும்.

- மு.முகமது பாட்சா*
09/04/2019

Monday, 8 April 2019

முசல்லாக்களின் ஊர்வலம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சுவனத்தின் கதவுகளைச் 
சிலர் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 
ஆனாலும் நரகத்தின் வாசலில் 
நறுமணம் வீசுகிறது... 
அங்குதான் தோரணங்கள் கட்டி 
கேளிக்கைகள் நடக்கின்றன... 
மாயவழகிகள் 
மகிழம்பூ தட்டுகளோடு நிற்கிறார்கள்... 
கற்பனைகள் 
கண்சிமிட்டிக் களிப்பூட்டுகின்றன ... 
சுவனம் அத்துணை அழகில்லையென்று 
ஆர்ப்பரிக்கிறார்கள்... 
சுவனத்தின் தொலைவு 
கரடுகளாய் நிறைந்திருக்கிறது... 
கந்தலாடை மனிதர்கள் 
கண்ணீரோடு செல்கிறார்கள்.. 
இங்கொன்றும் அத்துணைப் பகட்டில்லை 
வாசல் குடிசையாக நிற்கிறது... 
தஸ்பீகளின் சப்தம் சங்கீதம் இசைக்க... 
முசல்லாக்கள் 
அவர்களின் முன்னால் நடந்து செல்கின்றது... 
வாசலென்பது போகும் வழி மட்டும்தான் 
வீடு என்பதுதான் நிம்மதியின் சுவனம். 
சுவனத்தின் கதவுகளைச் 
சிலர் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
05/04/2019

படிமம் தேடும் பை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஆளாளுக்கு படிமங்களைத் 
தேடிக் கொண்டிருந்தார்கள், 
நிலவைப் பிடித்து நிரப்பிக்கொண்டவர்கள் 
குட்டைகளைக் கலக்கி 
மீன்களையும் பிடித்தார்கள்... 
ரோசாக்கள் 
வீதியெங்கும் பூத்துக் கிடக்க 
எனக்கு வெறும் 
முட்கள் மட்டும்தான் கிடைத்தது... 
என் பை 
இன்னமும் காலியாகவே இருக்கிறது... 
பறவைகளோடு சிலர் 
பறந்து போவதையும் பார்க்கிறேன்... 
உதிர்ந்த சருகுகளையும் 
அவர்கள் அள்ளி வாரிக்கொண்டார்கள்... 
உதவாத நெகிழிகளும் 
ஏனோ சிலருக்குத் தேவைப் பட்டது... 
இன்னமும் என் பை 
நிரம்பாமல்தான் இருக்கிறது... 
இப்போது நானும் 
சில முட்களும் மட்டுமே இருக்க 
அந்தப் பை என்னை 
அலட்சியமாகப் பார்த்துச் சிரித்தது.

- மு.முகமது பாட்சா*
05/04/2019

பிரபஞ்சப் பெரும் பிரமை



கூலம் விட்டகன்ற 
கடங்கரம் நான் காற்றின் விசையறியா 
பயணத்திலமர்ந்து 
உச்சியின் கர்வம் கனன்றெரிய 
தொட்டிடும் காட்டுத்தீயின் நுதலிலுரசி 
கருகும் வாசத்தில் 
உணர்தலின் வாழ்க்கை 
ஒன்றுமறியா பிரபஞ்சப் பெரும் பிரமை.

- முகமது பாட்சா*
05/04/2019

என்ன செய்வேன்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

என்னிதயம் இடையில் 
நின்று போனால் என்ன செய்வேன்? 
உன் கண்கள் என்னிடம் 
பெரும் கதையொன்றைச் சொல்கிறது 
காலமென்னை 
தின்றுவிட்டால் என்ன செய்வேன்? 
நின்ற இதயத்தைக் 
கிள்ளிவிட்டுப் பின்னால் தொடர்வேன்... 
தனியாக நடந்து போகிறேன் 
உன் வெளிச்சம் முன்னால் செல்கிறது... 
பாதைகளைப் பதம் செய்கிறேன் 
என் சுவாசம் உன்னோடு நடப்பதற்கு... 
நானொரு கிழிந்த புத்தகம் 
உன் விரல்கள் 
படுவதற்காகக் காத்திருக்கும் பொக்கிசம். 
என்னிதயம் இடையில் 
நின்று போனால் என்ன செய்வேன்?

- மு.முகமது பாட்சா*
04/04/2019

தூவலில் இரத்தவெழுத்துகள்


broken head painting statue க்கான பட முடிவு

ஒரு படிமத்தின் தலையைக் 
கையில் எடுத்து வைத்துக் கொண்டு 
உருவத்தை அழித்துவிட்டதாகப் 
பிதற்றிக் கொள்கிறார்கள்... 
உடைந்த படிமம் 
பல படிமங்களைப் பிரசவிக்கிறது.... 
படிமங்கள் பறவைகளாக மாறி 
சுற்றி வருகின்றன... 
பறவைகளின் நகங்கள் 
கத்திகளாக வடிவமைத்துக்கொள்ள 
தலையெடுத்தவன் தலையும் 
இப்போது 
ஒரு படிமமாகத் தரையிலுருளுகிறது
படிமத்தைத் தேடிய கவிதையொன்று 
அதனையே படிமமாக்கி 
புரட்சியொன்றை எழுதிக் கொண்டிருக்க
என் தூவலில் இரத்தவெழுத்துகள்.

- மு.முகமது பாட்சா*
09/04/2019

Wednesday, 3 April 2019

ஒரு சில ரொட்டித்துண்டுகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.



எனக்குத் தேவை
ஒரு சில ரொட்டித்துண்டுகள் மட்டுமே
நீங்கள் பீர் அருந்திக்கொண்டு
நட்சத்திர விடுதிகளில் ஆலோசிக்கிறீர்கள்...
வீட்டை
நான்கு முளைக்கம்புகளால்
இறுகக் கட்டியிருக்கிறேன்...
ஏதேனும் சாலைகள் வந்து அதனைக்
களவாடிச் சென்றுவிடலாம்...
நானருந்தும் தேநீர் மிகவும் கசப்பானது
தேநீர்க் கடை வைத்திருந்தாலாவது
அதிபர் ஆகியிருப்பேன்...
கால்களுக்குச் செருப்புக் கேட்டால்
அரசியல் என்று நகைக்கிறீர்கள்...
வயிற்றில் கட்டும் ஈரத்துணிக்கே
வறுமை ஒழிந்ததென்ற கோஷம்....
கேள்விகளைக் கேட்ட பிறகுதான்
எங்களுக்கே தெரிகிறது
நாங்கள் தேச விரோதிகளென்று....
நாங்கள் ஏழைகளாகவே இருப்பது 
உங்களுக்கு மிகவும் அவசியம்
இல்லையென்றால் 
வறுமையை எப்படி ஒழிப்பீர்கள் ?
எனக்குத் தேவை 
ஒரு சில ரொட்டித்துண்டுகள் மட்டுமே...

- மு.முகமது பாட்சா*

03/04/2019

நான் என்ன செய்யவேண்டும்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி

நான் என்ன செய்யவேண்டும் 
என்று சொல்லுங்கள்... 
இப்போது கூட 
ஒரு கவிதையைத்தான் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்... 
ஆனால் நிதர்சனம் 
வேறுமாதிரி இருக்கிறது... 
சாலைகள் 
பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன... 
எரித்தவன் 
சால்வையோடு போகிறான்... 
எதுவும் அதன் வழியிலில்லை... 
இணையங்கள் குறிகளோடு 
புணர்ந்து கொண்டிருக்கின்றன... 
காமம் 
சந்தையில் விற்கப்படுகிறது... 
நான் கவலைப்பட்டு 
என்ன ஆகப் போகிறது? 
பெட்ரோல் விலையும் 
காஸ் விலையும் 
மண்டைக்குள் குடையும் போது... 
வாசலில் நிற்கும் யாசகனை 
விரட்டுவதைவதைத் தவிர 
வேறு வழி தெரியவில்லை.... 
நிலங்களில் 
புதைந்த கால்களைப் பற்றி 
யாரிங்கு கவலைப் படுகிறார்கள்? 
நிஜத்தில் 
ஒவ்வொருவருடைய கால்களும் 
எங்கேயோ புதைந்திருக்கிறது... 
நான் என்ன செய்யவேண்டும் 
என்று சொல்லுங்கள்... 
இப்போது கூட 
ஒரு கவிதையைத்தான் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
04/04/2019

Tuesday, 2 April 2019

எச்சில் இலைகள்


எச்சில் இலைகள் 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி

மரத்துப்போன மண்டைக்குள் 
கோபம் தாபங்கள் இறந்து கிடக்கின்றன... 
ஆசைகளைக் கழற்றிவைக்க 
யோகிகளைத் தேடிச் செல்கிறார்கள்... 
ஆசை 
அவர்களிடம்தான் 
அம்மணமாய்ச் சிரிக்கிறது... 
புத்த விகாரங்களெல்லாம் - இப்போது 
செல்வந்தர்களிடம் 
காட்சிப் பொருட்களாக மாறிவிட்டன... 
ரூபாய் நோட்டுகளில்தான் 
சாந்தி ஸ்தூபம் உயர்ந்து நிற்கிறது... 
வீதியில் வாழ்பவர்களை 
எச்சில் இலையென்று சொல்கிறீர்கள்... 
பிச்சைக்காரர்களிடம்தான் 
புத்தன் உட்கார்ந்திருக்கிறான் என்பதை 
மறந்து விட்டீர்கள்.

- மு.முகமது பாட்சா*
02/04/2019

Monday, 1 April 2019

சூஃபி பித்தன்



மின்னல்களின் வெளிச்சம்
இருட்டைக் கிழித்துவிடுகிறது...
பூரண வெளிச்சம்
உன் புன்னகையிலல்லவா 
உட்கார்ந்திருக்கிறது....
வழியெங்கும் 
பூக்கள் பூத்திருக்கின்றன
பாதைகள் மட்டும் முடியவேயில்லை...
யாருக்கான சங்கீதம்
தொலைவினில் கேட்கிறது...
சூஃபி பித்தனாய்த்  தேடியலைகிறேன்...
பாத வெடிப்புகளில்
உனக்கான வரிகள் கவிதைகளாக...

- மு.முகமது பாட்சா*
01/04/2019

Popular Posts