
அதிகமாக மது அருந்தியிருக்கலாம்
அல்லது
யாரையாவது காதலிக்கத் தொடங்கியிருக்கலாம்
இந்தக் கவிதை
சற்று அளவிற்கு மீறித்தான் தடுமாறுகிறது...
வானத்தைப் பூமியென்கிறது
பூமியை
புல்லாங்குழலின் துளையென்கிறது...
வார்த்தைகளின் இடைவெளியில்
குறியீடுகளை நுழைத்து வேடிக்கை செய்கிறது
விமர்சகன்
அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறான்....
விழாக் குழுவினர்
கைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
ஆனாலும் ஏனோ தெரியவில்லை
துப்பாக்கிகளின் பசித்த வாய்கள்
உளறல் கவிதையைக் குறிவைத்துக் காத்திருக்கின்றன...
நாளை நிச்சயம் தெரிந்துவிடும்
இறந்து கிடப்பது ஒரு பெண்ணா அல்லது
போராளியாயென்று...
இருந்தாலும் தலைப்பு என்னமோ
மதுக் கிண்ணம்தான்.
- மு.முகமது பாட்சா*
27 /08 /2018
No comments:
Post a Comment