Thursday, 19 December 2019

விடுபட்டக் கவிதைகள் 15

அந்த நாற்காலி அங்கேயே ஆடிக் கொண்டிருக்கிறது
அதை அப்படியே விட்டுவிடுங்கள்

அந்தப் படத்தில் இருப்பது போலியான புன்னகை
மாலையும் ஊதுவத்திகளும் கூட....

எரித்துவிட்ட பொருட்களில் மிச்சமிருக்கிறது கைத்தடி
இன்றும் கூட அசையாமல்...

நாட்குறிப்பின் எழுதாத பக்கங்கள்
நிறைய விஷயங்களை எழுதமுடியாமல் தவிக்கின்றன...

விரித்தது போல் படுத்திருக்கும் பார்வைக் கண்ணாடி
ஆழ்ந்து பார்க்கிறது
யாராவது விக்கியெடுத்து அழ மாட்டார்களா?

காகம் கரைகிறது
ஓடிப்போய்ச் சோறு வைப்பதை ரசிப்பதில் ....

அந்த நாற்காலி அங்கேயே ஆடிக் கொண்டிருக்கிறது
அதை அப்படியே விட்டுவிடுங்கள்

- முகமது பாட்சா*
06/12/2019

கடந்து போதல்
எளிதானவொன்றாய் நிகழ்ந்து விடுகிறது...
எரியும் கண்களில்
எள் நெய்யை யூற்றி தவம் என்கிறாள்...
காடுகள் பற்றியெரியும் போது
கட்டில் செய்வதற்கு மரங்களைத் தேடுகிறேன்...
மனக்கலசத்தில் தானியமாகக் கிடந்தவள்
காட்டாற்றைத் தட்டியெழுப்பி
குதிரையெனப் பாயும் பாய்ச்சலில்
நிலைகுலைந்து விழுந்திருக்கும் என்னிதயம்
இறைச்சிக்கென்று எடுத்துச் செல்பவளை
என்ன செய்துவிட முடியும்?

- முகமது பாட்சா*
07/12/2019

புரியாத படத்தை வைத்துக் கொண்டு
புரிந்ததுபோல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்...
அஃதொரு பெண்ணின் படம்
என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும்...
விலா எலும்புகளின் சிறகுகள்
உடைந்திருப்பதைக் கவனிக்கவில்லை...
இதயம் வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓலம்
கண்ணீராய் வழிகிறது...
காட்டுப்பூச்சிகளின் மொய்ப்பில் கூந்தலை
உலர்த்தியிருக்கிறாள்...
இடுப்பெலும்பில்
எகிறிக் கடித்த நாய்களின் தடத்தை
உதிரத்துணியில் வழிந்து நிற்கும் வண்ணங்களைக்
குழைத்து ஆடையாக உடுத்தியிருக்கிறாள்...
பிறாண்டிக் கொண்டிருக்கும் நரிகளை
யார் வேட்டையாடுவது?
கேள்விகளைத் தின்று
புழுக்களை வாந்தியெடுக்கும் அவளின்
உறக்கத்தைத் தின்னும் பிசாசுகள்
வவ்வால்களாகப் பறந்து கொண்டிருக்க...
ஓவியத்தை எரித்துவிட்டு
சாட்சியங்களை
அழித்து விட்டதாகப் பெரு மூச்சு விடுகிறார்கள்....
யோனிப்புழுக்கள் கால்கள் முளைத்து
நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள்
கவனிக்கவேயில்லை!

- முகமது பாட்சா*
07/12/2019

உதிர்ந்த சருகிற்கும்
துளிர்க்கும் தளிருக்கும் உள்ள இடைவெளியைக்
காலமென்று கணிக்கிறான் தச்சன்...
பருவங்கள்
நகராமல் நின்றிருந்தால்
சளிப்பில் வாழ்க்கை இறந்திருக்கும்...
புன்னகை மட்டுமே என்றும் விலையாவதில்லை..
ஏகாந்தம் என்பது வார்த்தையழகு
பரதேசிக்குப் பாட்டு மட்டுமே போதாது...
கடவுளோடு நடத்தும் பேச்சுவார்த்தை
இயலாமையின்
இடைவெளியை இட்டு நிரப்புகிறது ...
சிறகுகளை உலர்த்தும் போது
தன்னையுதறி எழுந்து கொள்கிறது காலம்..
சன்னலைத் திறந்தே வையுங்கள்
காற்று மட்டுமல்ல
காலமும் அதனுள் எளிதாக நுழைந்து வரும்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
08/12/2019

உன்னாவில்
தீவைக்கப்பட்ட பெண் மரணம்
பாலியல் குற்றவாளிகள் ஜாமினில் வெளியே
என்கவுண்டரில் நால்வர் மரணம்
மக்கள் கொண்டாட்டம்
வெங்காயம் விலை 300 ஐ தொடும்
முட்டைக்கோஸ்
முருக்கைக்காய் விலை எகிறியது...
நித்தியானந்தா தப்பியோட்டம்...
தமிழ் நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்...
சபரிமலை இறுதித் தீர்ப்பல்ல
டெல்லியில் தீவிபத்து
நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை
இவையெல்லாம்
வேறு வேறு செய்திகளல்ல...
கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு
பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனைக்கு!

- முகமது பாட்சா*
08/12/2019

ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கவிதை மரம் இப்போது மலையாள மண் வாசனையுடனும்...

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഞാൻ സന്തോഷത്തോടെ
തലയാട്ടിക്കൊണ്ടിരുന്നു

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഞാൻ പൂവുകളെ വിടർത്തി
വാസന കൂട്ടുകയും ചെയ്തു

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഞാൻ കായകളും
പഴങ്ങളും കൊടുത്തു

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഒരു ദിവസം
കാറ്റിൽ ഞാൻ വീഴ്ന്നു

കസേര , മേശ, വാതിൽ
എന്നൊക്കെ അവർ ഇപ്പോൾ
എന്നെ വിളിക്കുന്നു

ഞാൻ ഇപ്പോഴും
ഒരു മരമായിത്തന്നെയല്ലേ
ഇരിക്കുന്നത് ?

കവി : Mohamed Batcha / Tamil Nadu
മൊഴിമാറ്റം : വരദൻ

மரம் என்றார்கள்
மகிழ்வுடன் தலையாட்டிக் கொண்டிருந்தேன்

மரம் என்றார்கள்
பூக்களைப் பூத்து வாசம் கூட்டினேன்

மரம் என்றார்கள்
காய்களையும் கனிகளையும் கொடுத்தேன்

மரம் என்றார்கள்
ஒரு நாள் காற்றில் விழுந்தேன்

இப்போது நாற்காலி,
வாசற்கால், மேசை என்றெல்லாம் அழைக்கிறார்கள்

நான் இன்னமும்
மரமாகத்தான் இருக்கிறேன்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
04/12/2019

They said the tree.
I kept nodding
happily.

They said the tree.
I bloomed flowers
and added fragrance.

They said the tree.
I gave fruits
raw and ripe.

They said the tree.
One day I fell
in the wind.

Chair and table they now say
and also doorway.
As just the tree
I still stay.

Translated by :~Sri vatsa - noida

பறித்துப் போட்ட கொழுந்துகளை உண்ட
வெள்ளாட்டின் திமிர் கறி
பண்ணையின் கிடா வெட்டி விருந்தில்
கார சாரம் கூட்ட எலும்புகளுக்கு
நாய்கள் அடித்துப் பிறாண்டிக் கொண்டிருந்தன...
விருந்து முடிந்ததும் மிச்சமிட்ட சோற்றை
அள்ளிவைத்ததில் அதன் இரைப்பைத் தோஞ்சல்
ஒன்றிரண்டு மட்டும் மேய்த்தவன் இலையில்
வறட்சியாகக் கிடந்தது...

விரசாச் சாப்பிட்டுட்டு
ஆட்டுக்கெல்லாம் தழையை ஒடிச்சிப் போடு

- முகமது பாட்சா*
09/12/2019

தேசத்தின் வரைபடத்தை
நான்கு பக்கமும் இழுத்து ஆணியடிக்கிறார்கள்
நடுவில் ஆங்காங்கே விரிசல் ஏற்படுகிறது...
கொடிக் கம்பத்தின் கீழிருக்கும் குடிசைகளைக் கொளுத்திவிட்டு
தேசிய கீதம் இசைக்கப் படுகிறது...
பறவைகள் மரங்களைத் தேடியலையும் அதே வேளையில்
மலைகள் சிதறிக் கொண்டிருக்கின்றன
காந்தியின் கால்களில் செல் பூச்சிகள் நிரம்பியிருக்க
தேசத்திற்கு வார்னிஷ் அடிப்பதாக
தேசிய தலைவர் முழங்குகிறார்...
வரிக் கட்ட மறுத்தவன்
இன்னமும் சுங்கச்சாவடியைத் தாண்டாமல் நிற்கிறான்
ஆதர்ச கடவுளென்பவன்
விசாயில்லாமல் வெளி நாட்டில் விருந்து சாப்பிடுகிறான்
பெண்கள் பாதுகாப்பாகவே
கற்பழித்து எரித்து கொல்லப் படுகிறார்கள்...
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
விரட்டப்படுவதற்கான குடி மக்களை...
ஆதார் இப்போதுதான்
மெல்ல வாயைப்பிளந்து பாம்பாக மாறிக் கொண்டிருக்கிறது...
நீ முஸ்லீமாக இருப்பது பாவமென்று இராமர் சொல்கிறார்...
அம்பேத்கர் இன்னமும் கூண்டுகளில்தான்
சட்டம் போதித்துக் கொண்டிருக்கிறார்..
தேசிய வயலில் பெருச்சாளிகள்
வெள்ளாமை செய்வதாகப் பேசிக் கொள்கின்றன...
இந்தியர்கள் மடையர்களல்ல...
வேட்டையாடிகளின் இனக்குழுவில்
பூனைகள் குதித்து மகிழ்வது கூண்டிற்குள் சிக்குவதற்காகத்தான்.

- முகமது பாட்சா*
10/12/2019

#மொஹல்லா_வாசிகள்

என்னைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கும் போது
என்னுடைய தொப்பியைப் பற்றிச்
சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்...
குரானிலிருந்து ஆயுத எழுத்துகளைப் பிரித்து
தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது
தொடங்கிவிட்டது...
பள்ளிவாசல் புறாக்கள் ; இனி
ஜாக்கிரதையாகத்தான் பறக்க வேண்டும்
கால்களில் குண்டுகள் இருந்ததாகச்
சுட்டுத் தள்ளப் படலாம்....
காபாவின் திசையில் தொழுகை நடந்தாலும்
மொஹல்லாவாசிகள் அமர்ந்திருப்பது
ஒன்பது திசைகளல்லவா!

- முகமது பாட்சா*
11/12/2019

அவர்களுக்கு
மற்றவர்களின் வாய்கள் பேசுவதைவிட
விரல்கள் பேசுவதைக் கண்டால்தான்
பயம் அதிகம்!
இணையத்தின் நரம்புகளைத் துண்டித்துவிட்டு
ஊரே உறங்கிவிட்டதாக
எழுதிக் காட்டி மகிழ்கிறார்கள்...
தொப்புள் கொடிகளுக்குச்
சான்றுகளைக் கேட்பவர்கள்
நாளை கர்ப்பப் பைகளையும் அறுத்தெறியத்
தயங்கமாட்டார்கள்...
எண்ணிக்கை விளையாட்டு எப்போதும்
வென்று விடுவதில்லை
ஒரே கட்டில்
அதிக ஜோக்கர்கள் இருந்தாலும் ஆபத்துதான்
சீட்டுகளைக் கலைத்துப் போட்டுத்தான்
ஆடியாகவேண்டும்...

- முகமது பாட்சா*
11/12/2019









No comments:

Post a Comment

Popular Posts