
எனக்குள் நானிருக்கிறேன் என்பதை
எப்படி நம்புவது?
முதலில் உதிரக்கட்டியாகத்தான்
வயிற்றிலிருந்தேன்
அவள் உணவுதானென்னை உயிர்த்தது
என்னசைவுகள் எனதென்று
எப்படி நான் நம்புவது?
அவளசைவில்தான் ஒருக்களித்தேன்
நடக்காத ஜடமாய் விழுந்தாலும்
கொப்பூழ்க் கொடியை வெட்டித்தானே பிரித்தீர்கள்!
எனக்குள் நானிருக்கிறேன் என்பதை
எப்படி நம்புவது?
பால்கொடுத்த முலைகளல்லவா
என்னைப் பாட்டிசைத்தது
தோள் கொடுத்த அவள் துணைவனல்லவா
தோழமை சொன்னது
எனக்கான வண்ணம் ஏதுவென்று
எனக்கெப்படித் தெரியும்?
பேசுகின்ற மொழிகூட இரவல்தானது...
இரவும் பகலும் சூரியனின் பிரதிதானே
நிழலுக்குள் நான் உட்கார்ந்து கொண்டு
நிஜமென்பது வேடிக்கை !
- மு.முகமது பாட்சா*
02 /08 /2018
No comments:
Post a Comment