Monday, 1 October 2018

பாகன் திரும்பும்வரை - வலங்கைமான் நூர்தீன் - நூல் விமர்சனம்

நூல் : பாகன் திரும்பும் வரை 
கவிஞர் : வலங்கைமான் நூர்தீன் 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: Valangaiman Noordeen, நிற்கிறார் மற்றும் உரை


'ஆடைகளைக் களைந்து 
அவள் செல்லட்டும் 
பாவம் பைத்தியக்காரி... 
உங்கள் மனசை ஏன் 
நிர்வாணமாக்கினீர்கள்?' 

படித்துக் கொண்டே வரும்போது நச்சென்று அறைகிறது இந்த வரிகள். பார்வையின் 
அளகீடுகளைப் படிக்கிறது இந்தக் கவிதை. 

பாகன் திரும்பும்வரை நூலின் ஆசிரியர் வலங்கைமான் நூர்தீனின் ஒவ்வொரு வரிகளுமே 
சமூகத்தை நோக்கி வினா எழுப்புவதாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் 
ஒவ்வொரு தளத்தில் உட்கார்ந்து கொள்கின்றன. 

ஜீன்ஸ் பேண்டை நாபியின் கீழிறக்கிக் கொண்டு விலையுயர்ந்த காரைவிட்டு இறங்கும் 
மங்கையொருத்தி, முழுகாமல் இருப்பதை விவரிக்கும் கவிதையொன்று... 
கடைசியாகச் சொல்கிறது 

'... 
அவன் கணவனில்லாத பட்சத்தில் 
அந்த இளம் சிவப்புக்கோட்டில் 
துடிக்கத்தொடங்கியிருக்கும் உயிர் 
இன்றோ நாளையோ ஏதோவொரு 
தனியார் மருத்துவ மனையின் 
கழிவுத் தொட்டியில் 
சிதறிக்கிடக்கலாம்... 
கலைக்கப்பட்ட சிவப்புக் கோடுகளாய்.' 

ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் கவிஞர் வைக்கும் கோரிக்கைகளில் 
மிக முக்கியமான ஒன்று... 

'.... 
ஓட்டு கேட்க வரும்போது 
இலவச வாக்குறுதிகளில் உறுதி செய்துவிடுங்கள் 
விவசாயிகளின் துர் மரணங்களையும்' 

ரயில் பிச்சைக்காரர்களின் பாடலைப்பற்றி ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர் 

'...விழியற்றவர்களின் 
கச்சேரிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் 
அனைத்துமே அவர்களின் 
பஞ்சப்பாடல்கள்.'
 - என்று முடிக்கும் போது அவர்களை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார். 

ஏழைகளிடம் நடமாடும் பணம் எத்தகையது என்பதைக் கவிஞர் 
தெளிவாகச் சொல்கிறார் தன் கவிதையொன்றில் 

'ரூபாய் நீட்டும் கரங்களிலெல்லாம் 
பளபளக்கிறது தங்கமாக 
தாலியோ கம்மலோ 
மூக்குத்தியோ ஏதோவொன்று...' - 

இவற்றில் ஏதோவொன்றுதான் அவர்களின் பணமாகக் கை மாறியிருக்கிறது. 
மறக்க முடியாத ஏழ்மையின் நிதர்சனத்தை வேறு எப்படித்தான் சொல்லமுடியும்? 

மயிலிடமிருந்து 
வலிக்க வலிக்க 
பிடுங்கிய இறகுகளால் 
ஒதுக்கிவிட்டு நடக்கிறான் 
எறும்புகளை - என்று கவிஞர், புதிதாக அவதாரம் எடுத்துள்ள ஜீவ காருண்யர்களை 
நக்கலான மொழியில் சாடுகிறார். 

வன்புணர்வுகள் மலிந்துவிட்ட காமத்தின் நிழல் படிந்த பூமியில் சாகத்துணிந்த 
மங்கையொருத்தி கடைசிக் கடிதமாக இப்படி வரைகிறாளாம்! 

'பிரேத பரிசோதனைக்கு முன் 
என் பிணத்தை நிர்வாணமாக்கி 
ஒரு அறையில் வைத்துவிடுங்கள் 
வரிசையில் வந்து அவர்கள் 
புணர்ந்து செல்லட்டும்.' - இயலாமையின் கோபம் தேசத்தின் நிதர்சனமாகிப்போகிறது. 
இந்த எச்சிலை யார்தான் துடைப்பது? 


புல்லாங்குழல் மற்றும் மூங்கில் இவை இரண்டுமே கவிஞர்களின் கனவு பொருட்களாகும். 
இவரின் புல்லாங்குழல் வாசிக்கும் இரங்கற் இசையைத் தவிர்த்துவிட்டு யாராலும்
 இங்கிருந்து நகரமுடியாது... 

'புல்லாங்குழல் விற்பவனின் 
சவத்தைத் தாங்கிச் செல்லும் 
அந்த மூங்கில் பாடையிலிருந்து 
மௌனமாய்க் கசியும் 
மரணத்தின் இசை.' 

தாபத்தின் அழகை உள்வாங்கி, கூடலைப் பேசும் இந்தக் கவிதை 
மெல்லக் காதல் தீ மூட்டுகிறது.... 

'நடுங்கும் குளிர் 
கூடலில் தகிக்கும் வெப்பம்... 
அறையெங்கும் 
சிணுங்கல்களாய்க் கேட்கிறது 
வெளியே மழையின் சப்தம்... 
ஏற்றிய மெழுகு ஒழுக ஒழுக 
அணைந்து கொண்டிருக்கிறது 
அவளுக்குள் தீ.' 

பேருந்தில் நின்றபடி பயணிக்கும் ஒரு பெண்ணின் பிருஷ்டத்தை மொய்க்கும் 
கண்களைக் காணும் கவிஞர் 

அவள் பிருஷ்டத்தின் மீது 
பதிந்திருந்த கண்களனைத்தும் 
படர்கின்ற கைகளாகவும்.' - என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். 

ஒற்றை விசயங்களுக்குள் முடங்கிவிடாமல் கவிதையைப் பல வழித்தடங்களிலும் 
பயணிக்கவிட்ட கவிஞருக்கு வாழ்த்துகளை நாம் தெரிவிக்கலாம். 

திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதும் கவிஞர்...மேலும் பல சிறந்த படைப்புகளை 
வழங்கவேண்டும் என்பதே என் போன்றோரின் கருத்தும் கூட. 

இந்த நூலின் விலை ரூபாய் 80 தான். நூல் வேண்டுவோர் அவரது 
nfayha@gmail.com என்ற மின் முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். 

- நட்புடன்.....முகமது பாட்சா* 
01/10/2018 

No comments:

Post a Comment

Popular Posts