Monday, 22 October 2018

நிலம் தொட ஆசை - நூல் விமர்சனம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை 

நிலம் தொட ஆசை - வட்டூர் அ.கு.ரமேஷ்
பதிப்பகம் : ஓவியா

'வறள் நிலமதில்
விதை மணிகள் ஊன்றி
வியர் நீர் தெளித்து
அன்னமாய் உணவளிப்பான்...
அவன் உவர்சுவை கலந்து
நிரம்பிய வயிற்றுடன்
மறந்துதான் போனோமோ
உழவிட்ட உப்பளவை.'

- எவ்வளவு அழகான வரிகள்! உணவில் உழவனின் உவர்சுவை
கலந்திருக்கிறதாம். அதை வயிறு புடைக்க உண்ட பிறகும்
அவன் மீதான விசுவாசம் நமக்கு எள்ளளவும் இல்லை என்பதை
இதைவிட அழகாக எப்படிச் சொல்ல முடியும்?

'குரைத்து நின்ற
நாயின் வளர்ப்பில் தெரிந்தது
அந்த வீட்டின் இருப்பு' 

- இவர்களிடம் நேசம் எப்படி இருக்க முடியும்?
சின்ன சின்ன வார்த்தைகளே கூட போதும் செழுமையான கவிதைகளை 
விளை நிலமாக்குவதற்கு... சகோதரர் அ.கு ரமேஷ்
அவர்களின் வரிகள் சமூகத்தை உற்று நோக்கும் சொல் அத்திரங்கள்.

களைப்பிலும் களிப்புறும் கர்வத்தை எவ்வளவு அருமையாக
சாடுகிறார் பாருங்கள்:

'இளைப்பாறிக் கொண்டிருக்கும் 
முயலிடத்தில் ஓடிக் கொண்டிருந்தது
தலைக்கனம்'

ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவனின் பெயர் இருக்கும் என்ற
முதுமொழி நமக்குத் தெரியும். அதையே காலத்திற்கேற்றார் போல்
மாற்றிச் சொல்கிறார் கவிஞர் 

'மருத்துவர் கொடுத்த
குளிகைகளில்
நோயின் பெயர்கள்'

நம்பிக்கையும் கூட ஊன்று கோல்தான். முதியவர்களின் அந்த 
மூன்றாவது காலை நம்பிக்கையாகப் பார்ப்பதும் கூட ஓர் அழகுதான்

'கூனிப்போன
முதுமையை
நிமிர்த்தி நடக்கின்றது
ஊன்றுகோல்'

சமூகத்தின் எச்சமாய் மிச்சமிருக்கும் படிமங்களை கலைந்திருக்கும் கூட்டிற்குள் 
சப்தங்களாய் சேகரிக்கும் இந்தக் கவிதை காலத்தின் அடையாளம்

'மரத்தில் இருந்து
விழுந்த கூட்டில்
கரைதல்களும், கூவல்களும்
சமத்துவம் அங்கிருந்தது
பறவைகள் மட்டும்
அங்கில்லை'

கவிஞர் பழனிபாரதி அவர்களின் முன்னுரையோடு வந்திருக்கும் 
இந்த நூல் , கவிஞர் அ.கு.ரமேஷ் அவர்களின் நம்பிக்கை என்றே
சொல்லலாம்.

- மு.முகமது பாட்சா*
22 /10 /2018

No comments:

Post a Comment

Popular Posts