
இப்போதுதான்
நான்' என்பதை வீசியெறிந்துவிட்டு வந்தேன்
நீ யார்? என்று கேட்டது நிழல்
விடைத் தெரியாத கேள்வி என்றேன்
கேள்வி என்பது ஞானமா? என்றது...
ஞானமற்றவனுக்கு விடையெப்படித் தெரியும்
தர்க்கம் அறியாதவன் என்றேன்
அண்ணாந்து பார்த்தது....
உனக்கு உடையெதற்கு என்றது
மானம் காக்க என்றேன்
மானம் என்பது உன்னுடையதா? என்றது
மறதி வரும் வரை ஒட்டிக் கொள்கிறதென்றேன்
நிழல் இப்போது அமைதியாக வந்தது
என் செருப்பைக் கழற்றிவிட்டு
வீட்டிற்குள் நுழைகிறேன்....
என்னைச் சுற்றிலும் நான் விரவிக் கிடக்கிறேன்
- மு.முகமது பாட்சா*
20 /10 /2018
No comments:
Post a Comment