
அண்டத்தின் சூடு அகன்றெழுகிறது
அனாகதவெடுப்பாக அலைகள் உருள்கின்றன
நீள்வழிப்பாம்பென
அடரும் சூதின் மொழி வாய் அகலிக்க...
அனாந்திரவெளி உலவும்
தேசாந்திரியின் பாடல்களில் சொற்பிழை...
போன்சாய் குடில் விக்கிரகம்
போதி மரத்தின் பிம்பம் விரித்துப் படர
நகர்சாலைகளின் குருதி வெட்டில்
அலைப்புறும் தாகத்திற்கு
குறுத்த முலையாள் பிழிந்த வியர்வையில்
காட்சிப்படிமமாய்
கசிந்துருகும் அந்த ஓவியத்தின் கீழ்
இருக்கும் பெயர் இந்தியன்.
- முகமது பாட்சா*
30/08/2019
எதையாவது பேசவேண்டும் என்றே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
நானும்
எதையாவது கேட்க வேண்டுமே என்று
கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
இரண்டுமே
உருப்படியில்லாத விஷயங்கள்தான்.
- முகமது பாட்சா*
30/08/2019
பள்ளி வாசலுக்குள்
இருந்த நிம்மதி
செருப்பு தொலைந்த இடத்தில்
தொலைந்து போனது...
யாசிப்பவனுக்கு என்ன தெரியும்?
அவன்
என்னிடம்தான்
கையேந்திக் கொண்டிருக்கிறான்.
- முகமது பாட்சா*
30/08/2019
சீர்கள் பிரித்துச் சந்தம் வைத்து
எழுதிய கவிதையில்
'மனைவி
அடிக்கடித் திட்டுகிறாள்' என முடித்தான்
குழந்தை
பாலுக்காக அழுது கொண்டிருந்தது.
- முகமது பாட்சா*
30/08/2019
மரணமொன்றும்
அத்துணை சுத்தமானதல்ல...
சவப்பெட்டி செய்தவனின் விரலில்
சிகரெட் புகையும்
வாயில் பிராந்தி வாசமும் வீசுகிறது
பூக்களைத் தொடுத்தவன்
பான்பராக்கை
அடிக்கடி துப்பிக் கொண்டிருந்தான்..
மூச்சு மட்டும் இருந்திருந்தால்
காற்று வரட்டும் கலைந்து போங்கள்
என்று கத்தியிருப்பான்...
- முகமது பாட்சா*
30/08/2019
சிந்தனைகளைச் சோழிகளில் உருக்கி
உருட்டிக் கொண்டேயிருந்தான்..
வடக்கே போகவேண்டுமென்றால்
தெற்கைக் காட்டியது...
கோழி சாப்பிட நினைத்தவனைக்
கொக்கு சாப்பிடப் பணித்தது...
நடக்க மறந்த போது
சோழிகளை உருட்டிக் குறி கேட்டான்
அனைத்தும் கவிழ்ந்து கிடந்தன..
பார்ப்பதற்கு
அவனது மூளை வெடித்துச் சிதறி
இறைந்து கிடந்ததுபோல் இருந்தது.
- முகமது பாட்சா*
31/08/2019
No comments:
Post a Comment