
சிலைகள்
தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன...
சிலைகளைச் சுற்றிலும்
பாதுகாப்புக் கவசங்கள் அமைக்கப்படுகின்றன
சிலைகளுக்குள்ளும் சாதிகள் இருக்கின்றது
சிலைகள் பகுத்தறிவும் பேசுகின்றன
சில சிலைகள் ஆயுதங்களுடனே திரிகின்றன
சிலைகளை
வெறும் சிலைகள் என்று மட்டுமே
கடந்துவிட முடியாது
உயரத்தினளவில் தன்னைக் கூட்டிக் கொள்கின்றன
இப்போதெல்லாம் மனிதர்கள்
உயரம் குறைந்து கொண்டே வருகிறார்கள்
அவர்களின் வறுமையை
சிலைகள் உணவாக அருந்திக் கொள்கின்றன...
சிலைகளின் பெருமை
சுடுகாடுகளின் வழியையும் அடைக்கின்றது...
சிலைகள் அரசியல் செய்கின்றன
ஆதிக்கச் சிலைகள் அண்ணாந்து உயர்கின்றன
சிலைகளைச் சுற்றிலும்
சிதறிக் கிடக்கின்றன வறுமையின் கூடாரங்கள்
சிலைகளாக மக்கள் உறைந்து கிடக்க
சிலைகள்தான் உயிர் பெற்று
ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து அதிகாரம் செய்கின்றது.
- மு.முகமது பாட்சா*
31 /10 /2018
No comments:
Post a Comment