Wednesday, 25 September 2019

விடுபட்ட கவிதைகள் 2

மழை
சாலைகளில் ஓடுகிறது...
வாய்க்கால்கள் வழிந்தோடி
குட்டைகளெல்லாம் நிரம்பி வழியக்
குளமொன்று தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
விரால் மீன்கள் துள்ளுகின்றன...
நீந்துவதற்கு ஆடைகள் களைகிறேன்..
குளம் கடலாகி
அலைகள் உயரம் எழுப்புகின்றன...
நீந்துவது நானில்லை...
மேகங்கள் இருட்டாக நகர்கின்றன...
மழை வருவதற்கு வாய்ப்புண்டு என்றாலும்
நிலத்தை
அஃது எவ்வாறு தேடும்?

-முகமது பாட்சா*
18/09/2019
-------------------------------------------------------

கடலை
காகம் அருந்திவிட்டதாகப்
புனைவொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சாத்தியமில்லைதான்
விரல் ரேகைகளில் விதி ஓடுவதாகவும்
நிழல் சாய்வுகளில் நிஜமிருப்பதாகவும்
புனைதல்களை
நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் போது
கடலை மட்டும்
நான் புனைந்த காகம்
ஏன் குடித்துவிடக் கூடாது?
கடலை குடித்த காகத்தைப் பார்த்துத்தான்
இருட்டென்று ஒரு புனைவை
இப்போது
நீங்கள் இட்டுக் கட்டுகிறீர்கள்
உங்களின் விருப்பம் போல்
இனி இதனைத் தொடருங்கள்...
என் காகம்
உங்களின் வானத்தைச்
சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும் முன்பாக...

- முகமது பாட்சா*
19/09/2019
----------------------------------------------------------------

No comments:

Post a Comment

Popular Posts