
தேடல்
எங்கேயிருந்து தொடங்குகிறது?
ஒரு முற்றுப்புள்ளி
முகவரியாய் விரிவதிலிருந்தா?
ஒரு முடிவுரையின்
முற்றுப்புள்ளியிலிருந்தா?
எதைத்தான் நாம் தேடுகிறோம் ?
வியப்பின் குறிகள்
வினாக்களாக மாறிவிடுகின்றன
பெரும் பிரபஞ்சத்தின் சப்தங்களை
முட்டைக்குள் அடைகாத்தவன்
எவனாகவிருக்கும்?
விந்துக்குள் விதை வைத்தவன்
அழுகையை
அதற்குள் எப்படி நுழைத்தான்?
ஆசை
தன் நிழலை அகலமாக விரிக்கிறது....
சிக்கிக் கொண்டவனின் கைகளில்
தூண்டில் முள்
வெறும் தக்கையோடு மிதக்கிறது....
இளமைக்கும்
முதுமைக்குமான இடைவெளி
பெரும் மூச்சின் தூரம் மட்டுமே
சக்ராத்தின் விழிகளின் தேடல்
எதுவாக இருக்குமென்று
யாரும் எழுதிவைக்கவில்லை....
மண்ணறைக்குள் புதைத்துவிட்டு
தேடல் மீண்டும்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
ஒரு கருவறைக்குள்ளிருந்து.
- மு.முகமது பாட்சா*
24/10/2018
Alex Kanevsky Painting
No comments:
Post a Comment