
கடவுளின் தேசத்தில்
கண்ணீர்த் துளிகளின் கவிதை எழுதப்படுகிறது
அடவிகன்
ஆங்காரமாய்ப் பாடுகிறான்
காடுகளில் நுழைந்த பெரும் ஓசை
ஊருக்குள் நுழைந்து
ஒப்பாரியினிசையைக் கூட்டுகிறது...
காயம்பட்ட பூமி
காற்சிலம்பையேந்தி நீதி கேட்கிறதாம்
பாதை வகுத்துக் கொண்ட நதி
சதங்கையைக் கட்டி மிதந்து போகிறது....
மகாபலி பூக்கோலம் கேட்கிறான்
மயானத்து வாசமல்லவா
மலர்களின் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
வாமனன் குடையை மறந்துவிட்டானாம் -
அடவிகனின் ஆக்கிரகம் அடங்கிப்போக
கொம்பூதியாவது சூரியனை அழைக்கட்டும்...
கடவுளின் புன்னகை வெளிச்சம் காட்டுவதற்கு.
- மு.முகமது பாட்சா*
16 /08 /2018
No comments:
Post a Comment