
உதிரும் இறகின் மௌனமாய்
நம்பிக்கை மெல்ல நழுவுகிறது...
பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறது
குற்றமுள்ள மனது
கலைந்துபோன கூட்டின் சப்தத்தை
மரம் உள்வாங்கிக் கொள்கிறது
தடுக்கிவிட்ட கற்களில் அகலியாக்களின்
சாபம் பொதிந்திருக்கலாம்
அழுக்கைக் களைந்தவன்
பாவத்தை
பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்கிறான்
ஆலயங்களின் சுவர்கள்
அழுது கொண்டேயிருக்கின்றன
புத்தனில்லாத போதிமரம் மோட்சம் பெறலாம்
சருகுகள் சப்தமின்றி நிறைகின்றன
போன்சாய்களின் தேடல் வனத்திற்குள்
பறவைகளின் தேடல் ஆகாயத்தில்....
விதைகளை எறும்புகள் திண்ண
பிரபஞ்சம் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
29 /10 /2018
No comments:
Post a Comment