Thursday, 19 December 2019

விடுபட்டக் கவிதைகள் 13

பாதைகளை திருடிக் கொண்டாய்
வழி தெரியாமல்
சென்று கொண்டிருக்கிறேன்

குளத்தில் கல்லெறிந்தால்
அல்லி அடிபடும் என்று பதறுகிறாய்...
கடற்கரையில் அமர்ந்து கொண்டு

கண் நோக்கு விளையாட்டில்
கண்ணீரோடு விடை பெறுகிறேன்
உன் நோக்கு கூரென்பதால்

உன் கால்களை நனைப்பதற்கு
அலைகள்
சண்டையிட்டுக் கொள்கின்றன
நான் அலைகளோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்

நீ போடும் கடலைக்காக
காகம் கண் சாய்த்துப் பார்க்கிறது
நானும் கூட...

- முகமது பாட்சா*
15/11/2019

என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்
சில வார்த்தைகளைப் பதனிட்டு வைக்கிறேன்
சில வார்த்தைகளுக்கு அத்தர் தெளிக்கிறேன்
என்னை உச்சத்தில் வைக்க
ஒரு மேடை தேவைப் படுகிறது
அதற்கான வார்த்தைகளைக் கொண்டு
அதனை அலங்கரிக்க வேண்டும்
சிலரின் புகழ் மொழிகளை
இணைப்பில் சொருகி இனிப்புத் தடவுகிறேன்
அடிக் குறிப்புகளில்
பொய்களையும் சேர்த்து வாசித்த போது
வார்த்தைகளெல்லாம் துரத்திக்கொண்டு வர
எங்கோ ஓடிக் கொண்டிருக்கிறேன்....

- முகமது பாட்சா*
16/11/2019

அரங்கம் நிறைந்திருக்கிறது
நாம் மட்டும்
தனியாக அமர்ந்திருக்கிறோம்

அமர்ந்திருக்கிறோம்
திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது
வேறென்ன சொல்ல?

நீ காட்சிகளை ரசிக்கிறாய்
நான்
உன் ஸ்பரிசத்தை வாசிக்கிறேன்...

காதில் கதை சொல்லுகிறாய்
மூச்சுக் காற்று
முந்திவந்து முத்தம் தருகிறது..

அரங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்
திரைப்படம்
இப்போதுதான் தொடங்குகிறது!

- முகமது பாட்சா*
16/11/2019

இருட்டைப் பற்றி
கவிதையொன்று வாசித்துக் கொண்டிருந்தேன்
எனக்குள் வெளிச்சம்
மெல்ல எட்டிப் பார்த்தது
கண்களை மூடிக் கொண்ட பிறகு
வானம் விடிந்து
பறவைகள் சப்தமெழுப்பிக் கொண்டிருக்க
சிறகுகள் முளைத்துப்
பறக்கத் தொடங்குகிறேன்...
காகங்கள்
வெள்ளை நிறத்திற்கு மாறிக் கொள்கின்றன...
இருட்டைப் பற்றி
யாரும் பேசாதது ஆச்சரியமளித்தது...
கபர் குழிகளில்
வெளிச்சமிருக்கிறதென்று சூஃபிக் கவிஞன்
பாடிக் கொண்டு போகிறான்...
விழித்துப் பார்க்கிறேன்
நிழலேயில்லாமல்
நான் உறங்கிக் கொண்டிருக்க...
அந்தக் கவிதை சன்னலில் நுழைந்து
வெளியேறிக் கொண்டிருந்தது

- முகமது பாட்சா*
17/11/2019

காடுகளைத் தேடியலைகிறான்
எங்குப் போனாலும்
முட்டி மோதுகின்றன நகரங்களின் சுவர்கள்
முப்பாட்டனின் நரிக்கொம்புகள்
ஊளையிட்டுக் கதறுகின்றன
'வனத்தைத் தேடிக்கொடு என் குருவிக்காரா!'
ஈரமில்லாத வேர்களைத்
தோண்டியெடுத்து அழுகிறான்...
'காட்டுப் பாதையை நீ காட்ட மாட்டாயா?'
கம்பியில் அடிபட்ட காகம்
கடனேயென்று விழுந்து கிடக்க...
கதறியழாமல் பறக்கின்றன உறவுச் சிறகுகள்...
வயல்கள் அவனைத் தேடிக் கொண்டிருக்க
எலிகளை அவன் தேடுகிறான்...
பூனையொன்று
பரிதாபமாகப் பார்த்துவிட்டு நகர்கிறது....
சீனிப்பாகை
வாசனைக் கலந்து விற்க கற்றுக் கொள்கிறான்...
"மலைத்தேன் சாமி... மலைத்தேன்"
குருவிக்காரச்சி விற்கிறாள்
'ரிமோட் கவர்...
டிவி கவர்... ரிமோட் கவர்... டிவி கவர்...'

- முகமது பாட்சா*
18/11/2019

உதிர்ந்து கிடக்கும்
முதிரிலைகளின் மீது எழுதும்
மழைத்துளிகளின் வீழ்ச்சியில் நெளிந்தோடும்
சிற்றோடை இடையெனக் கொள்ளுங்கால்
பருவமழையென எழுதியவன் காளிதாசனின்
காம நுரையினுக்குள் சிக்கி செய்யுளொப்பி
மலையென முகடுகளைத் தழுவ
வெட்கம் விரிசலாகி வெள்ளமிகுத்து வெகுண்டெழ
ஆதிகணம் பெருகி அகன்று விரிந்து
அல்லுரு முனகலசைக்கும்
அந்தி சாமம் கண்திறக்கும் வேளையில் கை கூப்பி
நிற்கிறது வெய்யோன் வெளிச்சம்.

- முகமது பாட்சா*
18/11/2019

காற்றில் கைவீசி
நீண்ட கோடுகளை வரைகிறான்
நடனத்தின் நளினம்
அவன் விரல்களில் பெய்கிறது
கண்களைத்
தியானத்திலிட்டுச் சுழற்றிய காற்றை
போதியின் புத்தனென்கிறான்...
கிறுக்கனென்று நகைப்போரிடம் கற்களையளித்து
என் மீது வீசுங்கள் என்று சிரிக்கிறான்...
கண்ணில்லாதவர்கள் காண்பதுதான்
அரூபமென்றவன்
நீங்கள் காண்பது அசூயை என்று எள்ளி விட்டு
காற்றில் கை வீசி
காடுகளை வரையத் தொடங்கினான் ...

- நட்புடன்.....முகமது பாட்சா*
19/11/2019


அந்தச் சிறுமி
எண்களுடன் பேசிக் கொண்டேயிருக்கிறாள்..
வேதாளம் அவள் முதுகில் ஏறி உட்கார்ந்து
விடைகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது...
பள்ளிக்கூடத்தின் நுழை வாயிலில்
தன்னையொரு தடவை தடவிப் பார்த்துக் கொள்கிறாள்...
புத்தகங்கள் அவளைத் தின்பதும்
குறிப்பேடுகள் அவளைத் துப்புவதுமாக
ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது...
வீட்டிற்குள் நுழைந்ததும் வேதாளம் இறங்கிக் கொள்ள
பதுமைகள் கதை சொல்ல ஆரம்பிக்கின்றன..
களைத்துப் போய் உறங்கும்
மகளின் கனவில்
எண்கள் பேய்களாக விரட்டிக் கொண்டிருக்க...
தூக்கத்திலும் படிப்பதாக
பெற்றவர்கள் பூரித்துப் போகிறார்கள்...
அவளது உள்ளாடையில்
சில தியரிகள் நனைந்திருந்தன...

- முகமது பாட்சா*
19/11/2019

என்னைப் பற்றி எழுதும் முன்பாகச்
சன்னலைத் திறந்து
ஆதி வனத்திற்குள் நுழைகிறேன்..
காடுகளைச் செப்பனிடாத காலம்
உதிரிலைகளால்
அழகாக நெய்யப் பட்டிருக்கிறது...
ஏவாளை இச்சைக்குள் நுழைய வைக்கச்
சாத்தான் பாம்பிற்குள் நுழைகிறான்...
ஆதி உயிரி
பாம்பென்பதை எழுத மறந்த வரலாற்றில்
விலா எலும்பின் கதை மட்டும்
விவரமாகவே இருக்கிறது...
முகத்திலறைந்த காற்றை மூடிவைத்துவிட்டு
என்னைப் பற்றி எழுதுகிறேன்...
என் காலம் கி.பி. 3000

- முகமது பாட்சா*
20/11/2019

கவிதையொன்றை
மீள்பதிவென மீண்டும் பதிகிறேன்...
அதிலிருக்கும் வரிகள்
ஒவ்வொன்றாக உதிர்ந்து
பாதைகளை முழுவதுமாக நிறைக்க..
வெப்பம் பாதங்களைச் சீண்டி
கொப்புளங்களை உருவாக்குகின்றன...
கருகிக்கிடக்கும் பறவை
சுதந்திரத்தைப் பேசிக் கொண்டிருக்க...
எழுத்துகளைப் பொறுக்கி
ஒவ்வொன்றாக விழுங்கிவிட்டு
மீண்டும் கூண்டிற்குள் அடைந்து கொள்ளும்
என்னை நீங்கள்
பச்சைக் கிளியென்று புகழ்வதும் கூட
சிறு மகிழ்ச்சிதான்.

- முகமது பாட்சா*
20/11/2019

மழையை
எல்லோரும் மழை என்றே சொன்னார்கள்
அவன் மட்டும் வெயில் என்றான்
எல்லோரும் அவனை வியப்பாகப் பார்த்தார்கள்
மழை காணாமல் போயிருந்தது.

- முகமது பாட்சா*

பூட்டை இழுத்துப் பார்த்து
சாவியிடம் நம்பிக்கை வைக்கிறான்
திருடன்

- முகமது பாட்சா*
21/11/2019

கொஞ்சம் இரு சாயிரா
வெளியில் சென்றுவிட்டு வருகிறேன்...
தேவதாஸ் போல் பாடிக்கொண்டே திரிந்ததில்
பார்வதி இறந்து போனது தெரியவில்லை...
வெளியில்
என்னவெல்லாமோ பேசிக் கொள்கிறார்கள்...
சாத்தியமா என்று தெரியவில்லை....
கடலை விற்று
மீன்களைக் காப்பாற்றப் போகிறார்களாம்...
நதிகளில் சாலைகளைப் போட்டு
நாகரீகம் வளர்க்கிறார்களாம்....
திருடர்களிடம் பொருட்களை ஒப்படைத்து
களவுகளை ஒழித்து விட்டார்களாம்...
வரும் வரை பத்திரமாக இரு
கூரையைப் பிடுங்கிவிட்டு
வானத்தில் வீடு கட்டும் திட்டம் இருக்கிறதாம்...
பெயரை மட்டும் சொல்லிவிடாதே
எந்த மார்ச்சுவரியில் உன்னைத் தேடுவது?

- முகமது பாட்சா*
22/11/2019

கனவு வெளி முழுவதும்
காற்றின் மொழி நிறைந்திருக்கிறது... சிறகுகளின் பழுதுகளை அலகு கோதி கொண்டிருக்க..
இரவு படித்துக் கொண்டிருக்கும் பாடம்
விடியல்!

- முகமது பாட்சா*

காலம் தன் வேகத்தைக்
கூட்டி நடக்க...
கருவிகளினியக்கம்
யுகத்தைப் புரட்டுகின்றன...
மனிதன்
உறக்கம் கலையாமல்
கனவின் உலகிற்குள் நுழைய...
விடியலென்பது பாட்டுகளில்
வெளிச்சம் காட்டுகிறது .

- முகமது பாட்சா

எல்லோரிடமும் ஏதாவதொன்றைச்
சொல்லிக் கொண்டேயிருப்பான்
அவனை எல்லோரும் புனைவு என்றே அழைத்தார்கள்
அவன் செயல்களும் விசித்திரமாகவே இருந்தன
ஒரு நாள் குதிரையாக மாறிய போது
தன்னைக் கழுதைப் புணர்ந்ததாகச் சொன்னான்
வானத்தை ஒட்டடை அடித்த போது
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிட்டதாகக் கவலைப் பட்டான்
ஒரு நாள்
தன்னை மன்னன் என அறிவித்துக் கொண்டான்...
அதன் பிறகு அவனை நாங்கள் எங்கும் பார்க்கவேயில்லை...
ஆனாலும் நாங்கள்
மன்னரைப் பார்க்கும் போதெல்லாம்
புனைவு நினைவிற்குள் வருவதும் தப்பவில்லை.

- முகமது பாட்சா*
27/11/2019


No comments:

Post a Comment

Popular Posts