
நாடோடியின் பாடலுக்கு
மொழி பெயர்ப்புகள் தேவையில்லை
அடவிக்குள் நுழைந்த வார்த்தைகளை
உள் வாங்கிக் கொள்ளுங்கள்
நிச்சயமிது அழுகையின் பாடல்தான்
கைகளைச் சுருக்கிக் கொண்டவன்
கால்களால் நழுவிப் போகிறான்
வெள்ளத்தின் பருக்கைகள்தான் எப்போதுமே
வேடிக்கைக் காட்டுகிறது
எனது' நான்'
எந்தக்கடலில் சங்கமிக்கும் யாரறிவார்?
சீரணிக்காத உணவிற்கு
வாந்தியென்றுதானே பெயர்...
கண்ணீர் துடைக்காத கைகள்
குளிர் பதனப் பெட்டியின் பிரேதங்கள்
கொடுத்துப் பாருங்கள்
கூடவே வருவது நிழலாகவிருக்காது
உதவியென்பது
எப்போதுமே முதல் சொட்டு தாய்ப்பால்....
அழுகிறது குழந்தை
மாராப்பை மூடியே வைக்காதீர்கள்.
- மு.முகமது பாட்சா*
18 /08 /2018
No comments:
Post a Comment