
சிறு சிறு மழைத்துளிகளென்று
எல்லோரும் கடந்து போகிறார்கள்...
பூஞ்சிட்டுகள்
தலை சிலிர்த்துக் கொள்கின்றன...
மழையில் நனைகிறான் தெருக்குடை வியாபாரி...
தேநீர்க் கடை
அரசியலை விற்றுக் கொண்டிருக்கிறது...
கனக்கிறது நீர்த் திவலைகள்
பெருமழையொன்றிற்கு
எல்லோரும் பதுங்குகிறார்கள்...
கிளையொன்று வேகமாக முறிகிறது...
காகங்களின் பரிதவிப்பை
யாரும் இலட்சியம் செய்யவில்லை...
மின்னல்வெட்டிய பொழுதில்
மின்சாரம் வெளிச்சத்தை இழந்தது...
வானம் வெளுத்தபோது விடிந்திருந்தது...
கூவத்தில் மிதக்கும் பிணம் உப்பியிருந்தது...
காதலைத் தொலைத்தவள் அழுது கொண்டிருந்தாள்...
முற்றத்துச் சுவரில் இரத்தக்கறை!
- மு.முகமது பாட்சா*
03/10/2018
No comments:
Post a Comment