
இப்போது கவிஞர் ஜின்னா அஸ்மி அவர்களின் தோட்டமான இந்தக் 'கடவுள் மறந்த
கடவுச் சொல்' என்ற கஸலின் சோலைக்குள் நுழைவோம்.
கஸல் கவிதைகளின் அழகைக் கொஞ்சமும் சிதைக்காமல்
மிக அழகாக எழுதியிருக்கிறார் கவிஞர் ஜின்னா அஸ்மி. கவிஞரை கஸலின்
காதலரென்றே சொல்லலாம். கருத்தின் ஆழமும் நுட்பமும் நிறைந்த சொற்களால்
கவிதைகளை அழகான நெசவு செய்திருக்கிறார். முதல் கவிதையிலேயே
தன்னைத் தேடத் தொடங்கிவிடும் கவிஞர் ,அடுத்தடுத்த கவிதைகளில் நம்மைக்
கஸலின் வேறொரு தளத்திற்கு நகர்த்திக் கொண்டு போவது
பெரும் வியப்பாக இருக்கிறது.
'என்னைத் தேடுவதற்கு
நானே புறப்படுகிறேன்...
அதற்கு முன்
எப்படியாவது என்னைத்
தொலைத்துவிட வேண்டும்'
- தேடலுக்கு முன் தொலைத்துவிட்டு தேடுவது முரணாகத் தெரியலாம்.
ஆனாலும் அங்குதான் தேடலின் ஞானவெளி பிரகாசிக்கிறது... இங்கிருந்தே,
நாமும் நம்மைத் தொலைத்துவிட்டு தேடத்தொடங்கி விடுகிறோம். ரூமி அலைஹி
அவர்கள் தேடலைப் பற்றிச் சொல்லும் போது, ' கண்ணாடியின் ரசத்தை அகற்றிவிடு /
அடுத்தப் பக்கத்தை / எளிதில் பார்க்கலாம்' என்பார்.
புன்னகையைக் காளான் குடையுடன் ஒப்பிடும் நுட்பம், கவிஞருக்குள் உண்டான
கஸலின் காதலை வெளிப்படுத்துகிறது. காளான் குடையென்பது
மழையில் பூக்கும் தாவரம் என்றாலும் அது நிரந்தரமில்லை.. வாழ்வின் புன்னகைகளும்
கூட அப்படித்தான், பெரும் ஞான விளக்கத்தைச் சுமந்து செல்கிறது
இந்தச் சிறிய கவிதை
எதற்காகக் குடை விரித்தோமெனக்
குழம்பி நிற்கும் காளானைப் போல
இல்லைதானே
உன் புன்னகை.
துன்பங்கள், வாழ்வின் படிக்கற்களாக மாறும் போது, இலக்கை எட்டும் உயரம்
சுலபமாகிப் போகிறது. இங்குக் கவிஞர் வைக்கும் கேள்வியின் ஆழம், காதலிக்கும்
பொருந்தும் இறைக் காதலுக்கும் பொருந்தும். கடலென விரியும் கவிதையென்றே
இதைச் சொல்லலாம். கேளுங்கள் இந்தப் புல்லாங்குழலின் இசையை,
என்மேல் எதற்காக
இத்தனை துளைகள் இடுகிறாய்
புண்ணாவதற்கா?
புல்லாங் குழலாவதற்கா?
சில கவிதைகள், சற்றுப் பிசகினாலும் காமம் சொட்டும் கவிதையாக மாறிவிடும்,
அடுத்துவரும் கவிதைக்குள் ஒளிந்திருக்கிறது ஒரு பேரின்பம் சிற்றின்பமாக
வடிவெடுத்து... இறை நேசத்தின் மிகுதி, சொற்கூட்டுக்குள் அடைகாக்குகின்றன.
'நீ மேலே இருக்கிறாய்
நான் கீழே இருக்கிறேன்
உன் பார்வை எனக்காகக் கீழ்நோக்கியும்
என் பார்வை உனக்காக மேல்நோக்கியும்
இப்போது நாம் சந்திக்கும் இடம்
கீழா.. மேலா?'
மிர்ஸா காலிப்பின் மிகச் சிறந்த கவிதையொன்று என்னை வியப்பிலாழ்த்தியதுண்டு.
'கடவுளே, நான் பேசுவது
அவளுக்குப் புரியவேயில்லை,
அவளுக்கு வேறு இதயத்தைக் கொடு
இல்லையென்றால்
எனக்கு வேறு மொழியாவது கொடு.'
அஹமத் நஸீம் காஸ்மி அவர்கள் அவரது கவி நடையில் வேறு மாதிரி சொல்லியிருப்பார்.
யாருக்காக நான்
ஒரு விளக்கைப் போல்
காத்திருந்தேன் -
அவள் வந்தாள்
சென்றாள்
ஒரு சூறாவளி போல்! ( மொழியாக்கம் கவிக்கோ)
ஜின்னா அஸ்மியின் இந்தக் கவிதையும் அதே தாக்கத்தை, அதே பரிதவிப்பை நம்முள் எழுப்பிவிடுகிறது
'விலக்கப்பட்ட ஆப்பிளாய்
வெறுக்கவே இல்லை உன்னை
பிறகு ஏன்
சபிக்கப்பட்டவனாய்
நினைக்கிறாய் என்னை?'
கோடை நாளோடு ஒப்பிட்டுப்பார்க்கவா?
நீ அதைவிட வசீகரம்,
நீ அதைவிடச் சம நிலை.
என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது கவிதையொன்றில் சொல்லியிருப்பார்.
காதல் இனம் புரியாத ஓர் இன்ப உணர்வு . அரபு மொழியின் நாடோடிப் பாடலொன்று
மஜ்னு பாடுவதாகச் சொல்கிறது
ஓ லைலா!
தடங்களை மணலில் புதைத்துவிட்டு
காதலை மட்டும்
ஏன் கையோடு எடுத்து சென்றுவிட்டாய் !
காதல் - சிற்றின்பத்தின் சிறகுகள் மட்டுமில்லை..பேரின்பத்தின்
பெரும் குகையும் கூட.. வழித்தெரியாமல் அதற்குள் சிக்கிக் கொள்கிறோம்.
இந்தக் கவிதை நூலின் ஒரு கவிதையும் அதை ஒத்ததாக இருப்பதைக் கண்டு
பெரும் வியப்படைகிறேன்.
'நீ போகும் போது
பூத்ததாகச் சொல்லப்படும் பாலை வனத்திலும்
நான் போகும் போது மணலாக இருக்கிறது'
காதலை வெளிச்சமாகப் பார்க்கும் கவிஞர் 'என் வெளிச்சம் இருட்டில்தான்
இருக்கிறது' என்ற ரூமியின் வரிகளில் சிக்கிக் கொள்வதாகவே
இந்தக் கவிதையைப் பார்க்கிறேன்.
வெளிச்சத்திற்கு
விழிகளைத் திறந்து வை
விளக்குகள் எதற்கு
மலையாளத்தின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான குஞ்ஞுண்ணியின் கவிதைகள்
யதார்த்தத்தின் நவினம் பொதிந்தவை. அவர், தன் கவிதையொன்றில்
இவ்வாறாகச் சொல்கிறார்,
எனக்கு நான் உபயோகமேயில்லை
அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்
ஒருகைக்குச் சொரியவேண்டுமானால்
அதேகையால் முடியாதில்லையா? -
யோசிக்கத்தரும் இதே சிந்தனை கவிஞர் ஜின்னாவிற்குள் நுழைந்துவிடுவதாக
உணர்கிறேன் அவரது கவிதையைப் பாருங்கள்
தன்னையே தாழிட்டுக் கொள்ளும்
ஒரு கதவைப்போல் இருக்கிறேன்
என்னைத் திறப்பதும் நீயே
மூடுவதும் நீயே.
எப்படிச் சொரிகின்ற கை சொரிந்துக் கொள்ளமுடியாதோ அதே நிலைதான் தானாக
மூடிக் கொள்ளும் கதவிற்கும் காற்றில் கூடத் திறந்து கொள்ளும் வலுவற்றது.
இங்கே காதலின் கையில் தன்னையே ஒப்படைத்துவிட்டு ஜடப்பொருளாய்
மாறும் பேரானந்தம்.
மற்றுமொரு கவிதையில்
காதலென்பது
முகம் பார்க்கும் கண்ணாடி
உடையாமல் பார்த்தால்
ஒன்றாகத் தெரிவோம்
உடைந்த பின் பார்த்தால்
ஒவ்வொன்றாகத் தெரிவோம்.
இது சாதாரணமான பிரதிபலிப்புதான் என்றாலும் வாழ்வியலின் பெரும்
சித்தாந்தத்தைத் தோலுரிக்கிறது. உறவுகள் உடைந்தாலும்
இதை நாம் உணரமுடியும்.
காதலென்பதே ஒரு தவிப்பான உணர்வுதான். கவிக்கோ அவர்கள் கூட
'உண்மையில் /நான் உன்னைக் காதலிக்கவில்லை / காதலைத்தான்/ காதலிக்கிறேன் '
என்று அழகாகச் சொல்லியிருப்பார். இதே அழகை, புகழ்பெற்ற உருதுக்கவிஞரான
அஹமத் ஹூசைன் அவர்கள்
'பிறை 29க்குப் பிறகு
ஈகைத் திருநாள் வரலாம்...
நோன்பின் 29ல்
உன்னைக் கண்டேன்
நாளை ஈகைத் திருநாளா?
என்பார் இதே ஏக்கம் ஜின்னாவின் இந்தக் கவிதையிலும் இருப்பதைக் காணமுடிகிறது.
என் கிளைகளில்
காதல் கூடுகளைக் கட்டுகிறாய்
இருப்பினும்
தனக்குத்தானே நிழல் கொடுத்துக்கொள்ள முடியாத
மரமாய்த் தவிக்கிறேன் நான்
கவிஞரின் பார்வை மிக விசாலமானது. அதனால்தான், முடிப்பைக் கூடச் சரி தவறுகளில்
தனது பார்வையை வைத்துவிட்டு ஒரு கேள்வியைக் கொக்கியாக வைக்கிறார்,
தவறு செய்யமுடியாத சரி நீ
சரி செய்ய முடியாத தவறு நான்
இதில்
யார் சரி? யார் தவறு?
இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே நன்முத்துகள்தான். எதையுமே,
பழுதென்று விலக்கிவிட்டு சென்றுவிட முடியாது. இறை நேசத்தின் காதலாழம்
கஸலாக மிளிர்கிறது. தலைப்பும் கூடக் கஸலின் அழககோடுவே அமைந்திருக்கிறது.
கடவுள், எந்தக் கடவுச் சொல்லையும் மறந்துவிட மாட்டார்.
ஆனாலும் என்னை மறந்து விடாதே! என்ற காதலின் ஏக்கமாகத்தான்,
தலைப்பும் அமைந்திருக்கிறது. வாழ்த்துகள் கவிஞரே!
படைப்பு முகநூல் குழுமம் மற்றும் தகவு மின்னிதழ் இவற்றின் நிர்வாகியாக
விளங்கும் கவிஞர், ஜின்னா அஸ்மி தனது இலக்கியச் சேவைகளுடன்
ஒரு சிறந்த படைப்பாளியாகவும் விளங்குகிறார். இவர் மேலும், தொடர்ந்து பல
நல்ல படைப்புகளை வழங்க வேண்டும்.. இவரது இந்தக் கவிதை தொகுப்பு
இவருக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்க்கப் போகிறது என்பதிலும் வியப்பில்லை.
- முகமது பாட்சா*
( எனது ஆய்வுரையிலிருந்து)
No comments:
Post a Comment