
இப்போதெல்லாம் யாரும்
கொலைகளைக் கண்டு அஞ்சுவதில்லை...
சற்றுமுன் நகர்ந்த டிம்பர் லாரியின் கீழ்
விபத்தென்று எழுதிவைக்கத் தோதாக
ஒருவன் நசுங்கிக் கிடந்தான்...
நேற்று கடலில் மிதந்த இரண்டு பிணங்களை
தற்கொலை என்று பேசிக் கொண்டார்கள்..
ஒரு நடிகையின் மரணத்தில்
அவளது அங்கங்களை
அலசிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்...
ஒருவனை ஓடஓட விரட்டிக் கொன்றதாக
நாளிதழில் செய்தி...
அவன் சிரித்துக் கொண்டே
காவல் வாகனத்தில் ஏறிக் கொண்டான்...
நிலங்களைப் பிடுங்கி துளையிட்டவிடத்தில்
கச்சா எண்ணெய் பீய்ச்சியடித்தது
சந்தடியில்லாமல்
சில பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன...
அப்படித்தான் அன்று
வங்கி வாசல்களில் இறந்து கிடந்தவர்களை
முதுமை மரணம் என்று எழுதினார்கள்...
அடுத்து இராமருக்கா சிலரும்
அல்லாவிற்காகச் சிலரும் கூட வெட்டி சாயலாம்...
அவை மோட்சமாக எழுதப்படும்...
- முகமது பாட்சா*
20/10/2019

கடலைவிடப் பெரியதொன்று
இருக்கிறதென்று சொன்னவுடன்
பார்வையால் நெய்தவள்
அன்பு என்றாள்
அடுத்த வேளைக்கலைந்தவன்
பஞ்சம் என்றான்
பாதுகாப்பில் உலாவுகிறவன்
பணமே! என்றான்
பிணமாய் வாழ்கிறவன் கடன் என்றான்
கட்டிலை நேசித்தவன்
கண்கள் நிறைத்துக் காமம் என்றான்..
காலத்தைத் தேடிக் கொண்டே
ஒருவன் கடவுள் என்றான்...
படித்தவன் பல்லக்கிலமர்ந்து
ஞானம் என்றான்...
படிக்காத பாமரனோ முத்தமிட்ட கையே
அன்னை என்றான்...
கடல் சற்று உள்வாங்கி நகர்ந்து கொண்டது
நண்டுகள்
விளையாடிக் கொண்டிருந்தன.
- முகமது பாட்சா*
20/10/2019

எனக்குள்ளிருக்கும் ஒருவனை
அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறேன்..
அவன் என்னைப் போலில்லை
அடிக்கடி முரண்டு பிடிக்கிறான்
எப்போதுமே
நான் மெதுவாகத்தான் நடப்பேன்
அவன் நாட்டியமாடியபடியே நடக்கிறான்
கடந்து போகும் பெண்களைக்
கண்சிமிட்டிக் கிண்டல் செய்கிறான்..
பாக்கெட்டைப் பார்க்காமல் ஷாப்பிங் செய்கிறான்...
சற்றுமுன்
இலஞ்சம் வாங்கிய டிராபிக் போலிஸை
ஓங்கி அறைந்துவிட்டான்...
இவ்வளவு கோபம் கூடாதென்று கண்டிக்கிறேன்
கோழைகள் எப்போதுமே செத்தவர்கள் என்று
உபதேசம் செய்கிறான்...
அவனைக்
கழற்றிவிடுவது சிரமமாகத்தான் இருக்கிறது...
இப்போதுகூட நான்
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த போது
ஒரு கட்சித் தலைவரின் முகத்தில்
காறி உமிழ்ந்துவிட்டு
அமைதியாக உட்கார்ந்து
தேநீரை அருந்திக் கொண்டிருக்கிறான்...
- முகமது பாட்சா*
21/10/2019

புத்தரின் படத்தை மாட்ட
சுவரிற்கு வெள்ளையடித்திருந்தான்...
கூடத்தின் நடுவில் பூக்களைக் கொஞ்சும்
அழகான பித்தளைக் கிண்ணம்...
நறுமணம் கமழ
அரபு நாட்டின் ஊத்சாம்பிராணி...
ராஜஸ்தான் மார்பில் வசதியைக் கூட்டிக்காட்ட...
அலங்காரக் கபோடுகளாக
தேக்குக் காடுகள் இறந்து கிடந்தன..
வாஸ்து மூலையில்
அதிருஷ்ட மீனொன்று நீந்திக் கொண்டிருக்க
அதன் கண்ணீரை மறைக்க
சிரிக்கும் புத்தரையும்
பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்...
அவருக்கு இப்போது குபேரன் என்றும் பெயர்
புத்தர் இனி எப்போதும்
புது வீட்டில் சிரித்துக் கொண்டேயிருப்பார்.
- முகமது பாட்சா*
22/10/2019

எனக்கான சாலை மூடப் பட்டிருக்கிறது...
குறுகிய சந்திற்குள் நுழைகிறேன்
வளைவுகள்
இடம் மாற்றிக் கொண்டேயிருக்கின்றன..
கால் சுழன்று முகத்திலறைய
பெரும் மழைக்குத் திரள்கிறது மேகங்கள்
வேகமெடுக்கிறது திடம்
பள்ளங்களைக் குதித்துத் தாவிப்
பழகிய வழியை எட்டியபிறகு விட்ட மூச்சில்
மேகம் சற்று நகர்ந்து நிற்க
வந்த வழி புன்னகையுடன் கையசைப்பதை
நான் எப்படி எடுத்துக் கொள்வது?
- முகமது பாட்சா*
23/10/2019


ஆழத்திலாழ்ந்த விதை வீரிய விருட்சமாகும்
தரையைத் தேடும் விழுதுகளே
தாய் மரத்தைக் காக்கின்றன...
பொய்மை சூடாத கவிதைகளுக்குக் கடுகின் வாசம்
இரக்கமில்லா
விரல்களிலோடுகிறது ஏழைகளின் உவர்ப்பு...
கண்ணாடியின் பிம்பங்கள் கண்மூடித் தூங்குபவை...
புன்னகைக்கு உவமை
கார்மேக நிலவில் கண் சிமிட்டுகிறது...
காதலென்பது வரம்
கவிதையில் மட்டும் அமர்ந்தால் அது சாபம்...
ஆகாயத்தைக் காட்டாத வீடு
முட்டாள்கள் அமர்ந்திருக்கும் கூடாரம்..
அழுகை எல்லோருக்கும் பொதுவானது..
சாக்காட்டைத் தூக்காத தேகம் சாத்தியமில்லை
சத்திரத்தில் உறங்குவதுதான் ஆசை..
பயமென்பது
பல்லாங்குழிகளுக்குள் உருளும் காய்கள்...
பகடையாகிறவன் பரதேசி..
நாடோடியாகவே இருந்துவிடு நாளை இறந்துவிடும்
நகராள்பவன் என்றுமே அடிமை.
- முகமது பாட்சா*
24/10/2019
No comments:
Post a Comment