
அந்த வீட்டில்
எங்களுக்கு முன்பாகவே வெள்ளம்
நுழைந்திருந்தது.
ஒரு முதியவர் மட்டும்
உயர்ந்த பரணில் உட்கார்ந்திருந்தார்...
அவரருகில் சில புத்தகங்கள் மட்டும்
நனையாமல் இருந்தன...
'வாருங்கள் வெள்ளம் உயர்கிறது'
என்று குரலெழுப்பினோம்
'தொந்தரவு செய்யாதீர்கள்' என்றவர்
கடைசிக் குறிப்பை
வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்...
'உங்களுடன் யாருமேயில்லையா?'
எனக் கேட்டோம்
சிரித்துவிட்டு, 'நோவாவின் கப்பலில்தான்
உட்கார்ந்திருக்கிறேன்
வந்து ஏறிக் கொள்ளுங்கள்' என்றார்
சுவாதீனம் குறைந்திருக்கலாம்...
- 'இவையெல்லாம்
அடுத்தயுகத்தின் ஆரம்ப விதைகள்'
என்று ஆர்ப்பரித்தார்
வெள்ளம் கொள்ளையாய் நெருங்கி
எங்களின் படகை கவிழ்த்தது...
இப்போது
நாங்கள் நீந்திக் கொண்டிருக்கிறோம்
முதியவர்
நோவாவின் கப்பலில் மிதந்து
சென்று கொண்டிருக்கிறார்.
*
- மு.முகமது பாட்சா
18 /08 /2018
No comments:
Post a Comment