
யாருடைய வீட்டில் யார் நுழைவது?
தெளிவற்ற சப்தங்களாய்க் கேட்கின்றன
துப்பாக்கியோசைகள்
ஒப்பாரி வீட்டிலொருவன்
ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்கிறான்
நகரங்கள் நகர்ந்து கடலுக்குள் நுழைகிறது
இருட்டுதான் வெளிச்சம் ஏழைகளுக்கு...
பயனிலாப் பயன்கள்
சாலைகளில் கொட்டப்படுகின்றன
கண்களைக் கழற்றி கொடுத்துவிட்டு வருகிறேன்
இப்போது அவர்கள்தான் பார்க்கிறார்கள்
பழங்கதைவாதிகள் இன்னமும்
அந்தக்காலத்தை விட்டே இறங்கவில்லை...
நிஜத்தின் கொப்பளங்கள்
நீச்சத்தின் வாசம் சுமந்தே கனக்கின்றன
எங்களின் சேமிப்புக் கணக்குகளில்
எடுப்பதற்கென்று எதுவுமே கிடையாது ...
காடுகளைக் கழற்றிவிட்ட பாவம்
மிருகங்கள் எங்களை ருசிப்பார்க்கின்றன
நாங்கள் முதுகைச் சொறிந்துவிடுவதாக
சுகம் காண்கிறோம்.
வேறென்ன?
இதைத்தான் எப்போதும் சொல்கிறோமே...
வாழ்க பாரதம்! பாரத மாதாக்கீ ஜே!
- மு.முகமது பாட்சா*
06 /08 /2018
No comments:
Post a Comment