
ஒரு கவிதைக்குள்
நுழைந்துபோகத் தெரியாமல்
அங்கேயே நிற்கிறார்கள்....
அஃதொரு மாபெரும் குகையென்று
ஒருவன் பிரஸ்தாபிக்கிறான்...
இல்லையில்லை
அடர் வனமென்று ஒருவன் எச்சரிக்கிறான்...
கவிஞனைத் தேடிக் கொண்டும்
சிலர் ஆங்காங்கே திரிகிறார்கள்....
அவர்களின் கைகளில் சூலாயுதங்கள்
கவிதைக்குள்
அணு ஆயுதங்களைக்
பதுக்கி வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு...
'கவிதைக்குள் நுழைவது
ஆபத்தானதென்று'
எச்சரிக்கைப் பலகைகள்
ஆங்காங்கே வைக்கப் படுகின்றன...
ஒரு பிரளயத்தைப் பாடியக் கவிதை
இன்னொரு
பிரளயத்திற்குள் நுழைந்துவிட்டதாக
தேசாந்திரிகள் பாடிச் செல்கிறார்கள்...
அந்தக் கவிதை மெல்ல
பிரளயத்திற்குள் மூழ்குகிறது...
இப்போது ஆங்காங்கே
சில செடிகள் முளைத்திருக்கின்றன...
அதன் வார்த்தைகளில்
ஆயுத எழுத்து அதிகமாக இருக்கின்றன.
- மு.முகமது பாட்சா*
21 /08 /2018
No comments:
Post a Comment