

சில வார்த்தைகளைப் புதைத்துவிட்டு
இந்தக் கவிதைக்காக
சில வார்த்தைகளைத் தேடிச் செல்கிறேன்...
மழையில் நனையும் வார்த்தைகளைக் கவனிக்காமல்
வாகனத்தில் செல்லும் வார்த்தைகள்
சூடான முத்தங்களை அருந்திக் கொள்கின்றன...
வடம் கட்டியிழுத்தும் வராத வார்த்தைகளை
கவிஞன் வசப்படுத்துகிறான்...
வார்த்தைகள் வசனங்களாக மாறும் போது
உடல் மொழி திரை நடிப்பை உடுத்திக்கொள்கிறது..
வார்த்தைகளாலேயே வாழ்கிறவன்
புத்தனைச் சிறையில் வைத்துக் கும்பிடுகிறான்...
காலம் வார்த்தைகளோடு கண்ணாமூச்சி விளையாடுகிறது...
ஊமையாகவே நின்று
சில வார்த்தைகளை இங்குச் சேகரிக்கிறேன்...
அவை இந்தக் கவிதையில் இல்லை..
நீங்களதனை துர் நாற்றம் என்று நகர்வீர்கள்...
- முகமது பாட்சா*
29/10/2019





கவிதையென்பது யாதெனில்
உடைகளைச் சரி செய்து கொண்டான்
இலக்கணம்
ஆணிவைத்து இருக்கையிலறைந்தது...
கவிதையென்பது யாதெனில்...
மோப்பம் குழைத்துப் பூக்களை நெய்தவன்
காதல் கண்கட்டி
கவிதையென்று ஒப்பம் செய்தான்...
கவிதையென்பது யாதெனில்
அரூபம் பூசி அலங்கரித்த சொற்களில்
அரசியல் வாசனை
கசங்கிய கவிதையென வசை வாங்கிக் கொள்ள...
கவிதையென்பது யாதெனில்...
படத்திற்குத் தேடிய வார்த்தைகள்
பழுதாகி நிற்க
நிற்கக் கூடாதவிடத்தில் நின்றிருக்கும் சொற்கள்...
கவிதையென்பது யாதெனில்
கள்ளமிட்ட வார்த்தைகளை
கல்மிசமின்றிப் பதியமிட முளைத்து நிற்கும்
கள்ளிச்செடிகள்...
கவிதையென்பது யாதெனில்...
அடக்க முடியா கோபங்களை
வார்தையிலடைத்து
வீசியெறியும் கையெறி குண்டுகள்...
கவிதையென்பது யாதெனில்...
தேசாந்திரியின் கைத்தடியில்
ஒட்டிக் கொண்டு
உதிர்ந்து விழும் வார்த்தைச் சகதிகள்....
- முகமது பாட்சா*
30/10/2019
No comments:
Post a Comment