
அந்தச் செய்தியை படித்தபின்
எல்லோரும்
அதன்பின் சென்று கொண்டிருந்தார்கள்...
செய்தியைச் செய்தியாக
நால்வர் மேய்ந்து கொண்டிருக்க
செய்தி இப்போது
வேறொரு செய்தியாக உலாவரத் தொடங்கியது...
இந்தச் செய்தி
ஊர்களை எரிக்கத் தொடங்கியவுடன்
அதையொட்டிய செய்திகள்
கலவரங்களாக மாறித் தொலைக்க...
செய்திகளை அடக்குவதற்காக
வேறு செய்திகள் துப்பாக்கிகளுடன் இறங்கின...
நல்லெண்ணச் செய்திகள் நாலாம் பக்கத்தில்
மூலையில் ஒட்டிக் கொண்டிருக்க...
வெட்டிக் கொண்ட செய்திகள்
சாதிகளுக்குள் நுழைந்து தும்சம் செய்தது...
செய்திகளே இல்லாத உலகத்திற்குள் நுழைய
எத்தனிக்கும் போதுதான்
பெரும் மழையொன்று வந்து
செய்திகள் அத்தனையையும் அடித்துச் சென்றது
இப்போது நடமாட்டத்திலுள்ள செய்தி
பெரும் சேத நிலவரம்தான்.
- மு.முகமது பாட்சா*
24 /08 /2018
No comments:
Post a Comment