
எது சத்தியமான வார்த்தை?
எதைத் தேடிக் கொண்டிருக்கிறது என் கவிதை?
எங்கேதான் போய்க் கொண்டிருக்கிறோம் நாம்?
நிழலுக்குள் உட்கார்ந்து
நிலவைப் பிடித்துப் பந்தாடும் போதுதான்...
கூண்டிற்குள் ஒரு பறவை
கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறது...
கன்னங்களைப் பாடும் போதுதான்
கன்னிமையை ஒருவன் திருடிக் கொண்டிருக்கிறான்
என் தேநீர் அத்துணைச் சுவையானதல்ல
கொத்தடிமைகளின் வியர்வைச் சூடு...
என் சாதத்தில்தான் எத்துணைத் தற்கொலைகள்?
எத்துணைக் கண்ணீர்கள்?
என் வார்த்தைகளை
ஆய்ந்து கொண்டிருக்கும் கண்கள்
அதிபயங்கரமானவை...
எழுதாத எழுத்துகளில் உட்கார்ந்திருக்கும் கோபம்
தன்னைச் சிறை வைத்துக் கொள்கிறது
சிறையின் நிழல்கள் குளுமையானதல்ல...
வெப்பத் தீயில் எரிகிறது என் கவிதைகள்.
- மு.முகமது பாட்சா*
30 /08 /2018
No comments:
Post a Comment