
அந்த முகம்
எனக்குள் அப்படியே உறைந்து போனது
என் மௌனத்தோடு
அடிக்கடி பேசிக் கொண்டேயிருக்கிறது
கனவிற்குள் நுழைந்து எழுப்புகிறது
நிழலோடு நிழலாய் நடக்கிறது
நான் இரையெடுக்கும் போதெல்லாம்
அலகை உரசிக் கொள்கிறது
என் முகத்தை அடிக்கடி கழுவுகிறேன்
கைகளில்
அந்த முகம் ஒட்டிக்கொள்கிறது...
எழுத்துகளில் என்னைக் கரைக்கிறேன்
கவிதையாய் அமர்ந்து
காதலின் பூங்கொத்தளிக்கிறது...
நிச்சயம் அஃதென் முகமேயல்ல - ஆனாலும்
ஆன்மாவிற்குள்
பாடிக் கொண்டே திரிகிறது....
அந்த முகம்
சற்றுமுன்தான் என்னைக் கடந்து போயிற்று
காரணம் சொல்லத் தெரியவில்லை
ஏனோ அழுது கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
31 /08 /2018
No comments:
Post a Comment