Wednesday, 14 July 2021

புகழென்பது

புகழ் என்பது யாதெனில்
புவி மட்டத்திலாடும் புள்ளின் காற்று!
சிறகுள்ளவன் பறக்கிறான் 
என்பதும் அதீதக் கற்பனையின் ஆறாம் அறிவு!
உனக்கும் எனக்குமான உரையாடலை
யாரோ பிடித்து இடம் மாற்றுகிறார்கள் கவிதையென!
சங்கூதுபவன் பாடையிலும்
சப்தம் சரியாகவே பயணிக்கிறது!
நான் வீதியை வாசிக்கிறேன் தோழா...
நூலகத்தில் இல்லாதப் புத்தகங்கள் நிறையவே 
இறைந்து கிடக்கின்றன!
நாடோடியாகவும் வாழ்ந்து பார்!
ஒரு நாள்  நல்லவனாகவே மாறிவிடுவாய்!
பாடினி பாடிசைக்கிறாள்
தூக்கம் உதறிவிட்டு வா போய் கேட்போம்!
"ம்"
.
- நட்புடன்..... முகமது பாட்சா*
14/07/2021


பொது உடன் பகிர்ந்தது
அந்தக் கல்லறையின்
கால அளவைக் காண கூடி நிற்கிறோம்!
பிரபஞ்சத்தின் நுனி வேர்
புதைந்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்க
வாய்ப்புகளுண்டு!
பக்குவமாக மணலையரித்து எடுக்கும் பணியில்
ஒரு கொ.மு. நாணயம் !
வெடிக்காத துப்பாக்கி ரவையில்
இரத்தத்துளிகள் ஒட்டியிருப்பது எப்படி?
அரித்துவிட்ட எலும்புக்கூடொன்றின் முகத்தில்
மக்காத முகக்கவசம்!
சிறகுகளில்லாத பறவைகளின் முள்கள்!
அடுத்தடுத்து
தங்கம் வைரம் எனப் பொக்கிஷங்கள்!
யாரும் பார்க்காத பகுதியில்
அதிசயமாய் ஒளிர்ந்த ஒன்றை
அவசரமாய் எடுத்து ஒளித்துக் கொள்கிறேன்...
அஃது
யாருமே பயிரிடாதப் பனையின் விதை!

- முகமது பாட்சா*
13/07/2020


ஆசானே! என்று
ஆரத்தழுவிக்கொள்ளும் அந்த வார்த்தை,
சற்று நகர்ந்ததும்
ஜோல்னாப் பைக்குள் கைகளைவிட்டு
எதையோ தேடுகிறது!

எழுத்துகளுக்கு ஒப்பனைப்பூசி
காற்றில் பறக்கவிட்டு
பட்டம் எனதென்று தம்பட்டமடித்துக் கொள்ளும் போது
கீழே உருண்டு கிடக்கும்  நூற்கண்டிற்கு
பெயர் : ஆசான்!
- முகமது பாட்சா*


No comments:

Post a Comment

Popular Posts