
பதாகைகளில்
வாசகங்கள் புகைவிட்டு எரிகின்றன...
இதயத்திலிருக்கும் நெருப்பை
வார்த்தைகளால் கொப்பளித்துத் துப்புகிறார்கள்
உறக்கமிழந்த கண்கள்
வெளிச்சம் கிடைக்காதவென ஏங்குகிறது...
கண்ணீர் புகைக்குண்டுகளுடன்
வஜ்ரா வாகனம் வந்து நிற்க
லத்திகள் ஒன்று கூடிப் பேசிக் கொள்கின்றன...
அச்சமசைவதை அறிந்தது போல்
பறவைகளெல்லாம் சப்தமிட்டு அலற...
உரிமையின் கோபம்
மண்ணை இறுகப் பற்றி முழக்கமிடுகிறது..
ஓங்கியறைய வந்தவர்களிடம்
அவர்கள் பூக்களைக் கொடுக்கிறார்கள்...
லத்தி ஒரு மிருகம் என்பது
அவர்களுக்கு விளங்கவில்லை..
சதைகளைப் பிய்த்துத் தின்பதற்காகப் பாய்கின்றன...
உரிமையென்பது காதல்
உயிரைக் கொடுக்கவும் அது முன்னேறுகிறது..
காவலரின் மகளொருத்தி தாயிடம் கேட்கிறாள்
அப்பா கொடுமைக்காரரா?
இல்லையம்மா அவரொரு ரோபோ என்று
சொல்லிவிட்டு அழுகிறாள்
அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக
- முகமது பாட்சா*
20/12/2019
No comments:
Post a Comment