
அனலைப் பூசிக்கொள்கிறது தேகம்
நரம்புகளின் பின்னலில்
நொறுங்குகின்றன எலும்புகள்....
மூளை வலியை வாசிக்க
வார்த்தைகள் வலிவிழந்து தொங்குகின்றன...
மழைதான் காரணமென்று
மருத்துவச் சங்கீதம் பாடல் இசைக்கிறது
மருத்துவரின் மருந்துகள் குறிப்பில்
ஆறு நாட்களுக்குப் படுத்துக் கொள்கிறேன்...
மருந்தகம்
மணவறைப் பந்தலாய் வழிகிறது
மொழி எழுதியாகிவிட்டது
சூடான கஞ்சிதான் இதமாக இருக்குமாம்
மருத்துவர் வீட்டில் பிரியாணியாக இருக்கலாம்
உறக்கம் சுகமென நினைக்கிறது மனம்
மரணம்கூட அப்படிதானோ!
போர்வைக்குப் பிரியம் நழுவுவதில்லை....
அணைத்துக் கொள்கிறது....
நான் உறங்குகிறேன்...
கவிதைகள் காய்ச்சலில் படுத்திருக்கின்றன!
- மு.முகமது பாட்சா*
06/10/2018
No comments:
Post a Comment