
ஒரு மரணத்தைக் கண்டவுடன்
சருகுகள் பேசத்தொடங்குகின்றன...
சித்தார்த்தன்
தன் ஆடைகளைக் களைந்துவிட்டு
அரண்மனை விட்டு வெளியேறுகிறான்...
மௌனம்
தன்னையுடைத்துக் கரைகிறது...
கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கி நகர
நினைவுகள் மீட்சிமையாகின்றன...
குழி புதுவரவிற்கான
மண்வாசத்தைப் பூசிக்கொள்ளவும்
அல்லது விறகுகள்
உடன்கட்டையேறவும் தயாராகின்றன...
மந்திரங்கள் வெறும் மன நிம்மதி -
மரணத்தையே
அவை ஒன்றும் செய்யாதவை....
பிணத்தைச் சுமந்தவர்கள்
இறக்கிவைத்ததும் இந்தக் கவிதை
குழியில்
சில வார்த்தைகளைத் தூவிவிட்டு
ஆசைகளைச் சுமந்துகொண்டு
அடுத்தக் கவிதைக்கு நகர்ந்துவிடுகிறது...
பிரபஞ்சம் துளிர்களாலும்
இலைகளாலும் நிரம்பியதுதான்...
மண் தன்னை உரமேற்றி கொள்ளட்டும்.
- மு.முகமது பாட்சா
21 /12 /2018
No comments:
Post a Comment