
இரவை பிடித்துவைத்துக் கொண்டு
சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்...
இரவு சிலரோடு அமர்ந்து
மது அருந்திக் கொண்டிருந்தது...
இரவின் காவலோடு ஒருவன்
சுடுகாட்டு எலும்புகளை
சேகரித்துக் கொண்டிருந்தான்
இரவிடம்
இரவல் வாங்கி எழுதிய கவிதையில்
நட்சத்திரங்களோடு
நிலாவும் உட்கார்ந்திருந்தது
இரவோடு இரவாக ஒருவன்
கயிற்றிடம்
கதை பேசிக் கொண்டிருந்தான்
இரவின் நூல்பிடித்து இருவர்
காதலைக் காமத்தில் நுழைக்க
காதலிக்காக ஒருவன்
இரவை
மடித்து வைத்துக் கொண்டிருந்தான்
இரவின் வாசனையோடு
வீதியில் ஒருத்தி அழைப்பு விடுக்கிறாள்
இரவோடு இரவாக இருவர் ஓடிப்போக
இரவின் ருத்திரம்
அவர்களை விரட்டித் திரிகிறது...
ஆலயங்கள் இரவில் மூடிக் கிடக்கின்றன
இரவில்தான்
கள்ளர்கள் விழித்துக் கொள்கிறார்கள்...
இரவிடமிருந்துதான்
இவற்றை நான் சேகரிக்கிறேன்...
பகல் என் மதுக்குடுவையில்
தள்ளாடுகிறது!
- மு.முகமது பாட்சா*
10 /12 /2018
No comments:
Post a Comment