
ஒரு சில கேள்விக் குறிகளையும்
ஆச்சரியக் குறிகளையும் வைத்துக் கொண்டு
பெரும் கவிதை ஒன்றிற்காக அலைகிறேன்.
சிற்பக் கூடத்தில் சிலையொன்று
சிற்பியை செதுக்கிக் கொண்டிருந்தது.
ஒரு மரம்
வேர்களால் கவிதையெழுதிக் கொண்டிருக்க
பூக்களைப் படித்துவிட்டுப் போகிறான் வாசகன்.
என் எழுதுகோலின் மசி தீர்ந்துவிட்ட பிறகும்
விரல்கள் அதையே பிடித்துக் கொண்டிருக்கின்றன.
காகிதத்தின் தவமாய்
மனம் வெள்ளையாகவே இருக்கிறது.
நான் கவிஞன்தானா? இல்லையா?
என்னை இன்னமும் எழுதாத அந்தக் கவிதை
கேள்விகள் கேட்பதில் நியாயமிருக்கிறது.
இப்போது என்னிடமிருப்பது
சில கேள்விக் குறிகளும்
ஒரு சில ஆச்சரியக் குறிகளும் மட்டுமே!
- மு.முகமது பாட்சா*
23 /08 /2018
No comments:
Post a Comment