
அவர்கள் அப்படித்தானென்று பேசிக் கொள்கிறார்கள்
அவர்கள்தான் வரிசைகளில் நின்று
கரியைப் பூசிக் கொண்டு கறையோடு வந்தவர்கள்,
காசைப் பார்த்தால் வாய்களைப் பிளப்பார்களாம்...
ஆம், அவர்கள்தான் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
வாயைப் பிளந்தவர்கள்...
அவர்கள் அவர்களாகவே இருப்பதில்லையாம்
உண்மைதான்.... வாழ்க கோஷம் போட்டு
வாய்க்கரிசி வாங்கத் தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமே...
தேர்தல் நேரத்தில் சமத்துவம்
அவர்களின் வீட்டு வாசல்களில் வந்து அமர்ந்து கொள்கிறது
அவர்களின் சவம் போகும் பாதைகளில்
சாக்கடைகள்தான் இன்னமும் ஓடுகிறது...
அவர்கள் அப்படித்தான்
ஆம், கொடி பிடிக்கத் தெரிந்த அவர்களுக்கு
இன்னமும் தடி பிடிக்கத் தெரியவில்லை...
அவர்கள் ஒரு பொருட்டேயில்லை
அவர்களுக்கென்றுதான் எந்தப் பொருளுமேயில்லையே
அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்
என்ன செய்வது?
அவர்களில்லையென்றால்
இங்குத் தெரு நாய்கள்கூட உலாவுவதில்லை.
- மு.முகமது பாட்சா*
23 /10 /2018
No comments:
Post a Comment