
கனவு வெளியென்பது
பிரபஞ்சத்தின் அளவுதான்
கோள்களை கணக்கெடுத்தவன்
ஆயுளில் தோற்றுப் போகிறான்...
எழுத்துகள் குறைவானது
வார்த்தைகளுக்கு இங்கு அளவுண்டா?
சொற்கூட்டங்களில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
வசையும் இசையும் என்பது கூட
மொழிதலின் வித்தியாசம்தான்
மொழிகள் குற்றவாளிகள் கிடையாது...
சுவனத்தின் முதல் வார்த்தை
புன்னகை மட்டும்தான் என்பதை
இங்கு யார் அறிவார்கள்?
கஸ்தூரியின் மணம் என்பது
இதயத்திலிருந்தல்லவா வரவேண்டும்?
ஆசையென்பது
காற்று நிறைந்த பைகளால் கட்டிய மாளிகை...
காற்றடித்தால் விழுவோமென்பது
அவற்றிற்கு தெரியாது...
கனவுவெளி கட்டுக்குள் இருக்கட்டும்
மேகங்கள்
கடவுள்களாக ஆகிவிட முடியுமா?
மழை என்பதும்
மனதிற்குள்
இதம் தரும்போதுதான் மகிழ்வாகிறது....
கனவு வெளியென்பது
பிரபஞ்சத்தின் அளவுதான்
காற்றிற்கும்
எல்லை உண்டென்பதை ...
கவனத்தில் வரைந்து வைப்போம்.
சுவனத்தின் மொழியை மறந்துவிடாதீர்கள்.
- மு.முகமது பாட்சா*
03/10/2018
No comments:
Post a Comment