
அவர்கள் உரத்துக் கோஷமிடுகிறார்கள்
அந்தவிடம் அவ்வப்போது அதிர்ந்து மூச்சுவிடுகிறது
இஃது எங்களின் தேசம் என்ற முழக்கம்
காற்றில் கலந்து தேசியக் கொடிகளை அசைக்க...
ஓரமாக நிற்கும் காவலர்
துப்பாக்கியைத் துடைத்து உறையில் சொருகுகிறார்...
பயம் இந்தியன் இரத்தத்தில் கிடையாது...
மரணம் கொடுத்து வாங்கியதுதான்
சுதந்திரம் என்பதை அறிவார்களா?
சாணக்கிய குடுமிகளுக்குத் தந்திரங்கள் மட்டுமே தெரியும்
பகடையுருட்டி விளையாட
நாங்களொன்றும் தருமன்கள் அல்ல...
கோட்சேவிற்கு மாலையிட்டவர்கள் தேசப் பிதாவிற்குக்
கால் செருப்புகள் என்பதைத் தெரிந்தவர்கள்
சாவர்க்கரையும்
கோல்வார்க்கரையும் உன் குடுமியில் முடிந்து கொள்
கோழைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை...
குனிந்தவர்கள் நிமிர்ந்த பிறகு
மீண்டும் குனிவதற்கு அவர்களொன்றும்
உன் கால் நக்கி அடிமைகளுமல்ல...
தேசியக் கொடிகள் மூச்சுவிடத் தொடங்கிவிட்டன!
- முகமது பாட்சா*
22/12/2019

என்னைப் பற்றி
எழுதிக் கொண்டும்
பேசிக் கொண்டுமிருக்கிறேன்
அதில் நீயும் இருக்கிறாயா
பகைவனே?
என்னுள்
நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்...
ஓரமாக நீ
சிரித்துக் கொண்டிருக்கிறாய்!
வீதிகளைக் களவாடிவிட்டு
அன்புடன் கைக்குலுக்க வருகிறாய்
கால்கள்
உறுதியாகவே இருக்கின்றன!
இடறி விழுந்தவுடன்
முதலில்
மூச்சு வருகிறதா என்று பார்க்கிறாய்
உன் நேசிப்பு இருக்கும் வரை
மரணம் எனக்கு
அத்துணைச் சுலபமல்ல...
வா விளையாடிப் பார்ப்போம்
எதிரில் நிற்பது நீயென்பதால் அல்ல
எதிரியே நீ என்பதால்!
- முகமது பாட்சா*
21/12/2019
No comments:
Post a Comment